Wednesday, August 27, 2008

பெருவெளியில் பேசுவோம்


History Repeat itself, first as tragedy second as farce
- karl Marx -

ரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இரண்டு சிறுபான்மை சமூகங்களினாலும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட மாகாண சபை பற்றிய விடயங்கள் மீண்டும் பேசுபொருளாகி ருக்கின்றன. இன்று சற்று வேறு முறையாக உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனகதைபோல வடக்கு கிழக்கு துண்டாடப்பட்டுவிட்டதனால் மாகாண சபைத் தேர்தல் கிழக்கு வாழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு விடுவிப்பு என அரசினால் அரங்கேற்றப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது விளைந்த பாரிய மனித அவலங்களின் சுவடுகள் மறைவதற்கு முன்பே மக்கள் எதிர்பார்த்திராத தருணத்தில் தேர்தலை எதிர்கொள்ள அவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். போர்ப் பீதி, அகதி வாழ்வு, வாழ்க்கைச் சுமை, கருத்துச் சுதந்திர மறுப்பு எனும் பாரதூரமான நெருக்கடிகளுக்குள் சிக்குண்டிருக்கும் கிழக்கு மக்களுக்கு முன் மாகாண சபைத் தேர்தல் ஒரு கானல் நீர் போலவும் அல்லாமல் தீ போலவே காட்சி யளிக்கிறது. அண்மையில் இருக்கும் வல்லரசின் கட்டளைகளுக்கமைவாகவே இத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறதென JVP குற்றஞ்சாட்டி வருகின்றமை இத்தருணத்தில் கவனிப்புக்குரியது.

மனித உரிமை மீறல்கள் மூலமும் போர்க்காதல் அரசியல் மூலமும் உலக அரங்கில் செல்வாக்கிழந்துவரும் அதிகாரத்தரப்பு தனது நிலையை ஓரளவு முட்டுக் கொடுத்து உயர்த்தவும் தானும் ஜனநாயகத்தின் காவலன்தான் என மகுடமிட்டுக் கொள்ளவும் தேர்ந்தெடுத்த உபாயமே கிழக்கு மாகாண சபைத் தேர்தலாகும். இந்த மகுடம் சூட்டு விழாவில் தனது எண்ணப்படியே பூரண கும்பமும் முதல் மரியாதையும் தனது அணிக்கே கிடைத்து விட்டதெனும் முடிவினை எழுதிவிட அது தவியா ய்த் தவிக்கிறது. கிழக்கு மக்கள் தனக்குப் பின்னால் தான் இருக்கிறார்கள் என உலகின் கண்களுக்கு படங்காட்ட முனைகிறது. அந்த விருப்புறுதியை நிறைவேற்ற சிறுபான்மை அரசியல் வாதிகளை சூழ்நிலையின் கைதிகளாக்கி தனது நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்க வைத்திருக்கிறது அதிகாரபீடம்.

போட்டியின் முடிவுகள் முன் தீர்மானிக்கப்பட்டுவிட்டதைப் போன்றதொரு மன பாரத்தை சுமந்தபடியிருக்கும் வாக்காளர்களின் மௌனங்களுக்குள் எரிமலை கனன்று கொண்டிருக்கிறது. சோர் வுறும் மனநிலைக்கு தவிர்க்க முடியாததனால் மறு தெரிவுகள் ஏற்படுத்தப்படுவதுதான் ஜனநாயகத்தின் கேலிக்கூத்து என்பதனால் மறு திசையில் எதிரணியும் பலமாகவே களமிறங்கியுள்ளது. சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரை தமது அரசியல் அபிலாசைகளை அடைய ஒற்றுமை அவசியம் என காலம்தோறும் கூறப்பட்டு வருகின்ற போதும் அவை சாத்தியமற்று போன மைதான் நிஜம். சமூகங்களின் உள்ளக கட்டுமானங்களுக்குள்ளிருக்கும் வேறுபாடுகளை ஆக்கபூர்வமாக ஒருங்கிணைப்பதில் முஸ்லிம் சமூகம் தோற்றுக் கொண்டிருக்கிறது. ஒற்றுமையின் பெயரால் பிளவுகளே வலியுறுத்தப்படுகின்ற கபடச் சூழ்ச்சிகள் நிரம்பியதாகவே முஸ்லிம் அரசியல் அரங்கு தென்படுகிறது.

சிறுபான்மை சமூகங்களுக்கெதிரான பேரினவாதத்தின் இரண்டு அணிகளின் பக்கமும் முஸ்லிம் சமூகம் சாய்க்கப்பட்டு வருகிறது. இரண்டு பேரினவாத அணிகளிலும் முஸ்லிம்கள் குழுமியுள்ளனர். அதாவது ஆபத்தான இரு அணிகளினாலுமே முஸ்லிம்களுக்கு விடிவு கிடைத்துவிடுமென அந்தந்த அணிகளிலுள்ள தொப்பி போட்டவர்கள் கூறுகின்றனர். இங்கு பரிதாபம் என்னவெனில் பிரச்சாரங்களையும் கருத்துக்களையும் முன்னெடுத்து வெளிப்படுத்துவதற்கு உகந்த சூழ்நிலைகள் ஏற்படுத்தப் படாமைதான். கெடுபிடிகளுக்குள்ளும் அதிகார பீடம் விதிக்கும் கட்டுப்பாட்டுக்குள்ளும் நியாயங்கள் அமுங்கிப் போய்விட்டன.

இந்தமுறை பிரச்சாரங்கள் இரண்டு முறைகளில் முன்னெடுக்கப்படுகின்றன. சமூகத்தின் உரிமைகள் பற்றிப் பேசுவோர் மக்கள் மேம்பாடு அபிவிருத்தி பற்றி மூச்சுவிடுவதில்லை. அபிவிருத்தியினை கோசமாகக் கொண்டிருப்பவர்கள் உரிமைபற்றி எதுவும் பேசமுடியாமலும் உள்ளனர். உரிமை விடயத்தில் எழுச்சி காட்டுவோர் கடந்த காலங்களில் தீர்வு முயற்சிகளிலும் பேச்சுவார்த்தை மேடைகளிலும் முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக ஆக்கபூர்வமாகச் செயற்பட்டார்களா? இனியாவது செயற்படுவார்களா? போன்ற கேள்விகள் எழுகின்ற அதேவேளை அபிவிருத்திக் கோசம் போடுவோர் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழுகின்ற எல்லாப் பிரதேசங்களிலும் அம்மக்களின் முக்கிய தேவையறிந்து பணியாற்றினார்களா? அன்றியும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு யோசனைகள் பற்றி அவர்களின் நிலைதான் என்ன? தனித்தனி தேசங்களாக முஸ்லிம்களும் தமிழர்களும் மாறிவிட்ட பிறகு அவர்களை ஒரு தேசமாக ஒருங்கிணைப்பது அசாத்தியமாகும். இவ்விடத்தில் ஐக்கியமும் அபிவிருத்தியும் காலாவதியான கோசமாய் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. அதாவது அபிவிருத்தி அரசியல் என்பது முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் நடவடிக்கைகளுக்கு முன்பிருந்த பழைய நிலையாகும். இனி உரிமை மற்றும் அபிவிருத்தி எனச் சிந்திக்கலாம்.

மூன்று தசாப்தங்களாகத் தொடரும் போரும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுகள் முன்வைக்கப்படாத நிலையிலும் இடம்பெறவிருக்கின்ற தேர்தலில் பேரினவாத அணிகள்தான் களமிறங்கியுள்ளன. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை இரண்டுமே ஆபத்தானவைதான். சிறுபான்மையினருக்கெதிரான கடும்போக்குடைய பௌத்த இனவாதிகளும் தேசப்பற்று வங்குரோத்தாளர்களும் அதிகாரத் தரப்போடு கைகோர்த்து கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் வெகுவாக கரிசணை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கிருக்கின்ற பணி குறைந்தளவு ஆபத்தானவர்கள் யார் என்பதை தெரிவு செய்வதும், அபாயத்தின் வேகத்தை தனிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுவதும்தான்.

பெரும் சீரழிவின் உச்சியில் நிலைநாட்டப்படவிருக்கும் மாகாண சபையும் அதன் ஆசன நிலைகளும் இச்சபையை சுமூகமாக இயங்குவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குமா என்பது பெரும் கேள்வியாகும். இரண்டு இனங்களுக்கிடையில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் மோதலும் போட்டியும் மூன்றாவது இனத்தின் துணையுடன் கிழக்கு மாகாண சபை எவ்வாறு வடிவமைக்கப் படப்போகிறது என்பதன் உள்ளேயே இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விளைவுகள் தெளிவ டைய வாய்ப்பிருக்கிறது.

- செயற்பாட்டாளர்கள்

Tuesday, August 26, 2008

கதைப் பிரதிகள்

www.மனிதஉடற்சில்லுப்பரிசோதனை.med


விஞ்ஞான வரலாறு எழுத மறந்த இலங்கை தென்கிழக்கிஸ்தானில் நடைபெற்ற உடற்சில்லுப் பரிசோதனை பற்றிய தேடற்குறிப்புகள்.

- பர்ஸான். ஏஆர்

நீண்டு சென்றிருந்த கோடையின் பின்னான முதல் மழை எவ்வளவு அருமையாக இருக்கும்?. மிகத் தூரத்திலிருந்து தகிப்புடன் வருகின்ற மழைத்துளி மண்ணில் பட்டுத் தெறிக்கும் தறுவாயை நான்
அனுபவிப்பதற்கென்றே கோடையின் உஷ்ணத்தை தாங்கிக் கொள்வேன். ஏன் நீங்களும் கூட அப்படித்தான் என்று நினைக்கின்றேன். அன்று கிளறிவிடப்படுகின்ற மண்ணின் மணம் மூக்கை அரிப்பதாக நண்பன் எஸ். சிஹாப் எப்போதும் கூறுவான். ஆனால் அதற்குள் இருக்கும் உணர்வு பிரமாதம் என்று நான் மனதில் நினைத்துக் கொள்வேன். இந்த மழை தொடர்ந்து மண்ணில் விழுந்து விழுந்து கோணாவத்தையின் இருமருங்கும் வயல்வெளிகளிலிருந்து வெள்ள நீர் ஓடிவந்து தேங்குவதன் அழகே அழகு. மழை நீண்டு கொண்டே போகும். வயலெல்லாம் ஒளிந்து வாழ்ந்த மீன்கள் கடலின் அருகே வாழ்ந்த கோணாவத்தை மீன்களுடன் சல்லாபிப்பதற்கென்றே இந்த வெள்ளம் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. வரம்பு மீறிப்போனால் கோணாவத்தையின் நீர் கடலிற்கு வெட்டிவிடப்படும் நாள் மீன் விழாவாக தென்கிழக்கிஸ்தானின் இந்தக் கடலோரக் கிராமத்திற்கு அமைவதுவே வழக்கம். நீண்ட கோடையில் முறுக்கேறி விளைந்து போயிருந்த சகல மீன் வகைகளும் அன்று விழாக்கொண்டாடப்படும் அப்பிரதேச வீடுகளில் ருசிக்கப்படுவதற்காக வெளியூர் உறவினர்களும் நாள் பார்த்து வந்துவிடு வார்கள்.

சேறு மிகுதியான
கறுப்பின் கலவையில் தரையெங்கும் பூத்துக்கிடந்தது. சிலவேளை இதிலிருந்து கனிப்பொருட்களைப் பிரித்தெடுக்க நாம் தவறிவிடுகிறோமோ என்ற நினைப்புடன் ஒரு கையில் கழற்றி எடுக்கப்பட்ட பாதணியுடன் மறுகையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பையோடு நடந்து சென்று கொண்டிருந்தேன். மீன்களின் விலை நினைக்க முடியாத உயரத்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தது. நடந்து நடந்து அராபியர் துறையடிக்குச் சென்றபோது வலது கால் பாதத்தின் கீழே வழுவழுப்பான ஏதோவொன்று அகப்பட்டிருப்பதை உணர்ந்தேன். தன் அழகினைப் பறிகொடுத்து நிற்கும் கோணாவத்தையில் கழிவுப் பொருட்கள் மீதமாக அகப்படுவது இயல்பாகிவிட்டதுதானே என்ற நினைப்புடன் அகப்பட்ட நீண்ட நெடிய போத்தலினை சேற்றிலிருந்து பிரித்தெடுத்து பள்ளியின் மதில் மூலையில் போட தூக்கி எடுத்தபோது போத்தலின் மேலே போர்த்தப்பட்டிருந்த சேற்றின் படலம் விலகுவதில் இருந்த அழகினை தற்செயலாகக் கண்டு ஏதோ ஒரு ரசிப்பில் இருந்தேன். அப்போதுதான் அந்த போத்தல் இறுக்கமாய் அடைக்கப்பட்டிருந்ததினைக் காண முடிந்தது. சேற்றுப்படலம் விலகுவதிலிருந்த அழகினையும் மீறி அடைக்கப்பட்ட போத்தல் எனக்குள்ளே ஒரு கிளர்வினை ஏற்படுத்திவிட்டது. வேகமாய் கடலினை நோக்கி ஓடும் வெள்ளத்தினில் அந்த போத்தலினைப் பிடித்து அதன் மேற்புறத்தில் படர்ந்திருந்த சேற்றினை கழுவுவதற்கு எப்படி நினைத்தேனோ தெரியாது. ஆனால் அதற்குள்ளே பழுப்பேறிய மஞ்சள் நிறத்தில் ஏதோ சுருட்டப் பட்டிருந்ததினை உடனே அவதானித்தேன்.

அடைக்கப்பட்ட போத்தலினை முற்றாக கழுவி விட்டு பள்ளியின் குழாய்க் கிணற்றில் மீளவும் சுத்தம் செய்தேன். உம்மா சொன்ன கடலில் மிதந்து வந்த கேத்தலும் பூதத்தின் நினைவும் வந்தபோது சிரிப்பும் வந்து போனாலும் இது என்ன என்ற கேள்வி அச்சத்துடன் கூடவே இருந்தது. மாயாவிக்
கதைகளில் வரும் அச்சமூட்டும் மறைபொருட்களில் எனக்குள் நான் பல இடங்களில் தைரியமிழந்திருக்கிறேன். ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் மர்ம மனிதர்களின் / உயிரிகளின் அடுத்த வினாடிக்கான செயற்பாடுகள் மீது எனக்குள்ள எதிர்பார்ப்பும் அச்சமும் இந்த போத்தலினுள் உள்ள மஞ்சல் தாளில் வருவது நியாயமாகவே இருக்குமென நான் என் மனதிடம் கூறிக்கொண்டேன். என்றாலும் மிக இறுக்கமாக இருந்த பிளாஸ்டிக், பொலிதீன் கலந்த மூடியினைத் திறப்பதில் விரலும் உள்ளங்கையும் நன்றாகவே கஷ்டப்பட்டு விட்டது.

மிக நீண்ட நாட்களிற்கு முன்னரானதாக இந்த மஞ்சல் தாள் இருக்கவேண்டும். கிட்டத்தட்ட என்று ஒரு குறிப்பிட்ட காலத்தினை கூறுமளவு என்னிடம் இதுபற்றிய அறிவு இல்லை. என்றாலும் பிளாஸ்டிக் உபயோகத்தின் ஆரம்ப கட்டமாக இது இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய 2011
ஹிஜ்ரி ஆண்டிற்கும் இந்த மஞ்சல் தாளின் வயதிற்கும் மிகத்தூரம் என்பது மட்டும் புரியக்கூடியதாகவிருந்தது. தாளின் ஆரம்பத்தில் 786 என தொடங்கியது இது ஒரு சோனகன் எழுதியது என்ற நினைவு வந்தது. இந்த எண்களினை பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கிணையாக முன்னொரு காலத்தில் முஸ்லிம்களில் சிலர் பாவித்துள்ளதனை ceylon muslim nation என்ற google group இல் இருந்து காணக்கிடைத்த நினைவு உடனே வந்தது. இது தொடர்பாக ஏராளமான விவாதங்களும் இயக்கங்களும் முஸ்லிம்களிடம் ஹிஜ்ரி 1300 களில் இருந்து சில நூற்றாண்டு காலம் நடந்ததுவாம். ஆனால் 786 ற்குப் பின் வரிசைக்கிரமமாக எழுதப்பட்ட எண்களும் அராபியத் தமிழ் எழுத்துக்களும், குறியீடுகளும் இது ஒரு கேலி என்ற நிலைப்பாட்டினை சற்று எனக்குள் கொண்டுவந்தது என்றாலும் முன்னர் நான் உளவாளியாகச் செயற்பட்டிருந்ததில் அனுபவித்த திரில்களும் இறுகிய சம்பவங்களை பின்தொடர்வதில் இருந்த ஆர்வமும் என்வயது ஓய்விற்கான காலம் என்பதினையும் தாண்டி எனக்குள் இந்த மஞ்சல் தாளின் பக்கம் ஈர்ப்பினை ஏற்படுத்தியது. மீன் வாங்கலாம் என்று மழையையும் பாராமல் வெளியிறங்கிய நான் அவை அனைத்தையும் மறந்துவிட்டு எனக்குக் கிடைத்த இந்த கிறுக்கல்கள் நிறைந்த தாளுடன் வீடு நோக்கிப் புறப்பட்டேன். இது என்ன? இதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? யார் இதனை எழுதி கோணாவத்தையில் போட்டவர்கள்? அப்படிப் போட என்ன காரணம்? இது ரகசியமா? எல்லையற்ற கேள்விகள் எனக்குள் வந்து விழுந்து கொண்டிருந்தது. ஆனால் நேரம் இருளிற்கு சொந்தமாக மாற்றப்பட்டு விட்டது. தனிமையில் எனது உம்மாவின் வீட்டில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதால் மின் விளக்குகளை ஏற்ற நான்தான் அங்கு வேண்டும். இதற்கிடையில் நீண்ட மழைகாலம் என்பதால் Solarpower போதியளவும் charge ஆகவில்லை என்ற எண்ணம் இப்போதுதான் வந்தது. பார்ப்போம், முடியுமானவரை இதனைப் பற்றிய தேடலின் ஆரம்பங்கள் எனக்குள் ஒரு வரலாற்றின் தொடக்கம் போல் தென்பட்டது. காலம் கடந்து பல்வேறு வியாதிகளின் சரணாலயமாய் வாழும் எனக்கு மிக நீண்ட நாட்களின் பின் ஒரு கடமை வந்திருப்பதாய் உணர்ந்தேன். என் எண்ணங்கள் மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் நான் மிக ரகசியமாய் இயங்கிய காலத்திற்கு என்னை அழைப்பதுவாய் இருந்தது. ஆனால் திக்கொன்றாய் பறந்துவிட்ட நண்பர்கள் உடனில்லாத போதும் தொழில்நுட்பம் அவர்களை என் அருகிலே வைத்திருக்கிறது. இப்போது இந்த எண்கள், எழுத்துக்கள், குறியீடுகள் என்ன என்று நான் கண்டறிவதே பிரதான பணி. மீளவும் ஆய்வுகளின் பக்கம் நகரப் போகிறேன். பழையபடி இணையங்களில் அலையப்போகிறேன். பிரயாணங்களும் கூட என் ஆய்விற்காய் எனக்கு விதிக்கப்படும். ஒருவேளை இது ரகசியமாக இருப்பின்..?

தூக்கம் வர மறுத்துக் கொண்டேயிருந்தது. எதிர்பார்ப்புக்கள் நிறைந்து போயிருக்கும் போதும் வேலைப்பழு மனதில் நிரம்பிய பின் இராக்களில் விழிப்புத்தானே கிடைக்கும் பரிசு. எனது Hostel வாழ்க்கை, என்னை மாற்றிவிட்ட நாட்கள், என் தொழிலின் காரணங்கள் என்பன நீண்ட விழிப்புக்களைத் தந்திருக்கிறது. அவைபோல் இன்றைய இரவும் விழிப்புக்காய் விதிக்கப்பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டேன். நேரம் அதிகாலையை நெருங்கிக் கொண்டிருந்தாலும் மஞ்சள் தாளின் புதிர் என்னை எங்கோ மிதக்க வைத்துக்கொண்டிருந்தது. எதிர்பார்ப்புக்களுடன் / உட்கற்பிதங்களுடன் அணுகுதல் நம்மை வேறு திக்கிற்கு அழைத்துவிடும் என்ற நம்பிக்கை கொண்டு இத்தனை நாளும் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இன்று எதிர்பாராத விதமாய் முற்கற்பிதங்களுக்குள் அகப்பட நேர்ந்ததினை அவமானமாய் கூட உணர்ந்தேன். என்றாலும் முடியவில்லை. இதிலிருந்து விடுபட மஞ்சள் தாளினை பிரதிகள் எடுத்துக் கொள்வது உசிதம் என்ற எண்ணம் தோன்றியது. இணையத்தினில் பிரதிகளை சேமிக்கும் பழக்கம் உள்ள எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவது இயல்பே. Scanning செய்து கணனிக்கு எடுக்கும் போது மற்றொரு நிகழ்வினை சந்தித்து அதிர்ந்தும் அச்சமடைந்தும் போனேன். Scan செய்யப்பட்ட மென் பிரதியில் மஞ்சள் தாளில் உள்ள கிறுக்கு விளையாட்டுக் கோலம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருந்தது. உடனடியாக கிறுக்கு எழுத்துக்காய் பயன்படுத்தப்பட்ட மையினை அறிவது முதன்மையாகியது. இது தொடர்பாய் இணையத்தில் தேடியபோது பல சுவாரஷ்யம் நிறைந்த ஆய்வுகளின் முடிவுகள் என் முன்னே வழமைபோல் விரிந்தன. அந்தப் பக்கங்களிலிருந்து பின்வரும் குறிப்புக்களை copy செய்து கொண்டேன். சதுப்பு நிலங்களை அண்டிய அடர்ந்த புற்தரைகளுக்குள்ளே சிறிய தடித்த ~கண்காணல்| என்ற புல்வகை ஒன்று இருக்கிறது. இந்தப் புல்லின் இலைகள் மிகவும் மென்மையாகவும், வழுவழுப்பு நிறைந்தாகவும் இருக்கும். மெழுகால் போர்த்தப்பட்டது போல. இதன் இதழ்களைப் பிடித்து கசக்குகின்ற போது சிவப்பு நிறம் கொண்ட ஒரு வகைத் திரவியம் வெளிப்படும். இது பெண்கள் உதட்டிற்கு பூசும் Lipstick நிறத்தினை ஒத்ததாக இருக்கும். இதனைத் தொட்டு எழுதுகின்ற ஒரு வினோத முறை மிக நீண்ட வருடங்களின் முன் சதுப்பு நில மக்களிடையே காணப்பட்டிருக்கிறது. இந்த சிவப்பு நிற திரவியத்துடன் ரோஸ் பன்னீரினை கலக்குகின்ற பொழுது Brown நிறத்திற்கு ஒப்பான திரவியமாக அது மாற்றம் அடைவதுடன் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கக் கூடியதாய் அடையாளமிடவும் எழுதவும் இதனை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் உப்பு நீரின் கலவை ஏற்பட்டதால் பெரும்பாலான சதுப்பு நிலங்களிலிருந்து கண்காணல் புல்லினம் அழிந்துவிட்டது. இப்போது இந்த கண்காணல் முற்றாக அழிந்துவிட்ட புல்லினமாக பூகோள உயிர்மை நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்போது எனது முதலாவது வினா விடைதேடி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்து நின்றது.
இதனை யார் எழுதியுள்ளார்கள் என்பதனையும் தாண்டி எந்த நிலப்பிரதேசம் சார்ந்து இது எழுதப்பட்டது என்பது சற்று கண்டு பிடிக்கப்பட்டதாய் இருந்தது. இதன் காலம் கண்காணல் சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருந்த காலம் என்பதுவும் நிறுவனமாகியது. ஆகவே கோணாவத்தை சதுப்புசார் நிலமாக இருந்ததனால் இப்புல் அங்கு கிடைக்கக் கூடியதாக இருந்திருக்கலாம். கி.பி 2004ம் ஆண்டு காலப் பகுதியில் ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தின் போது கடல் நீர் தென்கிழக்கிஸ்தானின் கடலோரக்கிராமங்களைத் தாக்கியுள்ளது. அதன் போது கோணாவத்தை அதன் இயற்கை அழகினை முற்றாக இழந்ததாகவும் அதன் சுற்றுச் சூழல் முற்றாக அழிந்துவிட்டதாகவும் பூகோள உயிர்மை நிறுவனத்தின் ''கடந்த நூற்றாண்டு வளம்'' அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. ஆக, கோணாவத்தை சார்ந்து முன்னொரு காலத்தில் யாரோ கண்காணல் திரவியத்தினால் இதனை எழுதியிருக்க முடியும். அப்படியாயின் கடல் கோள் அனர்த்தத்திற்கு முன் வாழ்ந்தவர்களில் இவ்வகையான எழுத்து முறைகளை பயன்படுத்தியவர்களை தேடிப் போக வேண்டிய தேவை இப்போது எனக்கு ஏற்பட்டது. இந்த எழுத்து முறைமையை இணையத்தில் தேடிப் பார்த்தபோது அதற்கான ஒரு உதவிப் பக்கங்களையும் காண முடியவில்லை. அது மட்டுமன்றி இந்த எழுத்து அமைப்பு முறை ஏனைய எழுத்துக் கோலங்களுடன் ஒத்துப் போகவுமில்லை. வார்த்தை விளையாட்டிலும், எண் கணித விளையாட்டிலும் இந்த மொழி தன்னை இணைத்துக் கொண்டாலும் அரபும், தமிழ் எழுத்துக்களும் இந்து அராபி எண்களுடன் இணைந்திருப்பதினை நான் இப்போதுதான் முதன்முதலாகக் காண்கிறேன்.

மொழி ஆய்வுகளில் ஈடுபட்டு உலகின் ஆதிமொழி பற்றிய ஆய்வினைச் செய்த பேராசிரியர் நல்லதம்பி ஆதம் அவர்களின் நூல்களை படித்திருந்ததன் காரணமாக அவர் இந்த இடத்தில் என்னுள்ளே வந்து நின்றார். அரசின் ஒலிபெருக்கித் தடை கடந்த ஒரு நூற்றாண்டாய் நீடித்தாலும்
தென்கிழக்கிஸ்தானில் அது கொஞ்சமும் நடைமுறையில் இருக்கவில்லை. பேராசிரியர் நல்லதம்பி ஆதம் இன்று ஓய்வுடன் அமைதியாகத் தன் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் எவரையும் சந்திக்கும் தருணங்களை அவரின் குடும்பத்தினர் இப்போது அவருக்கு கொடுப்பதில்லை. வைத்தியரும் அப்படித்தான் கூறியிருக்கிறார். சாதாரண மனிதனின் ஆயுள் கோட்டினையும் தாண்டி இன்னும் இருக்கிறார் பேராசிரியர். இந்த மஞ்சள் கிறுக்கல் மொழியினை அப்படியே பார்த்து இன்னொரு பிரதியினை எழுதியெடுத்துக் கொண்டேன். நான் கூட எதிர்பார்க்காத கோணமொன்றில் பேராசிரியரை சந்திக்க கிடைத்தது. மொழிக் கிறுக்கினைப் பார்த்து எந்தவித சலனமுமின்றி பேராசிரியர் இருந்த போது நான் அது தொடர்பான நிலைப்பாடுகளைக் கூறினேன். அதையும் அவ்வாறே கேட்டவரிடம் ஆர்வம் அதிகரித்திருக்க வேண்டும். வெள்ளி போன்று மினுங்கிக் கொண்டிருந்த அவரின் கைத்தடியின் துணையுடன் எழுந்து சென்று முன்னே இருந்த ஜன்னலின் திரைச் சீலைகளை விலக்கிவிட, காலை வெயில் இதமாகவும் ஒவ்வொன்றாகவும் அந்த நீண்ட வராந்தைக்குள் வந்து கொண்டது. இது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியமைப்பைப் போல் தென்படவில்லை. ரகசியமான விடயங்களைப் பரிமாறிக் கொள்ளும் உளவாளிகள் தங்களின் குறியீடுகளாய் இதனைப் பயன்படுத்தியிருக்க முடியும். இந்த மொழிக்குறிகள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னரான எழுத்து மாதிரிகளைக் கொண்டது. எந்தக் காலத்திலும் அழியாது இருக்க வேண்டுமென்பதற்காய் இயற்கைத் திரவியம் ஒன்றினை பயன்படுத்தி உள்ளார்கள்.

சிலவேளைகளில் இது கண்காணல் புல்லினமாகக் கூட இருக்க முடியும் என்றார் பேராசிரியர். எனக்கு எதுவுமே புலப்படவில்லை. தென்கிழக்கிஸ்தானின் வரலாற்றில் அரசியல் மிக முக்கியமானது.
ஆனால் ரகசியமாக அங்கு என்ன நடந்திருக்க முடியும்? இது ஒரு கேலி விளையாட்டோ..?

இந்த மொழிமாதிரியை தன் நினைவில் நிறுத்திக் கொண்டு Diaryகளை வேகமாகப் புரட்டிக் கொண்டிருந்த பேராசிரியரைப் பார்த்தபோது எனக்குள் ஆர்வம் வேகமாகியது. திடீரென பேராசிரியர் பக்கங்களைப் புரட்டுவதை நிறுத்திவிட்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த மொழி அமைப்பைக் கொண்ட மற்றொரு பிரதி தென்கிழக்கிஸ்தானின் நூதன சாலையில் 63வது வாயிற் கதவிற்கு அருகிலுள்ள முதுரைப் பெட்டகத்தின் மேலே கண்ணாடி சுவர்களுக்கு பின்பகுதியில் இருக்கிறது. இதனை துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார் எழுதியிருக்கிறார். என்று மூச்சு வாங்கும் அளவு வேகத்தில் கூறி முடித்தார் பேராசிரியர். தன்னை மீளவும் தேடல் நிறைந்த உலகத்தினுள் சஞ்சரிக்க ஆயத்தப்படுத்துவது போல் மாறிக்கொண்டிருந்தார். துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார்.
அவரின் நினைவாக அவர் வாழ்ந்த வீடு தென்கிழக்கிஸ்தான் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையமாக இன்று இருக்கிறது. பேராசிரியரின் தேடலில் ஏதோ தென்பட்டிருக்க வேண்டும். சிலசில குறிப்புகளுக்கிடையே தேடல்கள் தங்கிச் செல்வது இயல்புதானே. துக்தூர் இந்தக் குறியீடுகளின் ஊடாக எதையோ சொல்ல வருகிறார். அவரின் புத்தகங்களும் ஆய்வு முடிவுகளும் இணையப் பக்கங்களும் தாண்டி அவர் ஏன் இந்த கண்காணல் திரவியம் மூலம் இப்படி தனக்கான மொழியை பயன்படுத்தியுள்ளார். பேராசிரியர் மீள மௌனித்துப் போனது இன்னும் எனக்குள்ளே கேள்விகளின் வாதப் பிரதிவாதங்களை கிளறி விட்டுக் கொண்டேயிருந்தது. திடீரென எழுந்து தன் மென்பொருள் கோவைகளுக்கிடையே இருந்த ஒரு கோவையைத் திறந்து ஆழமாக உற்றுநோக்கிய பேராசிரியர் ''இன்னும் சில ஆய்வுகளினை மறைத்துவிட வேண்டிய நிலையில் நான் இப்போது உள்ளேன்'' என்று இறுகிய குரலுடன் கூறியபோது அது துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் ''வழிப்போக்கனின் பாதையோரங்கள்'' என்ற நூலின் மென் பிரதியின் 112வது பக்கத்தினில் இருப்பதென தெரியவந்தது.

''வழிப்போக்கனின் பாதையோரங்கள்'' துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் ஆய்வுகளினையும் அவரின் பல்துறைசார்ந்த வாழ்வு பற்றியுமான கதைத்தொகுதியாகும். இலத்திரனியல், தகவல் தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி என்று பல்வேறு துறைகளினூடாக தன் வாழ்நாட்களின் ஒவ்வொரு வினாடிகளையும் நகர்த்தியவர் துக்தூர். அன்று பிரிவினைவாதிகள் சுதந்திர நாடு கோரி அரசியல் தோல்வி அடையும் தறுவாயின் முன்னரே அரங்கேற்றிய வெறியாட்டத்தினுள் துக்தூரும் அகப்பட்டுக்கொண்டார். இரசாயன ஆய்வுகளில் மிக முனைப்புடன் ஈடுபட்டிருந்தவரை
பிரிவினைவாதப் போராளிகள் உயிரியல் ஆயுதங்களை தயாரிக்குமாறு வேண்டினர். ஆனால் மனிதர்களை அழிக்கும் போராட்டத்திற்கும் திட்டமிடாத வன்முறையிலான சமுதாய மாற்றத்திற்கும் தான் உதவ முடியாததென கூறியிருக்கிறார் துக்தூர். அது மட்டுமன்றி தென் கிழக்கிஸ்தான் உட்பட கிழக்கிஸ்தான் வடநாடு பெருநிலப்பரப்பில் வாழ்ந்த சோனக முஸ்லிம்களை இந்தப் பிரிவினை வாதப் போராளிகள் மிக மோசமான அறவே மனிதாபிமானமற்ற முறையில் வழிநடத்தியமையும் அவர்களுக்கு இழைத்த சொல்லொண்ணா கொடூரங்களாலும் துக்தூர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தக் காலங்களில் அவர் அரசியல் பற்றியும் விஞ்ஞான ஆய்வுகளை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வழிப்போக்கனின் பாதையோரங்களினை துக்தூர் பெருமளவில் எழுதி முடித்திருந்தாலும் அவர் போராளிக் குழுவில் இருந்தவர் என ஆட்காட்டி பொம்மை அரச படைகளிடம் தவறாய் வேண்டுமென்று காட்டிக் கொடுத்ததினால் இவர்அரச படைகளினால் டயர் போடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் ஆய்வு மாணவன் காதர் மொஹ்தீனாலே அந்தக் கதைத் தொகுதி முழுமை செய்யப்பட்டது. அதுவும் துக்தூர் காதர் மொஹ்தீனுக்கு எழுதிய மின்னஞ்சல்கள் கதைத்தொகுதியின் பின்னைய பக்கங்களாக சேர்க்கப்பட்டன. ஆனால் கதைத்தொகுதி வெளிவந்து இரண்டு மாதங்களின் பின் இன்றைய எண்ணெய் வள நாடான பங்கோளினிலில் நடைபெற்ற வீதி விபத் தொன்றில் காதர் மொஹ்தீன் மௌத்தாகிவிட்டார். இதனால் துக்தூர் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளிவராமலே போய்விட்டன.

நான் பேராசியரியரின் அனுமதியுடன் தென்கிழக்கு நூதனசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். இந்த நூதனசாலை நபிகளாரின் நினைவு நாளுக்கான பரிசாய் உருவாக்கம் பெற்று தென் கிழக்கிஸ்தான் பல்கலைக் கழகத்தின் பரிபாலனத்தின் கீழ் வந்ததொன்றாகும். ஆனால் அந்தக் காலத்தினில் போதியளவு இது பயன்படுத்தப்படவில்லையென்று கூறப்பட்டது. பின் சில ஆய்வு மாணவர்களின் முயற்சியால் இங்கிருந்த நுண்பொருட்கள் முதன்முதலாக பல்வேறு வகையான ஆய்வுகளிற்கு உட்படுத்தப்பட்டது. அதன் போதுதான் இலங்கையில் வாழ்ந்த நாகர் பரம்பரையும் அவர்கள் முதல்மனிதன் ஆதமின் நேரடிவழித்தோன்றல்கள் என்பதும் உலகின் மூத்த மொழியாக ஆதம் பேசிய ஆனால் எழுத்துரு பெறாத தொக்கு வசனங்களுடனான எழு மொழியும் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் ஆதமின் வழித்தோன்றல்களாக் கொள்ளப்படும் இலங்கைச் சோனகர்கள் அரபுத்தேசங்களில் இஸ்லாத்தின் வருகையின் பின்னர் தாங்கள் எதிர்பார்த்திருந்த இறுதித்தூதரின் வழியை ஏற்றுக்கொண்டதையும் அந்த தூசுக்குள் கிடந்த நூதனசாலையின் பொருட்களே நிறுவிக்காட்டின. அப்படிப்போந்த நூதனசாலைக்குள் இன்று நானும் ஓர் ஆய்வு மாணவனாய்ப் போகிறேன்.

63வது வாயிற்கதவின் அருகிலுள்ள முதிரைப் பெட்டகத்தின் மேலே கண்ணாடிச் சுவர்களிற்குப் பின்பகுதி இப்போது எனக்காய்க் காத்திருப்ப தாய்ப்பட்டது. உண்மையிலே இந்த ஒரு நூற்றாண்டாய் அது எனக்காகத்தான் காத்திருக்க வேண்டுமென்று மனதிற்குள் பெருமையாய் கூறிக்கொண்டேன். என்றாலும் அந்த பிரதியை பார்க்கும் வரை இப்போது வந்திருக்கும் நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டிருக்கவில்லை. அந்தக் குறிப்புக்களையும் நகல் எடுத்துக்கொண்டேன். இறைவனின் விளையாட்டுக்களில் இன்று நான் ஆய்வாளன். ஒரு வரலாற்றின் தொடக்கம் அல்லது ஒரு சமுகத்தின் தலைவனுடைய ஆய்வு ரகசியம் என்னுள்ளே இருக்கிறது. இதுவரை இவ்வுலகின் தலைவிதிகளை ஆய்வுகளும் சிந்தனைத் தளங்களும்தானே ஆண்டிருக்கின்றன. மேடைகளில் முழங்கும் தலைமைகள் வெறும் பொம்மைகள் என்பதினை சாதாரண மக்களும் நன்கறிவர். துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார் மக்கள் அறிந்த ஒரு விஞ்ஞான மனிதர். சமூகவியலை விஞ்ஞானத்துக்குள்ளும் விஞ்ஞானத்தை அல்குர்ஆனிற் குள்ளும் தேடியவர். ஒரு பணக்காரனாக வாழ்ந்து கொண்டே ஏழைகளின் பாயில் தூங்கி எழுந்தவர். இப்போது என்னிடம் ரகசியமாய் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

கண்ணாடிச் சுவர்களின் கீழே சூரிய ஒளியின் கதிர்கள்படும் போது மட்டும் ''காலைக்கதிர் எழும்பும் திசையின் மேற்புரத்தே ஒளி அடையும் வரை அது நேர்தான். பிரமிட்டுகளின் நிர்மாணத்திற்கு இதுதான் வழியாகும். ''என குறிக்கப் பட்டிருந்தது. அதிர்ந்து போனேன். என்னிடமிருந்த காகிதத்துண்டும் இதுவும் ஒன்றாகிவிட்டதா? அதே மொழி. ரகசிய மொழி. துக்தூர் பிரமிட்டுக்களின் நிர்மாணத்தில் கையாளப்பட்ட ஒளியின் நேர் வடிவினை ஆய்வு செய்திருக்கிறார். அது தான் சூரியனின் ஒளி இந்தக் கண்ணாடிச் சுவர்களிற்குள் வராவிட்டாலும் சிறிய ஒளி வரும் போதே இந்த எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. வெளிச்சம் மறையும் போது எழுத்துக்களும் மங்கலாகின்றன. அப்படியாயின் எதனை அவர் இங்கு மறைத்துப்போட்ட மொழிக்குறிகளால் கூறியுள்ளார். இது தொடர்பாக நூதனசாலை அதிகாரியிடம் விசாரிப்பதாய் முடிவெடுத்துக் கொண்டேன்.

துக்தூரின் ஆய்வுகளில் பல புரிந்து கொள்ளப்படாமலே இன்னும் இருக்கின்றன. அவரின் ரகசிய மொழியும் கூட. ஆனால் பெரும்பாலான விடயங்களின் மீது துக்தூர் செயற்பட்டிருக்கிறார். இவரின் மொழியினூடாக சில முக்கிய விடயங்களை தெரிந்து கொள்ளாதளவிற்கு அவர் விட்டுச்சென்று விட்டார். ஆனால் வட நாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளரான சங்கரப்பிள்ளை பெரியதம்பி தன் இளமை நாட்களில் இவரின் மொழிபற்றி சில ஆய்வுகளை இங்கு
வந்து நின்று செய்தார். ஆனால் அதனை முற்றுப்பெற வைக்கவில்லை. அவரின் மொழி ஆய்வுகள் சில என்னிடம் நகல் பிரதியாக இருக்கின்றன. அது உங்களுக்குப் பயன்படலாம் என நினைக்கிறேன் என்று கூறிய தொல்லியல் ஆய்வாளரும் நூதனாசாலை அதிகாரியுமான உடகெதர முஹம்மத் ஸாலி தன் கோப்புகளிற்கிடையே இருந்த ஒரு தொகுதி நகல் பிரதிகளைகளைத் தேடித்தந்தார். அது சங்கரப்பிள்ளை பெரிய தம்பியின் கையெழுத்துடனான ஆய்வுக்குறிப்புகளாய் இருந்தன.

ச.பெரிய தம்பி ஏன் இந்த ஆய்வுகளை முழுமை பெறச்செய்யவில்லை என்ற கேள்வியினையும் தாண்டி அவரின் ஆய்வுக்குறிப்புக்கள் எனக்குப் பெரும் துணையாக இருந்தது. துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் னயசைலகளையும் ச.பெரியதம்பி தன் ஆய்வில் இணைத்திருக்கிறார். அதன் மூலம் தான் என்னிடமிருந்த புதிர்கள் மீதான விடையின் பாதை
திறக்கப்படும் என்ற நினைப்புடன் நான் நூதனசாலை சென்றிருக்கவில்லை. ஆய்வுக் குறிப்புக்களை இரண்டு நகல் பிரதிகள் எடுத்துக்கொண்டு நிறைந்த ஒரு ஆய்வாளனுக்கான மனத்திமிருடன் வெளியேறினேன். உங்களை மீளவும் சந்திக்கும் போது துக்தூர் பற்றிய பல நிஜங்களும் இன்னும் சில பக்கங்களையும் உலகம் தன் வரலாற்றில் இணைக்கும் என உடகெதர முஹம்மத் ஸாலியிடம் கூறிய வேளை அவர் என் கரம்பற்றி தோள்களை அழுத்திய போது நான் பொறுப்புச் சாட்டப்பட்டவன் என்ற எண்ணம் என்முன் எழுந்து நின்றது.

ச.பெரியதம்பியின் எழுத்துக்களைப் படிப்பதற்குள்ளே நாட்கள் நகர்ந்து விடுமே என்ற அச்சத்துடன் தான் நகல் பிரதியில் இருந்த எழுத்துக்களைப் பார்த்தேன். தன் பல்கலைக்கழக விடுமுறைகளின்
போது பெரியதம்பி ஜயா துக்தூர் தொடர்பான ஆய்வுகளைச் இங்கு செய்துள்ளார். என்னிடமிருந்த குறிப்புக்கள் ஒரு உலகம் தாண்டி என்னை அழைக்க முயன்று கொண்டிருந்தது. துக்தூர் ஒரு வழியினூடாக பயணம் செய்தவர் போலத் தெரியவில்லை. எல்லாத் துறைகளையும் ஆராய்ந்து கொண்டே இருந்திருக்கிறார். அரசியலும் அவ்வாறுதான் அவரிடம் இருந்திருக்கிறது. முடிந்த முடிவாய் எதையும் நிர்ணயிக்காத தொடர் பயணம் இவருடையது. ஆரம்ப காலங்களில் போராளிகளுக்கு கூட தன் சொந்த செலவில் சமூக விதிமுறைகளைப் பற்றியும் சமூக உளவியல் பற்றியும் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். உயர் மட்ட போராளிகள் போராட்ட விதி முறைகளையும் இவரிடம் தங்கியிருந்து கற்றிருக்கின்றனர். சில காலம் போராளி களுக்கு மறைவான தங்குமிடமாகக் கூட துக்தூரின் வாசஸ்தலம் இருந்திருக்கிறது என தன் முதல் பக்க ஆய்வுக்குறிப்புடன் ச.பெரியதம்பி துக்தூரை ஆராயத் தொடங்கியிருக்கிறார்.

குறிப்புக்களை தொடர்ந்து புரட்டிக் கொண்டு போனபோது ''மொழி'' என்ற தலைப்பு என்னிடம் இடறி விழுந்து நின்றது.

அறபு மற்றும் தமிழ் எழுத்துக்களுடன் நமது இலக்க அமைப்புக்களையும் இணைத்து சில முக்கிய விடயங்களினை குறித்து வைக்கின்ற ஒரு நீண்ட பழக்கம் இவரிடம் இருந்ததாய் இதுவரை என்னால் அறிய முடிகிறது. புராதன மன்னர்கள் உள்ளிட்ட உலக வரலாறுகளில் இதனை நிறையவே காணக்கிடைத் திருக்கிறது. ஆனால் தொழில் நுட்பத்தின் ஆதிக்கம் மேலோங்கி மரபான சமுக
அமைப்புக்கள் மாற்றமடையத் தொடங்கியதும் அனைத்திற்கும் இலத்திரனியல் அத்தியவசியமான பொருளாக மாறியது இந்த குறியீட்டு ரகசிய முறை வழக்கொழிய பெரும் காரணமாகியது. என்றாலும் தொழில் நுட்ப மாயைக்குள் மூன்றாம் மண்டல நாடுகளை திக்குமுக்காடச் செய்துவிட்டு தன் இலத்திரனியல் மேலாதிக்கத்தின் மூலம் இந்நாடுகளின் மனித மூளைகளை மூடியே வைத்திருக்கின்ற மேற்கைய ஃ தகவல் தொழில் நுட்ப நாடுகள் தம் ரகசியங்களுக்கு இன்னும் இந்த முறைகளினை கையாள்வதை நாம் அறிகிறோம். என்றாலும் மருத்துவ மற்றும் இதர துறைகளில் அதி நவீன பாய்ச்சலைக் கொண்டிருக்கும் இவர் இந்த குறியீட்டு மொழிகளினால் தன் ஆய்வினையும் கண்டுபிடிப்புக்களையும் வணிகத்திடம் பறிகொடுத்து விடாது பாதுகாத்திருப்பது அதியுயர் செயற்பாடன்றி வேறென்ன? இந்த மொழியை இவர் தன் சுய ஆளுமையினால்தான் வளர்த்திருக்கிறார். பொரும்பாலான ஆய்வுக் குறிப்புக்களும் இரசாயனவியல் சேர்க்கைகள் பற்றிய குறிப்புக்களும் இந்த மொழியினூடாகவே அவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் சமூகவியல் செயற்பாடுகளுக்கான தன் ஆய்வுகளை அவர் இக்குறிகள் ஊடாக எழுதியிருந்தா லும் அதனை மிகப் பகிரங்கமாக தன் பல்கலைக்கழக மாணவர்களிடம் பிரயோகித்து பலரினை சமூக விஞ்ஞானிகள் என்ற பட்டதிற்கு தயார்படுத்தியுள்ள மையை வெளிப்படை யாக அறிய முடிகிறது. இவரின் மொழியமைப்பில் நான் பிரமித்தது போல இவரின் ஆய்விலும் பிரமித்துள்ளேன். தொழில் நுட்ப வளர்ச்சி நாடுகளிற்கு இந்தத் தீவில் இருந்து கொண்டே தன் அறிவால் சவாலாக இருந்தவர் துக்தூர் என்பதனை ஏற்கத்தான் வேண்டும். பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிக்குள் தன்னை ஈடுபடுத்தியவர் இவ்வாறு மொழியிலும் சிறப்புற்று இருப்பது அதிசயமாகவே இருக்கிறது. துக்தூரின் மொழிக் குறியீடுகளில் சில விடயங்களை அவதானித்து அதனைப் பொருத்தியும் பார்த்தேன். தமிழ் எழுத்துக்களும் அறபு எழுத்துக்களும் நெடில் மற்றும் இதர குறிகளையும் துக்தூர் பயன்படுத்தியுள்ளார். 1 தொடக்கம் 9 வரையான ஒன்பது இலக்கங்களின் பின்னே அ தொடக்கம் ஒள வரையான எழுத்துக்கள் மறைந்து இருக்கின்றன. அதே போல் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இருக்கின்ற ஏனைய விசிறிகளும் இதில் இணைக்கப்பட்டிருப் பதினைக் காண்கிறேன் என ச.பெரிய தம்பியின் ஆய்வுக் குறிப்புக்கள் கூறிக்கொண்டே தொடர்ந்திற்று.

நான் பாதை தெரிகின்ற வழியில் வந்து நின்றேன். இதனை உடனடியாக பேராசிரியர் நல்லதம்பி ஆதமிடம் தர்க்க ரீதியில் நிரூபிக்க வேண்டிய துணை ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினேன். இதனை விட வேறென்ன தேவை இருக்கிறது என என் மனம் கேட்டுக் கொண்டே வந்தது.
அவதானிப்புக்களையும் ஒழுங்குகளையும் அல்லாஹ் மனிதனின் இயல்புடன் வைத்திருப்பதினை நாம் எத்தனை பேர் நியாயமாக புரிந்து வைத்துள்ளோம்? துக்தூர் சிங்கள மொழியில் இருந்தும் குறிகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் சிங்கள எழுத்துக்கள் எதனையும் அவர் குறிகளாக எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்கொண்டிருந்தால் துக்தூரையும் சிங்கள national colorதாத்தாமார் புனிதனாக ஏற்று புனித நிலப்பிரகடனம் கூட செய்யப்பட்டிருக்கும் என மனம் சிரிப்புடன் கூறிக் கொண்டது. இப்போது துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் குறிகளில் பெரியதம்பி சேகரித்தவற்றி லிருந்து சிலதினை ஒழுங்கமைத்துப் பார்த்துக் கொண்டேன். பொருத்திப் பார்த்த போது இரசாயனக் கலவையின் சூத்திரங்களை அது கூறியது. இரசாயனவியல் அறிவிற்கும் எனக்கும் மிகத்தூரம் என்பதால் அக்குறிகளின் மொழி மாற்றத்தை அப்படியே ஏற்றேனோ தெரியாது.

இப்போது நான் எனது மஞ்சள் தாளின் கிறுக்கு விளையாட்டுக்கு மீளவும் திரும்பி அதன் பிரதியைப் பார்தேன். அதில் காணப்பட்ட வரிகள் ஆயிரம் பொருள் கொண்டதாய் தெரிகின்றன. மனிதனும் கூட அப்படி த்தான் இருக்கிறான். புறவயத்தினை வைத்து இது இவை இவைதான் என்ற எந்த முடிவுகளையும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. நமது கற்றலில் அனுபவம் மிகப் பெரிய இடத்தினை கொண்டுள்ளது. நாம் நினைக்கும் தன்மைகளை விட அகவயம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. சிரித்த அழகிய புறவயத்தின் பின் மிக மோசமான காரிருள் அரசாட்சி
செய்வதினை அனுபவித்து அனுபவித்து முடிந்ததன் பின்னும் மனிதன் நல்லவன் என்றே இன்னமும் நினைக்கிறேன். உலகின் இருள்களில்தான் மனிதன் தன் சுயத்துடன் இருக்கிறான் போல. தனக்கு எது சாதகமோ அதனை மட்டுமே முன்னெடுக்கிறான். மற்றவர்களின் அகத்தினை நிமிர்ந்து பார்ப்பது மனிதனின் பண்பல்ல எனுமளவு மிக மோசமாகிவிட்டது. போராட்டமும் அப்படித்தான் இத்தீவில் சென்று விட்டதாம். நசுக்கப்படுகிறோம் எழுந்திருப்போம் என்ற பன்மை விகுதிகளின் சில நிகழ்ச்சித்திட்டங்கள் மாறி ஒருமை விகுதிகளாக உருமாற்றம் பெற்ற கேவலம் இங்குதான் நடந்தேறி முடிந்திருக்கிறது. எனது மஞ்சள் தாளின் வரிகளுக்குள் புதைந்து போன ஒரு உலகத்தின் புதிர்களுக்கான சாவிகளுடன் இன்று நான் மிதந்து கொண்டிருக்கிறேன். தொழில் நுட்பமும் தகவல் அறிவும் போதியளவு விருத்தியடைந்திடாத சூழலில் இவரால் எப்படி இந்தளவு துணிவுடன் பணியாற்ற முடிந்தது. அதுவும் மனித உடலில் chipகளை நிறுவிய இவரின் ஆளுமை இன்னும் என்னை அதிரவைக்கிறது.

பேராசிரியர் நல்லதம்பி ஆதம் என் ஆய்வில் என்னை விட மிக அவதானமாக இருந்திருக்கிறார். மஞ்சள்தாளின் கிறுக்குகளினை பொருத்திப் பார்த்து சில விடயங்களை அவதானித்த கையோடு பேராசிரியரின் இல்லத்தையே என் ஆய்வுத் தளமாக மாற்றிக் கொண்டேன். இதற்கு மிகப் பெரிய காரணமொன்றும் இருந்தது. என்னிட மிருக்கும் இணையத் தொடர்பின் வேகம் 128GB தான் ஆனால் பேராசிரியரிடம் இருப்பது 1024GB வேகத்தினை கொண்டிருந்தமையாகும். துக்தூரின் மிக முக்கிய பக்கங்களுக்கு நானும் பேராசிரியரும் வாயிற்கதவு போல் இருப்பதாய்ப்பட்டது. தலை
வெடித்துவிடும் கனதியுடன் துக்தூரின் மஞ்சள் தாள் ரகசியம் எங்கள் முன்னே ஒரு மிகப் பெரிய உலகினை விரித்துப் போட்டிருந்தது. விழிப்புக்களே நாட்களின் பெரும்பகுதிக்குச் சொந்தமாய் இருந்தாலும் தேடலும் மறைவானதை முதலில் கண்டு பிடிப்பதில் இருந்த ஆர்வமும் எங்கள் கூடவே இருந்திற்று. இல்லாததொன்றை தேடுவதும், கட்புலனாக உணர்வுகளின் வீச்செல்லையால் தாக்கப்படும் போதெல் லாம் நாம் அபரிமிதமாக வேகமடைகிறோம் என்று அடிக்கடி பேராசிரியர் தத்துவம் கதைத்துக் கொண்டேயிருந்தார்.

மிகுந்த ஆச்சரியத்துடன் கணனித் திரைக்கு முன் இருவரும் இருந்தோம். ஒருவரையொருவர் இப்படிப் பார்ப்போம் என்ற எந்த முகாந்திரமும் இந்த ஆய்வின் ஆரம்பத்தில் எங்களுக்கு
வந்ததில்லை. அதேபோல் இரவு பகல் என்று பாராமல் கணனிக்கும் எங்களுக்குமிடையே உறவுகள் பிணைக்கப்பட்டிருந்தாலும் இப்போது அதன் திரை முன் அதிசயத்துடனே நாங்கள் இருப்பதாய் உணர்ந்தேன். வெள்ளியிரவுகளில் சந்தனக் குச்சிகளை உம்மா கொழுத்தி வீட்டின் நாலாபுறமும் வைக்கும் போது பரவிக்கொண்டிருக்கும் நறுமணத்தினையும் விட அந்தப் புகைக்கூட்டம் எனக்கு பல சேதிகளைச் சொல்லியிருக்கிறது. புகைகளில் இருந்து மனிதர்கள் எழுந்து வருவதாக பல திரைப்படங்களையும் நான் அதன்போது எடுத்திருக்கிறேன். இந்த எண்ணங்களும் கணனிக்கு முன்னால் நாங்கள் அச்சம் கலந்த பிரம்மிப் புடன் இருப்பதாகவேபட்டது. மஞ்சள் தாள் விடயத்தில் எங்களுடன் தொடர்ந்து இருந்து பல உதவிகளைச் செய்த றஸா முஹம்மதின் தொந்தரவு கலந்த கதைகளும், நம்பிக்கைகளும் அடிக்கடி அவனை திரும்பிப் பார்க்கவே செய்யும். மனதினை ஒரு விடையின் பக்கம் நகர்த்திக் கொண்டு துக்தூரின் மஞ்சள் தாளில் மறைத்துக் கூறப்பட்டிருந்த இணையத்தளமொன்றின் முகவரியான www.மனிதஉடற்சில்லுப்பரிசோதனை.med என்பதனை டைப் செய்தேன்.
----------------------------------------------------------------------------------------------

வீட்டுக் குறிப்புகள் - 19
- அப்துல் றஸாக்

01.
(கி ழக்கு மாகாணத்திலுள்ள அக்கரைப்பற்று எனும் ஊரில்)

01 பெட்டி சக்கைக்கல் - 1600.00
1/4 பெட்டி கொங்கிறீட் கல் - 7500.00
01 அம்பாறைச் செங்கல் - 6.00
01 லோடு ஆத்துமண் - 2500.00
01 லோடு கடற்கரை மண் - 1100.00
01 பக்கட் சீமெந்து - 800.00
ஒருநாள் மேசன் கூலி (ஒருசோடிக்கு) - 2000.00

மஹிந்தவின் ஆட்சியில் இதுவொன்றும் ஆச்சரியப்படத்தக்க விலையில்லை என சிலிர்த்துக்கொண்டார் ஆதம்பாபா. புதிதாக வீடு கட்ட ஆரம்பித்த நாளில் இருந்து இக்கணம் வரை வியர்வை வடிந்து கசங்கிய தாளினை நூற்றியோராவது தடவையாகப் பிரித்துப் பார்த்துக்கொண்டார். அவரது கடைசி மகள் சரீனா சென்ற வருடம் பாவிக்காத ரெட்டை ரூல் கொப்பியின் நடுப்பக்கத்தை கிழித்து எழுதிக் கொடுத்திருந்தாள். நெடுநாள் ஆசையினால் அவரின் மூத்த மகனின் விருப்பத்திற்கேற்ப வீட்டுக்கு ஒரு படம் வரையவேண்டுமென்று ஒத்துக் கொண்டதற்கிணங்க படம் கொண்டுவந்த கையோடு அந்த வீட்டுக் கலைஞன் ஆசுவாசமாகக் குந்தியிருந்து சொன்ன கணக்குகள்தான் இவை. இருபத்து நான்கு வருடங்களுக்கு முன் தான் வீட்டிற்கும் தான் கட்டப்போகும் வீட்டிற்கும் கடக்க முடியாத இடைவெளியாக பணம் ஊதிப்பெருத்திருப்பதை நினைத்து பெருமூச்சு விட்டார்.
(சிறுகதையொன்றின் ஆரம்பம்)

02.
"சுனாமிக்கு முதல்லண்டா லேசா ஊட்ட கட்டிரலாம். ஆனா சுனாமிக்குப் பொறகு நெனச்சிம் பாக்கத் தேவல்ல. சாமானுக்கெல்லாம் கங்கெட்ட வெல. அப்பிடி இப்பிடியெண்டு எல்லாத்தயும் வாங்கினாலும் மேசன் சம்பளம் கொடுத்துக் கட்டமாட்டா. நெறய என் ஜீ ஓக்கள் வந்து ஊடுகள் கட்டினதானே. அவிய சம்பளத்த அள்ளிக் கொடுத்து இந்த மேசன்மார பழுதாக்கி ப்போட்டாங்க. நெனச்சநேரம் வந்து நெனச்ச நேரம் போற தொழில். கேக்கிற சம்பளம் கொடுக்கணும், நாள்ச் சம்பளமா? இல்ல ஸ்கெயார் கணக்கா ஆதாயம் எண்டு சொல்ல ஏலாத அளவுக்கு ரெண்டும் வித்தியாசம் தெரியாமப் போச்சி. சம்பளம் தவிர காலச் சாப்பாடு, பகல்ச் சாப்பாடு, தேத்தண்ணி, ரிங்ஸ் செலவெண்டு அதுவேற. ஊடு கட்றத விட சும்மா இருக்கலாம்."
(ஆய்வொன்றிற்கான நேர்காணல்)

03.
நுரைச்சோலை வீட்டுத் திட்டம் சம்பந்தமாக நம்ப முடியாத பல கதைகள் உலவுகின்றன. ஒரு அமைச்சர் கொண்டுவந்த திட்டத்தை இன்னொரு அமைச்சர் சீர்குலைத்ததாக சொல்லப்படுவதில் பல நியாயங்கள் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இதற்கு முன்னரும் சில திட்டங்கள் இப்படியாக அலைக்கழிந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தால் எங்களுக்கும் அதில் ஒரு பங்கு தரவேண்டுமென அப்பிரதேசத்தில் இருந்த சிங்களவர்கள் கேட்டதாகவும் கதை வந்தது. பாதிக்கப்படாதவர்களுக்கு எவ்வகையிலும் வீடு வழங்க வேண்டியதில்லை என்று சொன்னதற்காக அங்குரார்ப்பண வைபவம் தேரோ ஒருவரின் தலைமையில் எதிர்ப்புப் போராட்டத்திற்கு உள்ளானது. இதனால் முஸ்லிம் - சிங்கள கலவரம் ஒன்று தோன்றலாமோ என்ற அச்சம் உருவானது. இப்போது இத்திட்டம் பற்றி பொதுமக்கள் யாரும் எக்கதையும் பேசுவதில்லை.
(பத்திரிகைச் செய்தியொன்று)

04.
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு வகையான வீட்டு மாதிரிகள் உண்டு. உன்னிப்பாக அவதானித்தால் இம்மாற்றம் எளிதில் புலப்படும். உதாரணம் சொல்வதானால், கல்முனை, சாய்ந்தமருதுவில் உள்ள வீடுகள் அதிகம் கொங்கிறீட் கலவைகளைத் தாங்கியவை. பெரும்பாலும் மாடிகளாக மாறிக்கொண்டு வருபவை. அறைகள் வளைவுகளாக காணப்பட்டு கிணறுகள் போல உயரம் பெற்றுக்கொண்டு போகும். வீட்டின் புறப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அணுவணுவாக அலங்காரம் பெற்றிருக்கும். அறைகளுக்கு மேலே முகடுகளில், உட்புறப் பகுதிகளில் அதிக செலவுடன் அலங்காரங்கள் உருப்பெருத்துக் கொண்டு செல்லும்.

மருதமுனை வீடுகள் சிறியவை. எளிமையானவை. பழமையின் வாசம் தங்கியிருப்பவை. அனேக வீடுகளோடு சேர்த்து ஒத்தாப்பு இறக்கப்பட்டிருக்கும். வீட்டின் பின்புறம் இருக்கும் சின்ன இடைவெளிக்குள் பாவனைக்குதவாத பொருட்கள் குவித்து வைக்கப்பட் டிருக்கும்.

பொத்துவில் பிரதேச வீடுகள் களிமண்ணிலிருந்து செங்கற்களுக்கு மாறிக் கொண்டிருப்பவை. உயரம் குறைவானவை. இரட்டைக்கல் வைத்து கட்டப்பட்டிருப் பதை விட ஒற்றைச் செங்கல்லுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். வளவின் மையப்பகுதி சார்ந்தே இவை கட்டப்பட்டிருக்கும்
(பிரதேச வரலாற்று நூலொன்றிலிருந்து)

05.
பின்நவீனத்துவ அமைப்புடைய வீடுகளுக்கு முகடுகள் கூர்மையானதாக இல்லை. முகடுகள் அதிகாரத்தின் உச்சவெளிப்பாடாகும். பெருங் கதையாடலின் ஒற்றைத் தன்மையான கூர் முகடுகளைத் தகர்ப்பதற்காகவே இரட்டைக் குறியீPட்டுத் தன்மையுடன் முகடுகள் அமைக்கப்படுகின்றன. நியூயார்க் நகரத்தில் இருக்கும் யுவுரூவு கட்டிடம் இத்தகைய இரட்டைக் குறியீட்டுடன் தோன்றுகிறது. சாதாரண பார்வையில் சொல்வதானல் முகடுகள் இரக்கம், மனிதாபிமான மற்றவை. சிறு பறவையாகிய காகம் கூட அமர முடியாத கூர்முகடுளால் எவ்வித பயனுமில்லை. தட்டையான முகடுகளில் இருக்கின்ற பயன்களை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(பின்நவீனத்துவ கோட்பாட்டுப் பகுதி)

06.
அண்மைக்காலமாக நிதியியல் நிறுவனங்கள் தனிப்பட்ட வீடமைப்பு நிர்மாணங்களுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்குவதும் அதிகரித்துள்ளது. 2006 ஆண்டில் முக்கிய வர்த்தக வங்கிகள் ரூ. 34.227 மில்லியன் பெறுமதி கொண்ட 97.983 வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளன. வீடமைப்பு வங்கிகளான அரச ஈட்டு முதலீட்டு வங்கி, வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத் தாபன வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பன 2006 இல், 2005 இன் 22.501 கடன்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 12.187 மில்லியன் கொண்ட 35.137 வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளன. தற்போது எந்தவொரு வங்கியிலும் வீடமைப்புக் கடனை 22 வீதத்திற்கும் குறைவான வட்டியில் பெற முடியா துள்ளது. இந்நிலையில் செலான் வங்கி மட்டும் 17 வீதத்திற்கு வீட்டுக் கடன் வழங்குவதாக பெருமையுடன் பறைசாற்றி விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றது.
(மத்திய வங்கியின் ஆண்டறிக்கை)

07.
வீடு பற்றிய விடயத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அக்கறையெடுக்க வேண்டும். ஊருக்குள் வந்த கடல் அலைகளால் நாம் பெற்ற பாடம் வீட்டை திண்மை யுறக் கட்டுவோம் என்பதல்ல. அலைகளின் பெருமூச்சுக்கு வளைந்து கொடுக் கும் ஜப்பான் ரக வீடுகளைக் கட்டுவோம் என்பதுதான். ''உலகெங்கும் தொடரும் நில நடுக்கம் இங்கும் தொடரா தென்பது என்ன நிச்சயம்? ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஏறி நிற்கும் உலகத் தகடுகள் நாளை இறங்குகின்ற போது நிலம் மெல்ல அதிர்ந்து கொள்ளும்'' என மார்க்சிய செய்தி நிறுவ னங்கள் அறிவித்துக் கொண்டிருக் கையில் முதலாளித்துவ பெரும் போடிகள் கட்டிடப் பொருட் களுக் கான விலையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
(இங்கு மார்ச்சியமும், முதலாளித்துவமும் எப்படி வந்தது?)

1. நிலநடுக்கம் ஏற்பட்டால் கோபுரங்கள் குடிசைகளாகும், குடிசைகள் கோபுரங்களாகும்.
அதுவரை இன்னொரு மார்ச்சியப் புரட்சிக்காகக் காத்திருக்க வேண்டும் என சிந்திக்கும் மார்க்சிய
செய்தி நிறுவனங்கள், இன்றே அப்புரட்சியைக் காண பிரச்சாரம் செய்யலாம்.
2. அதீத உற்பத்தியும், ஆடம்பரமும் நிறைந்த கட்டிடப் பொருட்களில் அதிகம் காசு பார்க்கலாம்
என நம்பும் முதலாளித்துவ நிறுவனங்கள் விளம்பரங்களைப் பரப்பி, மக்களின் மோகத்திற்கேற்ப விலைகளை அதிகரிக்கலாம்.
(உள்ளுர் சமூகசேவை அமைப்பொன்றின் ஆய்வறிக்கை)

08.
சனத்தொகை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கத்துடன் வீடுகளுக்கும் நகர உட்கட்டமைப்புக்குமான கேள்வி துரிதமாக விரிவாக்கம் பெற்றிருக்கிறது. சனத்தொகை ஆண்டிற்கு 1.1 சதவீதமாக வளர்ச்சி பெறுவதுடன் நகரக் குடித்தொகை 3 சதவீதமான உயர்ந்த வீதத்தினால் வளர்ச்சியடைந்து வருகிறது. 2016 ஆண்டளவில் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்ட தொகையினர் நகரப்பகுதிகளில் வசிப்பர் என்று மதிப்பீடுகள் காட்டுவதால் நகர உட்கட்டமைப்பில் துரித அபிவிருத்தி தேவைப்படுகின்றது. இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் வீடுகளுக்கான புதிய கேள்வி 100.000 அளவில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலாக 350.000 வீடுகளுக்கான பற்றாக்குறை உள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஏற்கனவேயுள்ள வீடுகளில் 30 சதவீதமானவளவு (1.3 மில்லியன்) வீடுகள் ஓரளவு நிரந்தரமானவையாக அல்லது திடிரென ஏற்பட்டவையாக அல்லது அவசரமாக கட்டப்பட்டவையாகவும் அல்லது வகைப்படுத்தப்படாதவையாக கணிசமானளவு முன்னேற்றம் தேவைப்படுவனவாகவுள்ளன. சுனாமியினால் அழிக்கப்பட்டோ அல்லது சேதமடைந்த 114.000 வீடுகளில் அண்மையக்காலம் வரை 78.000 வீடுகளின் கட்டுமானப்பணி பூர்த்தியாக்கப்பட்டுள்ள.
(வீடமைப்பு அமைச்சு)

09.
வீடு. பெ.
1. குடியிருப் பதற்காக (செங்கல், மண் முதலியவற்றால்) ஏற்படுத்தப்பட்டது house. நகரில் சொந்தமாக வீடு கட்டியிருக்கிறார். / வீட்டுவாடகை சற்று அதிகம்.
2: மோட்சம் heaven.
3: (சேதி.) ஒருவர் பிறந்த நேரத்தில் இருக்கும் கிரகத்தை முதலாவதாக கொண்டு பண்ணிரண்டு கிரகங்களும் வகுப்படும் இடம் (in ons’s horoscope)
(க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி)

10.
''வீடு கட்டுவது பற்றிய இனவாதக் கருத்தொன்று உங்கள் முன் சொல்வதற்காக என்னை மன்னியுங்கள் சகோதரர்களே! நாம் வீடுகளை ஏன் மாற்றினத்தவர் களைக் கொண்டு நாம் கட்ட வேண்டும்? இன்றைய நிலையில் அவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்க முடியாதென்பதற்கப்பால் நமது பொருளாதாரத்தை அவர்கள் சுரண்டிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா? எங்கள் ஊரில் மட்டும் வீடு கட்டும் தொழிலாளர்கள் திரட்டும் ஒரு நாள் சம்பளம் பத்து இலட்சத்தையும் தாண்டுகிறது என்றால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்? பொதுவாக ஆய்வொன்று செய்யப் பட்டது. இத்தொழில் செய்பவரை 'மேசன்' என்று அழைப்பதைத்தான் நாங்கள் விரும்பவில்லை'' என்று பலர் சொல்கிறார்கள். அப்படியாயின் பெயரை மாற்றுவோம். பெயரில் என்ன இருக்கிறது, ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத் தால்தான் என்ன? என்று சேக்ஸ்பியரின் மேற்கோள் ஒன்று கூட இருக்கிறது. 90ம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரச்சி னை உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போது நாம் தானே வீடுகளை கட்டினோம்! நமது கலாசாரத்தையும், தனித்துவத்தையும், கட்டிடக் கலை நுட்பங்களையும் வடிவமைப்பதில் இப்போது நாமேன் பின்னிற்கிறோம்? தொழில் வாய்ப்பில்லாமல் அலையும் ஒரு தொகை இளைஞர்கள் வியர்வை சிந்தி தமது உழைப்பை அர்த்தப்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முஸ்லிம்தேச பொருளாதார முறையும், அழகியல் முறையும் ஒன்றினையும் இடமான வீடு கட்டுகின்ற பணி பற்றி இனியாவது ஆழமாக சிந்திக்க வேண்டும் சகோதரர்களே!''
(மேடையில் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி)

11.
வீடு வரையும் கலைஞர்கள் தாங்கள் வரைவது போல எந்த வீடும் கட்டப்படுவதில்லை என குறைபட்டுக் கொள்கின்றனர். எல்லா இடங்களிலும் கலைஞர்களின் வரைபடத்தை பின்பற்றுகின்ற கட்டிடத் தொழிலாளிகள் ஓரிடத்தில் மட்டும் அதை ரகசியமாக மீறி தங்களுக்குள் திருப்திப்பட்டுக் கொள்கின்றனர். இவர்களுக்கும் கட்டிட தொழிலாளர்களுக்குமான பூனை - எலிப்பகை ஆதியிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும். ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி தனக்கு மயக்கம் வரச் செய்த காரணத்தினால் அவ்விருவரையும் விரட்டி விட்டு தனது வீடு கட்டும் பணியை இடை நிறுத்தியிருக்கிறார் அயல்வீட்டுக்காரரொருவர்.
(அயல்வீட்டுக்காரரின் பேச்சு)

12.
பாலுமகேந்திராவின் வீடு என்கின்ற திரைப்படம் வீடு கட்டுவதிலுள்ள சிரமங்களைப் பற்றிப் பேசுகின்றது. இது ஒரு திரைப்படமே அல்ல என இப்போதும் விவாதிக்கின்ற நண்பர்கள் உண்டு. படத்தில் வீடு கட்டி முடிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு. ஏதோ நான்கைந்து வருடங்களுக்கு முன்தான் அவ்வீடு முடிந்திருப்பதாக ஆனந்த விகடனில் வாசிக்கக் கிடைத்து சிலரிடம் காட்டியபோது ஓரளவு சமாதானம் அடைந்தார்கள்.
(சினிமா விமர்சனப் பகுதியொன்று)

13.
வீடு கட்டுகின்ற மேசன் புலியாக இருக்கலாமா? என்ற சந்தேகம் இங்கு எல்லோருக்குமுண்டு. இதனால் ''இரவில் புலி, பகலில் மேசன்'' என்றளவிற்கு ஒரு பழமொழியையே உருவாக்கி விட்டார்கள். இம்முடிவை அவர்கள் எட்டுவதற்கு பல காரணங்கள் உண்டு.
1. சரியான குழப்பநாள் ஒன்றில் வீடு கட்ட வந்த மேசன் ஒருவன்,சக தொழிலாளியைப் பார்த்து ''நல்லா கட்டு மச்சான். இது நாம இருக்கிற வீடுதானே'' என்று சொல்ல அதைக் கீழே இருந்து
கேட்ட வீட்டுக்காரி கத்திக்கொண்டு அடுத்த வீட்டுக்கு ஓடியிருக்கிறார்.அன்றிலிருந்து அவர்கள்
யாரும் வேலைக்கு வரவில்லை என்பதோடு வேலை செய்ததற்குமான கூலியைக் கூட பெற்றுக்கொள்ள வில்லை.
2. ஊரில் மேசன்மார் மிகக்குறைவாக வேலைக்கு வருகின்றனர் என்றால் அன்றைக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றதென்று அர்த்தம். இதை 'யாராவது விருந்துக்கு வருகிறாங்களா?
தெத்திக்காட்டு காகம்' என்பது போல ஊர்மக்கள் அடையாளம் கண்டு கொள்வது.
3. மேசன்மார் தங்களுடைய தொழிலுக்கான உபகரணங்கள் வைத்திருக்கின்ற பையை 'ஆயுத பேக்கு' என்றுதான் அழைப்பார்கள். இது கேட்டு துணுக்குற்று எறியப்பட்ட நிறைய குழந்தைகளும்,
பெண்களும் இங்கிருப்பது.
4. சில மேசன்மார் தங்கள் வாயாலேயே கெட்டுப்போய், தாங்கள் செய்த வீர தீரச்செயல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது, பெருமைக்காக அவிழ்த்து விடுவது.
5. ஒன்றில் அதிகமாகப் பேசுவது அல்லது ஆழ்ந்த மௌனம் சாதிப்பது
(பயந்த சுபாவமுள்ள ஒரு பொதுமகன்)

14.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ஒரு சமூகம் வீடு கட்டாமலே இருந்திருக்கிறார்கள். காலையில் சூரியன் கிழக்குப்பக்கம் உதிக்கும்போது பெரும் நிழல்தட்டியை கிழக்குத் திசைநோக்கி சாத்துவதும், மாலையில் மேற்குத் திசைநோக்கி சாத்துவதுமாக அவர்கள் தங்கள் வாழ்நாளை போக்கியிருக் கிறார்கள். வீடு கட்டுவதற்குரிய நாட்களை மிச்சம் பிடித்தால் அந்நாட்களில் இறைவனை வணங்கி நல்லமல் செய்யலாம் என்று இதற்கு காரணமும் சொல்லியிருக்கிறார்கள்.
(சமயச் சொற்பொழிவாளர்)

15.
வீடு கட்டுகின்ற தந்தைமார்கள் அதனை ஒரு பொழுதேனும் அனுபவிப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. இரவு பகலாக கண்விழித்து வீட்டை கடைசியாக பூர்த்தி செய்கின்ற அன்றே தம் பெண் மக்களுக்கு கல்யாணம் வைத்திருப்பதால் அவ்வீட்டை கடைசியாகவும் முழுமையாகவும் அவர்களால் பார்க்க முடிவதில்லை. வேலையின் களைப்பில் வீட்டின் முன் விறாந்தையில் வந்தமரும் தந்தையர் தமது தோள்த் துண்டினால் நிலத்தில் புழுதி தட்டி கொஞ்சம் அமர்ந்து கொள்கின்றனர். பூ.... என்று ஆசுவாசத்தோடு பெருமூச்சு விட்டபடி எங்கும் நெடிது நோக்குகின்றனர். ஒரு தேயிலை அருந்தும் நேரம் தரிக்கின்றனர். மீண்டும் வேலை... வேலை... கல்யாணம் முடிந்த கையோடு வீட்டுக்கு அருகில் இருக்கும் கொட்டகையின் சாக்குக் கட்டிலில் சரிகின்றனர் தனது அடுத்த மகளுக்கு வீடு கட்டும் யோசனைகளுடன்.
(ஐந்து பேருக்கு மூத்த ஒரு பெண்பிள்ளை)

16
தமிழர்கள் வீடுகளை எளிமையாகக் கட்டுகிறார்கள். இதனால் வீட்டைத் துறப்பதையும் போராடுவதையும் சாத்தியமாக்குகிறார்கள். வீட்டிலே போட்டு காசைக் கல்லாக்குவதை விட அதை தங்கமாக உருக்கி வைக்கிறார் கள். முஸ்லிம்கள் வீடுகளை ஆடம்பரமாகக் கட்டுகிறார்கள். இதனால் போராடுவது பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள். வங்கிகளில் தமிழர்கள் தங்கத்தையும், முஸ்லிம்கள் வீடுகளையும் அடமானமாக வைக்கிறார்கள்.
(ஒரு முஸ்லிம் தேசப் போராளி)

17.
வீடு மனைவி மக்கள், வீடு வரை உறவு, அட வீட்டுக் வீட்டுக்க வாசப்படி, தெய்வத் தந்த வீடு, எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, ஆயிரம் ஜன்னல் வீடு.
(தெருப்பாடகன்)

18.
பொர, வாடி, மண்டபம், செத்த ஊடு, மண்ணூடு, ஆலஊடு, உள்ளுடு, வராந்தா, குசினி, திண்ணை, சாப்பு, ஒத்தாப்பு, புழக்கடை, மரக்கொட்டு, கெணத்தடி, கக்கூசு, கோப்பிசம், கல்லூடு, மெத்த ஊடு, அப்ஸ்ரயார், வீச்சுமரம், துலாக்கால், தயிர்ச்சட்டி, பந்தம், ஊஞ்சல், கூரை, தேன் குடம், வேதுச் சட்டிகள், பசுநெய்ச்சாடிகள், நெல், குரக்கன், சோளம், இறுங்குச் சாக்குகள், கயிற்று உறிகள், கயிற்றுப் பாயசவுகள், உரல், உலக்கை, கொச்சிக்காய் அம்மி, மருந்தரைக்கும் அம்மி, உடைகளைத் தொங்கவிடும் மான்கொம்புகள், மான் தோல் பாய்கள், தூக்கிய புதிர், கதவு, ஜன்னல், அலுமாரி, மேசை, கதிரை, மின்சாரம், சோபா செட், வைப்பர், கப்போட், டி.வி, ஏ.சி, பேன், கொயில், றைஸ் குக்கர், கிச்சன், கட்டிங் பிளேட், வோமர், பிளண்டர், ஹால், போன், டைனிங் டேபிள், கட்டில், அண்டெனா, டிஸ்க், போர்ச், மொட்டை மாடி, அட்டாச் பாத்ரூம், கொம்பியூட்டர், டேங்க், வோட்டர் சப்ளை.
(சமுதாயத்தில் புழக்கத்திலுள்ள பேச்சு வழக்குகள்)

19.
They gave up thir Avurudu, to ensure we celebrate ours. Contrubute to API VENUVEN API Housing Fund. Type API & send 8877. Rs 10/- + Tax p/m.all Procedds go to fund

sender
Mobitel@
Message centre :
+947100103
Sent:
21-Apr-2008
09:39:40
(SMS)


மாற்றுக் கருத்து நிலவரம்

- மிஹாத்

சினிமா விமர்சனமென்பது ஊடகங்களில் இடம்பெறுகின்ற அறிவுஜீவி வேலையாக இன்று எமது சூழலில் ஒப்புவிக்கப்படுகின்றது. இதில் பங்கேற்கின்ற விமர்சகர்களின் பார்வையில் எல்லா ரசிகர்களும் குறைபாடுடையவர்களாகப் புனையப்படுகின்றனர். கீழ்மையான ரசிகர்கள் தரமற்ற திரைப்படங்களின் மேல் ஆர்வங் கொண்டலைவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த விமர்சனப் போக்கானது சினிமாவையும் அதன் உற்பத்திக்கான வர்த்தக நிர்ணயத் தன்மைகளையும் தற்கால உலக நிகழ்வு மாற்றங்களையும் புரிந்து கொள்ளாததினால் ஏற்பட்டு விட்ட மனப் பிதற்றுகையாகவே கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட விமர்சகரானவர் தான் நோக்குகின்ற கோணத்திற்குள் நின்றபடியே ரசனை வெளியின் கடைக்கோடியிலுள்ள மற்றவனும் ரசிப்புக் கணிப்பில் ஈடுபட வேண்டுமென எதிர்பார்ப்பது கேணைத் தனமாகும். நடப்பிலிருந்த கலைக் கோட்பாடுகளெல்லாம் தகர்த்தெறியப்பட்டு விட்ட நிகழ்காலத்தில் நிரந்தரமான சினிமாச் சூத்திரங்களுமில்லை, ஒழுங்கு விதிகளுக் கமைவாகவே ரசனையும் இருக்க வேண்டு மென்ற தேவையுமில்லை. அந்த வகை எதிர்பார்ப்பைக் கோருகின்ற விமர்சனப் பார்வையானது சினிமாவின் எல்லையற்ற பல்வகை ரசிக்கும் பாங்கை கேவலப் படுத்துவதாகிவிடுகிறது.

இயல்பான மன எழுச்சி களும், எவரும் எதனையும் ரசிக்க இயலுமாகிப்போன இசைவான தொழில்நுட்ப வளர்ச்சியும் இணைகின்ற புள்ளியிலேயே தற்காலச் சினிமாக்கலை நிர்மாணம் பெறுகின்றது. இந்த அலை வரிசையினைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத ரசனையாளர்கள்தான் சுயாதீன ரசிப்பு நிலைக் கெதிரான விமர்சன வன் முறையைக் கையிலெடுக் கின்றனர். இவர்களது விமர்சன முறையில் எப் பொழுதும் ஒழுங்கு விதி களைக் கோரும் இலட்சியவாத சினிமாக்களுக்கான ஏக்கம் தென்படுவதை அவதானிக்கலாம். தற்போதைய உலக நடைமுறையில் காலாவதியாகிப்போன பாசிச மயமான இவ்விமர்சனப் பார்வையை தமிழ் விமர்சக மனம் இன்றளவும் நினைவு கூர்வதனையே நாம் கண்டுஎ வருகிறோம். இலங்கையில் இருக்கின்ற திரைப்பட விமர்சன முறையினைக் கொட்டிப் பதரடித்தால் தமிழக எழுத்து மனம் அடியில் தேங்குவதனைக் காணலாம்.

இங்கிருக்கின்ற விமர்சனப் பாணியானது நான்கு வகையான அடிப்படைப் பண்புகளைக் கொண்டியங்குகின்றது.
1. திரைப்படங்களை அட்டவணைகளின் உதவியோடு தரப்படுத்தல்
A - கலைப்படங்கள் (Classic cinema)
B - இடைநிலைப் படங்கள் (Middle cinema)
C - மசாலாப் படங்கள் (Commercial cinema)

இவற்றில் பெரும்பாலும் கலைப்படங்களையும் மிக ஒரு சில இடைநிலைப் படங்களையும் தூக்கிப்பிடித்து உணாவுதல். இதன்மூலம் ஏனைய எல்லாத் திரைப்படங்களும் ஒதுக்கப்பட்டுவிடும். இவர்கள் விதந்து உருகும் பெரும்பாலான திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் ரசனைகளுக்குத் தூரமானவையாக இருப்பதுடன் உழைக்கும் மக்களின் மனங்களில் அதிகமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பண்பையும் கொண்டி ருக்கும். சிலநேரங்களில் இக்கலைப் படங்களோ, இடைநிலைப் படங் களோ விளிம்பு மக்களின் வாழ்வைக் கூடப் பேசலாம். ஆனால் சினிமா என்று வருகின்றபோது திரைப்படம் ரசிகன் என்கின்ற கேளிக்கை உறவுநிலை மட்டுமே குறுக்கீடு செய்வதனால் ரசிகனின் பிரியமான நுகர்பொருளாக பிரதி இன்பமே நிர்ணயம் பெறுகிறது.

2. தங்களது ரசனை வரையறைகளோடு பொருந்திவராமல் துருத்திக்கொண்டிருக்கும் பிற ரசிப்புத் தளங்களைக் கிண்டலடித்தல்.
வித்தியாசமான சினிமாக்களையோ அல்லது வேறான கலையம்சங்களையோ ரசிப்பதற்குச் சில வேளைகளில் மேலதிகமான உசாத்துணைத் தகவல் நுகர்வு வேண்டப்படுகிறது. அது எல்லா வட்டார ரசிப்பு முயற்சிகளுக்கும் கிட்டுவதில்லை. அது கிட்டாத ரசனையை குறைபாட்டுடன் நோக்குவதோ அன்றியும் பாடம் நடத்த முனைவதோ விபரீதம்தான். ஒவ்வொரு ரசிகனுக்குமிருக்கும் தனிப்பட்டதும் சுதந்திரமானதுமான ரசனையைக் கட்டுப்படுத்தாமல் வித்தியாசமான மனத்தேர்வுகளை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

3. குறிப்பிட்ட சில இயக்குனர்களின் நெறியாள்கையை மட்டும் பாராட்டுவதோடு ஏனைய இயக்குனர்களுக் கெதிராக வசைபாடுதல். சத்தியஜித்ரே, ஷ்யாம் பெனகல், கோவிந்த் நிஹ்லானி, மிருனாள் சென், சாந்தாராம் போன்ற சில பழைய வட இந்திய இயக்குனர்களையும், மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், சிபிமலயில், அரவிந்தன் போன்றவர்களையும் தமிழில் பாலு மகேந்திராவையும், சிலவேளைகளில் மகேந்தி ரனையும் மட்டும் விதந்து களித்தல். இதுபோல் பிறமேலைத்தேய சினிமாக்களிலும் அவர்களுக்குச் சில பட்டியலுண்டு. இங்கு குறிப்பிட்ட இயக்குனர்கள் ஒவ்வொரு காலகட்டங்களிலும் வித்தியாசமான சினிமா வடிவங்களை முன்வைத்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட இயக்குனர்களுடைய படங்கள் மட்டுந்தான் சிறந்ததென மாரடிப்பதனை சகிக்க முடியவில்லை.

4. நல்ல சினிமாக்கள் வரவேண்டும், மக்களின் ரசனைகள் உயரவேண்டும் என்பன போன்ற ஏக்கங்களை வெளியிடல்.
இவர்களிடமிருக்கின்ற வெகுஜன மனங்களுக்குப் பொருந்தாத அளவுகோலின் அடிப்படையில் நல்லவை கெட்டவைகளென ஒருதலைப்பட்சமாகப் படங்களைத் தரம்பிரித்து நாட்டாமைத் தீர்ப்பு வழங்கும் விமர்சனப் பிரசங்கம் கண்டிப்புக்குரியது.இந்தவகை விமர்சன முறையின் பின்னாலிருக்கும் அரசியலைக் கூர்ந்து நோக்கினால் தெரியவருபவை
I. பண்டிதத் தன்மையை வெளியிடும் விருப்புறுதி
II. மக்கள் சீரழிகிறார்களென்ற மனக்கவலையும் குற்ற உணர்ச்சியும்
III. சமூகம் திருந்தவேண்டுமென்கின்ற அக்கறை

இந்த உள்ளீடுகளின் குழப்பத்தினை தீர்க்கமாக ஆராய்ந்தால் அதிகாரத்துவம் மிக்க ஒரு வகை மனவிகாரமே காரணமெனக் கொள்ளமுடியும். சாருநிவேதிதா போன்ற விமர்சகர்களை இங்கிருப்பவர் களோடு பொருத்திப் பார்க்க முடியாது. ஏனெனில் சாருவின் ரசனையானது உலகிலுள்ள ஏராளமான சினிமா வகைகளை விரிவான ருசிப்புத் தன்மையோடு உள்வாங்கிக் கொள்கிறது. இங்கிருப்பவர்கள் அப்படியல்ல. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்ப வர்கள். எமது வாசிப்புச் சூழலானது இங்கிருக்கின்ற விமர்சனத் தன்மைகளை தனி ஒருவரது வேட்கையின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ளக் கூடியது. ஆனால் இங்கிருக்கின்ற விமர்சகர்கள் தமக்கொரு மொத்தத்துவ அந்தஸ்தைத் தேடிப்பெறும் அவாவை உள்நிறுத்தி சமூகப் பிரேமைக் கருத்துக்களை வெளியிடுகின்றனர். இங்கிருக்கும் pseudo iconகளாக உமா வரதராஜன், சிவகுமார், சிராஜ் மஷ்ஹூர், மாரிமகேந்திரன், ஆத்மா, குர்சித் போன்றவர்களைக் குறிப்பிடலாம். தங்களது விமர்சன முறையின் உயரங்களை நிறுவுவதற்கு சில உலகத் திரைப்படங்களையும் இயக்குனர்களையும் இவர்கள் துணைக்கழைக்கத் தவறுவதில்லை. ஒருமுறை அரச தொலைக்காட்சியின் சிறுவர் தினச் சிறப்பு நிகழ்ச்சியொன்றில் தோன்றிய சிராஜ் மஷ்ஹூர் சினிமா பற்றிய இலட்சியங்களை வெளியிட்டு ஈரானிய சினிமாவினையும் விதந்து பேசினார். ஈரானிய திரைப்படங்கள் வெகுவாக ரசிக்கப்படக் கூடியவை யென்பது வேறுவிடயம். ஆனால் அந்நிகழ்ச்சியில் அவர் Majid Majidi யின் The colour of paradise எனும் திரைப்படத்தைச் சிறுவர் திரைப்படமாக முன்வைத்துப் பேசியமை நகைச்சுவையாகவே இருந்தது.

சிறுவர் திரைப்படமென்பது சிறுவர்களின் உலகோடு உறவாடும் செயற்தன்மை கொண்டது. சிறுவர்களின் மனவெளியினுள் இயல்பாக நுழைந்து சஞ்சரிக்கக் கூடியவை. சிறுவர்களினால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவை. இவற்றினைக் கொண்டிருக்காத மேற்கூறிய படத்தினை சிராஜ் சிறுவர் திரைப்படமென வகைப்படுத்தியமை வியப்பானது. The colour of paradise, The children of heaven மற்றும் Rain (baran) போன்ற படங்களிலெல்லாம் சிறுவர்கள் மையநிலைப் பாத்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சிறுவர்களின் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை வடிவமைக்கப்படும் படங்களெல்லாமே சிறுவர்களுக்கான சினிமாவாகிவிட முடியுமா? சிறுவர்களின் உலகங்களை பெரியவர்களின் ரசனைக்கேற்ற வகையில் காட்சிப்படுத்தும் உளவியல் தன்மைகளைக் கொண்ட இப்படங்கள் பெரியவர்களி னாலேயே விருதுகளுக்கும் சிபாரிசு செய்யப்பட்டவை. குறித்த படங்களை வீடுகளில் சிறுவர்களுக்குக் காண்பித்தபோது அதன் கதைப்பின்னலுக்குள் குழந்தைகளின் கவனங்கள் சிக்கவேயில்லை.

ஒருமுறை சூரியன் வானொலியின் ஒலிப்பதிவு கூடத்தில் ரஜினியின் பிறந்தநாள் விசேட நிகழ்ச்சியொன்றிற்கான ஒலிப்பதிவில் மப்றூக்குடன் இருந்தபோது தொலைபேசியில் கருத்து தெரிவித்த உமா வரதராஜன், ''கிழட்டு ரஜினி இன்று இளமையான வேடங்களில் நடிப்பதை அருவருப்பாக உணர்வது போல'' பேசினார். வரையறுப்புகளுக்குள் சிக்குண்ட அவரது அரைகுறை மனப்பதிவுகளின் பீடிகைகளை எண்ணிச் சலிப்புற்றேன். சினிமாவில் வேடங்களுக்கும் வயதுக்கும் பொருத்தம் பார்ப்பது விபரீதமான வேட்கைதான். அதுமட்டுமல்லாமல் வயதுக்கேற்ற பாத்திரங்களை ரஜினி தெரிவு செய்யாவிட்டால் அவரிடமிருக்கும் மந்தைகளை விஜய் மேய்த்துக்கொண்டு சென்று விடுவாரென ரஜினிக்குப் புத்திமதியும் கூறியவர் வெகுஜன சினிமா ரசிகர்களை ஏளனமும் செய்தார். பலகோடி மக்களை மகிழ்விக்கும் கூத்தாடியாக ரஜினியை அவர் காணவில்லை. அவரது இருள் சூழ்ந்த மேதாவிலாசத்தின் பார்வையில் ரசிகர்கள் மந்தைகளே. ''நெற்றிக்கண்'' படத்தில் இளைஞனான ரஜினி வயதானவராக நடித்தபோது ஊரிலுள்ள கிழவிகளெல்லாம் அவர் பின்னால் சென்று விடுவார்களோவென முன்பு ஏன் உமா அங்கலாய்த்திருக்கவில்லை?

பிரவாகம் நிகழ்ச்சியில் ஒருமுறை 'veer zara' படத்தின் சில காட்சிகளை ஒளிபரப்பி தனது நிகழ்ச்சியின் பெரும்பாகத்தை ஒப்பேற்றிய தொகுப்பாளர் ஆத்மா, ''இதுபோன்ற திரைப்படங்களை எவரும் பார்க்கக்கூடாது என்பதற்காகவே சில காட்சிகளை காண்பித்தேன்'' என்று கூறினார். பெரும் பொருட்செலவில் Yash chopra உருவாக்கி உலகின் பல பாகங்களிலும் ரசிக்கப்பட்ட இப்படத்திற்கு வடிவேலு பாணியில் ஆத்மா கொடுத்த அலப்பறை விளக்கத்தினை தாங்க முடியவில்லை.

திரைப்படங்களை பெருந்திரையில் DTS ஒலி அமைப்புக்களுடன் பார்க்கும்போது ஏற்படுகின்ற அனுபவமும் குறுந்திரையில் பார்க்கின்றபோது ஏற்படுகின்ற அனுபவமும் வித்தியாசமானவை. குறுந்திரையில் பார்க்கப்படுகின்ற சினிமாவானது பெரும்பாலும் ரசிகனுக்குப் பூரிப்பை ஏற்படுத்துவது குறைவாகும். சினிமா பார்ப்பதன் நோக்கம்தான் என்ன? முழுக்கவும் கேளிக்கை அடிப்படையிலேயே சினிமாத் தன்மை மாறிவருவதனை குற்ற உணர்ச்சி மிக்க மனது டன் நோக்குவது பரிதா பத்திற்குரியது. அநேகமாக எல்லா நாடுகளிலும் திரைப் படங்கள் தயாரிக்கப்படுகிறது. அவை பல்வேறு உருவாக்க உள்ளீடுகளையும் வெளிப்பாட்டு முறைகளையும் கொண்டிருக்கின்றன. அன்றியும் அது முதலீட்டுடன் கூடிய வர்த்தகமாகவும் நிலைகொண்டு விட்டபோது பல்வேறு வகையான போக்குகளுடன் இயங்கும் கேளிக்கைப் பண்புகளை உள்ளீர்த்துக் கொள்கிறது. இந்த வேளையில்தான் மந்த கதியில் நகரும் காட்சி களினாலும் திரைக்கதையினாலும் ஜோடிக்கப்பட்ட படங்களை மட்டுமே உயர்ந்தவை எனக் கொண்டாடும் பண்டித விமர்சன வழக்கு கேள்விக்குள்ளாகிறது.

இங்கிருக்கின்ற சினிமாப் பண்டிதர்களில் பெரும் பாலானவர்களை அவ்வப்போது அரிதாக இடம்பெறும் திரைப்பட விழாக்களில் கூட காண முடிவதேயில்லை. உலகின் அபூர்வமான திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் இவர்களுக்கு எப்படிக் கிட்டுகிறதோ? வித்தியாசமான திரைப்படங்கள் எல்லாமே DVDகளிலும் கிடைப்பதில்லை. இந்த லட்சணத்தில் ஊடகங்களில் திரைப்பட மேதாவித் தனங்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கும்போது ''கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டும்'' என்னும் கதை ஞாபகம் வருகிறது.

சினிமாவென்பது பொய்மைகள் மீது உண்மை போன்றதொரு மாயையை நிர்மாணம் செய்யக் கூடிய தான புனைவை நிரற்படுத்தி இயங்கிக் கொண்டிருப் பவை. இதில் ஒழுங்கு முறைகளை முன்னிறுத்தி ஏன் விமர்சனச் சாபங்கள் புரிய வேண்டும். வாழ்வை சினிமாவிலும், சினிமாவை வாழ்விலும் இடம் மாற்றித் தேடும் மனப் பிறழ்வில்தான் அநேக விமர்சன முறைகள் நகர்கின்றன. ஒரு ரசிகன் விமர்சனங்களின் அடிப் படையில் படத்தினை ரசிக்க வேண்டுமென்ற எந்த விதமான அவசியமும் இல்லை. ஆனால் விமர்சனங்களின் பிரத்தியேகமான அரசியலை குறிப்பிட்ட படங்களின் மீதேற்றி வாசிப்புச் செய்தலும் வித்தியாசமான அனுபவம்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை சென்னையிலிருந்து நாட்டுக்கு வந்திருந்த எழுத்தாளரும் உதவி இயக்குனருமான நண்பர் ஹசீன் ''city of god படம் பார்த்திருக்கிறீர்களா?'' எனக் கேட்டார். அந்தப்படம் கோடம்பாக்கத்தை கடுமையாகப் பாதித்திருப்பதாகவும் அந்தக் கதை உத்தியை பின்தொடரும் சினிமாக் கலைஞர்கள் பெருகி வருவதையும் குறிப்பிட்டார். BRAZILல் உள்ள நெரிசல் மிக்க சேரிப் புறத்தில் அத்திரைப்படத்தின் கதை நிகழ்கிறது. அதன் பிரதான பாத்திரம் cidade de deusஎனும் ஏழைக் குடியிருப்புப் பகுதியேயன்றி எந்த நபருமேயில்லை. 1980களின் ஆரம்பத்தில் போதைப் பொருள் பாவனையிலும் குற்றச் செயல்களிலும் மிதமிஞ்சிய பயங்கர நகரச்சேரியில் சட்டமும் ஒழுங்கும் போதைப் பொருள் தரகர்களான டீனேஜ் சிறுவர்களிடமும் ரவுடிக் கும்பல் களிடமுமே இருந்தது. மரண அச்சுறுத்தலும் வன்முறையும் ததும்பும் சூழலில் வளரும் சிறுவர்களின் வெவ்வேறு பாதைகளை பேசுகிறது அப்படம். அக்கதை தமிழ் நாட்டுச் சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவனிக்கப் படவேண்டும். BRAZIL சேரிகளினதும் தமிழ்நாட்டுச் சேரிகளினதும் வாழ்வியலிலும் கதைகளிலும் உள்ள உணர்ச்சிகளில் ஒத்த தன்மையொன்று காணப்படுவ தாகவும் அதுதான் இந்தப் பாதிப்புக்குக் காரணம் எனவும் சமாளிக்கப்படுகிறது.

விளிம்பு நிலைச் சேரிப்புற மக்களின் வாழ்வு பற்றிய கதைகளையும் அதன் ஆழமான கூறுகளையும் முழுமை யாகவும் விளக்கமாகவும் திரையில் எடுத்தாள முன்பிருந்த இயக்குனர்கள் தயங்கியதுண்டு. மேல்நிலைச் சமூக மாந்தர்களையும் அவர்களுக்கான அற விதிகளையும் ஒழுங்குபடுத்தும் கதை உத்திகளிலேயே அப்போதைய இயக்குனர்கள் காலந்தள்ளினர். பாரதிராஜாவின் படங்களோ வடிவ ரீதியில் கிராமிய வாழ்வியலை மேலோட்டமாக மேல்தள மக்களுக்கு ஏற்றவகையில் முன்வைத்ததேயொழிய ஓரநிலைப்படுத்தப்பட்ட மக்களின் குரல்களை உயர்த்தவில்லை.

இந்த எல்லைகளிலிருந்து விடுபட்டு நகரங்களை அண்டிப் பிழைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிரதான கதைமாந்தர்களாக்கி திரைக்கதை அமைக்கும் தைரியத்தினை புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழங்கியுள்ள படமாக city of godக் கூறலாம். ஈ, புதுப்பேட்டை, பொல்லாதவன், அஞ்சாதே எனப் பல படங்களின் கதைகளுக்கான போசணை city of gody இருந்து பெறப்பட்டாலும் அவை தமிழ்ச் சூழலுக்கேற்ற வகையிலும் அடித்தள மக்களுக்குச் சமீபமாகவும் இருப்பதாக பேசப்படுகிறது. இப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் கலைந்த வாழ்வு முறைகளைக் காட்சிப் படுத்துவது மட்டுமல்லாமல் வணிக ரீதியிலும் திரை உலகின் சகல வகையான ரசிப்பு வாட்டாரங்களிலும் சாதனை படைத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மாமூலான ஒழுங்குகளிலிருந்து விடுபட்ட கதைசொல்லல் முறையினையும் வித்தியாசமான பாத்திர வடிவமைப் பினையும் மைய ஓட்ட சமூக விழுமியங் களுடன் சமரசப்படாத திரைக்கதைகளையும் இப்படங்கள் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி இரண்டு மணிநேரம் வெளிநிகழ்ச்சி நிரல்களை மறந்து விறுவிறுப்பான பதட்டத்துடன் படம் பார்க்கும் ஆர்வத்தினையும் ஏற்படுத்தும் இவற்றின் மற்றொரு அம்சமும் கிளர்ச்சி யூட்டுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஹீமாஜஹான்


முதலில் பெருவெளி இதழ்-4 ஐ அனுப்பிவைத்த நண்பனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவசர வாசிப்புக்கான சாத்தியங்களை இழிவளவில் கொண்ட இவ்விதழ் ஓய்வு கிடைக்காத ஒரு காலப் பகுதியிலேயே என்னை வந்தடைந்தது. அதில் உள்ள பிரதிகளில் வாரத்துக்கு ஒருபிரதி என்ற அடிப்படையிலே வாசிப்புச் செய்யக் கூடிய அவகாசம் கிடைத்தது.

ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்களுடனான உரையாடலை மிகவும் ஆர்வத்துடன் படித்தேன்.அவரிடம் முன்வைக்கப் பட்டிருந்த கேள்விகளைத் தனித்தனியே ஆய்வுக் குட்படுத்தி எழுதக் கூடிய நூற்களின் தலைப்புக்களாக மாற்றமுடியும்.
1. அறபு மதரஸாக்களின் பாடத்திட்டங்களின் மறுசீரமைப்பு
2. நாகரிகங்களுக்கிடையிலான உரையாடலும் முஸ்லிம் சமுகமும்
3. முஸ்லிம் தேச இலக்கியமும் பின்னவீனத்துவமும்
4. முஸ்லிம் தேசப் பெண்ணியம்
5. முஸ்லிம் அரசியல்
6. முஸ்லிம்களும் ஊடகமும்

நமது புலமைவாதிகளின் செயற்பாடுகள் அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்குள் பெரும்பாலும் தங்கிவிடுகின்றன.இத்ரீஸ் அவர்கள் அதற்கப்பாலும் செயற்பட்ட பொழுதும் அவை விரிவான தளத்தில் சமுகத்தை வந்தடையவில்லை. மேலே குறிப்பிட்ட விடயங்களில் ஒன்றைப் பற்றியாவது அவரது விரிவான எழுத்து முயற்சியொன்று வெளிக்கொண்டுவரப்படுமா?

“மரணத்துக்குப் பின்னரான கொலை மற்றும் தற்கொலை” கதைப் பிரதி புதிய அனுவத்தைத் தருகிறது.வழமையான கதைகூறும் முறையிலிருந்து விடுபட்டு ஆர்வத்தைத் தூண்டக் கூடிய மொழியுடனும் அழகியலுடனும் நகர்த்தப் பட்டிருக்கிறது. அவ்வாறே பாலைநகர் ஜிப்ரியின் கதைப் பிரதியும் புத்துணர்வைத் தருகிறது. கவிதையைப் போன்ற படிமங்கள் அந்தப் பிரதிக்கு வலுச் சேர்த்துள்ளது. கவிதையைப் போலவே மீண்டும் மீண்டும் படிக்கக் கூடியதாக இரண்டு பிரதிகளும் அமைந்துள்ளன.

“முஸ்லிம் தேச இலக்கியம்-மேலெழுந்துவரும் கடும் போக்கு விவாதப் பொருள்” மிகப் பரந்த ஆய்வுக்குற் படுத்த வேண்டிய விடயங்களை மேற்கிளப்பி விட்டுள்ளது. அவ்வாறே பர்சானின் “பின்நவீனங்களு டனான முஸ்லிம்தேசம்” பிரதி பல விடயங்களைத் தெளிவு படுத்துகிறது.

எல்லாச் சமுகங்களும் நவீனத்தை நோக்கிப் பயணிக்கும் பொழுது நாம் எமது மூல வேர்களைத் தேடிப் பயணிக்கப் போகிறோமா? இதனைத் தான் “இஸ்லாத்திற்குத் திரும்புதல் என்பது ஒரு பின்னவீனத்துவ நிகழ்வு. இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய காலங்களில் நிகழ்ந்த தேசிய மற்றும் உலகலாவிய வளர்ச்சியின் விளைவால் உருவான அழுத்தங்களுக்கான பதில்” என்று குறிப்பிடுகிறார்களா?

ஒரே தாய் மொழியைப் பேசியபொழுதும் பெரும்பான்மை, சிறுபான்மையாகக் கூறாக்கப்பட்டுள்ள நிலையில் இலக்கியத்திலிருந்து பிரிந்து செல்ல முற்படுவது அல்லது தமக்குள் முரண்படுவது என்பது மேலோட்ட மான ஒரு கருத்து நிலையல்ல. பலகாலம் தமை அழுத்திய அநீதிகளுக்கான எதிர்ப்புணர்வாகவும் இதனைக் கருதலாம் என நினைக்கிறேன். அரசியலும் சிறுபான்மை யினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதமும் இதில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்.

தமிழ் இலக்கியத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு முஸ்லிம் தேச இலக்கியம் நகரும் வேளை அதிலிருந்து விலகி நிற்கும் முஸ்லிம் எழுத்துச் செயற் பாட்டாளர் மீது விரோத உணர்வு கொள்வது நியாயமானதா? எம்.ஏ.நுஃமான் அவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் இத்தகைய ஒரு சாய்வுடன் அமைந்திருப்பதைக் காணலாம். எம்.ஏ. நுஃமான் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு எமது இலக்கியச் செயற்பாடுகள் பற்றிப்பேச முடியாதிருப்பது கூட அவருடைய ஆளுமையையே சுட்டுகிறது.

ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுத்துகின்ற முஸ்லிம்கள் தொடர்பில் ‘முஸ்லிம் தேச இலக்கியம்’ என்பதைப் பிரயோகிக்க முடியுமா? அவ்வாறே தமிழ் கலாசார பண்பாட்டு அடையாளங்களுடன் எழுதப் பட்ட முஸ்லிம்களின் எழுத்துப் பிரதிகள் மீதும் மௌனம் சாதிக்க வேண்டியுள்ளதல்லவா?

தமிழ் இலக்கியச் செயற்பாடுகளிலிருந்து முஸ்லிம்கள் தனியே பிரிந்து செல்லும் பொழுது அரசியலில் தனிமைப் பட்டதைப் போலவே இலக்கியத்திலும் தனிமைப் படவேண்டிவரும். அறபுத் தமிழ் இலக்கியங்களைப் போலவே சமயம் சார்ந்த வட்டத்துக்குள் அவை நின்றுவிடக் கூடுமல்லவா? நவீனத்துவத்தின் செல்வாக் கிலிருந்து விடுபட்டு பின்னவீனத்துவச் சார்பு நிலையை எடுக்கும் பொழுது நமது தனித்துவங்களைப் பேணவேண்டிய அவசியம் வருமல்லவா? அவ்வாறு தனிமைப்படும் போது எமக்குள் ஒரு பலமான எழுத்து இயக்கம் இருந்தால் மாத்திரமே முன்னோக்கிச் செல்வது சாத்தியப்படும். இன்றைய அரசியல் தேக்க நிலைமை போல எழுத்திலும் ஒரு தேக்க நிலை உருவானால் நாம் நகரக் கூடிய மாற்றுவெளியொன்று எமக்கு வாய்த்திடுமா? அப்படி ஒரு நிலைமை உருவானால் தாய் மொழியாகிய தமிழைப் போசியவாறு தான் தனிமைப்படுவோம். அந்த நிலையிலிருந்து நம்மை மீட்டெடுக்கக் கூடிய மர்ம மூலங்கள் ஏதாவது உண்டா?

மதம் சார்ந்த அரசியல், மதம் சார்ந்த இலக்கியம் இரண்டும் உருவாவதற்குப் பின்காலனியச் சமுக அரசுகளே காரணமாயிருந்திருக்கின்றன. உலகமயமாக்கல் மூலம் சமுகங்களின் சுயம் அழிக்கப்பட்டு மேற்கத்திய மோகம் பதிலீடுசெய்யப்பட்டுவருகிறது. இதிலிருந்தும் தம்மைக் காத்துக் கொள்வதற்கும் மதம் சார்பான எழுச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.(இதில் பின்நவீனத்துவத்தின் கூறுகளும் முகம் காட்டுகின்றன) இதனாலேயே சில நாடுகள் அடிப்படைவாதத்தை நோக்கி நகர்த்தப் பட்டுள்ளன. எமது நாட்டின் பௌத்த அடிப்படைவாதம் அதிகாரபீடங்களைத் தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதைப் போல.

அதிகாரத்தின் நெருக்கடிகள் சமுகத்தைப் நோக்கிப் பாயும் பொழுது தன்னைக் காத்துக் கொள்ளும் நகர்வுகளை அது மேற்கொள்கிறது. முஸ்லிம் சமுகம் இரட்டை மேலாதிக்கங்களின் அழுத்தங்களுக்கு உற்பட்டுள்ளது. அதன் விளைவாக தமது பண்டைய சிந்தனைகளைக் கைவிட்டுப் புதிய கருத்தியல்களை உள்ளெடுத்துப் பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்படு கிறது. இவ்வகையில் முஸ்லிம் தேச இலக்கியம் என்பது அதன் மூல வேர்களைத் தேடியடைவதை விடவும் அரசியல் மையத்திலிருந்தே விரிவடைந்து செல்லுமென நினைக்கிறேன்.

இலங்கையின் தமிழ் இலக்கிய மையங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்ட காலம் இது. அந்த மையங்கள் மீது கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள் சிதைவடையும் பொழுதும் ‘முஸ்லிம் தேச இலக்கியம்’ என்ற கருத்து வலுப்பெறுகிறது.

தமிழ் இலக்கியத்திலிருந்து “பெண் மொழி” தன்னை விடுவித்துக் கொண்டது போல இஸ்லாமிய இலக்கியமும் தன்னை விடுவித்துக் கொள்ள முற்படுகிறதா? அவ்வாறு நிகழும் பொழுது அதில் ஏற்படக் கூடிய அனுகூலங் களைப் போலவே பாதகமான விடயங்களும் ஏற்படவே செய்யும்.முஸ்லிம் தேச இலக்கியம் என்ற மகுடத்தின் கீழே நாம் ஒதுங்கும் பொழுது கிறிஸ்தவ தமிழ் இலக்கியம், இந்து தமிழ் இலக்கியம் என்ற பாகுபாடுகளும் மோலோங்கும் அல்லவா? (அல்லது அவை தமக்குள் இணையக் கூடிய சாத்தியங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.) அவ்வாறு இணையும் பொழுது பின்னோக்கித் தள்ளப் படாதிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை “முஸ்லிம் தேச” இலக்கியம் கொண்டுள்ளதா? அல்லது ஆரோக்கியமான நகர்வுகளை முஸ்லிம் இலக்கியம் மேற்கொண்டுள்ளதா?

தமிழ் இலக்கியத்தில் பெண் மொழிக்குக் கிடைத்த இடத்தைப் போல அல்லது அதைவிடவும் அகலமானதும் ஆழமானதுமான இடத்தை இஸ்லாமிய இலக்கியம் பெற்றுக் கொள்ளுமா? சமயம் சார்ந்த எல்லைக்குள் இருக்கும் பண்டைய இஸ்லாமிய இலக்கியங்கள் முஸ்லிம் அல்லாதவரும் படிக்கக் கூடிய தன்மைகளைக் கொண்டிருக்கின்றனவா? இன்றைய இளம் சமுதாயத்தின் அல்லது எழுதிக் கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகளின் ஆர்வத்தை இவற்றின் மீது திருப்புவது சாத்தியமாகுமா?

முஸ்லிம் தேச இலக்கியம் எனும் போது அது வரையறுப்பது எதனை? இது தொடர்பாக யாரால் முன்வைக்கப் பட்ட கருத்து நிலை சரியானது? சமயம் சார்பாக இஸ்லாமிய மொழிப் பிரயோகங்களுடன் எழுதப் படும் இலக்கியங்கள் மாத்திரம் தான் இவற்றுள் அடங்குமா? அல்லது இவற்றுள் அடங்க வேண்டுமெனின் இனிவரும் படைப்புகள் யாவும் இஸ்லாமியப் பண்பாடு, கலாசாரங்களுக்கு உட்பட்டே எழுதப்பட வேண்டுமா? அப்படியெனில் இது வரை எழுதப் பட்ட பிரதிகளில் உள்ள தமிழ்ப் பாண்பாட்டுடன் தொடர்புடைய சொற்களை என்ன செய்வது?

“பெருவெளி”யினரின் பின்னவீனத்துவக் கூறுகள் முஸ்லிம் தேச இலக்கியத்தின் மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்தப்போகின்றன?ஆதிக்கம் என்ற பிரயோகம் தவறானதெனின் “பெருவெளி”யினரின் பின்னவீனத்துவக் கூறுகள் இஸ்லாமித் தமிழ் இலக்கியத்தை எவ்வாறு கட்டமைக்கப் போகின்றன?

இம்முறை மிஹாதின் “மாயவலைப் புதிரில் உதிரும் சலனங்கள்” புதிய உத்தியுடன் நகர்த்தப்பட்டுள்ளது. சஞ்சிகையைப் புரட்டிய பொழுது அதிலிருந்த மின்னஞ்சல் வடிவங்களே எனது கவனத்தை வெகுவாக ஈர்த்தவை. அந்தப் பிரதியின் ஆரம்பப் பகுதியைப் புரிந்து கொள்ளச் சிரமப்பட்டாலும் அதைத் தொடர்ந்து வரும் மின்னஞ்சல்கள் புரிந்து கொள்ளத் தக்க வகையில் அமைந்திருப்பது ஆறுதலான விடயம். அந்த Ethno hyper fantasima (என்ன பெயரிதுவோ?-இதைத் தமிழ்ப்படுத்த அதிக சொற்கள் தேவைப்படும் போல) ஹோர்மோன்; மிஹாதின் பிரதிகளில் அதிகமாக செல்வாக்குச் செலுத்துகின்றது போலும்

றகீபாவின் ‘செக்கல்’, ‘வேலி’ ஆகிய இரு கவிதைகளும் இன்றைய கவிதைகளின் செல்நெறியில் அமைந்திருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் ஆற்றலுடன் கவிதைகளைத் தருவார் என எதிர் பார்க்கலாம்.


சினிமாப் பிரதி

SYRIANA

செய்தியின் பின்னுள்ள நிகழ்வு
- ஸனா முஹம்மத்

திரைப்படத் திறனாய்வாளர்கள் என்ற பண்புப் பெயருடன் புத்தகம் போட்டவர்களை ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் இவர்களின் திறனாய்வுகள் திரைப்படங்களினைப் பற்றிய வங்குரோத்து முன் மாதிரிகளாகவே எனக்கு இருந்துள்ளன. என்றாலும் எதையோ செய்து கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் நிகழ்ந்து முடிந்ததாய்த்தான் கொள்ளலாம். இலங்கையைப் பொறுத்தவரை திரைப்படக் கல்லூரிகளோ அத்துறைசார்ந்த தொடர் நிகழ்வுகளோ இல்லை. இதற்கு திரைப்படத் துறையில் காணப்படும் அக்கறை, அக்கறையின்மை என்பன தாண்டி சந்தையையும் குறிப்பிட முடியும். மேற்கத்தேய அல்லது அண்மையிலுள்ள இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சிமிகு தாக்கங்கள் போல் திரைப்படச்சந்தை இலங்கையில் தோற்றம் பெறவில்லை. ஆயினும் சிங்கள திரைப்படங்களின் வருகையும் அவை பற்றிய உரையாடல்களும் தலைநகர் அண்டிய பகுதிகளிலே நடந்து முடிந்து விடுகிறது. அவைகள் ஏனைய பிரதேசங்களில் ஆக்கபூர்வமான உரையாடல்களின் தொடக்கமாய் திரையிடப்படுவதுமில்லை.

தொப்புளைக்காட்டி உச்ச கவர்ச்சிக்கான / வன்முறைக் கவர்ச்சிக்கான அனைத்துப் பண்புகளுடனும்தான் இந்திய திரைப்படங்கள் வரவேண்டு மென்ற கட்டாயத்தினை ரசனைச் சலவை மூலம் ரசிகர்கள் மீது திணித்திருக்கின்றனர். இடையிடையே எப்போதாவது நாம் திருப்திப் பட்டுக் கொள்ளும் ஒரு சில திரைப்படங்கள் தலை காட்டுகின்றன. ஆங்கிலத் திரைப்படங்களில் காணப்படும் கவர்ச்சிச் சந்தையினையும் விட இந்திய திரைப்படங்கள் மிக தாராண்மைகளோடு களத்தில் நிற்பதினை காண்கிறோம். இவை இன்று எதனை தம் கருப்பொருளாகக் கொண்டுள்ளன என்பதினை யாருமே ஊகிக்க முடியாமல் போய்விடுகிறது. கட்டாயமாக்கப்பட்ட ஆறு பாடல்களும் பதினாறு ஆடைகள் மாற்றும் குழு நடனமும் இல்லாமல் எந்தப் படங்களையும் வெளியிடமுடியாமல் இந்திய சினிமாத் தளம் நிற்கிறது.

இந்த நிலையினை கடந்து விட்டு ஹொலிவூட்டின் Warner bros pictures படைப்பாக Participant தயாரிப்பில் George clooney, Matt damon, Jeffrey wright ஆகியோருடன் Chris cooper, William hurt, Tim blake nelson, Amanda peet, Christoper plummer, Alexander siddig, Mazhar munir ஆகியவர்களின் சிறந்த பங்காற்றலுடன் வெளிவந்துள்ள திரைப்படம்தான் SYRIANA.

ஹொலிவூட்டின் பெரும்பாலான திரைப்படங்கள், எதிர்கொள்ளப் போகும் காலங்கள் பற்றிய பிரமிக்க வைக்கும் பார்வைகளுடன் வந்து கொண்டிருக்கையில், நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் தகவல்களுடன் உலகின் இன்றைய அரசியல் / வணிகத்தின் பின்னுள்ள கட்டமைப்புக்கள் பற்றி SYRIANA கதைத்திருப்பதுவே இத்திரைப்படம் பற்றி எழுதுவதற்கு காரணமாயிற்று. ஹொலிவூட்டின் பிரமிக்க வைக்கும் திரைப்படங்கள் அவற்றின் பின்னுள்ள தொழில்நுட்ப ரகசியம் பற்றியே அதிகம் கதைக்க வைக்கிறது. இதனூடாய் அந்தத் திரைப்படங்கள் ரசிகர்களை வேறு ஒரு திக்கிற்கு நகர்த்திவிடுகின்றன. அமெரிக்க அரசின் உளவியல் தூதர்களாகவே இத்திரைப்படங்கள் இருப்பதினை நம்மில் பலர் அறிந்து கொள்வது கஷ்டமாகும். இதன்மூலம் அமெரிக்க/மேற்கின் வணிகமற்றும் அரசியல் நலன் குலைந்து விடாமல் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகிறது. இதற்குள்ளும் அமெரிக்க அரசியல் மீது பலமான அடிகளை விட்டவாறு ஒரு சில திரைப்படங்கள் வருகின்றனதான். அவ்வாறானதொன்றே SYRIANAவாகும்.

ஒருவரையொருவர் இனங்கண்டு கொள்ளாத அதிகாலையொன்றில் மத்திய கிழக்குப் பாலைவனத்தில் தொழிலிற்காய் முட்டி மோதும் ஆசிய இளைஞர்கள், அமெரிக்க கம்பனிகளின் வாகனங்களிற்குப் பதிலாக இந்தியாவின் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்ற மிக இலேசான காட்சிகளோடு படம் ஆரம்பமாகின்றது. இஸ்லாம் கூறும், கூறாத சட்டங்களை மிகைப்படுத்தி அமுல்படுத்தும் ஈரானின் உட்கலாசா ரங்களை திடீரென தொட்டு நிற்கிறது திரைப்படத்தின் அடுத்த காட்சி. இந்த காட்சி உடைவுகள் படம் முழுவதும் இலகுவான பின் தொடர்புகளை பரப்பிக் கொண்டே நகர்கின்றன. அமெரிக்க உயை முகவரொருவரின் உண்மைக் கதையாக தொடரும் திரைப்படம் 20 வருட அவரின் உணர்வுகளின் வித்தியாசமான கோலங்களை எடுத்துக்காட்டுகிறது. தனது நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் தனது தொழிலானது நலன்களைப் பெற்றுத்தரும் என நம்புகிறார் Bob barnes. .

ஈரானிய களியாட்ட விடுதியில் ஆயுத விற்பனை ஒப்பந்தம் நடக்கிறது. ஒவ்வொரு நாட்டின் உள்ளக அரசியலையும் குழப்பி அதில் குளிர்காயும்
CIAயின் திட்டங்களை அமெரிக்காவினால் தீவிரவாதிகள் என அழைக்கப்படுபவர்கள் அறியாமலாவிடப் போகிறார்கள்? நவீன ஆயுதங்களை CIAதன் நோக்கத்திற்காய் ஈரானிய இளைஞர்களுக்கு விற்க திட்டமிடுகையில் அந்த ஆயுதங்கள் தீவிரவாத (இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும். வேறு அதற்கேயுரிய சொற்களைப் பயன்படுத்தும்போது மொழிக் குழப்பம் வாசிப்பிற்குத் தடையாக வந்து விடும் என கருதுகிறேன்). அமைப்புக்களிடம் சென்றடைகின்றன. இதனை அறியும் CIA முகவர் சக வணிகத்தில் ஈடுபட்டோரை உடனடி யாகவே குண்டு தாக்குதலொன்றின் மூலம் படுகொலை செய்கிறார். அனைத்து நாடுகளின் அரசியல், வணிகம் மற்றும் மண்ணாங்கட்டிகளையும் கைப்பற்றும் வெறியுடன் பித்துப்பிடித்து அலைந்து திரியும் அமெரிக்க அரசின் திட்டங்களை அமுல்படுத்துவது CIAதான். CIAஎதனை இதுவரை செய்துள்ளது, எதனை செய்து கொண்டிருக்கிறது, எதனை செய்யப் போகிறது? என்பது கூட CIAல் உள்ளவர்களுக்கே தெரியாத விடயமாக இருக்கிறது. இதற்குள் மத்திய கிழக்கு நாடுகள் நன்றாகவே அகப்பட்டுக் கொண்டதனை அவர்களே ஏற்றுக் கொண்டதை விட கேவலம் வேறேதும் இருக்க முடியுமா? எண்ணெய் மற்றும் இதர வணிகத்திற்காக யாரை அடுத்த மன்னராக தேர்ந்தெடுக்க வேண்டு மென்பதினை அமெரிக்க மக்கள், வணிகர்களிற்காக CIA மிகவும் அமைதியான ஆர்ப்பாட்டமே அற்ற திட்டத்துடன் கச்சிதமாக நடத்தி முடிப்பதனை SYRIANA மிக வெளிப்படையாக கூறியிருப்பது மிக முக்கிய மானதொன்று என நினைக்கிறேன்.

SYRIANA அமெரிக்காவிலிருந்து வெளிவந்தாலும் நடந்து முடிந்த அரசியல் படுகொலைகளை தைரியமாய் கூறுவது துணிச்சலே. இவ்வாறு
CIAன் கோபத்தைக் கிளறிக் கொண்டு ஹொலிவூட் சில திரைப்படங்களைத் தந்து கொண்டுதான் இருக்கிறது.

காற்றின் பயணம் போல கமராவும் காற்றோடு அலையவிடப்பட்டிருப்பதாய் SYRIANAவின் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிக லாவகமாக கமரா காட்சிகளை உள்ளெடுத்துக் கொண்டு திரையில் மருதாணிக் கோலம் போட்டுள்ளது. பல்வேறு விடயங்களை உள்வாங்கிக் கொண்டு நமது பார்வையின் எல்லைகளினை பெருப்பிப்பதை SYRIANA ஓரளவு செய்திருப்பதாய்க் கருகிறேன். உதாரணமாக அமெரிக்க வணிகத் தொடர்புகளிலிருந்து விடுபட்டு சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளினை தனது மூத்த மகனின் வழிகாட்டலில் மன்னர் ஆரம்பிக்கும்போது அமெரிக்க சார்பு இரண்டாவது மகன் தொலைக்காட்சியின் Remote controlவேலை செய்யாது விட அதனை சீனத் தயாரிப்பெனக் கூறுவதும் திரைப்படப் போக்கில் அழுத்தங்களின்றிய காட்சிகளி னூடாய் கூறிவிட்டு நகர்ந்து விடுகிறது.

நமது நாடுகளின் தலை விதிகளும், தேர்தல்களும் ஏதாவதொரு வெளிநாடொன்றிலுள்ள ஹோட்டல் அறைகளில் தீர்மானிக்கப்படுவதினை எவரும் எதிர்த்துக் கதைப்பதாகக் காணவில்லை அல்லது நமது அரசியல், இலக்கியங்கள் இதனை கதைப்பொருளாக பேசுவதாகவும் காணவில்லை. நாம் இன்னுமின்னும் எதற்குள் இருக்கிறோம்? நமது எண்ணங்களின் / திட்டங்களின் வீச்சு பற்றிய அச்சம்தான் நம்மீதான ஆக்கிரமிப்பின் முதல் செயற்பாடாய் உள்ளது. ஆனால் நம்மை வேறொருவர் அவரின் இலாபத்திற்காய் தீர்மானிப்பதையும் அல்லது அதனை ஜனநாயகத்திற்கான யுத்தமாக பறைசாற்று வதையும் War on terrorism என்பதாய் SYRIANAகூறியுள்ளது. தீவிரவாதிகள் எவ்வாறு உருவாகிறார்கள் என்பதினை சொல்லாமற் சொல்லும்
SYRIANA அமெரிக்க நலன்களை ஒட்டுமொத்தமாக குட்டிப் பணித்துவிடும் என எதிர்பார்க்கத் தேவையில்லை. தீவிரவாதிகளின் பின்னே தொழிலின்மையும் மேலோட்ட சமூக உணர்வுகளும் பெரும் பங்காற்றியிருப்பதாய் வெளிப்படுத்தும் பாத்திரங்கள் நடமாடவிடப் பட்டுள்ளன. மதரீதியான பிணைப்புக்களையும் தாண்டி வணிகத்தில் ஏற்படும் ஆக்கிரமிப்பு தீவிரவாதம் வளரக் காரணம் என்ற கதையினை SYRIANA ஒரு கட்டத்தில் பேசுகிறது. என்றாலும் அல்-குர்ஆனின் வசனங்களும், பள்ளிவாசல்கள், அல்-குர்ஆன் மத்ரஸாக்கள் தீவிரவாதக் குழுக்களின் பின்னேயிருப்பதாய் படம் நகர்கிறது.

அமெரிக்கா ஒரு செய்தியினை நமக்குச் சொல்கின்றபோது அதன் பின்னே இன்னொரு செய்தியும் பல தொடர் நிகழ்ச்சித்திட்டங்களும் மறைந்திருப்பதனைச் சொல்லாது. அமெரிக்க ஊடகங்களும் கூட அதற்கெனவே தமது நிகழ்ச்சி நிரல்களை ஏற்கனவே முழுமை செய்திருக்கின்றன. அதனது வழியில் சென்று இந்த ஊடகங்களை எதிர்கொள்ள முடியாததிற்காய் ஒட்டு மொத்தமாய் அதனை எதிர்க்கின்ற செயற்பாடே நம்மிடம் இருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் வளைகுடா பிராந்தியத்தின் துறைமுகமொன்றில் தரித்து நின்ற அமெரிக்க எண்ணெய்க்கப்பல் மீதான தற்கொலைத் தாக்குதலினையும் அதற்குப் பின்னிருந்த
CIAயின் அரசியல் தந்திரங்களி னையும் SYRIANA மிக இலேசான வர்ணமொன்றில் சொல்லி விட்டு போகின்றது. கப்பல் மீதான தாக்குதலிற்குப் பயன்படுத்தப்பட்ட அதி நவீன தற்கொலை ஆயுதம் CIAனால் ஈரானிய இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகும்.

ஜெனிவாவில் இருந்து வரும் தொலைக்காட்சியொன்றின் வர்த்தக நிகழ்ச்சி தொகுப்பாளரிற்கும் வளைகுடாவில் இருக்கும் மன்னரின் மகனிற்குமான தொடர்பு புதிய வணிக வழிகளை நோக்கிப் பயணிக்கிறது. அமெரிக்கா தனது வர்த்தக நலனிற்காய் வளைகுடா நாடுகளினைப் பிரித்தாண்டு கொண்டிருப்பதால் அந் நாடுகள் எதிர் கொள்ளும் வர்த்தக சவால்களையும், தங்கி நிற்கும் வணி கத்தின் நிலைக்களங்கள் பற்றியுமான உரையாடல் புதிய எண்ணெய் வர்த்தகத்தை மன்னரின் மகனிற்கு முன்னே வரைபடமாக இடுகிறது. ஈரானை குறுக்கறுத்து தன் துறைமுகத்திற்கு வரவேண்டிய எண்ணெய்க்குழாய் ஈரானுடனான முரண்பாடுகளினால் மிகத்தூரம் பயணித்து ஈரானைச் சுற்றி வருவதனால் ஏற்படும் மேலதிக வருமான இழப்பீடுகளை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மன்னரின் வர்த்தக ஆலோசகராக முன்வைக்கிறார். சுயமான வளைகுடாவின் வெற்றியினை அமெரிக்கா தனது இலாபத்திற்காய் தடைசெய்து புதைத்து வைத்திருப்பதினை SYRIANA மிக அழகிய மௌனத்துடனும் பாலைவனத்தின் சூட்டுடனும் சொல்லிவிட்டுப் போகிறது.

ஆனால், அமெரிக்கா வழமை போல முந்திக் கொள்கிறது. தனது எண்ணெய் வர்த்தகத்திற்காயும் உலகு மீதான வர்த்தக நலனை தொடராக தக்கவைத்து நாடுகளை உறிஞ்சும் படலத்திற்காயும் எவரையும் எப்படியும் என்னவும் செய்ய முடியுமல்லவா? இப்படியெல்லாம் செய்வதுதான் அமெரிக்காவின் தர்மம். அதனால்தான் உலகின் மீதும் உலகின் சட்ட ஒழுங்குகள் மீதும் அமெரிக்க அரசுக்கு அதி கூடிய அக்கறை. வளைகுடாவில் தனது வர்த்தக நலன் பாதிப்படையப் போவதினை அமெரிக்கா அறிகிறது. இதனிடையே CIA முகவர் ஈரானிய சார்பு இஸ்லாமிய தீவிரவாதக் குழுவினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார். அதன்பின் அமெரிக்கா திரும்பிச்செல்கையில்
CIAயினால் கைவிடப்படும் இவர் மிகுந்த விரக்தியுடன் தன் துன்பங்கள் நிறைந்த 20வருட வாழ்வு கொடுத்த வலிகளையும் சோகங்களையும் மிகக் கொடுமையுடன் தாங்கிக் கொள்கிறார். தான் செய்யும் ஒரு நல்ல காரியமாக CIAயின் முயல்வுகளை குறித்த மன்னரின் மகனிடம் தெரியப்படுத்த முயற்சிக்கும்போது அமெரிக்காவில் இருக்கும் CIAயின் மிக முக்கிய ரகசிய இடத்தில் இருந்தவாறே வளைகுடாப் பாலைவனத்தில் ஆட்சிபீடக் குழப்பத்துடன் (மன்னர் வாரிசு இழக்கப்பட்ட நிலையில்) சென்று கொண்டிருந்த மன்னரின் மூத்த மகன் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாய் படுகொலை செய்யப்படுகிறார். அமெரிக்க சார்பு இரண்டாவது மகன் ஆட்சியைப் பொறுப்பெடுக்கிறார். தோல்வியடைந்த வளைகுடாவின் சுய ஆளுமையும் தீவிரவாதத்திற்கு எதிரானதும் வெற்றி பெற்றதுமான அமெரிக்காவின் வரலாறாய் திரைப்படம் முடிவடைகிறது.

இத்திரைப்படத்தின் இத்தனை நிகழ்வுகளும் நடந்து முடிந்த நிகழ்வொன்றினை மீண்டும் உங்கள் முன் கொண்டு வந்திருக்கும். ஆனால் நமக்கு கிடைக்கும் தகவல்கள்
CIAயின் நடவடிக்கைகளையன்றி அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதிகளின் தாக்குதல்களையே கூறியிருக்கும். இதேபோல்தான் நமது அன்றாட நிகழ்வுகளிற்குப் பின்னான திட்டங்களும் அமைந்து இருக்கின்றன. SYRIANAவின் காட்சியமைப்பிற்கு ஏற்ற ஒளியும் சூழலிற்கு ஏற்ற திரைநிறங்களும் திரைப்படத்துடன் இணைந்திருப்பதற்கு துணைபுரிகிறது. அதே போல்தான் ஒலியமைப்பும் மிக நுட்பமாய் பிணைக்கப்பட்டுள்ளது. Original DVDயில் பார்ப்பதில் இருக்கின்ற துல்லியத்தினை இதில் மிக அருமையாக அனுபவிக்கக் கிடைத்தது. அதனுடன் wide screen edition என்பதும் இன்னும் பிணைப்பின் அதிகரிப்பிற்கு காரணமாயிற்று. இலங்கையின் எந்த திரையரங்குகளிலும் SYRIANAதிரையிடப்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை.

ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரும் சுய மீளலிற்கு எதிரான ஆக்கிரமிப்பும் இன்று வெவ்வேறு திசைகளினை பார்த்துக்கொண்டு எங்கோ இருக்கும் ஒரு சிலரின் இலாபத்திற்காய் இயங்குகின்றது. ஆனால், புதிய புதிய வழிகளில் அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் துவம்சம் செய்யும் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தொழில் நுட்ப அதி வினைத்திறன் இன்றைய ஆக்கிரமிப்புப் போரிற்கு மிக முக்கியமான ஆயுதமாகக் கொள்ளப்படுகிறது. இதனோடு இணைந்தது போல நமக்கு எதிரான புதிய ஆக்கிரமிப்பு நுட்பங்களை கண்டறிய வேண்டிய தேவை நமக்குள்ளது.

கட்டுரைப் பிரதிகள்

அதீத உண்மையினால் கலைக்கப்படும் ஒழுங்குகள்
- மிஹாத்

ற்போதைய காலகட்ட நடைமுறைகளின் வழியே ஏற்பட்டிருக்கும் புதிய சிந்தனைத் தெளிவுகளுக் கமைவாக வெளிவரும்
பெருவெளி சஞ்சிகையின் வருகையோடு இலங்கைச் சூழலில் கொதிப்பு ஏற்பட்டிருப்பதனை ஊடகங்கள் வழியேயும் தனிநபர்களின் காற்று வழி ஓலங்கள் மூலமும் உணர முடிகிறது. தலை வெந்து எழுதும் திராணி மங்கியவர்களெல்லாம் தங்களை தாங்களே இலக் கியக்காரர்களென்ற நாற்றமெடுக்கும் அடை மொழியோடு பீற்றிக் கொண்டு சந்திக்குச் சந்தி பெருவெளிக்கெதிராக ஊளையிடத் தொடங் கியிருக்கின்றனர். இன்னும் சில இலக்கிய சூதுகாரர்கள் முஸ்லிம் தேச இலக்கியம் தமது உரிமத்துக்குரியதென தொலைபேசிகளில் கள்ளத்தனமாகக் காது கடிக்கின்றனர். சமூகச் செயற்பாடாக முன் நகர்த்தப்படும் எழுதும் பணியானது கபடநோக்கங் கொண்ட சில தனிநபர் சொத்தாக பொருள் மாற்றம் செய்யப்படுவதற்கான சூழ்ச்சியினை பெருவெளி அடித்து விரட்டியது. தனிநபர் விளம்பரப் புகழ்வாதமானது பெருவெளி நம்பியிருக்கும் எழுத்துச் சிந்தனைக்கு எதிரானது மட்டுமல்ல சராசரி நடைமுறையிலும் கேவலமானதுதான். அதேவேளை இலக்கியச் சஞ்சிகை வெளியீடு என்பது குழுக்களிடையிலான போர்க்களச் செயற்பாடு போல கற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அழுகிய மன நிலையிலிருந்து மீள்வதற்கு பலரும் தயாரில்லை என்பதை விட தற்காலச் சிந்தனை மாற்றங்களும் வித்தியாசமான கருத்து நிலைகளும் அநேக வெற்று மண்டைகளுக்குள் இன்னும் வந்து சேரவில்லை என்பதே காரணமாயிருக்கலாம். வழிந்தோட முடியாத தேக்கங்களில் சிக்குண்டிருக்கும் இலக்கிய உறை நிலை (Freezed Literature) ஒன்றுதான் இன்று கிழக்கு மாகாணத்தின் பிரதான முகவரியெனத் துணிந்து கூறலாம். தத்தமது தேக்கத்தினை மறைக்கவும் தங்களது வரண்டு சுருண்டு போன விம்பங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் கிழக்கு மாகாண இலக்கியச் செயற்பாட்டாளர்களென தம்மை அழைத்துக் கொள்வோர் திக்குமுக்காடுவதனையும் பெருவெளி அவதானித்துப் பரிதாபப்படுகிறது. இன்னொரு புறம் பெருவெளியின் தொடர்ச்சியான இயங்குதலானது இங்கிருக்கின்ற அநேகரது உறைநிலைகளை புதிய கருத்தியல் மூலம் அறிவிக்கிற தென்பதை புரிந்து கொண்டவர்கள் பெருவெளியின் களச் சிந்தனையான பின்நவீனத்துவத்தினை விளக்கமில்லாக் கோமாளிகளாகச் சாடுவதனை ஒரு புறம் மேற் கொள்கின்ற அதேவேளை பெருவெளியினரின் முஸ்லிம்தேசக் கதையாடல் எனும் எண்ணக் கருத்தினை தங்களுடைய கருத்துக்கள் போல தந்திரமாகப் பாவனை செய்து கொண்டும் பெருவெளி என்ற பெயரினை இருட்டடிப்புச் செய்தபடியும் மேடைகளில் நான்காவது பரிமாணமாக இழிக்கின்றனர்.

இங்கிருக்கின்ற அச்சு ஊடகங்கள் தமிழ்ப் பெருந்தேசியக் கதையாடலின் மேலாண்மையில் தோய்ந்தவை என்பதனால் அவை முஸ்லிம் சிறுபான்மைக் கதையாடலினையும் அதற்கு அங்கவஸ்திரமாக இருக்கின்ற பின்நவீனத்துவத்தினையும் சாடுவதில் வியப்பில்லை. ஒடுக்கப்பட்ட சகோதர தமிழ் சமூகம் இன்னுமொரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அரசியல் இலக்கியப் போராட்டத் தன்மையினைப் பிறழ்வாகப் புரிந்து கொள்வதிலுள்ள சிக்கலாகவே இதனைக் கருத முடியும். அரச இலத்திரன் ஊடகமொன்றில் வார இறுதி நாட்களின் காலை நிகழ்ச்சியொன்றில் பெருவெளி முன்வைக்கின்ற கருத்துக்களுக்கும் அதன் செயற்பாட்டு நோக்கங்களுக்கும் முரணான வகையில் எதிர்வாதங்கள் முன்வைக் கப்படுகின்ற அதேவேளை ஒரு தலைப்பட்ச
மாகவும் இருப்பது இழிவானது. இதன் தயாரிப்பாளரைப் பீடித்திருப்பது இருப்பிற்கான அச்சம் மற்றும் பின்நவீனகால நடப்பியல்புகள் மீது தனக்கிருக்கின்ற பரிச்சயமின்மையுமே.

பின்நவீனத்துவத்திற்கெதிரான வசைபாடல் களெல்லாம் அதனைப் புரிந்து கொள்ளாத மொக்கு நிலையிலிருந்து வருகின்றனவேயன்றி வேறில்லை. இதனை சஞ்சிகைகள் மூலமாகக் கற்பித்துக் கொண்டிருக்க முடியாது. பல்கலைக் கழகங்களில் பாடவிதானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் பின்நவீனத்துவத்தினை பெருவெளி இயன்றளவு தெளிவுபடுத்த முனைந்திருக்கின்றது. றியாஸ் குரானா, மிஹாத் போன்றவர்கள் இந்த முனைப்பில் இருக்கின்றனர். மனிதன் தறிகெட்டு திரிவதாக கருதப்பட்ட காலத்தில் அறம்சார் கருத்துக்கள் பிரபலமாகின. எந்நேரமும் மனிதன் தவறு செய்யாத போது அறம்சார் கருத்துக்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விடுகின்றன. இன்னொரு காலத்தில் உணர்வுகளைத் தூண்டி மனதை நெகிழ வைக்கும் கோட்பாடுகள் மக்களிடம் செல்வாக்குப் பெறத் தொடங்கின. காலவழியில் அதிலும் திருப்தி கொள்ளாத மனிதன் அதனையும் கேள்விக்குள்ளாக்கினான். இவ்வாறு புதிய புதிய பரிசீலனைகளை அனுமதிக்கின்ற ஒரு சிந்தனை முறையாக பின்நவீனத்துவத்தின் அடிப்படையப் புரிந்து கொள்ளலாம். ஒரு கருத்து நிலையிலிருந்து வேறொரு கருத்து நிலைக்கு மாறுவதென்பது தேக்கங்க
ள் அறுந்த பரிணாம வளர்ச்சியாகும். இங்கிருக்கின்ற சிறு குட்டைகளின் சலசலப்பை விட பாரிய எதிர்;ப்பையும் சவாலையும் மேற்கில் சந்தித்தது பின்நவீனத்துவம். அத்தடைகளையெல்லாம் மீறி அச்சிந்தனையில் இருக் கின்ற பல்தரப்பட்ட விரிந்த அறியும் முறையினூடாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. எமது சூழலில் பின்நவீனத்துவம் மேற்கின் உற்பத்திப் பொருளென இழிந்தோதப்படுகிறது. இது அறியாமையும் அதிகாரமும் குடி கொண்டவர்களின் வெற்றுக் கோஷங்களாகும். பின்நவீனத்துவம் உலகின் தத்துவ, அரசியல், அழகியல் மரபுகளை மாற்றுக் கூறுகளின் பார்வை மூலம் கேள்விக்குட்படுத்தித் தொகுக்கப்படும் ஒரு அறிவு முறையாகும். இது ஒற்றைத் தன்மையானதாக இருப்பதில்லை. உலகப் போர்களில் பேரழிவுகளை உண்டு பண்ணிய மேற்கின் கோட்பாடுகளின் மீது அதிருப்தியுற்ற ஐரோப்பிய அறிவு ஜீவிகளும் கலைஞர்களும் தமது கோட்பாடு மரபுகளைக் கேள்விக்குட்படுத்திய போது பின்நவீனத்துவ நிலையினைக் கண்டடைந்தனர். இது வேறுபாடுகளின் அழகியலை விதந்து களிக்கிறது.வித்தியாசங்களின் இருப்பை தாராளமாய் ஏற்றுக் கொள்கிறது.இந்த வழியில்தான் ஒடுக் கப்படுகின்ற சிறுபான்மைச் சமூகங்களின் போராட்டச் சாதனமான பின்நவீனத்துவச் சிந்தனையை ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகிறது.சிங்களப் பேரினவாதத்தின் மைய அதிகாரத்திற்கெதிரான எழுச்சியாக முஸ்லிம்தேச இலக்கியம் பின்நவீனத்துவத்தினை துணைக்கழைக்கின்ற அதேநேரம் தமிழ்த்தேசத்துடனான சுமுகமான வேறுபாட்டையும் பின்நவீனத்துவக் கூறுகளாலேயே பேண முனைகிறது.இதுபோல உலகமயமாக்கல், புலம்பெயர்வுகள், கலாசாரக் குறுக்கீடுகள் போன்றவை கள் மீது இன்று பின்நவீ னத்துவம் அதன் பார்வைகளைச் செலுத்தி புதிய பரிணாமக் கட்டங்கள் விஸ்தரிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது.

உண்மைகள் பற்றிய பின்நவீனகாலச் சிந்தனைகளின் அடிப்படையில் நோக்கும் போது கலைகளைப் பீடித் திருந்
த ஏராளமான இறுகிய வரைமுறைகளை மீளாய்வு செய்யும் நிலை ஏற்படுவதனைத் தவிர்க்க முடியாது. எமது படைப்புச் சூழல் எப்போதுமே இலட்சிய விருப் புறுதியொன்றின் பக்கம் சாய்வு கொண்டதாக இருப்பதன் மூலம் தன்னைப் புத்திஜீவித் தனமாகவும் நேர்வழிமிக்கதெனவும் காண்பிக்க முனைகிறது. இது அப்பட்டமான போக்கிரித்தனமாகவே கருதப்பட வேண்டியது. இங்கு சிறந்த படைப்பொன்றுக்கு இருக்க வேண்டிய முக்கிய அடிப்படைக் கூறுகளாக மூன்று விடயங்கள் பரிமாறப்படுகின்றன. அவை-
1. எதார்த்தம்
2. அழகியல்
3. மனிதநேயம்

இன்று இவை மூன்றும் கடுமையாகக் கேள்விக்குள் ளாக்கப்பட்டு வருவதனை அவதானிக்கலாம். உண்மை களின் தன்மை பற்றிய ஆழமான பின்நவீனகால விளக்கங்கள் வந்து விட்ட பிறகு எதார்த்தம் என்பது சூம்பிப் போய்விட்டதாகவே கருத முடியும். குறிப்பிட்ட ஒரு தரப்பு ரசனையில் படிகின்ற பு
ரிதல்களை அந்தத் தரப்புச் சார்ந்த சூழலின் அறங்களுக்கு நியாயமானதாகச் செப்பனிட்டு உண்மையென அரங்கேற்றுவதனை எதார்த்தம் என்கின்றனர். சகல விதமான ஒழுங்கு களையும் பூஜிப்பது, இயல்புகளை மீறி சிந்திக்க விடாமல் தடுப்புச் சுவர் எழுப்புவது எதார்த்த வாதத்தின் பண்பாகும். இதற்குள் இருக்கின்ற அதிகார வெறி கொண்ட நெறிமுறையின் போக்கினைத் தற்கால உலகியலின் விசாலமான ரசனையானது புறக்கணித்து விட்டது. இதனால் சலிப்படைந்திருக்கும் எதார்த்தக் காவல் முகாமானது சிதறுண்டு வருகிறது.

அழகியல் என்ற எண்ணக்கருவானது ஏற்கனவே பொதுப்புத்தி கட்டமைத்து வைத்திருக்கின்ற சமூக மனத்தளத்தில் நிலவுகின்ற சட்டாம்பிள்ளைத் தனமான சீரிய விதந்துரைப்புக்களையே கொண்டிருக்கின்றது. பல்வேறு வகையான பேதங்களை உருவாக்குவதன் மூலம் வித்தியாசங்களையும் மற்றமைகளையும் புறமொதுக்கி விட்டு சுத்திகரிக்கப்பட்ட பிரத்தியேக வகையான
பண் பாட்டுக் காரணிகளுக்கு மட்டும் சிறப்புத்தன்மை வழங்குவதன் மூலம் பிறக்கின்ற மகிழ்தன்மை அழகியல் எனக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் சட்டகங்களுக்குள் அடைபட்டிருந்த அழகியலானது தகவல் தொடர்புலகத்தின் இலத்திரன் ரசனைவெளியில் இன்று சிக்கல்கள் மிக்கதாகச் செழிப்படைந்து சுயாதீன மாகப் பரவி எல்லைகள் அழிந்த நிலையினால் வளம் பெற்றிருக்கின்றது.

மனிதநேயம் என்பது குழுமுறை அலகுகளுக்குள் சுருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனைக் கலைகளில் இடம்பெற வைப்பதென்பது சிக்கலடைந்திருக்கிறது. குறிப்பிட்ட கலைப்படைப் பொன்றில் மிளிரும் மனிதநேயம் வேறொரு குழுவின் பார்வையில் வன்முறையாக நோக்கப்படு வதற்கான சாத்தியங்களுண்டு. இன்னொரு குழுவின் வன்முறைச் செயற்பாடு அக்குழுவினால் மனித நேயமாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கும் சாத்தியங்களுண்டு. அமிருதா மிர்ஸா ''கலைக்கும் வன்முறைக்குமிடையிலான தடித்த கோடு அழிந்து வருகின்றது” எனும் கட்டுரையில் குறிப்பிடுவது போல வன்முறை கலையாகவும், கலை வன்முறையாகவும் தளங்கள் மாறக்கூடிய தன்மை உருவாகும் நிலையில் எதார்த்தம், அழகியல், மனிதநேயம் போன்ற வரையறைகளுக்கு வெளியே படைப்புவெளி விரிந்து சென்று கொண்டிருப்பதனை அவதானிக்கலாம். அதனால் மேற்கூறிய மூன்றினையும் இன்றளவும் வலியுறுத்தி வரும் எழுத்துக்க
ளைத் தேங்கிவிட்டவைகள் எனும் சொல்லினால் அழைப்பது பொருத்தமானதாகும்.

இந்நிலையில் உண்மைகள் பற்றிய மாற்றுப் பார்வைகளின் பக்கம் கவனங்கள் உந்தப்படுவது தவிர்க்க முடியாதது. இன்றைய காலகட்டத்தில் அது அவசியமானதும் கூட. இங்கு உண்மை எனும் ஒற்றைத் தன்மை விடுவிக்கப்பட்டு அதீத உண்மை எனும் பதத்தினால் உண்மையின் பல சாத்தி யங்கள் பேசப்படுகின்றன. அதீத உண்மை(hyper reality) எனப்படுகின்ற எண்ணக்கருத்தானது மெய்யியல் சிந்தனையாளர் Jean Baudrillard உடன் சம்பந்தப் பட்டதாகும். இலத்திரனியல் தொடர்பாடலின் பிரமாண்டமான பரவுகைக்குப் பிறகு தொலைக் காட்சிகளிலோ அன்றியும் இதர கலாசார உற்பத்தி களிலோ தனியான நித்தியமான உண்மைகள் கிடையாது எனவும் நாம் உண்மைகள் எனக் கொண்டாடுவதெல்லாம் குறிப்பிட்ட இலத்திரனியல் தொடர்பாடல்களினால் கட்டமைக்கப்படுபவையே எனவும் டீயரனசடைடயசன விவாதிக்கிறார். பின்நவீனகால உலகம் நித்திய உண்மைகள் இல்லாது எவ்வாறு உண்மைபோன்ற பாவனைகளால் நிரம்பியுள்ளது என்பதை அவர் காண்கிறார். ஊடக உலகத்தினால் எதிர்மாற்றுப் புனைவாக முன்வைக்கப்படும் அம்சங்கள் நித்திய உண்மை போன்ற புரிதலை
எமக்கு ஏற்படுத்துவதோடு அவை உண்மைகளின் தோற்றங் களை செயற்கையான திரைகளினால் மூடிவிடுகின்றன எனும் விபரத்தினைச் சுற்றி அவரது பொது வான கோட்பாடுகளும் எழுத்துக்களும் சுழல்கின்றன. செய்திகளிலும் விபரணங்களிலும் பரிமாறப் படும் அறிக்கைகள் பிறிதான நிகழ்வுகளின் தொகுப்புகள் அல்ல அதற்குப் பதிலாக அவை அந்நிகழ்வு களுக்கான புனைவு நியாயங்களைக் கட்டமைத்து விளக்கமளிக்கும் பணிகளையே ஆற்றுகின்றன. உதாரணத்திற்கு தொண்ணூறின் ஆரம்பத்தில் பாலைவனச் சூறாவளியெனப் பெயரிடப்பட்ட வளை குடாப் போர் உண்மையில் நிகழ வில்லை. அதற்குப் பதிலாக ஊடகங்களினால் அது கட்டமைக்கப் பட்டதென Baudrillard விவாதிக்கிறார். எமது நாட்டில் சமகாலத்தில் நாம் உணரும் சில அனுபவங் களையும் இதனோடு பொருத்திப் புரிந்து கொள்ள முடியும்.

தொழில்நுட்பம் உயர்வடைந்துள்ள பின்நவீனகால கலாசார விநோதங்களிலிருந்து உண்மையி னைப் பேதங்கண்டு கொள்ள முடியாத பிரக்ஞை நிலை உருவாகியுள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஊடகங்கள் பூதாகரமாகப் பெருகியிருக்கும் இக்கால கட்டத்தில் குறிப்பிட்ட ஊடகங்கள் அசல் நிகழ்ச்சிகளை அல்லது அனுபவ நிகழ்வுகளை அதன் மூல அம்சங்களில் சேதாரம் செய்து அல்ல
து வடிகட்டி இதுதான் மிகச்சரியான உண்மையென வடிவமைத்து பிரக்ஞைகளை நிர்ணயம் செய்கிறது. இதனை அதீத உண்மையின் தோற்ற வடிவமெனவோ அல்லது உண்மையின் பதிலிகளாகவோ மனங்கொள்ளலாம். நாம் வாழும் உலகம் இன்று நகல் உலகத்தினால் மாற்றீடு செய்யப்பட்டிருக் கிறது. இங்கு நாம் காண்பவையெல்லாம் போலிமைகளின் பாவனைக ளேயன்றி வேறில்லை. இப் போதிருக்கின்ற கலாசார நிலவரங்களில் அதீத உண்மையின் நிலைப்பாட்டினைப் புரிந்து கொள் வதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. நுகர்வுக் கலாசாரத்தில் குறிகளின் பரிவர்த்தனைப் பெறுமதி கொண்டிருக்கின்றபற்றின் ஊடாக அதீத உண்மைகளின் உருவாக்கத்திற்கு அவை வழங்குகின்ற பங்களிப்பின் செறிவினை உணர முடியும். உதாரணமாக குறிப்பிட்ட ஒரு வர்த்தகப் பெயர் ஒரு பொருளின் தரத்தையோ அல்லது நவநாகரிகத்தையோ பறைசாற்றும் பாங்கினைக் கொள்ளலாம். மேலும் இலகுவாகப் புரிவதெனில் ஜனாதிபதியின் கழுத்தில் கிடக்கும் சால்வை அவருக்குப் பதிலியாக ஓவியர்களால் கேலிச்சித்திரங்களில் வரையப்படுகிறது. இங்கு சால்வையானது ஜனாதி பதியைக் குறித்து நிற்கிறது. உண்மையில் சால்வை இங்கு பிரத்தியேகமான அதன் அர்த்தங்களிலிரு ந்து விடுவிக்கப்பட்டு வேறு உண்மைகளின் அர்த்தமாகப் பாவனை செய்யப்படுகிறது. அதாவது அதீத உண்மை யானது உண்மையான உணர்விலிருந்து பிரக்ஞையினைத் தந்திரோபாயமாக விலக்கி செயற்கையாக உருவாக்கப்படும் உண்மை போன்ற பாசாங்கின் மீது கவனத்தினைத் திருப்பி விடுவதும் அடிப்படையில் வெறும் தோற்றப்பாட்டின் முடிவற்ற மீள் உற்பத்தியினை உருவாக்கு வதுமாகவே இருக்கிறது.

சூதாட்டக்களரி அல்லது விநோத கேளிக்கைக் கூடங்கள் அல்லது இன்றைய தகவல் தொடர்புக் கலாசாரம் வழங்குகின்ற இலத்திரன் காட்சித்திரைகளின் டாம்பீகம் போன்றவற்றினூடே ஒருங் கிணைபவர் அவரது உலகத்தில் தனித்தவராக ஆனால் தகவல்களின் பிரமாண்டக் குழுமத்தினுள் பலராகவும் நிறுத்தப் படுகிறார். அங்கிருக்கும் தோற்றங்கள் போலியல்லா தவையாக இருக்கின்ற
அதேவேளை மொத்த அனுப வமும் ஒரு கனவின் நிகழ்வு போலவும் உணரப்படுகிறது. ஆனால் அது கனவில்லை ஏனெனில் குறிப்பிட்ட கேளிக்கை நுகர்வாளனின் உழைப்பும் பணமும் அங்கு நிஜமாகவே உறிஞ்சப்படுகிறது.

மேலும் பார்ப்போமெனில் குறியீட்டியல், பொருளும் வெளியும், காட்சி ஊடகங்கள் மற்றும் வெகு ஜன ஊடகங்கள் மற்றும் எதார்த்தத்தின் கட்டமைவு போன்ற பல்வேறு குழுமங்களின் பலதரப்பட்ட சர்ச்சைமிக்க விவாதங்களுக்குள் அதீத உண்மை பற்றிய முக்கிய விடயங்கள் ஒழிந்திருக்கின்றன. அதீத உண்மையின் அடிப்படையாக போலிமை மற்றும் நகல் என்பவை திகழ்கின்றன. போலிமை என்பது உண்மையினதும், பிரதியீடுகளினதும் கலப்பு வகையாக உள்ளது. அதற்குள்ளிருக்கும் முந்திய முடிவினையும் பிந்திய ஆரம்பத்தினையும் கண்டுபிடி
த்துக் கூறிவிட முடியாது. நகல் என்பது மூல அசலின் உண்மைத் தன்மையற்ற பிரதியாக உள்ளது. Gilles Deleuze போன்றவர்களின் கூற்றுப்படி நகல் என்பது ஒன்றின் தோற்ற ஒற்றுமையற்ற விம்பம் ஆகும்.

பிந்திய முதலாளித்துவ நிலவரமானது நகல்மையின் பாரிய மீள் உற்பத்திக்களமாக விளங்குகிறது. அது உண்மையற்ற உலகொன்றுடனும் இன்மையின் சுதந்திர மிதப்புடனும் இருக்கிறது. புதிய ஊடகத் தொழில்நுட்பப் புரட்சியும் தொடர்பாடல் உற்பத்தியின் அதிகரிப்பும் முதலாளித்து வத்தினதும் நுகர்வுக் கலாசாரத்தினதும் எழுச்சியும் மேலைத்தேயச் சிந்தனையில் பிரதான ஸ்தானத்தை அடைந்தபோது பாரியளவான நகல்களின் மீள் உற்பத்திகளை மேற்கொள்ள குறிப்பிட்ட வர லாற்றுக் களமாற்றங்கள் அனுமதியளிக்கத் தொடங்கின. அதனால் குறிப்பிட்ட நிஜம் போன்ற உண்மைகளை போலி உண்மைகள் இடம்மாற்றின. நகல்களின் அசுரத்தனமான உற்பத்தியானது முன்பிருந்த நிஜம் போன்ற உண்மைகளின் தொடர்பினை முழுமையாகத் துண்டாடி விட்டன. த
ற்போது புழக்கத்திலிருக்கும் இந்த அசுர நகல்களைத்தான் அதீத உண்மைகள் என்கிறோம்.

மேலும் பார்க்குமிடத்து குறிகளின் ஒன்றிணைந்த பங்களிப்பினூடாக அர்த்தங்கள் கொண்டு வரப்ப டுகின்றன. பொருட்கள், பொருள் மீதான எண்ணம், சொற்கள் மற்றும் குறிகள் எல்லாமே அர்த்த வலைகளினுள் சிக்கிக் கிடக்கின்றன. ஒரு பொருளுக்கும் அங்கு சுட்டப்படுகின்ற காரணத்திற்குமிடை யிலான தொடர் பாடலினூடாக அப்பொருளிற்கான அர்த்தம் புரிந்து கொள்ளப்படக் கூடியதாயிருக் கிறது. அதாவது மனித சமுதாயத்தின் கருத்தமைப்பு உருவாக்கமானது சுயமான சுட்டுமுறைத் தன்மையின் மீதே நிறுவப்பட்டிருக்கிறது. ஆனால் சமூகம் எப்போதும் அறிவு மயமாக்கம் செய்யப்பட்ட அர்த்தங்களையோ அல்லது உலகம் மீதான ஒரு மொத்தத்துவப் புரிதலையோ தேடிக் கொண்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவே இருக்கும். மனிதன் தனக்குப் புறத்திலுள்ளவற்றை புரிந்து கொள்ள முயலுகையில் அவை என்ன குறிப்பீடு செய்கின்றன என்பதன் பிரகாரம் விளங்கிக் கொள்ளப்படுகின்றபோது குறிப்பிட்ட குறிப்பீட்டின் செயற்பாடானது உடனே குறிகளின் சுழற்சி காரணமாக மாற்றமடையக் கூடியதாகவுள்ளது. அது எப்போதும் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை உண்டாக்கிக்
கொண்டிருப்பதில்லை. மனித வாழ்வின் சிறு பகுதியையேனும் முழுமையாக விளங்கிக்கொள்ளச் சாத்தியமில்லாத நிலையில் மக்கள் உண்மையின் போலிமைகளினால் ஈர்க்கப்பட்டு வேறாகச் சிந்திக்கின்றனர். அல்லது அதீத உண்மையின் வழிபாட்டிலுள்ளனர். இதன் கருத்தானது உலகம் போலியானதாக மாறிவருகின்றதென்பதல்ல ஆனால் வேகமாக வளர்ச்சியடையும் விசாலமான சமுதாய அமைப்பானது மேம்போக்காக எல்லாவற்றையும் உண்மையென எண்ணிக்கொண்டு விடும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றது என்பதாகும். இந்தப் பாதுகாப்பற்ற ஆட்டங்கண்ட நிலையானது அச்சங்கொள்ளச் செய்கிறது. இந்நிலையில்தான் உண்மை இறந்து விட்டது என்கிறோம். இந்த அடிப்படைக் கட்டுமானத்தில் நிறுவப்பட்டு வரும் மானுட வாழ்வானது எதனை நோக்கிச் செல்கிறது?
-------------------------------------------------------------------------------------------------


சோனக தேசம் : அறிமுகக் குறிப்புகள்





சோனக தேசம் பற்றி பெருவெளி முஸ்லிம் தேச கதையாடலுக்கான ஒன்று கூடல் நிகழ்வில்
ஏ.பீ.எம். இத்ரீஸ் நழீமி ஆற்றிய உரை


ம்பிக்கையை இதுவரைக்கும் நாம் உணர்ச்சி யாகவும், பக்தியாகவும்தான் பார்த்து வந்திருக்கி
றோம். நவீனத்துவம் அதனை மூட நம்பிக்கையாக சுருக்கியிருக்கிறது. அல்லது உதறித்தள்ளிவிட்டது என்று கூறலாம். ஆனால் நம்பிக்கையை ஒரு அறிவாகவும் பார்க்கவேண்டி யிருக்கிறது. நம்பிக்கை உண்மையில் பக்தி மாத்திரமல்ல அது ஒரு அறிவும்தான். அது ஒரு உணர்வும்தான். அறிவினால் ஏற்படுகின்ற உணர்வு, அல்லது உணர்வினால் ஏற்படுகின்ற அறிவு. உணர்ச்சியையும் அறிவையும் பிரித்துப் பார்க்க முடியாது. உணர்ச்சிகளின் கொந்த ளிப்பில் இருந்து ஒரு வேறுபடுத்தி அறிவை பிரிக்க முடியாது அப்படிப்பிரிப்பது ஈவிரக்க மற்ற செயல். இதனைத்தான் நவீனத்துவம் செய்திருக்கிறது. சுனாமிக்குப் பின்னர் அண்மையில் சி.என்.என் செய்தியாளர் ஒருவன் தன் ஆய்வுக்காக அமெரிக்காவில் வயோதிபர் இல்லத்தை எடுத்து ஒரு பூனையை வைத்து ஆராய்ச்சி செய்திருக் கிறார். அங்கு 21 பேர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மரணிப்பதற்கு 4 நாட்களுக்கு முன்னர் அவர்களின் கட்டிலுக்கடியில் அப்பூனை போய் படுத்துக்கொள்ளும். இங்கு மலக்குள் மௌத் வருவது மனிதனுக்குத் தெரியாது பூனைக்குத் தெரியும். நம் நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது எந்தவொரு பூனையும் இறக்கவில்லை மனிதனுடைய கட்டுப்பாட்டில் இருந்தவற்றைத் தவிர. குகைவாசிகள் 6, 7 300 ஆண்டுகளாக குகைக்குள் உறங்கிய போது அவர்களுடைய நாய் முன்னங்கால்களை விரித்தவண்ணம் இருந்ததாக அல்குர்ஆன் கூறுகிறது. நவீனத்துவ வாசிப்பு முறையை பின்பற்றி கலாநிதி ஹூசைன் ஸஹாபி நாய் ஆராய்ச்சி தேவையில்லை என்று சொன்னார். சுனாமிக்குப் பிறகு இப்போது நான் சொல்கிறேன் நாய் ஆராய்ச்சி தேவை. அதாவது அரசனின் காவலர்கள், துப்புத் துலக்கும் அதிகாரிகள் தேடி வருகிறார்கள் என்பதை தொலைவில் இருந்தே நாய் உணர்ந்து குரைப்பதன் ஊடாக குகையில் தூங்கிக் கொண்டிருக்கும் தோழர்கள் தப்பிக்கலாம் இல்லையா? எனவே என்னுடைய தாயார் எப்போதும் நான் வருகின்றபோது காகம் அந்த மரத்திலும் இந்த மரத்திலும் கரைந்ததாக மாறி மாறி குறிப்பிடுவார். நான் இதை பல முறை மூட நம்பிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறேன். சுனாமிக்குப் பிறகு இதனை மூட நம்பிக்கை யாக பார்க்க முடியாதுள்ளது.

மொழி என்பது என்ன? மேற்குலகம் கட்டமைத் திருப்பதுதான் மொழியா? உண்மையில் நாம் மொழியை கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. பெருவெளி அறிமுகக் கூட்டத்தில் அதன் செயற்பாட்டாளர்கள் குறிப்பிடும்போது நாம் சிங்களத்திலும் பெருவெளியை வெளியிடுவோம் என்று கூறினார்கள். உண்மையில் மொழி என்பதில் எங்களுடைய பார்வை வித்தியாசமானது ஒலிக்குறிப்புகள், சமிக்ஞைகள், சங்கேதங்கள், இடி மின்னல் எல்லாம் மொழிதான். அவற்றுக் கிடையே ''வானங்கள் பூமியில் உள்ளவை அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன. உரையாடு கின்றன, பேசுகின்றன'' என்று வருகிறது. ஹூத்ஹூத் பறவையோடு சுலைமான் நபி பேசியிருக் கிறார். எனவே அந்த ஒலி அமைப்புக்களை பிரித்தறிகின்ற ஆற்றல் அவருக்கிருக் கின்றது. நவீன மொழியியல் கோட்பாடுகளுக்கு நாம் (நவீனத்துவத்தின் கல்விமுறைக்குட்பட்டது) ஆட்பட்டு மொழி பற்றிய இஸ்லாமியக் கோட்பாட்டை அல்லது எங்களுடைய கீழைத்தேய பண்பாட்டு வரைவிலக் கணத்தை மறந்து விட்டோம் அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டோம்.'வெறிச்சோடிக் கிடந்தது' என்றால் என்ன பொருள்? அவ்விடத்தில் ஒரு கிளியுமில்லை, காகமுமில்லை. எந்தவொரு சத்தமு மில்லை, மரம் மட்டையுமில்லை என்பதா? எனவே அது காய்ந்துபோய்க் கிடந்தது என்பதா? இல்லை சூழலோடு இணைந்த அங்கு பல்வேறு ஒலிகள் முறைகள் கொண்ட வாழ்க்கை முறையைத்தான் இஸ்லாம் போதிக் கிறது இதிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்துத்தான் மேற்குலகம் தனது ஆய்வை மேற்கொண்டிருக்கிறது.

ஒரு ஆணும் பெண்ணும் சேரும் போது குழந்தை பிறக்கிறது. அதேபோன்று நியூட்டனும் புரட்டனும் சேரும் போது அணுக்கரு உருவாகின்றது. இதே மாதிரித்தான் மண்ணால் படைக்கப்பட்ட மனி தனும் ஒளியால் படைக்கப்பட்ட அமரரும் இணையும் போது ஐன்ஸ்டீன் சொல்வது போன்று இராட்சத பெருவெளிகளைத் தாண்டிச் செல்லக்கூடிய அபார ஆற்றல் மனிதனுக்குக் கிடைக்கிறது. இதனால் தான் நாங் கள் மிஃராஜை ஏற்றுக் கொள்கிறோம். நம்புகிறோம். விசுவாசிக்கிறோம். ஐன்ஸ்டீன் இதனை நிரூபிக்கிறார். அத்தகைய ஒரு ஒளி வேகத்தில் இந்த பூமியை ஊடுருவ முடியமாக இருந்தால் ஏற்கனவே மறைந்து போன லட்ச கோடிக்கணக்கான உயிரினங்களை அப்படியே உயிர்ப்பிக்க முடியும் என ஐன்ஸ்டீன் குறிப்பிடுகிறார். எனவே மிஃராஜை போன்ற ஒரு செயற்பாடு தான் ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து இந்த பூலோகத்திற்கு வாழ்வதற்காக அனுப்பப் பட்ட செய்தி பற்றி நம்பிக்கை யாகும். இது வழிவழியாக காலம் காலமாக மக்களி டையே இருக்கிறது. அவர் வேமாக வருவதன் ஊடாக மலக்கு அவரை சுமந்து வந்திருக்கலாம். புறாக் என்பது பர்க்குன் - மின்னல் என்ற சொல்லால் ஆக்கப்பட்ட ஒரு கருவி. அப்படி வருகின்ற போது அங்கு அப்படி ஒரு குழி உருவாகின்றது. அவர் மண்ணால் படைக்கப் பட்டவர். மண்ணோடு மண் இணைவதால் ஒரு தாக்க விளைவு ஏற்படுகிறது. நவீன புவியியலிலே சொல்கிறார்கள் பாறையிலே பாரம் ஏற்றிவைக்கப்பட்டி ருப்பதால் அருகில் உள்ள பகுதி மேல் உந்தலினால் வளர்கிறது என்று. எனவே சொர்க்கத்தின் சூழலைப் பற்றி மரங்கள் ஓடக்கூடிய நதிகள், பூஞ்சோலைகள் என்பதெல் லாம் பற்றி குர்ஆன் கூறு கிறது. இத்தகைய காலநிலைகள் எல்லாமே ஒன்று சேரக்கூடிய இடமாகத்தான் இலங்கை காணப் படுகின்றது. மற்ற நாடுகளில் நான்கு அல்லது ஆறு மாதங்களுக்ககொரு முறைதான் இவ் வகையான காலநிலையை அனுபவிக்க முடியும். ஆனால் ஒரே நாளில் பல்வேறு காலநிலைகளை அனுபவிக்கக் கூடிய நாடு இலங்கைதான் என்று பல புவியியல் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இங்கு வந்து ஆய்வும் செய்திருக்கிறார்கள்.

குர்ஆனை திருப்பி வாசிப்போம். தட்டினால் சத்தமெழுப்பக்கூடிய கரிய நிற மண்ணில் இருந்தே ஆதம் படைக்கப்பட்டார். ஆக முதல் மனிதர் ஒரு கறுப்பராகத்தான் இருந்திருக்க முடியும். வெள்ளைக் குரங்குதான் இதுவரைக்கும் அறிவு கூடிய குரங்கென்று பகுத்தறிவும் இந்த நவீனத்துவம் நமக்கு கற்றுத்தந்திருக்கிறது. இப்பொழுது பாருங்கள் நவீனத்துவம் எவ்வளவு பெரிய அழிப்பை எமக்குள் செய்திருக்கிறது.

அந்தப் பாதச்சுவடு இவ்வழியில் பாதுகாக்கப் பட்டிருக்கிறது. முதல் மனிதன் வாழ்ந்த சூழல் சொர்க் கத்திற்கு இணையான அல்லது அதற்குச் சமதையான சூழலாக இருக்க வேண்டும் என்பதுதானே யதார்த்தம். உலக வரலாற்றில் எல்லோருமே அந்த பாதத்தை தரிசிப்ப தற்காக இந்த நாட்டைநோக்கி வந்திருக்கிறார்கள். அதேமாதிரி பாவாணர் என்பவரும் ஐராவதம் முதலியார் சேர் ஐயங்கார் என்ப வரும் மொழியியல் ஆராய்ச்சிகளை செய்திருக்கிறார்கள். இவர்கள் உலகின் மூத்த மொழி எது என் பதை 35 ஆண்டு ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருக்கிறார்கள். இப்பொழுது நடத்திய ஆய்வுகளின் விளைவாக தமிழுக்கு முந்திய ஒரு மொழி இருந்ததாக குறிப்பிடுகிறார்கள். அந்த மொழி வினை யெச்சம், வினைத் தொகைகளைக் கொண்டது முற்றுப்பெற்ற வாக்கியங்களா கவோ இருக்க வில்லை. அதை கலாநிதி கா.சிவத்தம்பி அவர்கள் ‘பண்டைய தமிழ் சமூகத்தில் அரங்கியல்’ என்ற நூலிலே அந்தமொழி தென்னிலங்கை முஸ்லிம் களிடத்திலே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்.

சுவனம் என்பது பழைய சொல்லாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் நாம் பார்க்கின்ற போது அய்ன, எய்ன, எனத்தியன், வாற, போற, செல்லிய, சென்ன எல்லாம் சோனக மக்களுடைய மொழியாக இருக் கிறது. தமிழ் மேலாதிக்கத்திற்கு அல்லது இந்திய இலக்கண ஆட்சிக்கு நாம் உட்பட்டதால் எங்களுடை பூர்வீக மொழி யை வடக்கு கிழக்கு மக்கள் இழந்து அவர்களுடைய மொழிக்கு ஆட்பட்டிருக்கிறோம். இன்றும் தென்னிலங்கை மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு பகுதியை நாம் நோக்கிச் செல்கின்றபோது அந்த பூர்வீக மொழி இன்னும் வாழ்கின்றது என்பதுதான் உண்மையாகும். இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது எழுதப்பட்ட உலக வரலாறு என்பது கி.மு. 4ம் நூற்றா ண்டில்தான் தொடங்குகிறது. ஆனால் வரலாறு எல்லாமே வாய்மொழிக் கதைகள்தான். வாய்மொழி ஊடாகத் தான் வரலாறு உலகத்திற்கு வந்திருக்க வேண்டும். இந்த வகையில் ஆதம் (அலை) குழந்தைகளை வைத்துக் கொண்டு நானும் உம்மாவும் இப்படியான காலநிலை, இதே நதிகள் மரங்கள் உள்ள இடத்திலே வசித்தோம். அங்கு தடுக்கப்பட்ட கனியை உண்டோம். அதனால் இந்த உலகில் வாழ்வதற் காக அனுப்பப் பட்டோம் எங்களுக்கு கட்டளைகள் வழங்கப்பட்டன என்று சொல்லியிருப்பார்கள். உலகத்தில் தோன்றிய எல்லா தீர்க்க தரிசிகளையும் நபிமார்களையும் மனித சமூகம் கடவுள் களாகவும் வரம் தருபவர்களாகவும் தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் பார்த்திருக்கிறது. அல்லது மாற்றியமைத்திருக்கிறது. அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களையும் ஆயுதங்களை யும் உலோகங்களையும் கூட வணங்கப்படும் பொருட்களாக சிலைகளாக ஆக்கியிருக்கிறாரகள். அந்த வரிசையில் ஆதம் நபியும் விதிவிலக்கல்ல அவரும் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறார்.

எனவே முதலாவது மனிதனின் முதல் மொழி சோனக மொழிதான் என்றால் அந்த மொழியில் உள்ள மனிதன் சுவனன் அல்லது சுவன் சுவன என்று இருந்திருக்கலாம். அதிலிருந்து சிவன் - ஒளி என்பது வந்திருக்கலாம் சிவன் - சமனலதெவியோ என்பது தோன்றியிருக்கலாம். இது ஒரு படிமுறை.

இலங்கையின் ஆதிக்குடிகள் யார் என்ற கேள்வியை எழுப்பிச் சிந்திக்கின்ற போது இயக்கர் நாகர் என்பதே பெரும்பாலானவர்களின் ஏக கருத்தாக இருக்கிறது. ஆனால் வரலாற்றில் நாகர் பற்றிப் பேசப்படுவதே இல்லை. மணிமேகலையில் ஆபுத்திரன் மணிமேகலையை அடைய முடியாமல் கனவு காண்கிறான். அந்த கனவிலே அவனது மூதாதையர்கள் நாகரின் வழிவந்தவர்கள் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதிலே நாகர் என்போர் ஓரிறைக் கொள்கை உடையவர்கள். இவர்கள் செம்பு, பித்தளை, நாகம் என்ற உலோக உற்பத்தியில் முன்னிலை பெற்றார் கள் இவர்கள் பெரும் வீதிகள் கொண்ட கோட்டை கொத்தளங்களைக் கொண்ட ஒரு நாகரிகத்தை உருவாக்கினார்கள். நாகர்களுக்கு களனியிலும் சாவகச்சேரியிலும் இரண்டு இராச்சியங்கள் இருந்ததாக பரணவிதாரண உட்பட பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாகர் வாழ்ந்த இடங்களில் கடைசியாக அகழ்வாராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டபோது ஈமத்தாழிகள் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன. எனவே ஈமத்தாழிகள் யார் பயன் படுத்துவது? கடவுளின் வெளிப்பாடாக வருகின்ற வேதங்களில்தான் காபிளையும் ஹாபிளையும் அடக்கம் செய்கின்ற முறையை இறைவன் கற்றுக் கொடுக்கின்றான். எனவே அடக்கம் செய்கின்ற முறை யாரிடம் இருக்கும் எரிப்பவர்களிடம் இருக்க முடியுமா? எனவே நாகர் களிடம் அது இருந்திருக்கிறது. எல்லா இலங்கை முஸ்லிம்களும் அறபிகளின் வழித்தோன்றல்கள் என்றால் நம்முடைய அனைத்து நடவடிக்கைகளும் முகபாவங்கள் நடைமுறைகள் எல்லாமே அறபிகளைப் போன்று இருக்க வேண்டும். இதற்காக அறபிகள் வர வில்லை என்று நான் சொல்லவில்லை. அறபிகள் வந்தது பத்து வீதம் அல்லது இருபது வீதமாக இருக்கலாம். ஏற்கனவே ஓரிறைக் கொள்கைகளோடு இருந்த காரணத்தினால்தான் புதிய நபி, புதிய சீர்த்திருத்தம் ஏக இறைவனின் புதிய அல்லது இற்றைப்படுத்தப்பட்ட கட்டளைகள் அல்லது கருத்துக் களோடு வந்திருக்கிறார் என்ற காரணத்தினால் இலங்கை நாகர்கள் அந்த கொள்கையை ஏற்றிருக்கி றார்கள். இதனால்தனான் இஸ்லாம் சமயம் உறுதிப்படுத்தப்பட்ட போது உள்ளக இனக்குழும மொழி யாக அறபு, அறபுத்தமிழ் என்ற மொழியை பயன்படுத்தி விட்டு இஸ்லாம் நிலைபெற்றதன் பின்பு அந்த மொழியை கைவிட்டு தமது ஆதிமொழிக்கு திரும்பியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

நாகர்கள் கடைசியாக வாழ்ந்த இடங்களில் போர்த்துக்கீசர்கள் பன்றியை வெட்டி கிணறுகளில் போட் டனர். இவர்கள் யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோயில் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளி யேற்றியதை யாழ்ப்பாண வைபவ மாலை குறிப் பிடுகின்றது. ஐந்து நூற்றாண்டுக்கு முன்னர் பல வந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் - கடைசியாக வாழ்ந்தவர்கள் சோனக முஸ்லிம்களே.

இங்கு நாகர் என்பதற்கு முன்னொட்டாக நாம் சுவன அல்லது சோ - சுவ - நாகர, சோனாகர், சோனகர், சோனி என்பவற்றை குறிப்பிடலாம். எனவே இலங்கையில் 40 முழ அவ்லியா 20 முழு அவ்லியா அவர்கள் வளர்த்த ஒன்பது முழக் கிளி போன்ற நம்பிக்கைகள் ஐதீகங்கள் இருக்கின்றன. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல நம்பிக்கையை ஒரு அறிவாகவும் பார்க்கவேண்டியி ருக்கிறது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு என்று திருக்குறள் கூறுகின்றது. இக்குறளின் கருத்து எங்கிருந்து வந்தது ‘அல்லமா ஆதமு அஸ்மாஅக் குல்லஹா’ ஆதமுக்கு பகவான் என்பது ஒரு பெயர் ஆதம் என்ற மனிதனுக்கு அல்லாஹ் எழுத்துக்களை (அகர முதல்களை) கற்றுக் கொடுத்தான். ஆதம் என்ற சொற்பிரயோகம் அறபு மொழி அல்ல. அது புதிய மொழி சொற் சுருக்கமும் பொருட்செறிவும் கொண்ட புதிய மொழி எனவே தமிழ் அல்லது சோனக மொழிதான் மிகப்பழைய மொழியாக இருக்கிறது. இந்த மொழியில் உள்ள கருத்து 6ம் நூற்றாண்டில் இறங்கிய அல்குர்ஆனின் கருத்துக்களோடு எப்படி ஒத்துப்போவது? யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சிந்தனை எல்லா விசுவாசிகளும் சகோதரர்களே உலக மக்கள் எல்லோரும் ஒரு உம்மத்தே போன்ற அல்குர்ஆன் வசனத்தோடு ஒத்துச் செல்கிறது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஏகத்துவ சிந்தனை இந்துமதத்தில் எவ்வாறு வரமுடியும். எனவே ஒரு இறைத்தொடர்பு இறைவெளிப்பாடு இப்பிராந்தியத்தில் இருக்க வேண்டும் எனவே இந்த பிராந்தியத்திற்கும் இந்த நாட்டிற்கும் நாங்கள் அந்நியர்கள் அல்ல.

முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்ற குற்றச்சாட்டும் இங்கிருக்கிறது. இரத்தினக்கல் அகழ்ந்தெடுப்பு, விவசாயம், அலையோடு போராடுகின்ற மீனவத் தொழிற்துறைகளில் தமிழர்களும் சிங்களவர்களும் சுதந்திரத்திற்கு முன்னர் பலவீனர்களாகவே இருந்தார்கள். தற்போது படித்து முன்னேறி வருகிறார்கள்.

ஆனால் இந்த நாட்டில் இன்றுவரை இத்தொழில் களை நேர்த்தியாகச் செய்பவர்கள் யாரென்றால் அது சோனக முஸ்லிம்களே. இத்தொழில்களை வந்தேறு குடிக ளுக்கு செய்ய முடியாது. அவர்கள் விஜயனின் ஊடாக வந்தவர்களாகவும் திராவிடர்களின் வழி வந்தவர் களாகவும் அவர்களுடைய ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு நிலைத்து வாழ்ந்ததன் காரணமாக இத்தொழில்களில் பராக் கிரமசாலிகளாக இருக்கிறோம். சிங்கள மன்னர் களின் கோட்டைகளில் இருந்து நீர்ப்பாசனக் கால் வாய்கள் அமைத்துக் கொடுத்தவர்களாக நாங்கள்தான் இருக்கி றோம். எனவே வந்தேறு குடிகளுக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது?

அதேநேரம் எங்களிடம் அடிமை மனப்பாங்கும் இல்லை, ஆதிக்க மனப்பாங்குமில்லை இவர்கள் இரண்டு பேருக்கும் அடிமை மனப்பாங்கும் ஆதிக்க மனப்பாங்கும் இருக்கிறது. இவர்கள்தான் இந் நாட்டின் பூமி புத்ரயாக இருந்தால், ஹெல உருமயவாக இருந்தால் நாட்டின் ஏன் எல்லா இடங் களிலும் இருக்கக்கூடாது. நாங்கள் நாட்டின் எல்லா இடங்களிலும் வாழ்கிறோம். இதை நாங்கள் முன்னர் அரசியல் பலவீனமாகப் பார்த்தோம். இப்போது அப்படிப் பார்ப்பதற்கு எந்த அவசியமும் கிடையாது. குடும்பிமலையைப் பிடித்ததன் பிறகு, வெலிஓய என்று கிழக்கிலே ஒரு மாகாணத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் அவர்கள்தான் என்றால் இப்போது வந்து ஏன் தடுமாற வேண்டும்? இவர்கள் எங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். பிரித்திருக் கிறார்கள், சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள். போர்த்துக்கேய ஒல்லாந்தர் படையெடுப்புக்களால் எங்களது கரையோரப் பிரதேசங்கள் பாதிப்புக்குள்ளாகி மொத்தமாக எங்களது சின்னங்கள், மரபுகள், பண்பாடுகள் எல்லாமே அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றன.

ஒளவையார் என்ற சொல்லை நான் தேடிப் பார்த்தேன். இதற்கு முதற்பெண், தவப்பெண், கடவுளால் அருளப்பட்ட பெண் என்றெல்லாம் இருக்கிறது. இந்த இடத்தில் ஹவ்வா என்ற சொல்லை இணைத்துப் பாருங்கள். ஒளவையாருடைய ஆத்திசூடி, கொன்றை வேந்தனில் உள்ள கருத்துக்கள் இஸ்லாமிய கருத்துக்களுடன் ஒத்துச் செல்கின்றன. இந்தநாட்டின் எம்பக்க தேவாலயத்தில் தொடங்கி ருவன் வெலிசாய ஊடாக பொலநறுவை யுகம் வரைக்கும் நான் சென்ற மாதம் ஒரு பிரயாணத்தில் ஈடுபட்டபோது றசூலுள்ளா வின் வாப்பா எல்லா தேவாலங்களிலும் இருக்கிறார். இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். எம்பக்க தேவாலயத்தில் இருந்த சிங்கள விபரிப்பாளர் கூறினார், ‘விஷ்ணு பகத்தின் மகன் மகாமத் ஒளி பொருந்திய குதிரையில் ஏழு வானங்களையும் வலம்வருவார்’ என்று. ‘நான் புத்தரின் பக்கத்தில் தாடி வைத்த தலைப்பாகை கட்டிய ஒரு முஸ்லிம் சிலை எப்படி வந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர் சொன்னார். ‘இது சாம அதர்வ ரிக் யசுர் வேதங்களில் குறிப்பிடப்பட்டிரு;கின்ற செய்தி. கோயில் களை தேவாலயங்களை முன்னைய வேதங்களின் தீர்க்க தரிசனங்களிலிருந்துதான் கட்டியெழுப்பியிருக்கிறார்கள்’. இப்போது அவர்கள் சோமஹிமிக்குப் பின்னர் அதனை பௌத்த தேவலாயமாக மாற்றி வருகிறார்கள். ஓரிடத்திலே விஷ்ணு என்பது அல்லாஹ், பகத் என்பது அப்துல்லாஹ், அப்துல்லாஹ்வின் மகன் மகாமத் என்பது றசூலுள்ளாஹ் ஒளி பொருந்திய குதிரையில் மிஃராஜ் செல்வார். இது எப்படி பௌத்த ஆலயங்களுக் குள் வரமுடியும். எனவே நாங்கள் எங்களுடைய வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய முக்கிய மான கட்டத்தில் இருக்கிறோம்.

இந்த நாட்டிற்கும் இந்தியாவுக்கும் இடப்பட்ட தொரு பெயர்தான் லெமூரியா கண்டம். லெமூரியா என்பதை பிரித்துப் பாருங்கள். மூவர் என்பதை, மூவ என்பதை, ஏரியா என்பதை பிரித்துப் பாருங்கள் எனவே மூவஸ் - முஸ்லிம் பண்பாட்டைக் கொண்டவர்கள் சோன கர்கள் பெருவாரியாக வாழ்ந்திருக் கிறார்கள். இவர்களு டைய கண்டமாக இது வர்ணிக்கப்பட்டிருக்கின்றது. இது எப்படி வர்ணிக்கப்பட முடியும். வரலாறெல்லாம் புனைவுகள்தான் என்று ஒரு நண்பர் கூறினார். நான் கேட்கிறேன் சிங்கத் திற்கு பிள்ளை கிடைத்தது என்ற மகாவம்சத்தின் புனைவு வரலாற்றை உங்களால் நம்ப முடியு மென்றால் இறை வெளிப்பாட்டினடியாக வரும் இந்த வரலாற்றை எப்படி புனைவு என்று கூற முடியும்? எல்லாம் புனைவு என்றால் ‘அபே ரட்ட’ என்ற சொல்லை அவர்கள் கைவிட வேண்டும். அப்போது நாங்களும் எங்கள் புனைவு வரலாற்றை கைவிடுகிறோம் தயாரா?

அறபிகள் வந்து உலக வரலாற்றை எழுதுவதற்கான பொறுப்பை எடுக்கிறார்கள். அவர்கள் தங்களு டைய பிராந்தியத்தை சேர்ந்த இருபத்தைந்து நபிமார்களில் இருபத்து நான்கு பேரின் பெயர்களை மட்டும் ஆராய்ந்து விட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு இலங்கையின் வரலாற்றையோ இந்தியாவின் பூர்வீகத்தையோ ஆராய வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. ஏன் இல்லை 130 பக்கங்களில் வரலாற்றாசியர் தபரி, செரந்தீபில் ஆதம் இறங்கினார் என்று கூறிவிட்டு முடித்து விடுகிறார். ஆதம் (அலை) அவர்களின் மக்களான காபிள், ஹாபிழ் கல்லறையை எடுத்துப் பாருங்கள். அது தென்னிந்தியாவில் இராமேஸ்வரம் ரயில்வே நிலையத்திலிருந்து மிக கிட்டிய தூரத்திலிருக்கிறது. இவர்களின் கல்லறை தென்னிந்தி யாவுக்கு எப்படி வந்தது? இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் 18ற்கு மேற்பட்ட நூஹ் நபி கப்பல் சிந்து, நூஹ் நபி காப்பியம் என்பன இருக்கிறன. நூஹ் நபி கப்பல் கட்டுவதற்கு பயன்படுத்திய மரங்கள் இந்தி யாவில் இருந்து எடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. மகான் நூஹ்தான் மனுசாஸ்திரமாக சுருங்கி அவருடைய மக்களுக்கு இறக்கப்பட்ட வேதங்கள்தான் சாம, ரிக் யசுர், அதர்வ வேதங்கள். ஆனால் உலக வரலாற்றை எழுதுகின்றபோது தமக்கு அருகில் இருந்தவர்களின் வரலாற்றை மட்டுந்தான் எழுதினார்கன். இந்தியாவில் தீர்க்க தரிசிகள் வந்ததைப் பற்றியோ, சீனாவில் தீர்க்க தரிசிகள் வந்ததைப் பற்றியோ அவர்கள் குறிப்பிட வில்லை.

சோனக தேசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. முஸ்லீம் பூர்வீகத்தில் இந்நாட்டுக்கு நாங்கள்தான் முதலாவது அருகதையுடையவர்கள் அடுத்தவர்கள் பிரிந்து விட்டவர்கள். இதனால் எங்களிடம் காலில் விழுந்து கும்பிடுகின்ற அடிமை மனப்பாங்கு மின்மை ஆதிக்க மனப்பாங்கு மில்லை.

இந்த ஆய்வுத்தொடர் சோனக தேசத்தை எழுதிய மருதூர் பஷீதின் தொடர்ச்சியாகவே இன்ற பல தளங்களில் விரிந்து செல்கின்றது. எனது நீண்ட ஆய்வில் கிடைத்த சில முற்குறிப்புகளே இவை.



-------------------------------------------------------------------------------------------------
போரும் ஆக்கிரமிப்பும்:
வங்குரோத்தின் முக மூடியா? / இனவெறியின் மகிழ்ப்பா?


- றுவைபி அர்மான்

1956ல் SWRD பண்டாரநாயக்காவை பௌத்த மதகுருக்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் எனும் பெரும்படையாகிய பஞ்சமகாபடையணி ஆட்சியதி காரத்திற்கு கொண்டு வந்தது. ஆனால் இன்றைய புதிய பஞ்சமகா படையணி கிழக்கு மாகாணம் முழுவதையும் சிங்களமயமாக்கம் செய்யும் கொடிய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. சராசரியான கவனங்களுக்குப் புலப்படாத தந்திரோபாயமான முறையில் கிழக்கில் குடிகொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் அந்தப் புதிய ஐம்பெரும் படைகளாவன கடும்போக்கு பௌத்த மதகுருக் கள், பாதுகாப்புத் தரப்பு, அரச நிர்வாகத் தரப்பு, அரசியல் வாதிகள் மற்றும் பெரும் வர்த்தக முதலைகளுமாவர்.

D.B.S. ஜெயராஜ் அவர்களின் Hidden demographic change in Trinco எனும் கட்டுரையில் வருகின்ற தகவல்களின் படி 2001 ல் இடம்பெற்ற தேசிய குடிசனக் கணக்கெடுப்பானது வடக்கு மற்றும் கிழக் கிலுள்ள எட்டு மாவட்டங்களில் இடம்பெறவில்லை. அதன் காரணமாக மிகச் சரியான சனத் தொகைக் கணப்கெடுப்பானது கிடைக்கவில்லை. 2006 ல் மாவட்ட கச்சேரிகளால் வழங்கப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஒரு கணக்கெடுப்பு அட்டவணைப்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் 1519771 பேர்களில் தமிழர்கள் 674193, முஸ்லிம்கள் 573258, சிங்களவர்கள் 265469 மற்றும் ஏனையவர்கள் 6851 பேர்களுமாவர். திருகோணமலையிலுள்ள 412547 மக்களில் 168696 பேர் முஸ்லிம்கள்.143282 பேர் தமிழர்கள்.100454 பேர் சிங்களவர்கள் மற்றும் 115 பேர் ஏனையவர்களுமாவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 565780 மக்கள் உள்ளனர். இவர்களில் 415217 தமிழர்களும், 145349 முஸ்லிம்களும், 1246 சிங்களவர்களும், 3968 ஏனைய வர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 629644 மக்கள் உள்ளனர். அவர்களில் 259798 முஸ்லிம்களும் 251166 சிங்களவர்களும் 115912 தமிழர்களும் 2768 ஏனையவர்களும் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2007ல் அரசின் கிழக்கு மீட்புக்குப் பிறகு அரச குடிசன புள்ளி விபரவியல் திணைக் களத்தினால் பிரசுரிக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்கள் 84766, தமிழர்கள் 95652, முஸ்லிம்கள் 151692 பேர் எனக்க கணக்கிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் 2397, தமிழர்கள் 381841, முஸ்லிம்கள் 128964பேர். அம்பாரை மாவட்டத்தில் சிங்களவர்கள் 228938, தமிழர்கள் 111948, முஸ்லிம்கள் 268630பேர்களுமாவர். இதன் அடிப்படையில் 40155 மேலதிகமான தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் 40.2வீதத்தில் உள்ளனர். முஸ்லிம்கள் 39.6வீதத்தில் உள்ளனர். சிங்களவர்கள் 19வீதத்தில் உள்ளனர். இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும் முஸ்லிம்களும் கடந்த வருடம் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிய நிலையில் இந்தப் புள்ளிவிபரம் மேலும் மாற்றமடையக் கூடியதாயிருக்கிறது.

தற்போதையச் சூழலில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை தனிப்பெரும்பான்மை இனக்குழும மாக உருவாக்குவதற்கான திரைமறைவு நிகழ்ச்சி நிரலொன்று தெளிவாகவே செயற்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தின் பிரகாரம் திருகோணமலை மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மை மேலாண்மையை உருவாக்கும் நோக்கில் ஆண்டாண்டு காலமாக சிங்கள மக்களின் தொகையானது கூட்டப்பட்டு வருகிறது. இவ்வேலைத்திட்டமானது இப்போது மட்டக்களப்பு மாவட்ட த்திலும் குறிப்பிடக்கூடியளவு இடம்பெறத் தொடங்கியுள்ளது. திருகோணமலையை விட்டு சிறு பான்மையினரை விரட்டும் நோக்கில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் படிப் படியாக அதிகரித்த நிலையிலுள்ளன. இம்மாகாணத்திலுள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுடைய பொருளாதார உற்பத்தி மையங்கள் கணிப்பிடப்பட்ட முறையில் மட்டுப்படுத்தப்படுகின்ற அதே வேளை சிங்கள மக்களின் பொருளாதார நலன்களுக்கு அரச அனுசரணையும் வரப்பிரசாதங்களும் வழங்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

குறிப்பிட்ட பிரதேசமொன்றில் பல நூற்றாண்டு காலமாக வாழ்கின்ற இனக்குழுமங்கள் வரலாற்று வழிப்பழக்க அடிப்படையில் அப்பிரதேசத்தினை தமது பிரத்தியேகமான பாரம்பரிய நிலமாகக் கருத முனைகின்றனர். ஆயினும் அப்பிராந்தியம் மீதான அதிகார பூர்வ உரிமையினை அவர்கள் இதன் மூலம் பெற்றுவிட முடிவதில்லை. இலங்கையில் எல்லா இனக்குழுமங்களும் எல்லாப் பிரதேசங்க ளிலும் சிதறி வாழ்வது கண்கூடாகும். இந்த இனக்குழுமச் சிதறுகை மேம்போக்கான சனத்தொகை விகிதாசாரத்தில் குறிப்பிடும்படியான தாக்கத்தினை ஏற்படுத்துவதில்லை. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிராந்திய ரீதியிலான பார்வையில் பெரும் பான்மையாகக் காணப்படுகின்றனர். இது இப்பிராந்திய மக்களின் மனங்களில் மொழி அடிப்படையி லான பிரதேசம் சார்ந்த மேலாண்மை உளவியலொன்றைத் தோற்றுவிப்பதற்கு காரணமாகப் போய் விட்டது.

போர் தொடங்கி மக்கள் இடம்பெயர்வதற்கு முந்திய காலம் வரை மூன்றில் இரண்டு வீத தமிழர்கள் இந்த இரு மாகாணங்களிலும் வாழ்ந்திட மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் கிழக்கில் வாழ்கின்றனர். முழுநாட்டிலும் பெரும்பான்மையாகவிருக்கும் சிங்களவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மை யினராக உள்ளனர். தமிழ் அரசியல் பெருங்கதையாடலின் தாரக மந்திரமான ''தமிழ்பேசும் மக்களின் மரபு வழித்தாயகம்'' எனும் எண்ணக்கருவானது வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் ஓருடலாக வடிவமைத்து ''தமிழ் பேசுகின்ற'' எனும் பதத்தினுள் பிறிதான இனக்குழுமமான முஸ்லிம் களும் மொழி அடிப்படையில் இணைக்கப் பட்டனர். ஆனால் பிறகு விடுதலைப் போராட்ட மானது தமிழர்களுக்கு மட்டுமேயான போராட்டமாகவும் முஸ்லிம்கள் நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசியல் அபிலாசையினை நோக்கிய பயணமாகவும் மாறியபோது கரையோரத்தின் நீண்ட நிலப்பரப்பாக விருந்த மரபு வழித்தாயகத்தின் உடலெங்கும் ஓட்டைகளும் ஒடிசல்களும் விழத் தொடங்கியமை வேறுகதை. ஆனால் தற்போது நிகழும் சிங்கள மயமாக்கத்தின் அபாயச் சவால்களை சிறுபான்மைச் சமூகங்கள் தனித்தனியாக எதிர்கொள்வதிலுள்ள சிக்கல்கள் மிகுந்த இடர் குறித்து சில சமூக அக்கறையாளரகள் கரிசனை கொள்கின்றனர். இதன் மூலம் கடந்த காலங்களில் தமிழ் ஆயுத தாரிகள் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய துயர வடுக்களை மறதியாக விட்டு விடும் அளவுக்கு கூட அவர்களின் மனநிலையில் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. இவ்விடத்தில் இரு சிறுபான்மைத் தேசங்களினதும் அரசியல் அபிலாஷைகள் வழியே சிங்கள அதிகார மேலாண்மைக்கெதிரான தீர்வு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

தலைநகர் கொழும்பானது எல்லா இனமக்களும் வாழும் பொதுவான நகரமாக இருக்கலாம். தொழில் துறை விருத்தியினால் உலகில் பெருநகரங்கள் பெற்றுவிட்ட உலகளாவியதொரு பண்பாகவே தற்காலத்தில் இதனைக் கொள்ளமுடியும். ஆனால் துரதிஷ்டவசமாக இங்கு இது அரசியற் பிரச் சாரமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனை ஒரு காரணமாக முன்வைக்கும் சிங்களப் பேரினவாதம் அரச அனுசரணையுடன் சிங்கள மக்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேற்றுவதற்கான திட்டங்களில் வேகமாக ஈடுபட்டு வருகிறது. மிகவும் திட்டமிடப்பட்ட நவீன சூட்சும வழிகளில் சிங்கள மக்கள் தொகையினைப் பரம்பலடையச் செய்யும் தீவிர முயற்சிக்குட்பட்டிருக்கும் மாகாணங்களாக வடக்கும் கிழக்கும் திகழ்கின்றன. இதுவொரு இயல்பான அடிப்படையிலமைந்த மக்களுக்கிடையிலான செயற்பாடாக இடம்பெறுமானால் தவறில்லை. ஆனால் மாறாக செயற்கை யாக அரச பொறிமுறை நடவடிக்கையாக திட்டமிட்டு செயற்படுத்தப்படுவதனைக் கண்டு சிறு பான்மையினர் அச்சங்கொண்டுள்ளனர். இப்பிராந்தியத்திலுள்ள சிறுபான்மையினரின் அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உறுதிப்பாடுகளைத் துண்டு துண்டாக உடைத்து அவர்களை அரசியல் அந்தஸ்த்தற்றவர்களாக மாற்றும் பேரினவாத உள்நோக்கம் கொண்ட சதித்திட்டம் இதுவாகும். இப்பேரினவாத அரசியல் ஆக்கிரமிப்பினை சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் கூட்டாக எதிர்கொண்டு தடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற னர்.

பல தசாப்தங்கள் தொட்டு இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி அநேகமான சந்தர்ப்பங்களில் பேரினவாதிகளுக்குச் சாதகமாகவே முடிந்திருக்கிறது. இன்று முதல் நிலையாக அவர்களது திட்டம் யாதெனில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நீண்டகாலச் சதி மூலம் திருகோண மலையைச் சிங்கள மயமாக்கம் செய்தல், அல்லது சிங்களப் பெரும்பான்மையாக்கம் செய்தலாகும். இத்திட்டம் இன்று உயர்மட்ட பௌத்த மத குருக்கள், பாதுகாப்புத் தரப்பினர், சிங்கள உயர் அதிகாரி கள், சிங்கள வர்த்தகர்கள், மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் போன்றோரின் சிறப்புத் துணையுடன் நன்றாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இக்கட்டுரையின் நோக்கம் தமிழ் மரபுவழித்தாயகத்தை வலியுறுத்துவதோ அல்லது தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு சிங்கள மக்கள் குடிவருவதனை எதிர்ப்பதாகவோ பொருள் கொள்ளப்பட்டுவிடக் கூடாது. எந்த மக்களும் தாங்கள் விரும்பிய இடங்களில் வாழ்கின்ற சுதந்திரத்தினை எவரும் தடுத்துவிட முடியாது. அது வித்தியாசங்களின் கொண்டாட்டம் எனும் பண்புக்கு எதிரான செயற்பாடும் கூட. ஆனால் வல்லமையும் அதிகாரங்களும் கொண்ட அரசானது இராணுவ அரசியல் திட்டமிடலினூடாக சிறுபான்மை இருப்புக்களை காவு கொள்ள முனைவதனை அனுமதிக்கவே முடியாது. அதிலும் மிகக் கொடூரமான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு கிழக்கில் இவ் ஆக்கிர மிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றமை மிக இழிவானதாகும். இந்நிலையில் பெரும் அவலங்களுக்குள்ளாகியிருக்கும் கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் பேரினவாத அடக்கு முறைக்கு தீர்க்கமான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதுவித உதவியுமற்று நிர்க்கதி நிலையிலிருக்கின்றார்கள். பதினைந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்த இராணுவ நடவடிக்கை மூலமாக கிழக்கு மாகாணம் கொழும்பின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
புல்மோட்டையில் இருந்து பாணமை வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எதுவும் இன்று இங்கில்லை. கிழக்கை விடுவித்த பெருமையில் திளைக்கிறது சிங்கள அரசு. இங்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர அவர்களின் வாழிடங்களும் ஜீவனோபாயமும் நாசமாகி விட்டன.

இந்நிகழ்வுகளுக்குப் பிறகு கிழக்கு மாகாணத்தினை இருபது பில்லியன் ரூபா செலவில் துரிதமாக அபிவிருத்தி செய்யப்போகிறோம் எனும் பரபரப்பு அறிவிப்புக்களை வெளியிட்டதும் சிங்கள அரசுதான். இம்மாகாணத்தில் வாழும் எழுபத்தைந்து வீதமான தமிழ் பேசுகின்ற மக்களில் பெரும் பாலான தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மையினர் மீது கரிசனை கொள்ளாத அரசு செயற்படுத்த முனையும் அபிவிருத்தித்திட்ட நிகழ்ச்சி மீது அச்சமும் சந்தேகமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இங்கு பரவலாகப் பேசப்படும் கிழக்கு அபிவிருத்தி எனும் படாடோப அறிவிப்பிற்குப் பின்னாலிருப்பது சிறுபான்மையினரது ஜீவனோபாய வாழ்விடங்களை பெரும்பான்மையினருக்கு உத்தியோக பூர்வமாக கைமாற்றம் செய்வதற்கான வேணவாவேயாகும். இத்திட்டத்தை அடைவதற்கான உள்ளார்ந்த ஏற்பாடாக அம்பாறை மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது போல பௌத்தத்தின் மறுமலர்ச்சி வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகி உள்ளது. குடும்பி மலைப் பகுதியில் விவசாய முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளமையும் மட்டக்களப்பு மாவட்டத் தில் குடும்பி மலைப் பகுதியானது மாதுறுஓயா டீ திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உத்தேசிக் கப்பட்டுள்ளமையும் மக்கள் மேம்பாட்டு நலன்கொண்ட விடயங்கள் என்ற போதிலும் அவற்றின் திரைக்குப் பின்னாலுள்ள சிந்தனைகள் பேராபத்துக் கொண்டவைகளே.

கடந்த நூறு ஆண்டுகளிலும் குறிப்பாகத் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களினதும் முஸ்லிம் களினதும் சனத்தொகை வளர்ச்சி விகிதமானது அதிகமாக இருந்திருக்கின்ற அதேவேளை கடந்த நாற்பது ஆண்டுகளிலும் சிங்களவர்களின் சனத்தொகை அதிகரிப்பானது மிகத் துரிதமாக இடம் பெற்றிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் இயல்பான சனத்தொகை வளர்ச்சிப் படிமுறை யல்லாமல் அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கும் திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளேயாகும். இயற்கைத் துறைமுகமும், விவசாயத்துக்கான நீர்ப்பாசன வளமும் கொண்ட திருகோணமலையை தமது தாயகத்தின் தலைநகராக தமிழ்த் தலைமைகள் அடையாளப் படுத்தியதன் காரணமாக அதனைச் சிதைப்பதற்கான நீண்ட நாள் மறைமுக வேலைத்திட்டத்தினை சிங்கள அதிகார பீடங்கள் கவனமாகச் செயற்படுத்தி வந்திருக்கின்றன எனக்கொள்ளலாம். இதன் மற்றுமொரு ரகசியத் திட்டமாகத்தான் பதவிய, தென்னமர வாடி,நெடுங்கேணி போன்ற பிரதேசங் களை எல்லைகளாகக் கொண்ட வெலிஓயா எனும் சிங்கள மாவட்டம் ஒன்றை அமைப்பதற்கான எண்ணமும் இருந்ததாகப் பேசப்படுகின்றது. இதன் மூலம் வடக்கையும் கிழக்கையும் துண்டித்து விடலாம் என சிங்கள அதிகாரம் கருதுகிறது. இத்திட்டங்கள் மூலம் கிழக்கின் எல்லைப் புறங்களெல் லாம் சிங்களப் பெரும்பான்மைச் சூழலை நிறுவி விட்டால் சிறுபான் மைத் தமிழ், முஸ்லிம்களின் மொழி ரீதியான நிருவாக அலகு எனும் மனப் பழக்கத்தினை சிதைத்து சின்னா பின்னமாக்கி விடலாம் என்பதும் சிங்கள அதிகாரத்தின் சிந்தனையாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங் களானது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டதற்குப் பிறகு கிழக்கின் நிருவாகமானது இனத்துவ ரீதியில் சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்கு நியமிக்கப் பட்டுள்ள முக்கிய உயர் அதிகாரிகளெல்லாம் சிங்கள மயமாக்கத்திற்குத் தோதான வகையில் இயங்கக்கூடிய முன்னாள் இராணுவ அதிகாரிகளாவர். இங்கிருந்த தமிழ், முஸ்லிம் நிருவாக அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்ட நிலையில் சிங்களவர்களுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படும் முறையும் உருவாகியுள்ளது. இதேவேளை கடந்த காலங்களில் தமிழ் நிருவாகமானது முஸ்லிம்கள் மீது ஓரவஞ்சனையுடன் செயற்பட்டதனையும் மறந்துவிட முடியாது.

இங்கு இடம்பெறும் சிங்கள மேலாண்மை அடக்குமுறைகளுக்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல தீகவாபியைச் சுற்றியுள்ள பெரும் பிரதேசமொன்று அண்மையில் பௌத்த புனிதப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அதனையொட்டிய ஏனைய சகலவிதமான பேரினவாத செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கான அதிகாரங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் களுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான விவசாயக் காணிகளும், முஸ்லிம் குடியிருப்புப் பிரதேசங்களும் காவு கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு ஒலுவில், இறக்காமம் மற்றும் வரிப்பத்தான் சேனை, குடிவில் போன்ற பிரதேசங்கள் கலாசார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது. இங்குள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் ஒலுவில் துறைமுக அபிவிருத்தித் திட்டம் போன்றவற்றின் எதிர்கால நிகழ்வுகளில் புனிதப் பிரதேச அறிவிப்பானது ஏற்படுத்தப்போகும் தாக்கங்களினைச் சிறுபான்மைச் சமூகங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன வென்பது பயங்கரக் கேள்வியாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற விடயங்களில் இங்கிருக்கின்ற ஆளும்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளெல் லாம் காயடிக்கப்பட்டு சுரணையற்றிருக்கின்றனர். ஒரு சமூக இருப்பிற்கான அரசியல் உரிமையி னைக் கோருவதற்கும், அதிகார மையங்களின் ஆக்கிரமிப்புக்களை நியாயப் படுத்துவதற்கும் வரலாறுகளையும் புராணங்களையும் ஆதாரமாக முன்வைப்பது வழக்கொழிந்துவிட்ட நடை முறை யாகும். வரலாறுகள் அதிகாரங்களால் கட்டமைக்கப்படுபவை. அவற்றின் உண்மைத்தன்மை கேள் விக்குட்படுத்தப்பட வேண்டியவை. அன்றியும் நான் வாழ்கிறேன். அதனால் எனக்கு சகல உரிமைக ளும் அத்தியவசியமானது எனும் அடிப்படையிலான சிந்தனை முறையில் செயற்படுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தயாராக இல்லாத நிலையில் வடக்குக்கான இடைக்கால நிருவாகம் பற்றிய சலசலப்புக் கதைகள் சூடு பிடித்துள்ளன. இதன்மூலம் கிழக்குக்கான தீர்வு அக்கறைகள் கைவிடப்பட்டு விட்டமை ஊர்ஜிதமாகியிருக்கிறது. இந்த நிர்க்கதி நிலையில் சிறுபான் மைச் சமூக அரங்கில் ஏற்பட்டுள்ள பதட்டத்தினைச் சமூக நலன் தழுவியதாகக் கையாளும் திறன் எந்த முஸ்லிம் அரசியல் நிறுவனங்களிடமும் இருப்ப தாகத் தோன்றவில்லை. ஆனால் இக்கையறுநிலையினைக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்கு வேட்டைக் காகப் பயன்படுத்தும் நிலைதான் தோன்றியி ருக்கிறது. யுத்த வெற்றிகளின் களிப்பு மனநிலையில் சிங்கள அதிகாரம் விரித்துவரும் அரசியல் சதி வலையில் அனைத்தும் சிக்கவைக்கப்பட்டிருக்கின்றன.

2008ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் யுத்தம் முடிந்துவிடுமென்று அரசு முன்பு கூறியிருந்ததை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று யுத்தவாதம் ஒரு தேசப்பற்று உணர்வாக வளர்த் தெடுக்கப்படுகின்ற நிலையில் யுத்தம் முடியம் தினத்தினை நிர்ணயம் செய்வது கடினமான காரிய மென ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். போர் தொடங்கும் போது ஆயுததாரிகளை ஓட ஓட விரட்டு கிறோமென மார் தட்டியவர்கள் இன்று அவர்களைத் தோற்கடிக்க இன்னும் இரண்டு வருடங்களாவது தேவை என்கின்றனர். அதாவது 2009ம் ஆண்டு இறுதிவரையுமான காலத்;தினையே இது குறிக்கி றது. இதன் அடிப்படையில் அரசானது 2009ம் ஆண்டு முடியும் வரை யுத்தத்தின் பெயரால் மக்களை துயர இருளில் வழிநடத்த உத்தேசித்துள்ளது. அடுத்த பொதுத்தேர்தல்வரை போர் வெறியினுள் மக்களைச் சிக்கவைத்து அதனையே பிரச்சார ஆயுதமாகவும், கையிலேந்தியுள்ளது இவ்வரசு. அதன் ஒரு பிரதான செயற்பாட்டுக் களமாக அரச ஊடகங்கள் பங்காற்று கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளி லும் மக்களை ஏமாற்றி வாழ்க்கைச் செலவு உயர்வினால் ஏழைகளையும், நடுத்தர வர்க்கத்தினரை யும் திண்டாட வைத்திருக்கும் இவ்வரசின் சாதனை முழு நாட்டையும் மரண பீதியில் வைத்திருப் பதுதான். அதனால் மக்களின் சிந்திக்கும் ஆற்றலை தமக்கெதிரான எழுச்சியாக திரண்டுவிடாமல் கலைத்துவிட முடியும். இன்னும் சில ஆண்டுகள் போர் தொடர்ந்தால் ஏற்கனவே நொறுங்கிப் போயுள்ள பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுவிடும். பாரிய மனித உரிமை மீறல்கள் மேற் கொள்ளப்பட்டு அழிவுகளும், அவலங்களும் மட்டுமே நிரந்தரமாகியுள்ள இந்த தேசத்தினை உலகநாடுகள் ஏற்கனவே தனிமைப்படுத்திவிட்டன. இவ்வேளையில் ''தேசப்பற்றானது போக்கிரிகளின் கடைசிக் கூடாரம்''எனும் பிரபலமான பொன் மொழியினை மனதில் நிறுத்திக் கொள்ளலாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்வென்பது அர்த்தங்கள் பற்றிய பிரக்ஞை

தேசமும்-கலாசார அடையாளமும்

- ஜிஃப்ரி ஹாசன்

னது கடந்த காலத்தை ஞாபகிப்பதை எப்போதும் தவிர்ப்பதையே விரும்பி வந்திருக்கிறேன். ஏனெனில், எனது கடந்த காலம் ஒரு போதும் மகிழ்ச்சிகரமானதாக இருந்ததில்லை. என் காலத்தை பின்னோக்கி நகர்த்துகையில்; என் நினைவு வெளியில் நீளம், கடந்த காலத்தின் பிம்பங்கள் மிகவும் மோசமானவை. வரலாற்றின் ஏதோவொரு இடுக்கில் நசியுண்டபடி அபத்தங்களிலிருந்தும், மரணத்திலிருந்தும் தப்பிப் பிழைத்த பொழுதுகளே அதிகம். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே நாட்டின் அரசியல் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. அது தனது முகத்தை போர்முக - அரசியலாக வெளிப்படுத்தியதிலிருந்து வாழ்வு பெரிதும் துயர் மிக்கதாகவே இருந்து வருகிறது. நம்பிக்கையற்ற பொழுதுகள் - கனவுகளற்ற மனிதர்கள் - வெறிச்சோடிய தெருக்கள் - ஒரு மூட்டைப் பயத்துடன் கூடிய அலைச்சல்கள் - இடப்பெயர்வுகள் - தூக்கமற்ற இரவுகள் - உயிரழிவுகள் - உடைமை இழப்புக்கள் - சொல் லொணாத் துயரங்கள் என் வாழ்வின் எல்லாப் பரிமாணங்களிலும் போர் தன் நிறத்தைப் பூசிக் கொண்டிருந்தது.

இலங்கை அரசுக்கும் - புலிகளுக்குமிடையில் போர் மூண்டதையடுத்து எங்கள் கிராமம் போரில் அழிவுற்ற அனேக கிராமங்களைப் போல - கிட்டத்தட்ட முற்றாக அழிந்தே விட்டது. மனிதர்கள் வாழ முடியாத ஓர் இடமாக அது ஆயுததாரிகளால் மாற்றப்பட்டு விட்டது. போர் மனிதர்களை மட்டுமல்ல@ இடங்களைக் கூட கொல்கிறது.

இங்கு 1980களுக்குப் பின் வந்த எல்லா ஆண்டு களுமே துப்பாக்கி அரக்கர்களின் காலமாகவே இருந்து வருகிறது. அங்கிருந்து தொடங்கும் துயரங்கள் நமது மக்களுக்கு இன்னும் ஓய்ந்தபாடில்லை. துரதிஸ்டம் என்னவென்றால் போரும், அதன் விளைவுகளும் அதற்கான தீர்வும் இனரீதியான அளவுகோல்களாலேயே அளவிடப்படுகின்றன. உண்மையில், போரும் இனத்துவமும் அவைகளாகவே ஒரு போதும் சம்பந்தப்பட்டுக் கொள்வ தில்லை. உண்மையில் போர், அதிகாரத்தை அடையவும், தக்கவைத்துக் கொள்ளவும் விரும்புபவர்களால் வேறுவழியின்றி இனத்துவத்துடன் இணைக்கப்படுகிறது. ஆனால், போரின் கொடுங்கரங்கள் இனம் பார்த்து மனிதர்களின் குரல்வளைகளை நசிப்பதில்லை. அது மனிதர்கள் எல்லோரையுமே தன் எதிரியாகக் கொள்கிறது. போரின் காலத்தினுள்ளும், போருக்குப் பின்னரும் அது ஏற்படுத்திய பேரழிவுகள் பற்றிப் பேசும்போது துரதிஸ்டவசமாக இனம் ஒரு முக்கிய விடயமாக வந்து விடுகிறது. நமது கிட்டிய கடந்கால அனுபவங்கள் இதற்கு நல்ல சாட்சியாக இருக்கின்றன. ஆம் சமாதானப் பேச்சுக்களில், தீர்வு முயற்சிகளிலிருந்தெல்லாம் நாங்கள் மனச்சாட்சியின்றி மிக மோசமாக ஓரங்கட்டப்பட்டோம். ஒரு போரினுள் துயர்மிக்க நம் வாழ்வை கடத்தித் தொலைத்ததை எந்த எஜமானர்களும் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. உண்மையில் ஒடுக்குமுறையின் துயரமுடிவுகளை முதுகில் சுமந்த மக்கள் நாங்கள் தீர்வு முயற்சிகளில், நாம் வேற்றுக் கிரகவாசிகளைப் போன்று கணக்கிலெடுக்கப்பட்டோம்.

நமது வரலாறு - துயரம் - இழப்புக்கள் - மரணங்கள் என எல்லாமும் அந்தக் கணத்தில் ஈவிரக்கமற்று எப்படி மறைக்கப்பட்டன? நமது கோரிக்கைகளை ஒலிக்க எந்தக் குரலும் ஏன் நமக்கு மட்டும் இல்லா மல் போயிற்று?

ஆனால், போரையும் அது பரிசளித்த ஒரு கந்தலான, வலிகளாலான வாழ்வையும் நாங்கள் எப்படி மறந்துவிட முடியும்? போரின் அனுபவங்கள் எனக்கு மிகவும் கசப்பானவை. போரினால் முழுமை யாக சிதைக்கப்பட்ட எனது தேசத்தின் - எனது கிராமத்தின் - எனது மக்களின் குழந்தையாக நான் எல்லாவற்றையும் - எல்லாவற்றையுமே ஞாபகம் கொள்வேன்.


இடப்பெயர்வும் அகதிவாழ்வும்

அந்தமுதலாவது இடப்பெயர்வு எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. 1987 இன் கடைசி நாட்களிலும் எண்பத்தி எட்டின் முற்பகுதிகளிலும் இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தாங்க முடியாதளவுக்கு கடுமையாகின. எங்கள் சொந்த நிலங்களில் வாழமுடியாத நிலைக்கு தள்ளப் பட்டோம். கிழக்கில் இந்திய இராணுவம் ஆடிய வெறியாட்டத்தில் முற்றாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் எங்கள் கிராமமும் ஒன்று. 1987.12.02 அன்று இந்திய இராணுவம் எங்கள் கிராமத்தில் மறக்க முடியாத ஒரு வரலாற்றை துப்பாக்கி முனைகளால் வரைந்தது. இந்திய இராணுவம் மீது புலிகள் நடத்திய தாக்குதலையடுத்து இராணுவம் அந்த துன்பியல் நிகழ்வை அரங்கேற்றியது. தியாவட்டவானில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட சுமார் 50 பேரள வில்வரிசையாக வைத்து இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் எனது உறவினர் ஓருவரம் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் அடக்கம். எல்லோரையும் வரிசையில் வைத்து சுட்டதால் பக்கத்தில் வீழ்ந்தவர்களின் இரத்தத்தைப் பூசிக்கொண்டு ஒரு சிறுவனும், சிறுமியும் உயிர் தப்பினர்.

இதையடுத்து அங்கு மிக மோசமான அரசியல் குழப்பம் நிலவியது. இதனால் அங்கிருந்து வெளியேறி பக்கத்து ஊரான வாழைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தோம். வாழைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலயம் அகதிகளால் நிரம்பி வழிந்தது. வகுப்பறைகளை அகதிகள் நிறைத்துக் கிடந்தனர். கவனிப்பதற்கு எவரும் வரவில்லை. இப்போதென்றால் அரசு - அரசு சாரா நிறுவனங்கள் என ஓடி வருகின்றன. அப்போது அகதிகளின் நிலை சொல்லமுடியாதளவுக்கு இருந்தது. சரியாக ஒரு வாரத்துக்குப் பின் என்று நினைக்கிறேன் அகதி வாழ்வின் இன்னொரு கட்டத்தை நோக்கி நாங்கள் நகர வேண்டி இருந்தது.

ஆம், எங்கள் எல்லோரையும் இரண்டு லொறிகளில் தேங்காயை அடைவது போல அடைந்து கொண்டு பொலனறுவை மாவட்டத்திலுள்ள செவனபுர, கட்டுவன் வில போன்ற கிராமங்களிலுள்ள பள்ளிக்கூடங்களுக்கு எடுத்துச் சென்றனர். இவர்கள் ஆண்டாண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்த தங்களின் சொந்த ஊர் போல் உணர முடியாமல் போனதொரு இடத்தில் விட்டுச் செல்லப்பட்டனர்.

அங்கு ஒரு வித்தியாசமான வாழ்க்கை எங்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளிக்கூடம் செல்ல வேண்டி இருந்த, படிக்கவேண்டி இருந்த என்னைப் போன்ற சிறுவர்களினது வாழ்வு அந்நிய ஊர்களிலுள்ள பாடசாலைகளின் மூலைகளுக்குள் ஆவியாகிக் கொண்டிருந்தது.

இங்கு வந்திருந்த அகதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தையம் தாண்டி இருந்தது. பழக்கப்படாத அகதி வாழ்வை முற்றிலும் அந்நியமானதொரு சூழலில் அவர்கள் அனைவரும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தனர். வேறெல்லாவற்றையும் விட அந்த மக்களுக்கிருந்த மிகப்பெரும் வலி அதுவாகத் தான் இருந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட 5-6 மாதங்கள் அத்தகையதொரு அகதி வாழ்வை அங்கு வாழ்ந்து தொலைக்க வேண்டி இருந்தது அவர்களுக்கு.

பின்னர் எல்லோரும் எங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். சொந்த ஊருக்குச் செல்வதற்காக வெலிகந்த இரயில் நிலையத்தில் தலையிலும், தோள்களில் மூட்டை முடிச்சுக் களுடனும், வயிற்றில் பசியுடனும் நீண்ட நேரமாக நாங்கள் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. உண்மையில், அகதிகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயரும் போது அவர்கள் விழிப்புள்ள நிலையில் அறுவைச் சிகிச்சைக்குட்படுத்தப்படுவது போன்று உணர்கிறார்கள்.

இங்கு வந்து பார்த்தபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எங்களை விடவம் ஊர் மிகவும் இளைத்துக் கிடந்தது. முற்றிலும் எங்களுக்கு அந்நியமானதொரு இடத்தில் வந்துவிட்டிருப்பது போல உணர்ந்தோம். சொந்த ஊரையே அந்நியத் தன்மையுடன் பார்க்கும் நிலைக்கு போர் எங்களை உள்ளாக்கி இருந்தது. வீட்டின் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றிலும் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்திருந்தன. போகும் போதிருந்த கிராமத்தின் இயற்கை வனப்பு மிச்சசொச்சம் எதுவுமின்றி துடைத்தழிக்கப்பட்டிருந்தது. ஆடு, மாடு போன்றவை ஷெல்களில் அகப்பட்டு ஆங்காங்கே இறந்து கிடப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

சிதைக்கப்பட்ட எங்கள் வாழிடங்களிலேயே மீண்டும் வாழ்வைத் தொடங்கினோம். ஆனால், அதுவும் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஆர். பிரேமதாஸா ஜனாதிபதியானதையடுத்து இந்திய இராணுவத்தினர் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டு விட்டனர். அதனாலென்ன, இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகள் புதிதாக முளைக்கத் தொடங்கின.

மீண்டும் அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள், விமானக் குண்டு வீச்சுக்கள், எரிப்புச் சம்பவங்கள், கலவரங்கள் என இந்த மக்களை பலிகொள்ள ஆரம்பித்திருந்தன. இதனால், மீண்டும் வாழைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலயத்தை நோக்கி ஊரைவிட்டும் அலை அலையாக வெளியேறத் தொடங்கினோம். மாட்டு வண்டிகளில் இவ்வாறு அலை அலையாக வெளியேறிச் சென்ற குடும்பங்களில் நாங்களும் ஒரு குடும்பமாக இருந்தோம் என்பதை இப்போதும் என்னால் நினைத்துப் பார்க்கும் போது சிலிர்ப்பாக இருக்கிறது.

வெளியேற்றத்துக்கு முதல்நாள் இலங்கை விமானப்படை பெருத்த இரைச்சலுடன் எங்கள் ஊருக்கு மேலால் பறந்து பறந்து குண்டுகளை வீசிக் கொண்டிருந்தது. குண்டுகளிலிருந்து தப்பிக்க மக்கள் சிதறி ஒடினர். நான் மிக - மிகச் சிறுவனாக இருந்தபடியால் எனது தந்தை என்னை தூக்கிக் கொண்டு ஓடினார். அப்போது நாம் முஸ்லிம்கள் என்ற இன அடையாளத்தை காட்டிக் கொள்வதற்காக ஆண்களை தலையில் தொப்பி போட்டுக்கொண்டும், பெண்களை முக்காடு போட்ட படியும் ஓடும்படி எனது தந்தை கட்டளை பிறப்பித்தபடி ஓடினார். மறுநாளே அங்கிருந்து இரண்டாவது முறையாக வெளியேறினோம். வெளியேறினோம் என்பதை விடவும் ''வெளியேற்றப்பட்டோம்'' என்ற சொல்லாட்சியே மிகவும் பொருந்தி வருகிறது.

இந்த மக்களின் வாழ்வைப் பொறுத்தவரை, இத்தகையதொரு அரசியல் சூழல், இடப்பெயர்வு, அகதி வாழ்வு எல்லாமும் புதியவையாக இருந்தன. அதனால் எதிர்காலம் பற்றிய பெரிய அவநம்பிக்கை கள், அரசியல் பிரக்ஞைகள் என எதுவும் எவருக்குள்ளும் எழுந்திருக்கவில்லை என உறுதியாக நம்புகிறேன்.

இந்த அபத்தங்களை - துயரங்களை இந்த மக்கள் மீது திணித்தது எது? இன்னும் இவைகளை சகித்துக் கொள்ளும்படி அவர்களை எப்போதும் தூண்டிக் கொண்டிருப்பது எது?

கண்ணுக்குத் தெரியாத இந்த அகத்தூண்டல் முற்றிலும் உண்மையான அவர்களின் பலவீனத்தின் வெளிப்பாடா? அல்லது தனது நிலையை உணராத, தனது உண்மைகளை, கடந்த காலத்தை சரிவரப் புரிந்து கொள்ளாத ஒரு மக்கள் குழுமத்தின் அறிவீனத்தின் வெளிப்பாடா? அல்லது நமக்கென்றொரு தனித்துவமான வரலாறு, தேசம், மற்றும் கலாசார அடையாளங்கள் எதுவுமில்லாத - அதாவது வரலாறற்ற - தேசமற்ற ஒரு சமூகம் என்ற கற்பிதமா? என ஏராளமான கேள்விகளை இந்நிலை குறித்து எம்மால் எழுப்ப முடியும். உண்மையில், நாம் வரலாற்றையும் தேசத்தையும் கொண்டிருக் கும் ஒரு கலாசாரச் சமூகம். இப்போது நாங்கள் ~~முஸ்லிம்தேசம்|| என்ற நமது தேச அடையாளத் தை உறுதியாகப் பற்றியுள்ளோம். ஐஅயபiநென உழஅஅரnவைநைள என்ற நூலில் அதன் ஆசிரியர் பெனடிக்கட் அண்டர்சன் தேசியம் குறித்து ஒரு சுவாரசியமான விளக்கத்தை முன் வைக்கிறார் ''ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாலினம் இருப்பதைப் போல, ஒரு தேசமும் இருந்ததாக, இருக்க வேண்டும்'' இது எந்தளவு தூரம் உண்மையானது என்பது குறித்து நம்மிடம் கேள்விகள் இருக்கின் றன. எனினும் தேசம், தேசிய இனம், சுயநிர்ணய உரிமை போன்ற சொல்லாடல்களை / கருத்தாக்கங் களை பயிலவும், பயன்படுத்தவும் வேண்டிய நிலைக்கு நமது தேசிய அரசியல் நம்மை இட்டுச் சென்றுள்ளது. இங்குதான் நாம் நமது கடந்த காலத்தின் துயர்மிக்க அனுபவப் பாதைகளுக்கூடாகப் பயணித்து நமது வரலாற்றை அடையவும், மீட்டுருவாக்கம் செய்யவும் வேண்டியுள்ளது.

வரலாறும் இனத்துவமும்

Post - Colonialism : A short introduction எனும் நூலில் Robert J.C. youngஎன்பவர் ''இனச் சுத்திகரிப்பு மக்களை அழிப்பதோடு அவர்களது அறிவு மற்றும் வரலாறுகளையும் அழிப்பதாகும்.''என்கிறார். கடந்த பல்லாண்டுகளாக நமது வரலாறு, வரலாற்றழிப்புக்கும், திரித்துக் கூறலுக்கும் உட்படுத்தப் பட்டு வருகிறது. இந்த வரலாற்றழிப்பை நமது சுயத்தை - தேசத்தை நிராகரிப்பதற்கான உபாயமாக பேரினக் கரங்கள் பயன்படுத்தி வருகின்றன.

போர் இங்கு எப்படி இனத்துவத்துடன் இணைக்கப் பட்டதோ அவ்வாறே வரலாறும் இனத்துவத்துடன் இணைக்கப்பட்டது. வரலாற்றெழுதுகையில் இனம் இங்கு ஒரு முக்கிய காரணியாக மேலெழுந்துள் ளது. இலங்கையின் இனப் பிரச்சினையிலும் இந்த இனத்தை மையப்படுத்திய வரலாற்றெழுதுகை காரணியாக அமைந்திருப்பதை சில நேர்மையானன வரலாற்றாய் வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ள னர்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலும் இந்த இனக் காரணி செல்வாக்குச் செலுத்தியுள்ளது. ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இது மோசமான செல்வாக்காகும். நாங்கள் தனியான வேறொரு இனமாக இங்கு இருப்பதனால் பேரின வரலாற்றாய்வாளர்கள் எங்கள் வரலாற்றை திரித்துக் கூறியும், புனைவுக்குள்ளாகியும் வருகின்றனர்.

இது சமூகத்தை வரலாறற்றவர்களாக காட்டுவதன் மூலம் அவர்களின் இனத் தனித்துவத்தையும், அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளையும் மறுக்க முடியும். இதனாலேயே நாங்கள் ஒரு குறுகிய கால வரலாற்றைக் கொண்டவர்களாக காட்டப்பட்டோம். நமது உண்மை யான வரலாறு ''ஏற்கனவே தயாரித்து'' வைக்கப்பட்டி ருக்கும் சில வரலாற்றுத் தகவல்களால் குறைத்து மதிப்பிடப் படுகிறது. எனவே நமது தொன்மையான வரலாற்றைத் தேடி நாம் பயணிக்க வேண்டியுள்ளது. நாம் இதுவரை நமது வரலாறு என நம்பிக் கொண்டிருக்கும் வரலாற்றிலிருந்து நமது உண்மையான வரலாறு வேறுபடலாம்.

'வந்தேறுகுடிகளாக' காட்டப்படும் நாங்கள் சிலவேளை இந்நாட்டின் பூர்வீகக் குடிகளுள் ஒன்றாகவும் இருக்கக்கூடும். எனவே, நமது வரலாற்று மூலங்களை தேடுவதன் மூலமே குறுகிய, பேரினவாத இனத்துவ நலன்களுக்காக மூடி மறைக்கப்படும் நமது உண்மை யான வரலாற்றினைக் கண்டடைய முடியும். J.C. Youngகுறிப்பிடுவது மாதிரி இந்த 'வரலாற்று இனச் சுத்திகரிப்பிலிருந்து' (Historical Genoude) நம்மை பாதுகாக்க முடியும். இந்த இடத்தில் வரலாறு குறித்த பின்நவீன அணுகுமுறை யைக் கைக் கொள்வது ஆபத்தானது எனக்கூறமுடியாது. நமக்கு தயாரித்து வழங்கப்பட்டிருக்கும் வரலாறு நமது சமூக, அரசியல் உரிமைகளை மறுப்பதற்கும், நம்மை நாம் அகவய ரீதியாக இந்நாட்டுக்கு அந்நியமானவர்களாக உணர்வதற்கும் வசதியாக இருக்கிறது. எனவே, பகுத்தறிவு சார்ந்த எடுகோள்களை மட்டுமே நாம் சார்ந்திருந்தால் நமது தொன்மையான வரலாற்றுத் தரவுகளை எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும். இது நவீனத்துவ வரலாற்றெழுதுகையின் விளைவாகும். வரலாற்று ரீதியான இனச்சுத்திகரிப்புக்கு ஆளாகியுள்ள ஒரு மக்கள் குழுமம் தனது வரலாற்று உணர்வை பொருள் கொள்ளும் விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

ஒரு தேசமாக அங்கீகரிக்கத்தக்க அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ள மக்கள் குழுமமாகிய நாம் நமது தேச வரலாற்றைக் கண்டடைய தயாராகி விட்டோமா?

தேசமும் அடையாளமும்

'முஸ்லிம் தேச இலக்கியம்', 'முஸ்லிம்தேச அரசியல' என நாம் பரவலாக பயன்படுத்தும் சொற்பிர யோகங்கள் ஒரு தேச அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒரு அகரீதியான, உள்ளகக் கருத்தாடல்களின்போதே நாம் அதிகம் இந்த 'முஸ்லிம்தேசம்' என்ற தேச அடையாளத் தைச் செய்கிறோம். ஆனால், வெளியிலிருக்கும் தேச மறுப்பாளர்களுக்கு, முஸ்லிம்தேச அடை யாளத்துக்கான உரிமையை தெளிவுபடுத்தும்போது நாம் எதிர்கொள்ளப் போகும் சவால்களை தொன்மையான நமது வரலாறு குறித்த ஆய்வுகளே முறியடிக்கும் என்ற உண்மை புரிந்து கொள்ளப் படவேண்டும். இந்த வரலாற்றினடியாக எழும் முஸ்லிம்தேசம் எங்களது சமூக பண்பாட்டு அரசியல் உரிமைகளின் தொகுப்பாகவுள்ளது. கற்பிதங்களைக் கடந்த யதார்த்த நிலையில் தேசம் நமது பிறப்புரிமையாகிறது.

'முஸ்லிம்தேசம்' என்ற பெயரிடலுக்குப் பின் இப்போது 'சோனகதேசம்' என்ற பெயரிடல் மருதூர் பஷீத்தினால் முன்மொழியப்படுகிறது. நமது தேச அடையாளத்துக்கான பஷீதின் பெயரிடல் நமது தொன்மை வரலாற்று ஆய்வுகளை மையப்படுத்தியதாக வுள்ளது. நாம் சோனகர், நமது மொழி சோனகம், நமது தாயகம் சோனகம், நமது இலக்கு சோனகர் சுயாட்சி என இந்நூலில் எழுதிச் செல்கி றார் பஷீத். ஆனால், பஷீதின் இந்த தேச அடையாளப்படுத்தலுக்கான பெயரிடல் சிராஜ் மஷ்ஹூரி னால் மறுக்கப்படுகிறது. சிராஜ் மஷ்ஹூருக்கு 'சோனகதேசம்' என்ற தேச அடையாளப் பெயரிடலை விட 'முஸ்லிம்தேசமே'உவப்பானதாக இருக்கிறது. எனக்கும் இதுவே உவப்பானதாக இருக்கிறது. 'முஸ்லிம் அடையாளத்தின் தனித்துவத்தை சோனகம் என்ற ஒன்றால் மாற்றீடு செய்ய முயற்சிப்பது வரலாற்று ஓட்டத்தை பின்னோக்கி இழுப்பதாகும்'என்ற சிராஜ் மஷ்
ஹூரின் கூற்று நியாயமானது. ஆனால், இங்கொன்றை நாம் முக்கியமாக குறித்துக் காட்ட வேண்டியுள்ளது. பஷீதின் தேச அடையா ளத்துக்கான பெயரிடலில் நமக்கு உடன்பாடில்லைதான். உண்மையில், 'முஸ்லிம்தேசம்' என்ற அடையாளமே உயிர்ப்புமிக்கது. ஆனால், பஷீத் பிரேரிக்கும் தேச அடையாளத்தைக் கண்டடைவதற் கான வரலாற்றுப் பாதை குறித்து நாம் இன்னும் அதிகம் சிந்திக்க வேண்டும்.

இங்கு நமது தேச அடையாளம் அல்லது இன அடையாளம் பற்றிப் பேசும் போது ஒரு சமூக இயக்க விசையில் மட்டும் கவனம் செலுத்துவது குறைபாடு டையது. இன அல்லது தேச அடையாள உரு வாக்கமானது பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நமது தேச / இன அடையாளத்தில் பெரிதும் கலாசார, வரலாற்றுக் காரணிகளே முக்கிய பங்கு வகிக்கும்.

நாம் தமிழ் மொழி பேசுகின்ற இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொள்கின்ற முஸ்லிம் என்ற இன அடையாளத்தையுடைய சமூகக் குழுமமாகும். முஸ்லிம்கள் எப்போதும் இஸ்லாத்தின் ஆன்மீக நெறிகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் மட்டுமன்றி அதன் உயரிய சமூக- பொருளாதார அரசியல் மற்றும் கலை - பண்பாட்டுக் கருத்தியல்களினதும் அடிப்படை யிலேயேதங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்படவேண்டி விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைய வட-கிழக்கு அரசியற் சூழல் தவிர்க்க முடியாமல் நம்மை ஒரு தேசத்தை வடிவமைக்க வேண்டிய /கோர வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் அல்லது தேசக் கோரிக்கை போன்ற அரசியற் செயற்பாடுகளுக்குள் தேசியவாதம் உட்பொதிந்துள்ளது. ஒடுக் கப்படும் தேசமாகிய நாம் நமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் உரிமையை எங்களுக்கு வழங்க வல்ல ஒரு தேசத்தை - முஸ்லிம் தேசத்தை கோரும்போது - அதற்குள் தேசியவாதம் உட்பொதிருந் திருப்பதனால் நமது சில இஸ்லாமிய அறிவு ஜீவிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். இந்த நியாயமான கோரிக்கையை வெறும் தேசியவாதக் கோஷமாக - தமிழ்த் தேசியவாதத்தின் விளைவாக கருதுகின்றனர்.

உண்மையில், நாம் இஸ்லாத்தை பின்பற்றுகின்ற மக்கள் குழுமம் என்ற வகையில் 'தேசியவாதம்' பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு புரிந்து கொள்ளப்பட வேண்டும். வழ-கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகள், நிலவரங்களில் கவனம் செலுத்தாது கண்மூடித் தனமாக இக்கோரிக்கையை அணுகுவது தவறான அணுகுமுறை என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

ஆனால் மேற்கிளம்பியுள்ள முஸ்லிம்தேசக் கருத்தாடலின் முக்கிய அடித்தளமாக அடையாளம் காணப்பட்டுள்ள 'தேசியவாதம்' குறித்து அதன் இலங்கை முஸ்லிம்களுக்கான பொருத்தம், பொருத் தப் பாடின்மைகள் குறித்தெல்லாம் நமது இஸ்லாமிய அறிவு ஜீவிகள் எவரும் வாய் திறக்கவில்லை. எனினும், இந்த நீண்ட மௌனத்தையுடைத்து ஏ.பிஎம். இத்ரீஸ் தனது 'அதிகாரம் பற்றிய இரண்டு கண்ணோட்டங்கள்' எனும் நூலில் இந்த விடயம் தொடர்பாக ஓரளவு பேசியுள்ளார். 'தேசம்-உம்மா : உறவும் முரணும்'என்றொரு கட்டுரை இந்நூலில் இடம் பெறுகிறது. இக்கட்டுரை மட்டுமே குறித்த விடயம் தொடர்பாக பேசுகிறது எனலாம். இக்கட்டுரையில் அவர் வெளிப்படையாக தேசியவாதத் தை அங்கீகரிக்கவோ, மறுக்கவோ இல்லை. கோட்பாட்டுத் தளத்தில் நின்று தேசியவாதத்தை இஸ்லாம் என்ற சாளரத்தினூடாக நோக்குகிறார். இது ஒரு பயனுள்ள நோக்கு. ஒரு கலாசாரக் குழும மாக இருக்கும் நாம் இந்த உலகமயமாக்கலின் விளைவினால் நமது தனித்துவமான கலாசார அடை யாளங்களை இழந்துவிட்டால் அது நமது தேச அடையாளத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். எனவே, நாம் நமது உள்நாட்டு கலாசாரம், மரபுகள், பாரம்பரியங்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகிறது. ஆனால், துரதிஸ்ட வசமாக நம்மத்தியில் செயற்படும் குறித்த ஒரு இஸ்லாமிய இயக்கம் நமது தொன்மையான கலாசார அடையாளங்களையும், பாரம்பரியச் சின்னங்களையும் அழித் தொழித்து அமெரிக்க-முதலாளித் துவ நலன்களுக்கான உலகமயமாக்க லுக்கு சேவகம் செய்து கொண் டிருக்கிறது. உண்மையில் குறித்த அந்த இஸ்லாமிய இயக்கத்தின் செயற்பாடுகள் கவலையளிப்பவை. இங்கு, இன்று நிலவும் சூழலில் நமது தனித்துவமான கலாசார அடையாளங்களே அரசியல் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தக்கூடிய நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் அவைகள் அழிக்கப் படுவது நமது அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்க லாம்.

உண்மையாக சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள இஸ்லாத்தின் பெயராலேயே இந்த அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது. சமூக நலனைப் புறக்கணித்துவிட்டு குர்ஆனிலிருக்கா? ஹதீஸிலிருக்கா? எனக் கேள்வி எழுப்புவது சிறு பிள்ளைத்தனமானது. சமூக நலனில் அக்கறையில்லாத, சமூகத்தின் அரசியல், பண்பாட்டு நிலைமைகளைப் புறக்கணிக்கின்ற, ஒரு மதமாக இஸ்லாத்தை கட்டமைக்க முனைவது அபத்தமாகும்.

எனவே, குறித்த அந்த இஸ்லாமிய இயக்கத்தின் செயற்பாடுகளும், சமூகம் - பண்பாடு - இஸ்லாம் பற்றிய புரிதல்களும் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டிய வையாகும். நாம் நமது கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதன் மூலமே நமது தேசியத்தை நிலை நிறுத்த முடியும். முதலாளித் துவ நலன்களுக்கு சேவகம் செய்யும் உலகமயமாக்கலின் எதிர்பார்ப்புக்களை, நமது உள்நாட்டு கலாசாரங்களை நமது இனத்துவ நுண் அடையாளங்களை அழிப்பதன் மூலம் அல்லது அழிப்பதற்கு அறைகூவல் விடுப்பதன் மூலம் அந்த இயக்கம் நிறைவேற்றி வருகிறது.

நமது வரலாற்றுத் தொன்மைமிக்க தனித்துவக் கலாசாரக் கூறுகளின் மூலமே நாம் நமது தேசத்தை வென்றெடுக்க முடியும். மாறாக அவற்றை அழிப்பதன் மூலமல்ல@ இவற்றை அழித்தொழிப்பதன் மூலம் கலாசார அந்நியமாதலுக்கும், வரலாற்று அந்நியமாதலுக்கும் உள்ளாகி ~பண்பாட்டு அகதிக ளாக| (Cultural refugees)நம்மை நாம் ஆக்கிக் கொள்ளப் போகிறோமா? அரசியல் அகதிகளாக (Political refugees) இருப்பதைக் காட்டிலும் ~பண்பாட்டு அகதிகளாக| இருத்தல்| மிகுந்த அவஸ்தை மிக்கது.

முஸ்லிம்தேச அரசியல், முஸ்லிம்தேச இலக்கியம் எனப் பேசுபவர்கள் இது குறித்து அதிகம் சிந்திக்க வும், செயற்படவும் முன்வரவேண்டும். எனினும் முஸ்லிம்கள் கோரும் தேசம் இஸ்லாமியத் தன் மைமிக்கதாக இருக்கவேண்டும். என வலியுறுத் துகிறார். ஒரு தகுதி வாய்ந்த அறிஞர். இவர் குறிப் பாக சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும்போது அங்கு அவர்கள் ஒடுக்கப்படும் போது 'தேசிய வாதம்' மேற்கிளம்புகையில் அதை இஸ்லாம் தீவிரமாக எதிர்க்காது என்பதை இவர் கூறவருகிறார்.

ஆகவே, நமது தேச அடை யாளம் ஒரு போதும் இஸ்லாத்தை விட்டும் அந்நியமானதல்ல, ஆனால் நமது தேச அடையாளத் துக்கு ஒருபோதும் பின்-நவீன அணுகுமுறை பொருந்தாது. தேசியவாத த்தை பின்-நவீனத்துவம் கேலி செய்கிறது. தேசியவாதம் பலவீனம் நிறைந்தது என்பது மறுப்பதற் கில்லை. ஏராளமான தேசப் போராட்டங்கள் மிக மோசமான அனுபவங்களையே நமக்குத் தந்துள்ளன. ஆனால், ஒரு தேசம் ஒடுக்கப்படும்போது அங்கு தேசியவாதமே உடனடியாக மேற் கிளம்புகிறது. இது ஏதோ ஒரு விதத்தில் ஒடுக்கும் தேசத்துக்கு சவாலாக, சிலவேளைகளில் தலை யிடியாகக் கூட அமைந்து விடுகிறது. எனவே, ஒடுக்கப்படும் ஒரு தேசம் தனது போராட்ட வழி முறையாக மாற்று உபாயத்தை கண்டடையும் வரை தேசியவாதம் அழிந்து செல்லுமா?

தேசத்தை நோக்கிய கலாசாரப் பயணம்

சமூகங்களின் கலாசாரங்கள் மிக வேகமாக அழிக்கப்பட்டுவரும் உலகமயச் சூழலில் நாம் நமது கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக கடுமையாக போராட வேண்டியுள்ளது. வரலாறும், கலாசாரமுமே நமது அடையாளத்தினை வடிவமைக்க வல்ல காரணிகளாக அடையாளம் காணப்பட்டன.

முதலாளித்துவ நலன்களை அடிப்படையாகக் கொண்ட இவ் உலகமயமாக்கல் செயற்பாட்டினால் பல்வேறு உள்நாட்டுப் பண்பாடுகள் நுண் கலாசார அடையாளங்கள் போன்றன அழிக்கப்பட்டு வருகி ன்றன. Manfred B. Steger jdJ Globalishation : A short introduction எனும் நூலில் உலகமயமாக்கலினால் இவ்வாறு அழிக்கப்பட்ட உள்நாட்டுக் கலாசாரங்கள் குறித்துப் பேசுகிறார். இதில் மொழி களின் உலக மயமாக்கம் குறித்து திரு. மன்பிரட் ஸ்டெகர் சுட்டிக் காட்டியுள்ளார். சில மொழிகளின் குறிப்பாக ஆங்கிலம், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு ஆகியவை - உலகளவில் முக்கியத்துவம் பெற்று வருகின் றன, பிற மொழிகள் எண்ணிக்கையில் குறைந்து வருவதாகவும் Manfred B. stegar எழுதிச் செல்கிறார். எனவே, உலகமயமாக்கல் சமூகங்களின் முக்கிய கலாசாரக் கூறான அவர்களின் உள்ர்ர் மொழிக ளைக் கூட விட்டு வைக்கவில்லை. எனவே, அது ஏனைய கலாசார அடையாளங்களையும் அழித்து, தேசியங்களின் தனித்துவ எல்லைகளையும் அழித்து ஒரு உலகமய நிலவரத்துக்குள் உள்ர்ர் சமூகங்களை வேகமாக இணைத்துக் கரைக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

அழிந்து வரும் கிராமியத்தின்
கனிச்சுவையின் சுவாரஷ்யம்

அஸீஸ் எம். பாயிஸ்

ட்டாளம் பட்டாளமாய் வந்து சோளக் காடுகளில் கதை பேசும் பச்சைக் கிளிகளின் கூட்டத்தையும் பச்சை கம்பளங்கள் விரிந்து கிடக்கும் வயல் வெளிகளிலும் சிற்றோடைகளிலும் தங்கள் உணவு களை தேடி அலையும் வெள்ளைக் கொக்குகள், சாம்பல் நாரைகள், சில்லித் தாராக்கள், கூவாக் கோழி கள், காடை, பக்கா, மீன்கொத்தி, ஆலாப் பறவைகள்(பருந்து இனப் பறவைகள்), ஓணான் கள்ளன் என்னும் ராஜாளி இனப் பறவைகள் இன்னும் ஊரான் குருவி, வயலான் குருவி, பூக்குடிச்சான், சிட்டுக் குருவி, வானம் பாடி, கழுகுழுப்பை (07 Sisters), பஞ்சான் குருவி, சென்பகம், கூட்டம் கூட்டமாய் கூக் குரலெழுப்பி இரைதேடும் மயில் கூட்டம்.

இவற்றையெல்லாம் மாரிப்போக சேனைப் பயிர்ச் செய்கை காலத்தில் ஏராளமாய் காணலாம். இவை களை கண்டு மனம் பெறும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. இவைகளை ரசிப்பதற் கென்றே பல பொழுதுகளில் நான் இந்த சேனைக் காடுகளுக்கு செல்வதுண்டு.

இந்த சேனைப் பயிர்ச் செய்கை மழையை நம்பி ஆரம்பித்து ஆறு மாத காலத்திற்குள் முடிவடையும் ஒரு பயிர்ச் செய்கை. மாரிப்போகம், கோடைப்போகம் என இந்த விவசாயிகள் காலத்தைப் பிரித்து பயிரிடுவார்கள். கடந்த சில மாதங்களுக்குள் இந்த பயிர்ச் செய்கை நடந்து இப்போது நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது.

இதன்போது அதிகமான விவசாயிகள் சோளம், தினை, இறுங்கு, குரக்கன், பயறு போன்றவற்றை விதைக்கும் அதே வேளை கச்சான், பயறு, கொச்சி, சுரைக்காய், நாடங்காய், கெக்கரிக்காய், அவரைக் காய், பீக்கங்காய் போன்றவற்றையும் பயிரிடுவார்கள். இதிலிருந்து அடுத்து வரும் 06 மாத காலத்தி ற்கு தேவையான சேமிக்கக் கூடிய உணவுப் பொருட்களை சேமித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் அவற்றில் சிலர் இந்த சேனைப் பயிர்ச் செய்கை முடியும்வரை உண்டு கழித்து மற்றவர் களுக்கும் கொடுத்து அதனை நிறைவு செய்து விடுவார்கள். சேமித்து வைப்பது பற்றி கவலையே கொள்ளமாட்டார்கள். பின்னர் உணவுக்காக கஷ்டங்களை அனுபவிக்கும் போது அடுத்தவர்களிடம் கையேந்தும் ஒரு அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள். சேனைப் பயிர்ச் செய்கை முடியும் மட்டுமே அவர்களின் அடுப்பில் பிட்டுப் பானை வேகும். அது முடியும் போது அந்த பிட்டுப் பானையும் இறக்கப் பட்டு விடும். இதனை வெளிப்படையாக ஆணியடித தாற் போல் சொல்லும் ஒரு கனிச் சுவைதான் இது,

10. 'சேனயும் ஒழிய புட்டு பானயும் எறக்கியாச்சி'

இந்த முதுசொல் பெரியதொரு தத்துவத்தையே தன்னுள் கொண்டிருப்பதை நாம் அவதானிக்க முடி கிறது. 'சேமிப்பு' என்பது மிகப் பெரிய ஒரு பொருளாதார அபிவிருத்தியோடு தொடர்புபட்ட விடயம். இது மக்கள் மத்தியில் இல்லாமல் போனதை கிண்டல் செய்வதாய் இந்த கனிச் சுவையில் நாம் காணக்கிடைக்கிறது.

'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பது போல, சந்தர்ப்பம் கிடைக்கும் போதே அதனை சிறப்பாக பயன் படுத்திக் கொண்டு எதிர்காலத்திற்கும் தேவை என்று சிறுகச் சிறுக சேமிக்கும் ஒரு பழக்கத்தை நம்மில் சிலர் செய்ய மறந்து போகிறோம். இதையே இந்த பழமொழி ஊடாக நமது முன்னோர்கள் எத்தனை தெளிவாய் சொல்லி இருக்கிறார்கள். சேனைப் பயிர்ச் செய்கை முடிவுறும் வரைதான், அடுப்பில் பிட்டுப்பானை தினமும் வேகும் அது நிறைவுறும் போது அந்த பானை மீண்டும் அடுப்பி ற்கு செல்ல சோளம் மாவோ அல்லது அரிசி மாவோ இருப்பில் இருப்பதில்லை.
சேன - சேனை
ஒழிய - நிறைவுறுதல்/முடிவடைதல்
புட்டு - பிட்டு (உணவுப் பொருள்)
பான - பானை
எறக்கியாச்சி - இறக்கி வைக்கப்பட்டுவிட்டது

11. ' பாடு பாடு எண்டா பறயனும் பார்றலியாம் தான பாடினா தல தெறிக்கப் பாடுவானாம்'.

முற்காலத்தில் எமது கிராமப் புறங்களுக்கு, மன்னர்களின் / அரசாங்கத்தின் செய்திகளை அறிவிக்கும் தூதுவர்களாக பறயன்கள் (மேளம் வாசிக்கும் ஒரு பிரிவினர் - இவர்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்த வர்கள் - தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளுக்கு பறை/மேள /நாதஸ்வரம் போன்ற வாத்தியக் கருவி களை வாசிக்கக் கூடியவர்கள்) தவில் போன்ற மேளக் கருவிகளில் பறையடித்து மக்களை ஒரு இடத் திற்கு திரட்டி அந்த செய்திகளை அறிவிப்பார்கள். அது மாத்திரமன்றி இந்த பறையன்களை அழைத்து வந்து அக்காலத்து திருமண நிகழ்வோடு தொடர்புபட்ட ஒன்றான 'மருதோன்றி மறித்தல்' போன்ற நிகழ்வுகளுக்கும் ஏனைய பொது விழாக்களுக்கும் கூட இவர்களை அழைத்து வந்து மேளம் அடிக்க வைத்து, பாடவைத்து அந்த நிகழ்வுகளை சிறப்பிப்பார்கள்.

இதன்போது இந்த பறயன்களை பாடச் சொல்லி சிலர் கேட்டு அவனை துளைத்தெடுக்கும் போது அவனுக்கு பாட வராதாம் ஆனால் அவனாக விரும்பி பாட ஆரம்பித்துவிட்டால் பிறகு அவனை நிறுத்துவது சிரமமாகிவிடுமாம். இதையே வெளிப்படையாக பாடு பாடு எண்டா பறயனும் பார்றலியாம் - தான பாடினா தல தெறிக்கப் பாடுவானாம் என்று இந்த முதுமொழி சொல்கிறது.

இதன் மறுபுறம் பார்த்தோமானால் , ஒரு விடயத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களிடம் போய் அந்த விடயத்தை அந்த இடத்தில் வைத்து திடிரென செய்து காட்டும்படி வேண்டும் போது அவர்களால் அதை உடனே செய்து காட்ட முடியாமல் திண்டாடுவார்கள் அல்லது அவர்களை வெட்கம் ஆட் கொண்டு விடும் ஆனால் அவர்களாக விரும்பி அதனை செய்யும் போது அதனை சிறப்பாக செய்து முடிப்பார்கள். இவ்வாறான ஒரு நிலைமையை அவர்களுக்கு குத்தலாக சொல்லிக் காட்டுவதற்கு இந்த பழமொழியை நமது முன்னோர்கள் எத்தனை அற்புதமாகவும் நழினமாக நயமாகவும் சொல்லிக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
பறயன் - பறை / மேளம் அடிப்பவர்கள்
பார்றலியாம் - பாடுவதில்லையாம்
தான பாடினா - தானாக விரும்பி பாடினால்
தலதெறிக்க - தலை வெடித்துப் போகும் அளவு

12. 'கொட்டு நெல்லு கொறயயும் போடாதாம் மக்கள் குண்டி வாடயும் போடாதாம்'

பழங்காலத்தில் போடிமார்கள் (சொத்துக்கள் படைத்தவர்கள் / ஊர்ப்பெரியவர்கள்) பல ஏக்கர் அளவில் வேளாண்மை அறுவடை செய்து அவற்றை களஞ்சியங்களில் சேமித்து வைத்துக் கொள் வார்கள். அதே நேரம் நாளாந்த நுகர்வுக்கும், கேட்டு வரும் இல்லா ஏழை மக்களுக்கு கொடுக்கும் நோக்கிலும் 'கொட்டு' என்று என்று சொல்லப்படும் சிறிய அளவிலான நெல் சேமித்து வைக்கும் சாதனத்திற்குள் நெல்லை நிரப்பி வைத்துக் கொள்வார்கள். இதன் பொதுவான வடிவம் பச்சைப் பாக்கு ஒன்றை நேர்க்குத்தாக நாட்டி வைத்தது போல இருக்கும். குறட்டுக் கம்புகளால் இதன் பாக்கு வடிவ (Frame)செய்யப்பட்டு அதனுள் களிமண்னை கொண்டு செப்பனிட்டு நெல் நிரப்புவதற்கும் எடுப்பதற்கும் வழிகளை வைத்து அதன் கூரையை வைக்கோல் கொண்டு வேய்ந்து இதனை அம் மக்கள் வடிவமைப் பார்கள். இது போடிமார்களின் முற்றத்தில் அமைந்திருக்கும்.

இந்தப் போடிமார்கள் இயல்பாக கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்கள் இருந்த போதிலும் சில போடிமார்களுக்கு இரண்டு மனமும் வருவதுண்டு. மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் கொடுக்கும் போது தங்களிடம் இருக்கும் இருப்பு குறைந்து விடுமே என்ற கவலையும் வந்து விடும். இன்னும் தெளிவாக சொல்வதானால் 'கொட்டில்' உள்ள நெல்லு குறை யவும் கூடாது அதே வேளை பசியால் வாடும் ஊர் மக்களுக்கும் உதவ வேண்டும். இது எவ்வாறு முடியும்'? மனம் இரங் கும் அளவிற்கு கை நீளுவ தில்லை. இதைத்தான் இவ்வழகிய முது சொல் இவ்வாறு 'கொட்டு நெல்லுகொறயயும் போடா தாம் - மக்கள் குண்டி வாடயும் போடாதாம்' என்று சுட்டி நிற்கிறது. சட்டென கவர்ந்திழுக்கும் இந்த சொற்சாகசங்களை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கும் விதம் ஆராயும் போது நம்மை ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. இந்த முதிர்ந்த அனுபவங் களை எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் யாராலும் பெற்றுக் கொள்ள முடியாது. எந்த விஞ்ஞான மூலமும் இதனை கண்டு கொள்ள முடியாது.

கிராமத்து மக்களின் பண்பாட்டு விழுமியங்கள் திரண்டு கிடக்கும் இந்த பழஞ் சொற்கள் என்றென்றும் பேணிப் பாது காக்க வேண்டியவை. இனி ஒரு பொழுதும் இவற்றை நாம் உருவாக்கிவிட முடியாது. இந்த சொல் வளம், இதில் காணப்படும் இலக்கிய நயம், இதன் வளக்கு போன்றவை அக்காலத்து கிராமியத்திற்கே உரிய தனி முத்திரை. நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு கிராமிய சூழல் எத்தனை ரம்மியமாய் இருந்திருக்கிறது என்பதை இந்த முதுஞ் சொற்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும் போது நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. கிராமம் என்பது என்றென்றும் ஒரு அழகிய பூமியின் சுவர்க்கம்தான்
கொட்டு - ஒரு சிறு நெற்களஞ்சியம்
கொறயயும் போடாதாம - குறைவடையவும் கூடாதாம் /
ஆகாதாம்
குண்டி - வயிறு
வாடயும் போடதாம் - பசி ஏற்படவும் கூடாதாம் /
ஆகாதாம்

13. ' கொடுவார் பிச்சய கெடுவார் கெடுப்பதாம்'

' பிச்சை' என்ற சொல்லுக்கு 'யாசகம், ஒழுங்கு, சோற்று நுரை, பாக்கு, வரிசை, வாழை, தருமம், நூக்கம், மரகதம் என்றெல்லாம் அகராதியில் பொருள் இருந்தா லும் அது பாவிக்கப்படுவது யாசகம் என்பதற்கு மாத்தி ரமே. பிச்சை எடுப்பதென்பது உண்மையில் ஒரு விரும்பத் தகாத செயலாக இருந்தாலும் இன்று நம் சகோதரர்கள் பலர் அதனை ஒரு தொழிலாக செய்து கொண்டிருக் கிறார்கள். தற்போது இந்த யாசகம் கேட்போர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து மக்களுக்கு அது ஒரு சிரமத்தையே ஏற்படுத்தி விட்டதை நாம் தெளிவாக அவதானிக்கலாம் எப்படி யென்றால் - இந்த பிச்சைப் பாத்திரங் களுக்காய் ஒரு நாளை ஒதுக்கி அந்த நாளில் மட்டுமே பிச்சை வழங்கப் படும் ஒரு சம்பிரதாயம் இன்று பல நகரங்களில் உருவாகி வருகிறது. ஆனால் தர்மம் வழங்கு வது என்பது நம் எல்லோ ருக்கும் கடமையான ஒன்று அது நம்மை பல ஆபத்துக்களில் இருந்து இந்த உலகத்திலும் சரி மறு உலகத்திலும் சரி காக்கும் ஒரு சாதனம்.

நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம் இப்படி 'நான் கொடுத்த கைக் கொடைதான் என்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியது' என்று. அது மாத்திரமல் இறைதூதர் நபி முஹம்மது (ஸல்) அலை அவர்கள் கூறியிருக்கிறார்கள் இப்படி 'ஒரு பேரீச்சம் பழத்தின் பாதியையேனும் தர்மம் செய்து உங்களை நரகத்து நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்' என்று.

ஒருவன் யாசகம் கொடுக்க நினைத்தாலும் அதை இன்னொருவன் போய் தடுத்துவிடும் சில சந்தர்ப் பங்களும் ஏற்படுவதுண்டு. கை நீட்டும் பிச்சைக்காரன் ஒருவனுக்கு பிச்சையிட ஒருவன் எத்தனிக்கும் போது அவன் அருகே வீணே ஊர் வம்பளக்கும் ஒருவன் சொல்வான் 'இவனுக்கெல் லாம் பிச்சை போடக் கூடாது, கை கால்கள் நன்றாகத்தானே இருக்கிறது உழைத்துச் சாப்பிட வேண்டியதானே. பகலில் பிச்சை எடுக்கும் பணத்தில் இரவிற்கு போதை மருந்து அருந்துவார் கள்'என்று சொல்லி அதை கொடுக்காமல் தடுத்து விடுவார்கள். இதேபோல் யாராவது ஒரு ஏழைக்கு ஒரு தொகைப் பணத்தையோ அல்லது ஒரு கிணத்தையோ அல்லது ஒரு பெரும் பொருள் உதவியை யோ செய்ய எண்ணி அதை ஒருவனிடம் சொல்லும் போது கபட உள்ளம் கொண்ட அவர்கள் அதனை வீணான காரணங்களைச் சொல்லி தட்டிக் கழித்து விடுவார்கள். இதை முகத்தில் அறைந்தாற் போல் 'கொடுவார் பிச்சய கெடுவார் கெடுப்பதாம்' என்று சொல்கிறது.
கொடுவார் - கொடுக்க நினைப்பவன்
பிச்சய - பிச்சையினை
கெடுவார் - கெட்ட எண்ணம் கொண்டவர்கள் / கேடு
நினைப்பவர்கள்
(சுவை தொடரும்)

----------------------------------------------------------------------------------------------------------------------------------

சுய தோல்விக் கூறுகள்

- அஸ்ஸாம் ஸாதிக்

இன்றைய உளவியல் வாழ்வினதும் சிந்தனைகளினதும் திருகுதாளங்களை உய்த்தறியவும், எண்ணங்களின் புழங்குவழிகளை கண்டறிவானதிற்குமான வகையீடு என்பது மிகை நவிற்சியல்ல. சிந்தனாவோட்டங்களின் கோட்பாட்டு ரீதியான விளக்கத்தையும், மனிதனின் ஆழ்மனத்து உணர்ச்சிப் படிமங்களையும் எமக்கு எத்திவைப்பதில், அதைப் பகுத்துணர்வதில் இன்றைய நவீன உளவியல் வெற்றி கண்டுள்ளது எனலாம். பிராய்ட் (Frued), யுங் (Youn) போன்றோரது ஆய்வு முடிவுகள் வைத்தியத் துறையிலிருந்து கலையிலக்கிய விமர்சனக் கோட்பாடு வரை தாக்கம் செலுத்தியிருப்பது இதன் முக்கியத்துவத்தை எமக்கு நன்குணர்த்துகிறது.

அந்த வகையினூடாகத்தான் ஒரு மனிதனின் வாழ்க்கைச் செல்நெறிகளுக்குத் தேவையான முழுமொத்த உள ஆய்வியல் கோட் பாடுகளையது முன்வைக்கிறது. ஒருவனது சிந்தனை முயற்சி அல்லது எண்ணப்படிமத்தின் உந்துகை போன்றவற்றிலிருந்துதான் அவனது செயல்பாட்டு செல்திறன் அமைகிறது. ஏனெனில் மனிதனென்பவன் அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்களின் கூட்டுக்கலவை. அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் எனும் கண்ணாடியினூடாகத்தான் இவ்வுலகைப் பார்க்கிறான். ஆகவே அனுபவங்கள் அவனை எவ்வாறு ஆக்குகின்றன என்பதைப் பொறுத்துத்தான் அவனது சிந்தனை வீச்சு அமைய முடியும். எண்ணங்களின் வலிமை, ஊக்கமும் விடாமுயற்சியும் போன்ற தன்னூக்கத்திற்கும் (Self steem)தன்னார்வத்திற்கும் தேவையான இன்றியமையாத விடயங்களை ஒருவன் தன்னகப்படுத்திக் கொள்வதி னூடாகத்தான் அவனது செயல்படு வெற்றியின் தடைகளனைத்தையும் தாண்டிச் செல்லும் தைரியம் அவனுள் கருக்கொள்ளும்.

இவ்வாறான இயங்குவிதிகளை தகர்த்தெறிவதற்கான பல்வேறு அகவயற்காரணிகளும் எதிர் மறையம்சங்களும் நிறையவே எமது சூழலில் வெற்றிக்கான தடையாக அமைகிறது. ஆனால், சூழலின் அவ்வாறான தடைகளை நோக்காமல் முதலில் ஒரு முயற்சிக்கு எமக்குள்ளால் தடையாக அமைகின்ற அகம்சார்ந்த படிமப் பிரச்சினைகளை அறிந்து கொள்வது எந்தவொரு முயற்சியாண் மைக்கும் வெற்றியைத்தரும். எனவே எமக்குள்ளால் இருக்கின்ற வெற்றியினடைவைத் தடுக்கின்ற நிறைவு பெறாத உணர்வலைகளை இனங்காண்பது வெற்றியை எட்;டிப்பிடிப்பதில் மிக முக்கியம். எவ்வகையறாக்கள் தோல்விக்கு நம் சுயம் சார்ந்ததாய் அமைகின்றது என்பதை தெரிந்து அவற்றை ஆற்றுப்படுத்துவதன் மூலம் வெற்றி கொள்தலை அடைந்து கொள்ள முடியும். அப்படியான அகம்சார்ந்த தோல்விக் கூறுகளையே நாம் சுயதோல்விக் கூறு (Self defeating mechanism)அல்லது சுய அழிப்புச் சூத்திரம் (self sabotaging mechanism)என்கிறோம். அப்படியான நம் அகம் சார்ந்த தோல்விக்கூறுகளை மேலோட்டமாக என் சிந்தனைச் செறிவுக்குட்பட்டதாக விளக்க எத்தனிக்கிறேன்.

01. சுயம் அறியப்படாதிருத்தல்

ஒவ்வொருவரும் தனது அகம் சார்ந்து தான் கொண்டிருக்கும் புரிந்துணர்வே சுயத்தை அறிதல் என்போம். இது ஒவ்வொருவரது இயல்பூக்கத்திற்கும், எண்திறனுக்குமேற்ப வித்தியாசப்படும். தன்னைப்பற்றி யொருவன் கொண்டிருக்கும் மனோகற்பிதம் அல்லது உளப்படிமம் அவனுள்ளால் ஒரு உருவகத்தை தோற்றுவித்திருக்கும். இங்கேதான் அனுபவம் பற்றி நோக்க வேண்டும். அனுபவமென்பது வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களல்ல. அச்சம்பவங்கள் ஒருவனில் ஏற்படுத்தும் படிமமே ஆகும். உணர்திறன், பழக்கவழக்கம், விருப்பு வெறுப்பு போன்ற அனுபவ முரண்களின் தொகுப்படங்கிய ஒரு முழுமையான ஸ்தூலமொன்று அவனுள் உருவாகியிருக்கும். இதுவே அவனது எல்லா முயற்சிக்குமான அடிநாதமாயும், செயற்பாடுகளுக்கான ஊற்றுக்கண்ணாயும் ;அமையும். ஏனெனில் அவன் பெற்ற அனுபவங்கள்தான் அவன் சுயமாய் இருக்கும். மாறாக எதிர்மறை வியாக்கியானங்களால் ஒருவன் தன் சுயத்திற்கு உட்கற்பிதம் கொள்கிறபோது ஏற்படுகிற அனர்த்தம் வாழ்க்கையின் உண்மையான பாதையை தவற விடுவதற்கான முழு முதற்காரணியாக அமைகிறது. ஆகவே மனிதன் தன் சுயத்தை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதற்கு ~மாஸ்கோ| கூறும் படிநிலைத் தேவைகள் (heirarchy need) மூலம் நாம் ஒரு தீர்வுக்கு வரமுடியும். அவையாவன :

01. உடலியற் தேவைகள் (Biological needs)
02. பாதுகாப்புத் தேவைகள் (safty and security needs)
03. அன்பு, உடமை, உணர்வுத் தேவைகள்
(love and belonging needs)
04. தன் மதிப்புத் தேவைகள் (self steem needs)
05. தன்னை அறிதலாகிய தேவைகள்
(self actualization needs)

இவைகள் ஐந்தும் நிறைவேற்றப்படாவிட்டால் ஒருவன் தன்னையறிய முடியாது. ஆகவே இவ்வாறான தேவைகளை ஒருவன் பூர்த்தி செய்துகொள்வதன் மூலம் தன் சுயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இதில் மூன்று தேவைகள் நிறைவேற்றாப்படின் ஏற்படும் சிக்கல்களை நாம் அறிந்திருக்க முடியும். ஆனால் கடைசியிரண்டு தேவைகளும் பொதுவாக நிறைவேற்றப் படும் வீதம் ஏனையவற்றை விட மிகக்குறைவு. அதற்கான உதாரணத்தை கீழே நோக்குவோம். ஒரு இஸ்லாமியப் பிரச்சாரகர் என்கின்றபோது அவர் நீண்ட தாடி வைத்திருக்க வேண்டும். ஜுப்பா அணிந்திருக்க வேண்டும் போன்ற வரையா விதிகள் எம்முள் உருவாகும். ஆனால் ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் இவ்வாறான விதிகளுக்கு பொருந்தாதவராக இருக்கிறார். அவரது எழுத்துக்கள் சத்தியத்துக்காய் குரல் கொடுக்கிறது. இங்கே இவரே உண்மையிலே ~தாஈ|. ஆனால் சமூகம் கொண்டிருக்கின்ற ~தாஈ|க்கான கற்பிதம் இவரிடம் கிடையாது. இங்கே இருவகையான அகத்தை அறிவதற்கான தடைகள் காணப்பட முடியும். சமூகம் கொண்டிருக்கின்ற பிழையான கற்பிதம் சூழல் சார்ந்த தடையாக அமையும். ஆனால் அவ்வாறான சமூகத்தின் கெடுபிடிகள் இவரை களத்தை விட்டும் நகர்த்துமானால் அல்லது இவரை தாக்கமுறச் செய்யுமானால் அது அவருக்கு தன் சுயம் பற்றிய தெளிவான அறிவின் மையையே குறிக்கும். எனவே தம் சுயத்தை பற்றிய தெளிவான அறிவே எம் வாழ்வின் ஸ்திரத்தன்மையை காக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தன்னைப் புரிந்து கொள்வதில்தான் முயற்சியினால் கிடைக்கும் வெற்றியின் நிதர்சனம் தங்கியிருக்கும். சமூகத்தில் இவ்வாறான சுயமறிந்த மனிதர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே என்பதில் ஐயுறுவது தேவையற்றது. சுயமறிதலின் மிக முக்கியமான ஒன்றுதான் கொள்திறனை அல்லது செயற்திறனை கணித்தல், ஒரு செயலூக்கத்திற்கான அனைத்து பௌதீக பண்பாட்டு அம்சங்களும் எமக்கு சாதகமாய் உள்ளபோதும் உள்ளக அகவயக்காரணியில் ஒன்றான எம் சுயத்தின் கொள்திறன் (ளநடக உயியஉவைல) அதனைத் தாங்கும் திறனற்றிருக்கலாம். இதனை நாம் எவ்வாறு மதிப்பீடு செய்து கொள்கி றோமோ அதே போன்றுதான் எமது செயல்களுக்கான முயற்சித் தேர்வும் அமையும்.

02. அடிமைத்தனம் :

ஆண்டாண்டு காலமாக மனித மடமையின் உச்சம் இதில்தான் தங்கியிருக்கிறது. தன்னை தாழ்மைப்படுத்திக் கொள்ளும் மனப்பாங்கு ஒரு சமூகக் கட்டமைப்பில் எப்படித்தோற்றம் பெற்றிருக்கலாம் என்றெண்ணும் போது மனித வரலாற்றின் ஆரம்பம்வரை அதனாதிக்கம் நீண்டு செல்லலாம். சமூகத்தின் தனக்கான சுயதேவைப் பகிர்வு கிட்டாதபோது சமூகப் பெறுமானமற்ற பூச்சியம் புழுக்களாய் மனிதனின் மனம் கூர்ப்படையத் தொடங்கிவிடுகிறது. இயலாமையின் இருண்மையில் தன்னைப் பிணைத்துக் கொண்டு உலக யதார்த்தத்தை பார்க்காமல் இன்னொருவனுக்கோ அல்லது இன்னொன்றுக்கோ அடிமைப்பட்டுவிடும் அகவயம் சார்ந்த பண்பு மனிதத்தை புதைகுழி வரை கொண்டு சென்றுவிடும். வையகத்தை வசப்படுத்தும் ஆற்றல் பெற்ற மனித மனம் அடிமைத்தளையில், இயலாமையை விரட்ட விரக்தியுற்று இழிபெறுமானத்தை அணிகலனாகக் கொண்டு விடுகிறது. இது இயல்பானதா? அல்லது மனிதன் தானாக கொள்ளும் எண்ணவோட்டமோ என்று நினைக்கையில் நிதர்சனம் கற்பிதம் என்று புலப்படும்.

உளக்கற்பிதமே மனிதனின் பொல்லாத எதிரியும் அவனது சகாவும் போல் தோற்றம் தருகிறது. சரியாகவும் எதிராகவும் அவனுக்காக சிந்திக்கும் நண்பனாகவும், எதிரியாகவும் இதுவே அமைகின்றன. அவ்வகையான இருவேறுபட்ட முரண்களைக் கொண்ட மனதிலிருந்து அடிமைத்தனத்தை எவ்வாறு களைவதென்ற கேள்வி எல்லோருக்கும் இயல்பாக எழ முடியும். இதற்கான உள மருத்துவம் சிந்தனை நேர்த்தி அல்லது நேர்ச்சிந்தனை (positive thinnking) என்பதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது எனக்கருதலாம். எதையும் தனக்கெதிராய் சிந்திக்கும் மனோபாவத்தை தவிர்ப்பதற்கான வழி பிரச்சினைகளின் செல்நெறிகளையும், அதற்கான சூழ்நிலைகளையும் சரியாக சிந்திக்கும் திறனாற்றான் சாத்தியப்படலாம். குறிப்பிட்ட பிரச்சினை தனக்கு உண்மையிலே எதிராக இருந்தாலும் கூட உளத்திட்டம், தன்முனைப்பு கொண்ட எவரும் அதிலிருந்து தாக்கம் பெறமாட்டார்.

தன்முனைப்பு வாதமல்லாத உள்ளம் இயல்பாக அடிமைத்தளையில் வீழ்ந்து விடுகிறது. எனவே அடிமைத்தளை ஒருவனுக்கு ஏற்படுத்துவது அகம்சார்ந்த பிரச்சினை என்பதுபோல உயிர்த்தேவைக்கான புறவயக்காரணிகளான பணம், பதவி, பாலியல் தேவைகள் போன்றனவும் இவைகளை உண்டுபண்ண ஏதுவாய் அமைந்து விடுகின்றன. சமூகத் தளத்தில் இயங்கும் எல்லா மனிதர்களும் எல்லா வாழ் பெறுமானங்களுக்கான எத்தனங்களையும் பெற்றிருக்க மாட்டார்கள். மேற்கூறிய ஏதோவொரு தேவையின் உட்போதச் சரடு அவனுள் கட்டுண்டேயிருக்கும். இதுவே அவனுள் அடிமைத்தளை ஏற்பட காரணமாய் அமைந்து விடுகிறது.

சில சமூகக் கடப்பாடுகளுக்கும். பண்பாட்டு விழுமியங்களுக்கும் மனிதன் இயல்பாகவே கட்டுப்பட்டு வாழ வேண்டியிருக்கிறது. இல்லாவிடின் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாத மனித வாழ்க்கை மிருகங்களைப் போல் வாழ மனிதனை நிர்ப்பந்தித்து விடும். இங்கேதான் மொத்தமாக இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைத் திட்டம் எவ்வாறு மனிதனை செம்மைப்படுத்துகிறது என்பதைச் சிந்திக்கின் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவர முடியும். ஆகவே இஸ்லாம் என்கின்ற வாழ்வொழுங்கு மட்டுமே சரியான கடவுள் கொள்கையைக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவுக்கேற்ற இதன் சிறப்பை பேச ஆரம்பித்தால் அதுவே வேறு தலைப்பாகிவிடும். எனவே இவை தவிர்ந்த மனிதனைக் கட்டுப்படுத்துகிற ஏனையவை அனைத்தும் அவனது செயலூக்கத்தை குறைக்கும் அடிமைத்தனமே என்பதில் யார்தான் ஐயுறுவர்?

03. ஆதிக்க வெறி :

ஆதிக்கமென்பது எல்லா உள்ளங்களுக்கும் இருக்க வேண்டியவொன்று. எல்லாவற்றையும் மிகைக்க வேண்டுமென்பதில்தான் மனிதன் வெற்றியின் விளிம்பை நோக்கி நடைபயில கற்றுக் கொள்கிறான். இவை ஆதிக்க உணர்வின் ஒருபக்க நியாயமாக இருந்தாலும் கூட உள்ளத்தை குத்திக் கிழிக்கும் நோயாக காலப்போக்கில் இது மாற்றமடையத் தொடங்கிவிடுகிறது. அளவோடு பேணப்பட வேண்டிய ஆதிக்க உணர்வு வெறியாக மாறி வெற்றிக்கான செல்நெறிகளை தகர்த்தெறியும் சுயதோல்விக் கூறின் அடிப்படையாக அமைந்து விடுகிறது.

ஆதிக்க வெறியின் நிஷ்டூரம் வரலாற்றின் இயங்கியல் பூராகவும் தோற்றம் பெற்றிருக்கிறது. இனம் சார்ந்த ஆதிக்கம் மொழி சார்ந்ததாகவும் பின் மதம் சார்ந்ததாகவும் மாறி மனித இனத்தின் அழிவை எமக்கு பறைசாற்றியிருக்கிறது. ஆதிக்க வெறியென்பது ஒரு வகையான ஆற்றாமையின் வெளிப்பாடு. தோல்வியைத் தாங்க இயலாமையினால் ஏற்படும் பொறாமையின் கூரிய ஆயுதமாகவும் இது செயற்படுகிறது.

உணர்வுகளின் உச்சஸ்தாயியைக் குலைத்து விடும், வாழ்வின் நித்தியத்தை அசத்தியமாக மாற்றிவிடுகின்ற இவ்வுணர்வுகள் பற்றிய அறிவு குறை மனப்பாங்கை இட்டு நிரப்ப உதவும். ஒரு போராட்டத்தில் பொதுவாக ஆதிக்க மனப்பாங்கே அதிகமிருக்கும். ஆனால் இஸ்லாமியப் பார்வையில் இறைவனின் சத்தியம் ஓங்கவே போராட்டம் தேவை என்று கட்டுப்படுத்தி வைப்பதினூடாக போராட்டங்களினால் கிடைக்கும் வெற்றியை தனியொரு நபர் மட்டும் அனுபவிக்கும் அவலம் இஸ்லாமிய எழுச்சியில் நிகழ்வதே இல்லை.

சுயதோல்விக்கூறுகள் என இனங்காணப்படுபவைகள் இவைகள்தான். இவைகளைத் தவிர்த்தால் வெற்றியின் வாசலில் நிற்போம். இல்லாவிட்டால் தோல்வியின் தூக்கு மேடையில் எமது முயற்சிகள் கழுவேறிக் கொண்டேயிருக்கும். ஆழ்ந்து சிந்திக்கின்றபோது இவைகளற்ற வாழ்வுக்கு இவ்வுலகில் இஸ்லாம் என்ற ஒற்றைப் பெயரே இருக்கும்.


உசாத்துணைகள் :

1. புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை
- மு. திருவள்ளுவனார்
2. புதியதோர் உலகம் செய்வோம்
- இரா. கோபிநாத்
3. நவீன கோட்பாட்டு ஆய்வுகள்
- முனைவர் பொ.நா. கமலா
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏட்டில் எழுதி வைத்தேன்
- அன்புடீன்

மன ஏட்டில் எழுதி வைத்த மறக்க முடியாத இலக்கிய நிகழ்வுகள் எத்தனையோ இருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்வும் பல பரிணாமங்களைத் தந்தவை. அவைகளை ஞாபகப்படுத்துவதும், புதிய தலைமுறையினரோடு பகிர்ந்து கொள்வதும் பிரயோசனம் தரக் கூடியவை. உண்மையில் நமது இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் எழுதுவதோடு மட்டும் நில்லாது, அவைகளை அரங்கேற்றுவதிலும், மக்கள் மயப்படுத்துவதிலும் காட்டி வந்த ஆர்வத்தையும், அதனாலான வளர்ச்சியை; எடுத்தாளுவதும் அவைகளை எழுதி ஆவணப்படுத்துவதும் வரலாற்றுப் பதிவுகள்தான். அப்படி எனது கைக்கடக்கமான இலக்கியக் காட்சிகளை மனத்திரைப்படுத்துவதே இக்கட்டுரையில் நோக்கமாகும்.

1983.03.06ஆம் நாள் அட்டாளைச்சேனை பொதுசன நூலக ஆலோசனைக்குழு கலைவாதி கலீலின் ~ஒரு வெள்ளி ரூபாய்| சிறுகதை தொகுதிக்கான அறிமுக விழாவை அட்டாளைச்சேனை பொதுசன நூலக மண்டபத்தில் நடத்தியது. வளர்ந்தோர் கல்வியதிகாரி (மர்ஹ{ம்) அல்ஹாஜ் ஈ.எல்.எச். சுலைமாலெவ்வை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர், அதிபர் எம்.ஐ. உதுமாலெவ்வை (பொத்துவில் முன்னாள் முதல்வர், அவர் அப்போது பாராளுமன்ற உறுப்பினர் அல்ல) விவசாய அதிகார சபை முகாமையாளர் (மர்ஹ{ம்) எம்.ஐ அகமது லெவ்வை ஆகியோர் விழாவுக்கு ஆசியுரை வழங்கினர். அன்புடீன் அறிமுகவுரை வழங்க மருதூர்க் கொத்தன், பஸீல் காரியப்பர் சண்முகம் சிவலிங்கம், பாலமுனை பாறூக், வி. ஆனந்தன் ஆகியோர் ஆய்வுரைகள் வழங்கினர். அட்டாளைச்சேனை பிரதேசசபை பிரதம இலிகிதர் எம். சிறாஜ் அஹமது நன்றியுரை வழங்கினார். 25 உள்ர்ர் பிரமுகர்கள் ~ஒரு வெள்ளி ரூபாய்| பிரதிகளை வாங்கி ஊக்கமளித்தனர்.

~அக்கரைப்பற்று பாரதி நூற்றாண்டு விழாக்குழு| என்ற ஓர் அமைப்பு மகாகவி சுப்பிரமணிய பாரதியின்; நூற்றாண்டு பரிசளிப்பு விழா வொன்றினை 1983.11.05 ஆம் திகதி அக்கரைப்பற்று பாரதி மண்டபத்தில் நடத்தியது. கருத்தரங்கு, கவியரங்கு இசையரங்கு என்ற மூன்று அங்கங்களாக நடைபெற்ற மேற்படி விழாவுக்கு பொதுத் தலைவராக இலங்கை சின்மயாமிசன் தலைவர் கே.வி. சோமசுந்தரம் இலங்கை உதவி பொலிஸ் அதியட்சகர் எஸ்.எஸ். நவரெத்தினராசா மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார். பாரதியாரின் படத்திரை நீக்கம் பிரதம கல்வியதிகாரி எம்.ஐ.எம். ஷெரிப்பினால் நிகழ்த்தப்பட்டது. இலங்கை, தமிழர் ஆசிரியர் சங்க பெருந்தலைவர் டி.எஸ்.கே. வணசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கவிஞர் கந்தையா ஓடாவியார் அரங்காக நிகழ்ந்த முதல் அங்கம் கருத்தரங்குக்கு கே.வி. சோம சுந்தரம் தலைமை தாங்க, செல்விகள் பா. உதயகலா, கோ. கலாவதி இருவரும் தமிழ்தாய் வாழ்த்துப் பாடினர். வணபிதா எஸ்.எஸ். பிலிப் ஆசியுரை வழங்க, பண்டிதர் க. கதிர்காமத்தம்பி 'கவிஞர் கந்தையா ஓடாவியர்' என்ற தலைப்பிலும், புலவர் ஏ. டபிள்யு, அரியநாயகம் 'பாரதி கண்ட யுகமாற்றம் என்ற பொருளிலும் கருத்துரை வழங்கினர்.

கவிஞர் ஐ. பூபாலப்பிள்ளை (உதயகவி) அரங்கமாக இரண்டாவது அங்கம் கவியரங்கு நடைபெற்றது. சைவப் புலவர் கே. சாமித்தம்பி கவிஞர் உதயகவி பற்றி கருத்தோதிய பின் சிரேஷ்ட சட்டத்தரணி, கவிஞர் எம்.எச்.எம். அஷ்ரஃப் தலைமையில் ~இனி ஒரு விதி செய்வோம் என்ற தலைப்பில் கவியரங்கு நடைபெற்றது. அரங்கில் காலத்தால் மூத்த கவிஞர்கள் பாண்டியூரன், ஜீவா-ஜீவரத்தினம், மு. சடாட்சரம் ஆகியோருடன் இளைய தலைமுறை கவிஞர்கள் அன்புடீன், பாலமுனை பாறூக் ஆகியோர் இணைந்து கவிதை பாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டமையும், மட்டுமல்லாது இளைய தலை முறை கவிஞரொருவர் மூத்த தலைமுறைக் கவிஞர்கள் கலந்துகொள்ளும் கவியரங்குக்கு தலைமை தாங்க சந்தர்ப் பம் வழங்கியமையும் இவ்விழாவில் நடந்த புரட்சியான நிகழ்ச்சியாகும்.

கோளாவில் பெருங்கவிஞர் மொட்டை வேலாப் போடியார் அரங்காக மூன்றாவது அங்கம் இசையரங்கு நடந்தேறியது. இசையரங்குக்கு சிவஸ்ரீ இலி, சிவஞான செல்வக் குருக்கள் தலைமை தாங்க, கவிஞர் மொட்டை வேலாப் போடியார் பற்றிய அறிமுக சிறப்புரையை சி. சிவஞானமூர்த்தி நிகழ்த்தினார். மட்டுநகர் விபுலாந்த இசை நடனக் கல்லூரியின் இசைமேதை சங்கீத பூஷணம் ஆர். நடராஜன் குழுவினரின் பாரதிபாடல்களின் இசைவார்ப்பு இசை நிகழ்ச்சி விழாவுக்கு மெருகூட்டிற்று.

விழாவின் இறுதியில் உலக ஆஸ்கார் தங்க விருது பெற்ற திரை ஓவியம் 'மகாத்மா காந்தி' அக்கரைப்பற்று நாதன்ஸ் ஸ்ரூடியோ நிறுவனத்தினால் காண்பிக்கப்பட்டது.

18.01.1984இல் தினகரன் வாசகர் வட்டம் என்ற பெயரில் ஒருகலை இலக்கிய அரங்க அமைப்பு உதயமா னது. அதன் அமைப்பாளராகவும், ஆலோசகராகவும் அன்புடீன் விளங்க, எம். சிறாஜ் அஹமது இனியவன் இசார்தீன் இருவரும் தலைவர், செயலாளராக செயற்பட்டனர்.

ஒவ்வொரு நோன்மதி நாளிலும் ~நிலவிலே பேசுவோம்| என்னும் இலக்கிய அரங்கம் நடைபெற்றது. அரங்கில், 'வளரும் பயிர்' என்னும் அம்சத்தில் புதிய தலைமுறை எழுத்தாளர்களது இலக்கியப் படைப்புகள் அரங்கேற்றப்பட்டன. 'என்னைக் கவர்ந்த கதை/கவிதை' என்னும் அம்சத்தில் ஒவ்வொரு மாதத்திலும் பத்திரிககைளில் சஞ்சிகைகளில் வெளிவந்த கதை, கவிதைகளை வாசகர்கள் விமர்சனம் செய்தனர். தன்னைக் கவர்ந்த கதை, கவிதை எது? அவை தன்னைக் கவரக் காரணம் என்ன? அதன் சிறப்பம்சம் எத்தகையது?' போன்ற வினாக்களை வாசகர்கள் தமக்குள்ளே எழுப்பி அதற்கான விடைகளை விமர்சனங்களாக அரங்கில் முன் வைத்தனர்.

~எழுத்தாளர் அறிமுகம்| - என்ற அம்சத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மூத்த எழுத்தாளர் இரசிகர்களுக்கு நேரடியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். குறிப்பாக அதில் எழுத்தாளர்கள் தங்களது எழுத்துலக அனுபவங்களையும், படைப்புக்களின் எழுத்து உருவாக்கங்கள் பற்றியும் கருத்துரைத்தனர். மேலும் ஈழத்தில் புதிதாக வெளிவரும் கலை, இலக்கிய சஞ்சிகைகள், நூல்கள் போன்றவற்றை வாசகர்வட்டம் கொள்வனவு செய்வதோடு அவற்றுக்கான அறிமுக, விமர்சன நிகழ்வுகளையம் ~நிலவிலே பேசுவோம்| நிகழ்விலே சேர்த்து அரங்கேற்றம் செய்தனர்.

09.07.1984இல் நடைபெற்ற வாசகர் வட்டத்தின் ~நிலவிலே பேசுவோம்| நிகழ்வு, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை அதிபர் எஸ்.எச்.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்றது. அன்புடீனின் அறிமுகவுரை யோடு ஆரம்பமான அன்றைய நிகழ்வில், பாலமுனை பாறூக் 'மல்லிகை' 20ஆவது ஆண்டுமலரை விமர்சனம் செய்தார். எம்.ஏ. நுஃமானின் கவிதை போக்குகள் பற்றி எச்.எம். பாறூக்கும், அ.ஸ. அப்துஸ்ஸமதுவின் கதைப்போக்ககள் பற்றி வி.ஆனந்தனும் கருத்துரைத்தனர். அத்தோடு நுஃமானின் கவிதைகளது கவிதா நிகழ்வும், அ.ஸவினது கதைகளது கதை நிகழ்வும் வட்ட உறுப்பினர்களால் அரங்கேற்றமானது. 'மல்லிகை' இருபதாவது ஆண்டு நிறைவை கவுரவிக்கும் முகமாக அன்புடீனால் அன்பளிப்பு செய்யப்பட்ட இதுவரை காலமும் வெளிவந்த மல்லிகைப் பிரதிகள் விழாவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை வாசகர் வட்டம் ஒவ்வொரு நோன்மதி நாளிலும் நடத்தும் 'நிலவிலே பேசு வோம்' - இலக்கிய கதம்ப நிகழ்ச்சியின் ஆறாவது நிகழ்வு 17.08.1984இல் அட்டாளைச்சேனை பொதுசன நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் மௌலவி எம்.எச்.எம். புகாரியின் 'முத்தாரம்' கவிதை நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

ஆய்வரங்குக்கு அட்டாளைச்சேனை மத்திய மகாவித்தியாலய அதிபர் எம்.ஏ. உதுமாலெவ்வை தலைமை வகித்தார். கவிஞர் அன்புடீன் அறிமுகவுரை வழங்குகையில்.... ''தமிழ் இலக்கிய வடிவங்க ளுள் காலத்தால் மூத்தது கவிதை. சங்ககாலம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டுவரையும் தமிழ் கவிதை, அரசர்களையும், பிரபுக்களையம், கடவுளர்களையும் துதிபாடும் ஒரு வடிவமாகவே இருந்து வந்திருக்கிறது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வருகையின் பின்னரே கவிதை கட்ட விழ்க்கப்பட்டு மனித பிரச்சினைகளையும் தேவைகளையும், கால நிகழ்வுகளையும் கருவாகக் கொள்ளும் களமாக மாற்றமடைந்தது. சமயத்தை பாடிய கவிதை சமூகத்தை பாடத் தொடங்கியது பாரதியின் வருகையின் பின்னரே என்று சொல்ல வேண்டும். பாரதிக்குப் பின் கவிதை இரண்டு பிரிவு களாக பிரிந்து சென்றது. ஒன்று யாப்பு நெறிக்குட்பட்ட கவிதை. மற்றது வசன கவிதை என்ற வழங்கப்படும் புதுக்கவிதை.

பாரதியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த புதிய சகாப்தம் பாரதியை தொடர்ந்து பாரதிதாசன், தேசிய விநாயகம்பிள்ளை, கலைவாணன் போன்றோராலும் இவர்களைத் தொடர்ந்து கண்ணதாசன், முடியரசன், வாணிதாசன் போன்றவர்களாலும் அதன் பின்னர் ப. ஜீவானந்தம், சிதம்பர ரகுநாதன் போன்றோராலும், யாப்பு நெறி தவறாமல் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இதே வரிசையை 1940ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் வளர்த்தெடுத்தவர்களுள் மகாகவி, நீலவணன், முருகையன், கந்தசாமி, புரட்சிக்கமால் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஈழத்து கவிதை வளர்ச்சியில் இஸ்லாமியப் புலவர்களினதும், கவிஞர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது. புலவர்களுள் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர், அசனார் லெவ்வை புலவர், அப்துல் ரகுமான் புலவர், சின்ன ஆலிம் அப்பா முதலானோர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள். ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் புரட்சிக்காமல் அண்ணல் அப்துல் காதர் லெவ்வை எம்.ஸி.எம். சுபையிர், யுவன் கபூர், ஏ. இக்பால இப்படி பட்டியல் நீளும்.

இலங்கை இஸ்லாமியக் கவிஞர்களுள் மாறுபட்டவர் கவிஞர் எம்.எச்.எம். புகாரி காரணம் அவர் மௌலவியாகக இருப்பதுதான். கவிதை பற்றியும் இசை வடிவம் பற்றியும் இஸ்லாமியர்களுக்குள் முரண்பாடான கருத்துகள் நிலவும்போது மௌலவி புகாரி போன்றவர்கள் இத்துறையில் ஈடுபட்டுவருவது இத்துறைக்கு புத்துயிரும், புத்தெழுச்சியும் ஊட்டுவதாகும்'' என்றார்.

விழாவின் தலைவர் எம்.ஏ. உதுமாலெவ்வை தலைமை உரைக்கையில்.... ''இப்பொழுதெல்லாம் ஈழத்து முஸ்லிம் இலக்கியப் படைப்பாளர்களது இலக்கியப் படைப்புக்கள் யதார்த்த பூர்வமானதா கவும், உணர்வு பூர்வமானதாகவும் அமைந்து வருவதனை அவதானிக்க முடிகிறது. முஸ்லிம் கவிஞர்கள் பாரதியையும், பாரதிதாசனையும் பின்பற்றி லேசு தமிழில் சமுதாயக் கருத்துக்களை சீர்திருத்தக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி கவிதை எழுதுபவர்களுள் முதன்மையானவர் ஏறாவூரைச் சேர்ந்த புரட்சிக்கமால் ஸாலிஹ், கிண்ணியாக் கவிஞர் அண்ணல் சாலிஹ், காத்தான் குடிக் கவிஞர் அப்துல் காதர் லெப்பை, மருதமுனை புலவர்மணி ஆ.மு. ஷரிபுதீன், கல்ஹின்னைக் கவிஞர் எம்.சி.எம். சுபைர், கல்முனைக் கவிஞர்கள் எம்.ஏ. நுஃமான், பஸீல் காரியப்பர், அன்பு முகைதீன், பதுளைக் கவிஞர் சாரணா கையூம், மன்னார் கலைவாதி கலீல், சம்மாந்துறை ஈழமேகம் பக்கீர்த்தம்பி, பொத்துவில் யுவன், அக்கரைப்பற்று ஏ. இக்பால், பாலமுனை அன்புடீன், பாறூக் இவர்க ளெல்லாம் ஈழத்துக் கவிதை வளர்ச்சிக்கு உதவிவரும் முஸ்லிம் கவிஞர்களின் பட்டியலில் இடம் பெறக் கூடியவர்கள் என்றார் அவர். விழாவில் பிரதம அதிதியாகப் பங்கு கொண்டு அ.ஸ. அப்துஸ் ஸமது கருத்துரைத்தார். கவிதை என்பது வெறும் சொற்கூட்டத்தால் ஆன சீர் அல்ல. கவிதையில் நல்ல கருத்தும் பொருட்செறிவும், அழகும் உணர்வோட்டமும் அடங்கியிருக்க வேண்டும். கலை இலக்கிய வடிவங்களுள் கவிதை மிக இரசனைக்குரியது. கச்சிதமானது. ஏனைய கலைவடிவங்க ளைப் பயன்படுத்தி கருத்துக்களைச் சொல்வதிலும் பார்க்க கவிதையில் மிக இரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட முடியும். நாவலிலோ, சிறுகதைகளிலோ பக்கங்களைக் கூட்டிக் கொண்டிருப்பது போல கவிதையிலே கூட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனாலும் கவிதை வடிவம் மற்ற வடிவங்களிலிருந்து மாறுபடுகின்றது.

கவிதைகளையும், கவிஞர்களையும் இஸ்லாம் புறக்கணிப்பதாக சில கருத்துக்கள் உலவுவதுண்டு. கவிதை கற்பனாவாதம் நிறைந்தது. கவிஞர்கள் பொய்யை கற்பனை செய்பவர்கள். அவர்களது கற்பனைகளை நம்பக்கூடாது என்று வாதிடுவதும் உண்டு.

கவிஞர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன மிகக்குறைந்த கருத்துக்களை வைத்துக் கொண்டு கவிஞர்களை நம்புவதும், கவிதைகளை அங்கிகரிப்பதும் பிழை என்று சிலர் சொல்ல முயல்வது மிகப்பிழையான கருத்தாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கவிஞர்களை வாழ்த்தி இருக்கின்றார்கள். கவி ஞர்களை கவிதைகள் பாடவைத்து கேட்டிருக்கிறார்கள். புனித தலங்களிலே கவிதைகளை பாட வைத்துள்ளார்கள். தாங்களும் கவிதை நடையில் பேசியிருக்கிறார்கள். ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யுத்தம் ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர்களது புனித விரலொன்றில் சிறிது காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டத் துவங்கி விட்டது. அப்போது அவர்கள் தனது விரலைப் பார்த்து.....

ஓ.. என் இனிய விரலே
நீ
வேதனைக்கு ஆளாகிவிட்டாயா?
நீ வேதனைப் படாதே
உன் வேதனை
நம் சமூக வெற்றிக்கு...

என்ற கருத்துப்பட ஒரு கவிதை வடிவிலான இசையோட்டத்தில் தனது விரலுக்கு ஆறுதல் சொல்லி யதாக சரித்திரங்கள் இருக்கின்றன.

கவிதையை மாத்திரமல்ல, பாடல்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாடுவதற்கு அனுமதி யளித்தி ருக்கிறார்கள். ஒரு சமயம் ஆயிஷா ரழி (நாயகத்தின் மனைவி) அவர்களது இல்லத்தில் நபிகள் நாயகம் (ஸல்) துயில் கொண்டிருக்கும்போது ஒரு தெருப்பாடகன் அங்கே வந்து பாடிக் கொண்டு நின்றான். அப்போது ஆயிஷா பிராட்டியார் வெளியே வந்து அந்தப் பாடகனைப் பார்த்து ''ஏ.. பாடகனே உள்ளே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்போது பாட்டுப் பாடலாமா? பாடாமல் போய்விடு'' என்று கூறியிருக்கிறார். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவைத் தடுத்து ''அப்பாடகன் பாடிவிட்டுப் போகட்டும். அவனை அவன் வழியில் விட்டுவிடுங்கள்'' என்று சொல்லி விட்டு வாசல் பக்கமாக தலைவைத்துப் படுத்திருந்த நாயகம் அவர்கள் சுவர்ப்பக்கமாக முகத்தை திருப்பி வைத்து படுத்தார்களாம். இதனை வைத்து நாம் எந்த முடிவுக்கு வருவது? நபிகள் நாயகம் பாடலை வெறுத்தார்களா? ஆதரித்தார்களா? என்பதை முடிவெடுக்க வேண்டியது நம்மைப் பொறுத்தது.

கவிதைதான் இசைவடிவம் பெற்று பாடலாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கைத் திட்டங் களையும் நடைமுறைகளையும் ஹதீஸ்களையும் கவிஞர்கள் கவிதை வடிவிலும், இசை வடிவிலும் பாடி வருவதனை நமது சமூகம் அவதானித்தும், அனுமதித்தும் வந்திருக்கின்றது, வருகிறது. நாயகத்தின் வாழ்க்கைப் பக்கங்களை இலக்கிய வடிவங்களுள் ஒன்றான கவிதையில் வடிக்க முடியுமாயின் அவைகளை இஸ்லாமிய ஷரிஅத்துக்கு உட்பட்டவகையில் ஏன் புனைகதை வடிவில் வடிக்கக் கூடாது? என்று கேட்க விரும்புகிறேன். இதன் பரீட்சாத்தமாக 1969 ம் ஆண்டு சிந்தாமணிப் பத்திரிகையில் ஈர்ப்பு எனும் சிறுகதை எழுதினேன். அக்கதை முஸ்லிம் சமூகத்தவர் களிடம் பாரிய வரவேற்பைப் பெற்றது மாத்திரமல்லாது இந்தியாவிலிருந்து வெளிவரும் ஒரு இஸ்லாமிய சஞ்சி கையிலும் அக்கதை மறுபிரசுரம் பெற்றது. இஸ்லாமியர் களது கலை, கலாசாரங் களை எப்படிப இல்கியமாக்குவது என்று விடுப்பவர்கள் எனது 'ஈர்ப்பு' கதையினைப் படித்துப் பார்க்க வேண்டுமென்பது எனது அடக்கமான வேண்டுகோளாகும்.

அன்றைய கூட்டத்தில் 'முத்தாரம்' கவிதை நூல் பற்றி எம். சிறாஜ் அஹமட், பாலமுனை பாறூக், என். சம்சுடீன் ஆகியோர் ஆய்வுரைகள் நிகழ்;த்தினர்.

இறுதியாக வளர்ந்தோர் கல்வியதிகாரி ஈ.எல்.எச். சுலைமாலெப்பை 'முத்தாரம்' கவிதை நூலைப் பாராட்டி பாவாரம் செய்தார். இனியவன் இசார்தீன் கனவுகளையும் கைது செய்பவர்கள் எனும் கவிதை ஒன்றினை வாசித்தார்.

ஏடு இன்னும் மூடப்படவில்லை)
------------------------------------------------------------------------------------------------------------------------------------

Contact

Web:
www.peruveli.blogspot.com & www.peruveliethal.wordpress.com

Email:
perueliethal@gmail.com, peruveligroup@yahoo.com , peruveli@hotmail.com