Monday, August 25, 2008

வாசிப்புப் பிரதிகள்

எழுதப்பட வேண்டிய வரலாற்றின் ஒரு வரியாய் எழுதப்பட்ட
விடத்தல் தீவு
முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்.


- அப்துல் றாசீக்

போராட்டங்கள் தம் பாதைகளினை விட்டும் மாறிச்செல்லும் போக்கினை உலகம் தன் ஆரம்ப காலங்களில் இருந்து அனுபவித்தே வந்துள்ளது. மிக மோசமான வன்முறைகளை விடுதலைப் போராட்டங்கள் என்ற பெயரில் தொடங்கப்பட்டவைகளும் செய்து முடித்துள்ளன. அரச பயங்கரவாதத்தின் வன்முறைகளை எதிர்த்த
விடுதலைப் பயங்கரவாதம் சம நிலையான அடக்குமுறை /வன்முறை களை வெளிப்படுத்தியுள்ளது. தன் சார்புக்கொள்கைக்காய் போராடும் போது ஏனைய அனைத்தின் மீதும் எல்லையற்ற வன்முறைகளை வெளிப்படுத்துமொன்றாய் விடுதலைப் போராட்டங்கள் மாறிவிட்டது தூர்ப்பாக்கியமே. போராளிகள் தீவிரவாதிகள் என்ற அச்சம் இதனால்தான் ஏற்பட்டது. பயங்கரவாதம் என்பதன் பின்னிருக்கும் முக மூடிய அரசியல் பதம் ஆக்கிரமிப்பிற்கும் பழிவாங்குவதற்குமான ஒன்றின் உருவத்தினையே கொண்டுள்ளது. அரசுகளை எதிர்ப்பதே பயங்கரவாதம் என்ற எழுதப்படாத விதிகள் இன்றைய உதவித்தொகைகளினை பெற்றுக்கொள்ளவும், பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்பதன் ஊடாய் நவீன காலனீயத்தினை ஏற்படுத்தவும் நன்றாகவே பயன் படுத்தப்படுகிறது. மேற்கிற்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான மிக நீண்ட வரலாற்றுப் பகை முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளது. இந்த நீண்ட வரலாற்றுப் பகை பல்வேறு காலகட்டங்களில் பல தரப்பினரால் கையேற்கப்பட்ட தாகும். அதே நேரம் முஸ்லிம்கள் மீதான பயங்கரவாதம் மிக மோசமாக கையாளப்பட்டுள்ளதனை உலகம் மறைப்பது என்ன நியாயம்? அதிகாரங்களே வரலாற்றினை எழுதுவதன் மிகக்கடும் கொடுமை இதுதான்.

பயங்கரவாதிகளாக அமெரிக்காவும் மேற்கும் குறிப்பிடும் முஸ்லிம் நபர்களிற்கும், இந்த நாடுகளிற்கும் / நிறுவனங் களிற்கும் இடையிலான வணிக மற்றும் பணப் பரிமாற்றத் தொடர்புகளை மறந்தே உலகம் தன் போரியல் வரலாற்றினை எழுதிக்கொண்டிருக்கிறது. அப்படியாயின் வரலாற்றின் ஆரம்பம் தொட்டே பரம்பரையாக தம் சொந்த நிலங்களில் வாழ்ந்த சோனக முஸ்லிம்களை விரட்டி விரட்டயடித்த கைங்கரியம் மட்டும் உலகின் கண்களுக்கு தெரிவதில்லையோ..? மண்ணாங்கட்டி துன்பியல் சம்பவம். சிங்கள அரச அதிகாரம் தனக்கான இருப்பிற்காய் புதிய புதிய வரலாற்று நெய்தல்களை காலா காலத்தில் அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறது. அமைதியே உருவான மிகப் பெரிய ஆளுமையினைக் கொண்ட புத்தரின் ஆடையுடன் இன்று வெறிபிடித்து தேச நிர்மாணிகளாக வலம்வரும் சங்கைக்குரியவர்கள் முட்டையில் மசிர் பிடுங்குவது போல இல்லாத வரலாற்றிற்காய் அலைந்து திரிதலை என்னவென்று சொல்வது. றுகுணு பிரதேச மன்னனொருவன் சேருவில விகாரையின் பெரகராவிற்காய் அம்பாரை, தீகவாபி, வெறுகல் ஓயா ஊடாய் சென்றுள்ளாராம். அந்த மன்னர் சென்ற வரலாற்றுப் பாதையினை இன்றைய வரலாற்று ஜனாதிபதி கிழக்கு அபிவிருத்தியினூடாய் புதிய பாதையாகப் பெற்றுத் தந்திருப்பதாய் புத்தரின் தோழரொருவர் தொலைக்
காட்சிப் பேட்டியொன்றில் பிதற்றுகிறார். இதே போல்தான் தமிழர்களும் தமக்கான ஒரு வரலாற்றுடன் இருக்கின்றனர்.

இந்த வரலாற்றின் பொய்மைகளை ஏறி மிதித்துக் கொண்டு ~விடத்தல் தீவு முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்| என்ற ஆவண நூல் வெளிவந்துள்ளது. அந்நூலை மிக வேகமான வாசிப்புச் செய்தேன். அப்போது ஒரு விடயம் பற்றி நாடு பிடிக்கும் சிங்கள வெறியர்களிடமும் தமிழ் தீவிரவாதத்தின் கேடு கெட்ட தலைமைகளிடமும் கேட்க வேண்டும் போல் இருந்தது. ~நீங்கள் எழுதித்தள்ளிய அனைத்தும் பொய்யான வரலாறுகளின் மீதும் ஒட்டு மொத்த முஸ்லிம் தேசமும் தன் எதிர்கதையா டலினை முன்வைக்கிறது. பாடப் புத்தகங் களின் ஊடாக நீங்கள் அடிக்கடி மாற்றிவரும் வரலாற்றுப் பொய்மைகளை விடத்தல் தீவு முஸ்லிங்களும் தங்களின் வரலாற்று நூலினால் மறுத்துவிட்டார்கள். இப்போது உங்களின் வரலாற்றினை மீளவும் மாற்ற வேண்டிய தேவை வந்திருக்குமே..|

அந்த நூலிலிருந்து சில துண்டுகளினை மாத்திரம் இங்கு இணைத்துக் கொள்கிறேன்.

மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட இம் முஸ்லிம்களை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தமிழ் - முஸ்லிம் உறவில் எவ்வித முரண்பாடும் அற்ற நிலையில் பலவந்தமாக ஆயுத முனையில் தமது தாயகத்திலிருந்து ஏன் விரட்டியடித்தார்கள் என்ற வினாவிற்கு இதுவரையும் தெளிவான பதில் விரட்டியவர்களால் முன்வைக்கப் படவில்லை. முஸ்லிம்கள் தாம் ஏன் விரட்டப்பட்டோம் என்பதற்
கான காரணங்களை பலவாறு கூறுகின்றனர்.
முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கான பிரதான காரணம் தமிழ் மக்களிலிருந்து இன ரீதியாக முஸ்லிம்கள் வேறு பட்டிருந்தமையாகும். இவ்வெளியேற்றத்தினால் பொருளாதார, சமய, பண்பாட்டுக் கட்டமைப்புக்கள் அனைத்தும் நிலை குலைந்;துள்ளது. விடத்தல் தீவு கிராமம் இன்று அழிவடை நிலையில் காணப்படுகின்ற போதிலும் இம்மண்ணின் தொன்மையும், சிறப்பும் எந்தவொரு சக்தியாலும் அழித்;துவிட முடியாததாகும். (பக்கம் 3)

கௌனியப்பாவின் சியாரம் இலவ குளம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இக்காணியிலுள்ள நீர்ப்பாசனக் குளத்திற்கு இலவன் குளம் என்று பெயர். இக்குளத்திற்கு தென்மேற்குத் திசையில் கௌனியப்பாவின் சியாரம் இருக்கிறது. இச்சியாரத்திலிருந்து பல புதுமைகள் ஏற்படுவதாகப் பரவலாக கதைப்பதை கேட்கக்கூடியதாக விருக்கிறது. நெற்செய்கையின் போது மழையில்லாதிருந்தால் இவரின் சியாரத்திற்கு மக்கள் வந்து கந்தூரி வைத்து மௌலூது ஓதி இறைவனிடம் துஆச் செய்வார்கள். இந்த சியாரத்திற்கு இந்துக்களும் அதிகமாக வருவார்கள். இந்துக்களுக்கு கௌனியப்பாவின் பெயரில் அதிக நம்பிக்கை இருப்பதாய் காண முடிகிறது.(பக்கம் 70)

விடத்தல் தீவு முஸ்லிம்களின் விவசாயக் காணிகளின் மொத்த பரப்பு 3490 ஏக்கர். (பக்கம் 103)

தமிழ் முஸ்லிம் உறவிலும், பரஸ்பர நம்பிக்கையிலும் 1990ம் ஆண்டு நடுப்பகுதி வரையில் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை. கனவிலும் நினைக்காத யாரும் எதிர்பாராத வண்ணம் வட மாகாண முஸ்லிம் கிராமங்கள் தோறும் தமிழ் தீவிரவாதக் குழுவான டுவுவுநு முஸ்லிம்கள் தமது வீடுகள், உடமைகளை கைவிட்டு வடமாகாணத்தை விட்டும் வெளியேற வேண்டும் அவ்வாறு செய்யாவிடில் விபரீதம் ஏற்படுமென ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது. இவ்வறிவித்தல் மன்னார், எரிக்கலம்பிட்டி ஆகிய பகுதிகளில் 1990ம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதியிலும், விடத்தல் தீவு, மாந்தைப் பகுதிகளிலும், முசலிப் பகுதியிலும் ஒக்டோபர் 25ம் திகதி அறிவிக்கப் பட்டது. அதே நேரம் யாழ்ப்பாணத்தில் 29ம் திகதி அறிவிக்கப்பட்டது.

நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணிலிருந்து விரட்ட வேண்டாம் என்று எவ்வளவு எடுத்துக் கூறியும், இந்து கிறிஸ்தவத் தலைவர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட சமரஸ முயற்சிகளையும் தமிழ் தீவிரவாதக் குழுவான டுவுவுநு முற்றாக நிராகரித்தது. நிர்க்கதியான முஸ்லிம்கள் தமது உயிர்களையேனும் பாதுகாத்துக் கொள்வதற்காக தமது பாரம்பரியமான வரலாற்றப் பூமியினை விட்டு வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களை நோக்;கிச் செல்ல ஆரம்பித்தார்கள்.

வடமாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோகம் நிறைந்த இந்த துர்ப்பாக்கிய நிலையினைப் போல வரலாற்றில் வேறு எங்கும் காண்பது அரிதாகும். நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புக்கள், 15000திற்கும் அதிகமான வீடுகள், 428 பள்ளிவாசல்கள், புனிதஸ்தலங்கள், ஏராளமான வியாபாரஸ்தலங்கள், வாகனங்கள், வயற்காணிகள், நகைகள், எண்ணிடலங்கா மந்தைகள், ம
ற்றும் வீட்டு விலங்குகள் என்றும் எராளமான சொத்துக்கள் கைவிடப்பட்ட நிலையில் ஏறக்குறைய 75000திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தமது சொந்த மண்ணை விட்டு துப்பாக்கி முனையில் பலவந்தமாக தமிழ் தீவிரவாதக் குழுவான LTTEயினால் விரட்டியடிக்கப்பட்டார்கள்.

விடத்தல் தீவு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபர் 26ம் திகதி சனிக்கிழமையிலிருந்து மூன்று நாளைக்குள் தமது சொந்த நிலங்களினை விட்டு வெளியேறிவிட வேண்டுமென டுவுவுநு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது. இதற்கு முன் மூன்று நாட்களுக்கு முன்பே முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாகனங்கள், துவிச்சக்கரவண்டிகள் உட்பட வானொலிகள், சுவர்க்கடிகாரங்கள், தையல் இயந்திரங்கள், பெற்றோல் மெக்ஸ் மற்றும் பெறுமதியான உபகரணங்கள் அனைத்தும் தீவிரவாதக் குழுவான டுவுவுநுயிடம் ஒப்படைக்கப்பட்டன. ஓக்டோபர் 26ம் திகதி விரட்டியடிக்கப்படும்போது மக்கள் பட்ட துயரத்தை சொற்களால் விபரிக்க முடியாது. வயோதிபர்கள் ஓவென்று அழுதார்கள். நடக்க முடியாத நோயாளிகளும், குழந்தை களும் கதறியழுத குரல் உள்ளங்களை பிடுங்கி எடுப்பதாக விருந்தது. நாங்கள் யாருக்கும் எந்தத் தீமையும் செய்யவில்லையே எங்களுக்கு ஏன் இந்தத் தண்டனை என்று மக்கள் அனைவரும் கதறினர்.

விடத்தல் தீவிலிருந்து வெளியேறிய முஸ்லிம் ஒருவர் தனது அனுபவத்தை இவ்வாறு விபரிக்கிறார். நாங்கள் 26ம் திகதி கொட்டும் மழையில் உழவு இயந்திரங்கள் மூலம் வெளியேறி பெரிய மடு, பாலம்பிட்டு, மடு ஆகியவற்றின் ஊடாக பண்டிவிரிச்சான் பாடசாலையை அடைந்தோம். கொட்டும் மழையில் நனைந்தபடி பாலர்களையும் கையில் ஏந்தியவண்ணம் பிரயாணிக்கும் தாய்மார்களின் புலம்பலின் ஒலி செல்லும் வழியெங்கும் ஒலித்தது. தொடர்ந்தும் மழையினால் பிரயாணம் செய்ய முடியாது இரவை பண்டிவிரிச்சான் பாடசாலையிலே கழித்தோம். நாங்கள் சமைத்துக் கொண்டுவந்த உணவையே உண்டோம். நாங்கள் வரும் வழியில் விடுதலைப் புலிகளினால் மிகக் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டோம் (பக்கம் 126)

இறுதியாய்,
கறைபடிந்த பதினேழு வருடங்களினை டுவுவுநு தன் தாயக கோட்பாட்டையும் மறந்து முஸ்லிம்களின் வரலாற்றில் ஏற்படுத்தி தம் வங்குரோத்து நிலையினை வெளிப்படுத்தி யுள்ளது. ஒரு இனத்தினை காவு கொள்ள எடுக்கும் முயற்சிகளை வரலாறு எப்போதும் சும்மா பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. விடத்தல் தீவு முஸ்லிம்களின் ஆவண நூலினை முன்மாதிரியாக்கிக் கொண்டு முஸ்லிம் தேசம் தன்னிடமுள்ள ஆவணங்களை நூலுருவாக்கம் செய்வது இன்றைய முதன்மைத் தேவையாகும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------
அலறியின் "எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும்"
- பஹீமா ஜஹான்

வாசிப்பு-1

அலறியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு - எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும் - மலர்ந்த உடனேயே கையில் கிடைத்தது.

அலறி முன்னைய தொகுப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மூன்றாவது தொகுப்பைத் தந்திருக்கிறார்.


இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் கிழக்கை விட்டு வெளியே வந்திருக்கின்றன.(இதைச் சொல்லப் போய் வலைப்பதிவில் கிடைத்த பதில் போதாதா? என பர்ஸான் முணுமுணுப்பது கேட்கிறது) ஆனாலும் இக்கூற்று அலறியின் கவிதைகள் தொடர்பாக உண்மையானது. கிழக்கில் முனைப்புப் பெற்ற வடிவத்திலிருந்து இத்தொகுப்பின் கவிதைகள் பிரிந்தே நிற்கின்றன.

இன்றைய நவீன கவிதைகளின் வடிவத்தை இந்தத் தொகுப்பிலுள்ள சில கவிதைகள் கொண்
டிருக்கின்றன. தற்காலக் கவிதைகளின் நடையில் அலறி பயணிப்பது ஆரோக்கியமானதாகத் தென்படுகிறது.

~தையல்காரர்களும் எழுத்தாளர்களும் நாகரிகத்தின் போக்கையறிந்து செயல்பட வேண்டும்| என்ற கூற்றுக் கொப்ப கவிதையும் காலத்துக்குக்காலம் தன்னை மாற்றிக் கொண்டே வந்துள்ளது. அதன் போக்கிலேயே அலறியின் கவிதைகளின் மாற்றமும் நிகழ்ந்துள்ளதென நினைக்கிறேன்.

வாசிப்பு-2

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் என்னை மிகவும் ஈர்த்த கவிதைகளில் ஒன்றாக ~மழைக் குடை| கவிதையைக் கூறலாம்.

~ பூனைபோல பதுங்கி வந்து
பெய்யத
் தொடங்கியது
பெரும் மழை
கொடியில் உலர்த்திய ஆடைகள்
விறகுக் கட்டைகள்
வாசலில் பரப்பிய நெல்மணிகள்
எல்லாவற்றையும்
அள்ளியெடுத்து உள்வந்த நான்
வெயிலுக்குப்பிடித்த குடையை
மடக்கி

வெளியில் வைத்துவிட்டேன்
விரித்துப் பிடித்து
வீட்டுக்குள் வரத்தெரியாதது
நனைந்து கொ
ண்டிருக்கிறது
மழையில்

அலறியின் தொகுதி வெளிவந்த நாட்களிலேயே இந்தியாவில் வெளிவந்த த.அகிலனின் ~தனிமையின் நிழல் குடை| தொகுப்பிலுள்ள மழைக் கவிதைகளில் ஒன்றும் என்னை மிகவும் கவர்ந்தது.அவருடைய ~ மழை என்னும் பிராணி| கவிதை

~திடீரென
முழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு பிராணியைப் போல
கதவுகளைப்
பிறாண்டிக் கொண்டிருந்தது
மழை


என்
தலையணைக்கடியிலிருந்த

கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப் போயிருக்கிறது
தூக்கம்~

இவ்விரண்டு கவிதைகளுமே நவீன கவிதையின் தொனியில் பேசும் கவிதைகள். இரண்டுமே நேரடி அனுபவத்தைப் பதிவு செய்திருப்பதுடன் இக்கவிதை களில் காணப்படும் நுட்பம் படிப்போருக்கு இனிய அனுபத்தைத் தருகின்றது.அத்துடன் இலங்கைக் கவிதைகளுக்கே உரித்தான பொதுத் தன்மையைத் தாண்டியும் இவை செல்கின்றன.

இவ்வாறே பூ(ம்) பறவை-1,2 ஆகிய கவிதைகள் எமிலி டிக்கின்சன் கவிதைகளுடன் கலந்து விடக் கூடிய தரத்துடன் படைக்கப் பட்டுள்ளன.

வாசிப்பு-3

இத்தொகுப்பில் உள்ள ஒரு சில கவிதைகள் முன்னைய கவிஞர்கள் பயன்படுத்திய படிமங்களின் செல்வாக்குக்கு உற்பட்டுள்ளன.

~வண்
ணத்துப் பூச்சி தன் காலில்
ஒரு காட்டையே சுமந்து
செல்கிறது~ தேவ தச்சன்


இதன் நீட்சியாகவே அலறியின் பின்வரும் வரிகளையும் காண முடிகிறது.
~ பூச்சியின் காலில்
ஒட்டியிருக்கும்
மகரந்த மணிக்குள்
இருக்கலாம்
காய், கனி, காடு|

அவ்வாறே
~என்னறை
க்குள் வந்த பறவைகள்
போகும் போது
விட்டுச் செல்கின்றன
சிறகில் சூடிவந்த வானத்தை|

என்ற அலறியின் கவிதையைப் படிக்கும் பொழுது

~வானையே
தன் கால்களில் இடுக்கிக் கொண்டு
இழுத்துச் செல்லும்
மேகப் பறவையின் விடுதலை| - குட்டிரேவதி
என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.


இவை குறைபாடுகள் அல்லாத பொழுதும் இவற்றுக்குப் பதிலாக வேறு படிமங்களைக் கையாண்டிருக்கலாமோ? என எண்ணத் தோன்றுகின்றது.ஏனெனில் இது அலறியின் மூன்றாவது தொகுப்பு என்பதால் கவிஞரின் தனித் தன்மைக்கு இதனால் பாதிப்பு நிகழக் கூடுமல்லவா?

வாசிப்பு-4

அலறியின் முன்றாவது தொகுப்பை ~ புதுப்புனைவு இலக்கிய வட்டம்| வெளியிட்டுள்ளது.இந்நூலை உ.சேரன், எம்.பௌஸர் இருவருக்கும் சமர்ப்பித்துள்ளார்.இரண்டாவது தொகுப்பை எம்.எச்.எம்.ஹரீஸ் பெயரில் சமர்ப்பணம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.எம்.பௌஸர் எமக்குக் கிடைத்த நல்லதொரு ஆளுமை.அவருக்கும் நூலைச் சமர்ப்பித்திருப்பது மகிழ்வுடன் வரவேற்கத்தக்கதே.

அலறியின் முன்னைய தொகுதிகளின் அட்டைப் படங்களை போல் இத்தொகுப்பின் அட்டைப் படம் அமையவில்லையாயினும் நூலின் வடிவமைப்பு நன்றாகவே அமைந்துள்ளது. எனினும் கவிதைகளின் அடிப்படையில் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளே அலறியைத் தளம்பல்கள் அற்ற உறுதியான தளம் நோக்கி நகர்த்தி இருப்பதாகச் சொல்லாம்.

நீங்கள் கண்டடைந்திருக்கும் பாதை சரியானதே. வாழ்த்துக்கள் அலறி.

----------------------------------------------------------------------------------------------------------------
பெரிய மரைக்கார்
சின்ன மரைக்கார்

- அசரீரி


இ லங்கை முஸ்லிம்களின் முக்கியமான படைப்பாளி களில் ஒருவரான ஜுனைதா ஷெரீபின் அண்மைய வெளியீடாக பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் நாவல் வெளிவந்திருக்கிறது. இப்பிரதி இந்த நாவல் பற்றிய பெரும் ஆய்வொன்றாகவோ அல்லது புலமைத்துவ மதிப்பீடாகவோ இல்லாமல் அதன் வருகையை அறிமுகம் செய்வதாக மட்டும் அமைகிறது.

நம்முடைய வாசிப்பின் மீதும் அப்பெரும் பாரம்பரியத்தை பன்முகப்படுத்தி இயங்கச் செய்வதன் மீதும் தொடராகவே இருந்து வருகின்ற வேகக்குறைவும், செயற்பாடின்மையும் நமக்கான எழுத்தாக்கம் என்பதை வரலாறு நெடுக மலினப்படுத்தியே வருகின்ற உண்மையை நமது வெளியீடு களின் எண்ணிக்கைக் குறைவிலிருந்தும், நம்மிடையான உரையாடல்களின் மீது விழுந்து கிடக்கும் அம்மம்மண்டித் தனங்களிலிருந்தும் நம்மால் தெளிவாகவே உணர்ந்து கொள்ள முடியும்.

நமது பிரதிகளின் மீதான உரையாடல் என்பது வெளியீட்டு மேடைகளில் விருந்தாளியாக வருபவரின் சிலாகிப்புப் புகழோடும், மறு நாளைய பத்திரிகையின் புகைப்படச் செய்தியோடும் மட்டும் நின்றபடி அப்பிரதியின் ஆன்மாவை யும், இயங்குதன்மையையும் பரிதாபமாக இடைநிறுத்திவிடு வதாகவே நமது வெளியீடுகள் மீதான உரையாடலின் மரபு குறுக்கப் பட்டிருக்கிறது.

உண்மையில் சமுகங்களின் கலாசார மற்றும் பண்பாட்டுக் கூறுகளை மிகத்துல்லியமான தனித்தனத்துடன் வேறுபடுத்து வதிலும், அதன் மீதான பிறவற்றின் தாக்கங்களைப் படிவு நீக்கம் செய்வதிலும் எழுத்தாக்கம் என்பது முக்கியமான ஒரு பாத்திரத்தை வகிக்கிறது. அதிலும் குறிப்பாக வரலாற்றில் அவற்றின் வாழ்வு முறைமை, இயங்கு தன்மை மற்றும் பன்முகத்தன்மைகளைக் கதையாடுவதிலும் பெரும் வலிமையுடன் இயங்கும் தன்மை ஒரு நாவலுக்கு இயல்பாகவே இருக்கின்ற ஒன்றாகும்.

ஆனாலும் நம்மை மிகப் பூரணமாக வெளிக் கொணருகின்ற இத்தகைய எழுத்தாக்க விடயத்தில் ஒரு குறையான திருப்தியையே நாம் கொள்ள வேண்டி யிருக்கின்றது.

நம்முடைய துயரமான எழுத்துச் சூழலுக்குள்ளும் நமது பண்பாட்டையும் கலாசாரக் கூறுகளையும் ஒரு வலிய வீரியத்துடன் தொடுகின்ற நாவல்கள் நமது வரலாற்றை நோக்கிய பயணத்திற்குப் பெரும் நம்பிக்கை தருவன என்ற உண்மையை இந்த நாவலும் அதை முழுக்க அப்பியிருக்கும் நமது மண்ணின பண்பாட்டுப்; புழுதியும் உண்மைப்படுத்தத் தவறவில்லை.

அந்த வகையில்தான் நமது கவனக் குவிப்புக்கென இந்நாவல் கொண்டிருக்கும் இரண்டு முக்கியத்துவங்களை முன்வைத்து அறிமுகம் செய்யப்படுகிறது.

முதலாவது நம்மை விட்டும் தொடர்பறுக்கப்பட்டு வரும் நமக்கான வாழ்வு முறைமை பற்றியது. இரண்டாவது நமக்கானதன் வரலாறு பற்றியும் சுய நிர்ணயம் பற்றியதுமான அரசியலுக்கு வலுச்சேர்ப்பது.

ஜுனைதா ஷெரீப் தன்னுடைய முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்..

‘‘விஞ்ஞானம் எத்தகையதொரு இலகுவான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளது என நாம் பூரிப்படைந்தாலும், வாழும் முறைமை இயந்திர மயமாகிவிட்டதென்பதை நினைத்து கவலைப்படுகி றோமல்லவா?

அப்போதைய மக்கள் வாழ்க்கை வசதிகள் குறைவானவர்களாக வாழ்ந்தாலும், நாளாந்த வாழ்க்கையை தற்போதையதைப் போன்ற பரபரப்பின்றி நிமிடம் நிமிடமாக இரசித்து வாழ்ந்ததையும், மிகக் குறைந்த வருமானமாகினும் உள்ளுர் உற்பத்திகளை தாராளமாக பயன்படுத்தியதையும் அறியும் போது ஏதோவொரு வகையில் அவர்கள் நம்மைவிட நிம்மதியான வாழ்க்கையை அனுபவித்து விட்டு மரித்தார்களோவென்றதொரு சந்தேகம் தொக்கி நிற்கின்றது.” இப்படியாக தொடர்கிறார்.

இங்கே நாம் எதை இழந்து விட்டதான ஆதங்கத்தை அல்லது எது நம்மைவிட்டும் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது என்கின்ற கவலையை ஜுனைதா ஷெரீபின் இந்த வரிகள் நமக்குள் கேள்விகளாக்குகின்றன என்பதிலிருந்தே முதலாவதைத் தொடங்குவோம்

அதாவது நமது வாழ்வியலின் மீது விநாடிக்கு விநாடி மெல்ல மெல்லவாக கரைக்கப்படுகின்ற பிற இறக்குமதிச் சிந்தனைகளின் தாக்கமும், மீண்டு வெளிவந்துவிடவே முடியாத அதிகாரங்களாக நம்மீது ஆகியிருக்கும் இயக்க, கொள்கை இஸம்களும் மேற்கத்தேய, முதலாளித்துவ, தொழில்நுட்பங்களின் மயமாதல்களும் என நமக்கான வாழ்வியலை விட்டும் தூரப்பட வைக்கும் அத்தனை அபாயங்களின் மீதுமான கேள்வியினை அழகானதும், ஏக்கமானதுமான ஒரு மரைக்காரின் கதையினூடாக பிரதியாளர் கேட்கிறார்.
இதில் நமது சோனகப் பெரும்பரப்பின் முக்கிய கூறுகளில் ஒன்றான காத்தான்குடியின் இன்றையதற்கு நான்கு அல்லது ஐந்து தலைமுறைக்கு முந்திய மக்களின் மிகவும் அழகான வாழ்க்கை முறையும் பண்பாடுமே கதையின் மையக்கூறாக அமைந்திருக்கிறது.

மேற்சொன்ன இஸங்களின் அதிகாரங்களாலும் பலவகையான மயமாதல்களின் விளைவுகளாலும் நம்மால் வேண்டுமென்றே புறமொதுக்கப்பட்டுவிட்ட நமது பாரம்பரியங்களின் மறுக்க முடியாத அழகையும், இதுவரை நாம் விட்டுத் தூரமாகியிருக்கின்ற நமக்கேயான பண்பாடுகள், கலாசார நிகழ்வுகள் பற்றிய கைசேதத்தையும் பெருமூச்சையும் இப்பிரதி மிக நுண்ணிய கவனத்துடன் வெளிக் கொண்டு வருகிறது.

அத்தோடு நமக்கான யதார்த்தத்தை விட்டும் தூரமாகி நாம் இயந்திரப்பட்டுக்கொண்டு வருகிறோம் என்ற எச்சரிக்கையை கதையாடலின் அழகினூடாக ஒவ்வொரு கட்டத்திலுமே நமக்கு விடுக்கத் தவறுதில்லை.

நமது எழுத்தியக்கத்தின் மீதான அன்னியப் படிவுகளையே நமக்குரினவாக்கிவிடும் அரசியல் மிகக் கவனமாக நடந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் புலமைத்துவ எழுத்துச்சூழலின் அபாயத்துக்கு முகங்கொடுக்கும் விதமான நமது மொழி, ப+ர்வீகம் பற்றிய அதிகமான செய்திகளை இப்பிரதி கதைப்பதானது நமது பூர்வீகத்தின் ஆதாரத்தை மேலும் வலுவானதாகவே ஆக்குகின்றது.

இந் நாவலின் கதையும் சித்தரிப்புகளும் காட்ட வருகின்ற ஒவ்வொரு பண்பாட்டு நிகழ்வுகளும், அன்றாட விழுமியங்களும் வாழ்க்கை ஒழுங்குகளும் வெறுமனே வந்தான் வரத்தான்களின் சூழலுக்கேற்ற வாழ்வுமுறையாக அறவே இருக்க முடியாது என்பதோடு, ஒரு நீண்ட பண்பாட்டுத் தொடரியக்கத்தின் படிநிலைகளாகவே அவை வரலாற்றில் இயங்கிவந்திருக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை இயல்பாகவே ஏற்றுக் கொள்ள வைத்திருப்பதானது நமது பூர்வீகத்தை வரலாற்றிடம் மறைத்து வந்திருக்கும் அரசியலுக்கு ஒரு பேரிடியாகவே அமையமுடியும் என்று நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.

இதுவே இந்நாவலின் இரண்டாவது முக்கியத் துவமாக கவனம் பெறுகிறது.

நமது இனத்தின் பூர்வீகம் பற்றிய ஆழ்ந்த தேடல்களும், நமது சுயமொழிக்கான அரசியல் முன்வைப்புக்களும் கூர்மைப்பட்டு வருகின்ற இன்றைய நிலையில் இவைபற்றிய மிகத் தீர்க்கமான ஆய்வுகளையும், பன்முகப்பட்ட உரையாடல் களையும் நமது எழுத்தின் இயக்கம் வெகுவாகவே வேண்டிக்கொண்டிருக்கிறது. நமது வரலாற்றுரிமையை வேகமாக நிறுவியாகவேண்டிய அரசியல் தேவை நமது மௌனங்களின் மீதே கேள்விக்குறிகளாகியிருக்கிறது. இத்தகைய நிலையில் இந்நாவல் நீண்டநாட்களுக்கு முன் வெளிவந்திருந்தாலும் நமது வரலாறு பற்றி பல்வேறு முனைகளில் நின்றும் இதிலிருந்து உரையாடலைத் தொடங்க முடியும் என்பதே இவ் அறிமுகத்தின் நோக்கம். ஏனெனில் நம்மிடையேயான பன்முக வாசிப்பிலிருந்தும், திறந்த உரையாடல்களிலிருந்தும்தான் நம் வரலாறு ஆரோக்கியப்பட முடியும் என்பது நாம் மறுக்க முடியாத உண்மையாக விருக்கிறது.

------------------------------------------------------------------------

அனாரின் "எனக்கு கவிதை முகம்"
பிரதிக்குப் பின்னரான அரசியல்

-சாரா

01.

கவிதை நமக்கு சாதாரண நிகழ்வாகிவிட்டது. ஆனால் எப்போதும் அது அசாதாரணங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது|| அனாரின் கவிதைகளை வாசிக்கும்போது இப்படியாக ஏதாவதொரு மேற்கோளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது. சம காலத்தில் இலங்கையின் முக்கிய பெண் கவிஞர்களுள் ஒருவராக அனார் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது இம்மேற்கோளுக்கான கூடுதல் தகுதி என்று கருதிக் கொள்ளலாம்.

நமது வாழ்வியல் மாறிக்கொண்டு வருவதைப்போல கவிதைகளும் மாறிக்கொண்டு வருகின்றன. ஆனால் வாழ்வியலின் வேகத்திற்கு முன்னே இன்னும் பல மடங்கு குதிரை வேகம் கொண்டு கவிதைகள் ஓடிக் கொண்டிருக் கின்றன. கவிதைகளுக்காக வாழ்வதென்றால் நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வைத் தாண்டி மூச்சுப்பிடித்துக்கொண்டு இன்னும் பல வருடங்கள் வாழ்ந்தாக வேண்டும். அனாரி னுடைய கவிதைகள் ~எனக்கு கவிதை முகம்| முதலில் சொல்லும் சேதி இதுதான்.

இன்றைய வாழ்வு போர், அரசியல், ஆக்கிரமிப்பு, எதேச்சதிகாரம் போன்றவைகளினால் சூழப்பட்டிருக்கிறது. எனினும் இவற்றின் விடுதலையே கவிதைக்குரல் என்றவாக ஒலித்த காலம் சற்று அடங்கிப்போயிருக்கிறது. உரத்து ஒலித்த காலத்தில் மரணத்துள் வாழ்வோம் தொகுதி முதல் மீஸான் கட்டைகளில் மீள எழும்பும் பாடல் வரையான கவிதைக் குரல்கள் ஏராளம். இப்போது போரைத் தின்று வளரும் கவிதைகளுக்குப் பெரும் பஞ்சம் நிலவுகிறது. போர் பற்றிய, போரிடும் நிறுவனங்கள் பற்றிய பல்வேறு அபிப்பிராயங்கள் இக்கவிதைக் குரல்கள் உரத்தொலிக்கச் செய்வதை தடைசெய்திருக்கலாம். அல்லது அப்படி ஒலிக்கச் செய்பவர்களது இருப்பு கேள்விக்குட்படுத்தப் பட்டிருக்கலாம்.

இங்கு, போர்பற்றிப் பாடுகின்ற கவிஞர்களுக்கு அறச்சிக்கலை ஏற்படுத்தி வருகின்றது என அனாரின் கவிதை முகங்கள் முன்னுரையில் சேரன் கூறுகின்றமை முக்கியமானது. இதனூடாக அவர் சொல்ல வருகின்ற அல்லது சொல்ல விரும்பாத சேதி போரைப்பாடுவதினால் எழுகின்ற அறச்சிக்கலா? பாடாததினால் தோன்றுகின்ற அறச்சிக்கலா? என்பதுதான்.

விலைபோகின்ற சரக்காக இருந்தாலும் ‘போர்| அனாரின் கவிதைகளுக்குள் இல்லை. ஒரு காலத்தில் பெண் உணர்வையும் தாண்டி போர் பற்றிய வாழ்வியலே இலங்கைப் பெண் கவிஞர்களுக்குள் இருந்தது போல கிழக்கில் சாய்ந்தமருது எனும் முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் அனாருக்கு போரின் முகங்கள் தொலைவு. சங்கரி, ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை, ஆழியாள் கலா - இன்னும் பிறரும் போராட்டத்தில் இணைந்து கொண்டு ஒரு தொகைக் கவிதைகளை எழுதிய பெண் கவிஞர்;களையும் தாண்டிய அடுத்த கட்டத்தில் அனாரின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. சிலவேளை 90 காலப்பகுதிகளில் அனார் எழுத வெளிக்கிட்டிருப்பாரானால் அவரும் மேற் குறித்த பெண்கள் வரிசையில் சேர்ந்திருப்பார். சிங்கள பேரினவாதத்திற் கெதிராகவும், அது சார்ந்து தன்னுணர்ச்சியாகவும் எழுந்த பெண்களின் குரல்கள் போன்று கிழக்கில் தாண்டவமாடிய தமிழ் ஒடுக்குமுறைக்கான கவிதைகள் பல அவரிடம் இருந்தி ருக்கும். ஆக அனார் இந்த அறச்சிக் கலில் இருந்து தற்போதைக்கு தப்பித்துக் கொள்கிறார். (கவிஞர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கின்றதென்றால் மூதூர் வெளியேற்றம், படுகொலைகள், பள்ளிவாசல் குண்டுவெடிப்புகள், சிங்கள ஆக்கிரமிப்பு போன்றவை பற்றி அனார் கூறாத கருத்துக்க ளுக்கு அவர் தப்பித்துக் கொள்ள முடியாது என்று கொள்வோமாக)

02.

அனாரின் கவிதைகள் மொழியின் வசீகரத்தை தாங்கி நிற்பதைச் சொல்ல வேண்டும். அனாரை மறைத்து விட்டுப் பார்த்தால் அதற்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் பெண் மனம், நான் என்று சொல்வதிலுள்ள மென்மை, துணிவு - நீ என்று சொல்வதில் உள்ள கண்டிப்பு, மாயலோலக் காதல், சுட்டு விரல் நீட்டும் அதிகாரம் என்பனவெல்லாம் இங்கு உரத்தொலிக்கக் காணலாம். நான் பெண் என்கிற கவிதை - அனாரின் பெண்மொழி குறித்த பார்வைக்குச் சான்று. பெண் தன் இருப்பை நிறுவ வேண்டிய அவசியம் அனாரின் கவிதைகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வெகுவான ஆணாதிக்க சூழலில் இப்படியாக பெண் தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருப்பது தற்போதைய தமிழகக் கவிதை மரபின் தொடர்ச்சியாகும். தாய்வழிச் சமூக மரபையும், ஆதிபராசக்தியையும், கண்ணகியையும் இணைத்து பாடும் தன்மைக்குச் சமமான இது பெண் படைப்பின் ரகசியம் குறித்த மதங்களின் பார்வைக்கு எதிரானது. ஆனால் பெண்ணுக்குள் இருக்கும் தாய்மை, பொறுமை, இரக்க குணம் என்பவற்றிற்கு மதிப்பளிக்கப் படாத போது அவள் வெளிப்பட்டு நிற்பது,

ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக் கடல்
ஓர் அடை மழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்

எல்லைகளற்ற உலகத்தை சிருஷ்டிக்க விரும்பும் கவிமனம் பொதுவானது என்றால், அந்த உலகம் இன்று கேள்விக்குட் படுத்தப்பட்டிருக்கிறது. அடையாள அரசியலின் அடியாகத் தோன்றிய சிறுபான்மைக் கதையாடல் துண்டாடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் சார்பாக பேச விரும்பியபோது. பொதுமைப்படுத்தப்பட்ட இலக்கிய அடையாளங்கள் தகர்த்தெறியப்பட்டன. விளிம்படையாளமுள்ள சிற்றினங்கள், தலித்கள், பெண்கள் என்றவாறாக சிறு குழுமங்கள் தங்களின் விடுதலைக்காக இலக்கியங்களோடு மேற்கிளம்பினர்;. தமிழகச் சூழல் இக்கருத்தாக்கங்களை முதலில் சிறுவாரியாக ஒதுக்கியும் பின்னர் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளவும் செய்தது. இச்சூழலில் பேசப்பட்ட பெண்ணியம் மிக உக்கிரமான எதிர்ப்புக் கோஷங்களோடு வெளிவந்தது. பெண் அடையாளம், பெண் மொழி, பெண் உடல் குறித்த கருத்துக்கள் தழிலுலகம் காணாத சர்ச்சைகளாகின. மாலதி மைத்ரி, சுகிர்தராணி, குட்டிரேவதி போன்றோரின் கவிதைகள் அச்சர்ச்சைகளுக்குள் விரும்பிப் புகுந்தன. இதே நிலை இலங்கையில் உள்ள பெண் கவிஞர்கள் மத்தியிலும் புகுந்துவிட்டதாக, அவர்கள் தமிழக பெண்களை பாவனை செய்வதாக சுட்டுவிரல் நீட்டப்பட்டது. இப்படி நீட்டப்பட்டவர்களில் அனார் முக்கிய மானவர்.

03.

அடிப்படையில் இஸ்லாமியப் பெண்ணான இவரின் கவிதைகளை எப்படி வாசிப்புச் செய்வதென்ற கேள்வியின் பின்னனயில் இக்கருத்தை நோக்கலாம். அனாரின் கவிதைகளில் வெளிப்படும் பெண் உடல், பெண்மொழி சார் கூறுகள் அவரின் ‘காதலைச் சொல்லும் கவிதைகள்’ அல்லது ~விரக தாபக் கவிதைகள்| சார்ந்து எழுந்தது கவனிப்புக்குரியது. இவரின் சில கவிதைகள் சிற்றிதழ்களில், இணையத் தளங்களில் வெளிவந்தபோது அது குறித்து எழுந்த சலசலப்புகள் அதிகமானவை. பிச்சி, பெண்பலி, உரித்தில்லா காட்டின் அரசன், தணல் நதி, அறைக்கு வெளியே அலையும் உறக்கம், ஒளியில்லாத இடங்கள், மேலும் சில இரத்தக் குறிப்புக்கள் போன்ற கவிதைகள் இவ்வகையில் சொல்லக்கூடிய உதாரணங்கள்.

இஸ்லாமியப் பெண் எழுதுகின்ற காதல் கவிதைகள் குறித்த நேர்மையான மதப்பார்வையோ, சமூகப் பார்வையோ இங்கு சரியாக முறைப்படுத்தப்படவில்லை. மாறாக உணர்ச்சி வசப்பட்ட பல கருத்து நிலைகளே இங்குள்ளன. அனாரின் எனக்கு கவிதை முகம் வெளியீட்டு விழாவில் ஆய்வுரை நிகழ்த்திய எம்.ஐ.எம். ஜாபிர் (ஆத்மா) தனக்கு பிடித்த அனாரின் கவிதைகன் இரண்டினை வாசித்துக் காட்டினார். அறைக்கு வெளியே அலையும் உறக்கம், வரு(ந்)த்துதல் என்ற இவ்விரு கவிதைகளையும்; அவற்றின் இனிய ஓசைக்காகவே பிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இது பிரவாகம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாசிப்பு ஓசையுடைய கவிதைகளைத் தேர்ந்து அவர் வாசிப்பதன் பழக்கமாக இருக்கலாம் என்றுபட்டது. ஆனால் இவ்விரண்டும் சீரிய விவாதங்களைக் கோரி நிற்கின்ற கவிதைகள் என்பததையோ, அது எழுப்பும் அதிர்வுகளையோ சொல்ல ஆத்மா வசதியாக மறந்து விட்டார். இதற்குள் ~~இங்குள்ள முஸ்லிம் கவிஞர் களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். இனி எல்லோரும் முஸ்லிம் தேசக் கவிதைகளையே எழுத வேண்டும்|| என்று வேறு கட்டளையிட்டார், இக்கருத்தை முதல்முதலாக தானே சொல்வது போன்ற பாணியில். முஸ்லிம் தேசக் கவிதைச் செயற்பாட்டில் அனார் எங்கிருக்கிறார் என்பது பற்றி எக்கருத்தும் அவர் சொல்லவில்லை. அப்படிச் சொல்வது சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்ற என். ஆத்மாவை அவமதிப்பது போலாகும் என்று நினைத்திருந்தாரோ என்னவோ?

04.

அனாரின் காதல் சார் ஃ விரக தாபக் கவிதைகள் பெண்ணின் நூற்றாண்டுகால உள்ளடங்கிய நினைவுகளை மேற்கிளர்த்தும் தன்மையானவை. சங்கப் பெண்கவி தொடங்கி ஆண்டாளின் நிலைபெற்று கொள்ளும் புராணகாலத் தாகம் கொண்டவை. உடலை வெல்லும் போராட்டத்தில் போர்வாட்களையும், கள்ளச் சாவிகளையும் தயாரிப்பவை.

காதலையும் காமத்தையும் கடக்க அவற்றை கொல்லுகின்ற கொலைப்பழியிலிருந்து விடுபட்டு ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்ற நிலை இங்குள்ள பெண் கவிஞர்கள் சிலருக்கு மட்டுமே சொந்தமானவை. ஒரு ஆணின் துணைகொண்டுதான் அவற்றைக் கடக்க வேண்டும் என நினைக்கின்ற இப்பக்குவம் அனாரின் கவிதைகளுக்குப் பின்னால் இருப்பது முக்கியமானது. இது இன்றைய தமிழகப் பெண் கவிஞர்கள் உடலைக் கடப்பது பற்றிப் பேசுகின்ற முறைக்கு எதிரானது. விதி விலக்காக, அனாருடைய ~உரித்தில்லா காட்டின் அரசன்|, ~பிச்சி| போன்றவை இந்த அபாயத்தின் மலையுச்சியில் உடல் தற்கொலைக்காக காத்து நிற்கின்றவை. சுகிர்தராணியின் கவிதைகளில் வெளிப்படை யாகவே வரும் உடலின் விளையாட்டு, கலவி போன்றவை யெல்லாம் அனாரின் கவிதை முகத்திற்குள் தேடிச் சலிக்க வேண்டும். சுகிர்தராணியின் ~உடலெழுத்து| மிக வெளிப்படை யான லெஸ்பியனை நியாயப்படுத்தும் கவிதை. உடலின் மீட்சிக்காக இதுவே வழியென அக்கவிதை பரிந்துரை செய்கிறது. (நீண்ட யுகங்களுக்குப் பிறகு அன்றுதால் என்னுடல் என்னிடமிருந்தது) உடலைக் கடப்பதற்குரிய இந்த உபாயங்கள் எள்ளளவும் அனாரின் கவிதைகளுக்குள் இல்லை. வெறும் ஏக்கங்கள்தான் உண்டு.

கடக்க முடியாமல்
என்முன் தொங்குகின்றது
தணல் நதியாய் இரவு
(தணல் நதி)

விசமேறிய இரவின் பாணம்
என் தாகத்தின் முன் உள்ளது
ருசிகள் ஊறிய கனவுகளுடன்
(அறைக்கு வெளியே அலையும் உறக்கம்)

தனது உடலின் சுதந்திரம் மீறப்படும்போது அனார் சொல்லும் வலிகொண்ட இரவை தின்பதினூடாக பிரதி விடுதலையைக் கோருகின்றது.

வெளிச்சத்தை இருட்டை
தின்று வளர்கிறது கனவு
(வெறித்தபடி இருக்க முடியாது)

நீ இரவைத் தின்பவன்
நான் இரவு தின்னும் இரை
(வரு(ந்)த்துதல்)

நீ வரைந்து காட்டு
அடைய முடியா அந்த இரவை
(பூக்கவிரும்புகின்ற கவிதை)

இப்படியாக ‘இரவுகள்’ அனாரின் கவிதைகளெங்கும் கரியைப் பூசி அலைகின்றன. எல்லாக் கவிதைகளிலும் ஏதோ ஒரு வகையில் இருள் படர்கிறது. அநேக கவிதைகளில் இருளுக்குப் பக்கத்தில் வெளிச்சம் வந்து இருளைத் துரத்துகிறது. அல்லது வெளிச்சத்தின் பிரகாசத்தை உணர்ந்த இருள் பின்னணியாக பதுங்குகிறது.

இருள் அடந்து இறுகி பிசாசுகளின் தோற்றங்களுடன்
மல்லாந்து கிடக்கும் மலைகளை கடந்து செல்கிறேன்
எவ்வளவு பிரகாசம் நீ
(மண்புழு)

இரவு மின்விளக்குகளில்
வெளிச்சம் பூத்துக் கிடக்கிறது
(இல்லாத ஒன்று)

இதமும் புதிரும் பூசிடும்
இருள் பிரியா வைகறை மெல்லப் பதுங்குகிறது
(மனமந்திரம்)

இருள் துவாரங்களுக்குள் விரியும்
உன் வெளியில் வியாபித்தேன்
(நிழலின் அலறல்)

இருளை துக்கமான சகுனத்தின் குறியீடாகவும், துன்பத்தின் குறியீடாகவும் பார்க்கின்ற மரபு சார்ந்த வெளிப்பாட்டு முறையை அனாரின் கவிதைகள் கொண் டுள்ளன. இதனால் இருட்டை விரட்டுவதும், அதைக் கடந்து விடியலை அடைவதும் அவருக்கு பிடித்தமான செயல்களாக மாறிவிடுகிறது. இரவு அவருக்கு வலியைப் போல சுமையாகிறது.

குளிர்மை விரிகின்ற மார்கழி மாத இரவுகளை
அதன் செறிவை, வனப்பை
அதன் மாற்றமுடியா வலியை உனக்கு விட்டுச் செல்கிறேன்
(மாற்ற முடியா வலி)

காதலின் தாகம், அதன் எதிர்பார்ப்பு, கனவு எல்லாமே அந்த இரவுச் சிறைக்குள் அகப்பட்டுக் கிடப்பதாக அனார் உணர்வதும் அடைய முடியா நெடுங்கதவாய் இருள் தூரத்தில் வியாபித்துக் கொள்வதும் சாத்தியமாகிறது. இருளைக் கடப்பது சிறாதுல் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பது போன்றதொரு பணியாகிறது. (சிறாதுல் முஸ்தஹீம் - மறுமை நாளில் உலக மக்கள் அனைவரும் கடக்க வேண்டிய மிக அபாயகரமான பாலம்)

05.

சமயலறையை சிறைக்கூடங்களாக பார்க்கின்ற மரபு இன்றுவரை தொடர்வதாகச் சொல்வதற்குரிய இன்னும் பல சான்றுகள் அனாருடைய கவிதைகளுக்குள்ளும் உண்டு. அரசி கவிதையில்,

ஆணையிடுகிறேன் சூரியனுக்கு
ஒரு இனத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும்
சமயலறையின் பிளந்தவாயைப் பொசுக்கிவிடுமாறு

எனச்சொல்வதில் உள்ள வன்மமும், காதலைக்
கொல்லும் தேவையில்,

அடுப்புச் சாம்பலுக்குள் ஒளித்தாயிற்று
உடைத்த நினைவுச் சின்னங்களை

எனச் சொல்வதில் உள்ள பாதுகாப்புணர்வும் நேரெதிரா னவை. பெண்கள் சமயலறையைக் கைவிட நினைக்கின்ற சூழலில் இன்றைய தொலைக்காட்சிகளில் சமயற்கலை நிகழ்ச்சிகளுக்கே அதிக மௌசு கூடியுள்ளன. வீட்டுப் பெண்கள் பாடக் கொப்பிகளுடன் தொலைக் காட்சி களுக்கு முன்னமர்ந்து எடுத்துக் கொண்டிருக்கும் குறிப்புக்களுக்கு அனார் போன்றவர்கள் நிறைய வகுப்பெடுக்க வேண்டும்.

ஒருமுறை சமையற்கட்டு கவிதைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பரொருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது ~~வீட்டில் தனது மனைவி சமைக்க வேண்டுமென்பதிற்கெதிராக ஹோட்டல்களில் சமையற் காரர்களாக வேலை பார்க்கும் ஒரு தொகைக் கணவன்மார்கள் பற்றிய கவிதைகளும் இங்கு எழுதப்படவேண்டும்||

06.

~மேலும் சில இரத்தக் குறிப்புகள்| அனாருடைய கவிதைளின் வெளிப்படைத் தன்மைக்காக பலராலும் ஏதோ ஒரு விதத்தில் பேசப்பட்டது. ஒரு பெண்ணின் எழுத்தில் காணப்படுகின்ற இத்தகைய தன்மை இங்கு எழுதுகின்ற ஆண்கள் பலரின் முகத்தில் விழுகின்ற அடி போன்றது. கொதித்தெழாக் குறையாக சிலர் இது பற்றி முறைப்பாடு செய்ததுமுண்டு. ஆனால் நாம் நினைக்கின்ற அளவுக்கு அக்கவிதை அதிகமான இரத்தத்தைப் பூசிக்கொள்ளவில்லை. இங்கு நடக்கின்ற யுத்தம், வன்முறைகள், கொலைகள் என்பனவற்றைத் தாண்டி மாதாந்தம் வெளிப்படும் இரத்தம் அபாயகரமானதில்லை என்கிறது கவிதை. இரத்தம் ஒரே நிறமென்று நம்பிக் கொண்டிருக்கின்ற பலரது கவனமும் இக்கவிதையின் மூலம் சிதைவடைக் கூடும். இரத்தத்தை உடலோடு சேர்த்துப் பார்ப்பதும், தவிர்த்துப் பார்ப்பதும் முக்கியமானது. யுத்தத்தில், வன்முறையில் வெளிப்பட்டு நிற்கும் இரத்தத்தை அதிர்;ச்சியுற்றுப் பார்ப்பதுபோல் நாம் யாரும் வைத்தியசாலையில் பைந்துக் கணக்கில் தொங்கிக் கொண்டிருக்கும் இரத்தத்தை பார்ப்பதில்லை.

~இரத்தம்| கருணையை, பரிதவிப்பினை
அவாவுகிறது
இயலாiமையை வெளிப்படுத்துகிறது

என்பது இதுதானா எனவும் இன்னொரு வாசிப்புண்டு. வாழ்கை முழுக்க பின்தொடர்ந்து கொண்டிருக்குமு; இரத்தம் சாவின் தடயமாய் அனாருக்குத் தெரிந்ததில் வியப்பில்லை. ஆனால்; ஓரிடத்தில்

வன்கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்

தோன்றுவது கவிதையின் ஓட்டத்தில் மறுவாசிப்பை வேண்டி நிற்கிறது. வன்கலவி புரியப்பட்டவளின் பக்கம் நின்று கவிஞர் ஏன் பேசவில்லை? என மனம் நினைக்கிறது. அப்பெண்ணின் இரத்தம் ஏன் கருணையின் இரத்தமாகத் தோன்றவில்லை? என கேட்கத் தோன்றுகிறது.

07.

கலாச்சாரப் பாதிப்புக்களை இன்றை இலக்கியங்களில் தேடுவது கட்டாயம் போன்றதொன்றாகிவிட்டது. தலித் இலக்கியம், கறுப்பர் இலக்கியம், தென்னமெரிக்க இலக்கியங்கள் தங்களுடைய அடையாளங்களை மீட்டுக் கொண்டே மேலெழும்பின. இன்றைய முஸ்லிம்; தேச இலக்கியமும் இத்தகையதொரு பார்வையை முன் வைக்கத் தொடங்கி ஆழ்ந்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது. பிரதிகளில் ஊடறுக்கும் முஸ்லிம் தேச கலாசாரக் கூறுகள், இன்றைய இலக்கிய அடையாளத்தின் முக்கியமான அம்சமானதும் இதனால்தான். பெருவெளியின் வருகைக்குப் பின்னர் இதுசார்ந்து எழுதுகின்ற ஒரு அணி உண்டாகியிருப்பதைக் காணக்கூடியதாயிருக்கிறது. அனாரின் ~ மண்புழுவின் இரவு| கவிதையில் தூர அகன்ற வயல்களின் நடுவே ~ றபான்| இசைக்கின்ற முதியவரைத் தரிசிக்கிறோம். அல்குர்ஆனின் வசனம் ஒன்றை அடியொற்றி, ~நீளமான நூலாய் தெரிகின்றது இரவு........ தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும் வரை| போன்ற வரிகள் முஸ்லிம்தேச அடையாளத்தின் மீட்புக் குரல்களாக ஒலிக்கின்றன.

08.

சிலவேளை அனாரையும் சுகிர்தராணியையும் சேர்ந்து வாசிக்கும்போது கிளர்க்கின்ற உணர்வு ஒற்iயானதாகத் தெரிகிறது. ~~உன் குரலுக்கு இன்று நீ புரவிகளைப் பூட்டவில்லை?|| என்று அனார் கேட்பதற்குப் பின்னால் அக்குரல் ~~சமன் செய்யப்படாத களத்தில் புரவிகளேடு வந்திறங்குகிறாய்|| என ஒலிக்கிறது.

பாணனின் இசையில் அனார் மயங்க, வெட்சிப் பூக்கள் அணிந்தபடி வருகிறார் சுகிர்தராணி. ~~தளர்வான இரவா டையை அணிந்தேன்|| என்பது அனார் என்றால் ~~விரகத்தின் இழைகளால் நெய்யப்பட்ட இரவாடையை நான் அணிந்திருக்கிறேன்|| என சுகிர்தராணி சொல்வது போலிருக் கிறது. தவிர இருள், பனிப்பாறைகள், போர்வாட்கள், குரல்கள், இசை, பாம்புகள் எல்லாமே மிக நெருக்கமாக உலவுகின்றன. இருவரும் சேர்ந்து ஒரு கவிதையை எழுதி விட முனைவது போன்ற பாவனை நம்மை மயக்கத்திலாழ்த்துகிறது.

09.

கவிதையை மொழியின் அழகியலில் காணும் தரிசனம் அனாரின் பிரதிகளில் நிறையவே உண்டு. ~மழை ஒவ்வொரு சொல்லாகப் பெய்கிறது|, ~இரு விழிகளைக் கெளுத்தி உயிரூற்றி எழுதுகிறேன் உயிரைக் கொளுத்தி வைத்து விழிகளால் வாசி| போன்றவை இதற்கு நல்ல சான்று.

பெரும்பாலான கவிதைகள் காட்சிப் படிமங்களுடனே விரிகின்றன. அவை யதார்த்தங்களைத் தாண்டிய கனவுகளாக உருக்கொள்கின்றன. இரத்தம் சிந்தாத போர்க்களக் காட்சிகள், பனிப்பொழிவுகள், வர்ண ஜாலங்கள், அரச சாம்ராஜ்ஜியங்கள் எல்லாமே நாம் தரிசிக்க விரும்புகின்ற மாயலோகங்கள். இவையெல்லாம் பின்நவீனத்துவ சாயல் கொண்டது என்றால் இங்குள்ள பேராசிரியர்களும், தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும் கற்களால் எறிவார்களோ தெரியவில்லை.
-----------------------------------------------------------------------------------------------------------

சொல்லன்பன் நசிறுதீனின் "கிண்ணஞ்சொட்டு" ஒரு பார்வை
- அன்பன்

2000 ம் ஆண்டுக்குப்பிறகு எழுத்துலகப் பிரவேசம் பெற்றவர் ஒலுவில் சொல்லன்பன் நசிறுதீன். தினகரனில் எம்.எச்.எம். நடத்திய புதுப்புனல் சஞ்சிகைப் பக்கம் அறிமுகப்படுத்திய கதாசிரியர் இவர். எழுதத்தொடங்கிய ஆறாவது வருடம் (2006) 47 கதைகளை உள்ளடக்கி கைக்கு கனமாக 232 பக்கங்களில் ~கிண்ணஞ்சொட்டு| என்ற பெயரில் வெளிவந்திருக்கின்றது இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி. ~கிண்ணஞ்சொட்டு|வை 03 பிரிவுகளுக்குள் உட்படுத்திப் பார்க்க முடியும். 01. கரு 02. மொழிவழக்கு 03. வர்ணனை

01. கரு

~கடலில் கரைகின்ற இளமை| என்னும் தொடக்க கதை ஒலுவில் கிராமத்தை எழுத்து கமராவுக்குள் இழுத்து வந்த படப்பிடிப்பு. ஒலுவில் கடல் மூல தொழில்வாய்ப்பு அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கின்றது என்பதை தொட்டுக் காட்டும் வெட்டுமுகம். ஊரின் வறுமைப் போக்குக்கு நிவாரணமாக கடல் வளம் இருந்தாலும், ஒருவரையும் அறியாமல் அநேக சிறுவர்களின் கல்வி ஏற்றத்தில் தடைக்கல்லாக வந்திருப்பதை மறைமுகமாக தோலுரித்துக் காட்டும் அனுபவ முத்திரைக்கதை இதுவாகும்.

~காலத்தின் நியதியில்| என்ற கதையில் நமது பிரதேச அரச அலுவலகங்களின் கடமை நிலவரங்களை விமர்சனம் செய்கிறார் கதாசிரியர். உத்தியோகத்தர்கள் மக்கள் சேவையினை எப்படி இழுத்தடிக்கிறார்கள் என்பதனை தன் பேனாமுனையில் துலாபாரமிட்டிருக்கிறார் சொல்லன்பன்.

~சோழக்காட்டு சோழியில்|, ~தீவு தந்த தீர்வு| போன்ற கதைகளில் சமகால பயங்கரவாதப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன. பயங்கரவாதம், இடைக்கால சமாதானம், வரி அறவீடுகள், மனப்பாதிப்புகள் போன்றன பேசப்படுகின்றன. ~சுதந்திரத்திற்கு அப்பால்| என்ற கதை பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் பெற்றோர்களை விமர்சனம் செய்கிறது.

~இலக்குத் தவறும் இறக்கைகள்| கதையில் வேலைவாய்ப்பு இல்லாததால் இயக்கங்களில் சேர்ந்து படித்த பட்டதாரி இளைஞர்களின் விரக்தி மனநிலை எடுத்துக் காட்டப்படுகிறது. ~திருந்தாத உள்ளங்கள்| இன்றைய முஸ்லிம் மார்க்கவாதிகளின் ஜமாஅத் பிரச்சினைகளை ஆராய்கிறது. ஆளுக்கொரு மைக்கும், சமய அனுஷ்டானங்களும், சமயக் கிரியைகளும், பொலிஸ் நடவடிக்கைகளும் இக்கதையில் ஆராயப்படுகின்றன.

நமது பாடசாலைக்காலம், ஆசிரியர்கள் பேசப்படுகின்ற கதை ~வேரூன்று வேலிகள்|. கதைகளின் உச்சமாக விளங்குவது ~கிண்ணஞ்சொட்டு| ஆகும். மணமொத்த ஒரு தம்பதியரின் தாம்பத்தய வாழ்வின் இனிமை, பரஸ்பரம், ஒற்றுமை, வாழ்வியல் என்பன இக்கதை முழுவதும் நிரம்பியிருக்கிறது. கதையின்போக்கும் நடையுத்தியும் அபாரம்.

02. மொழிவழக்கு

இவரது எல்லாக் கதைகளிலும் ஒலுவில் பிரதேச மக்களது பேச்சுமொழி, பண்பாடு. பழக்க வழக்கம் என்பன பறைசாற்றப்படுகின்றன. ~~வலயப் புடிச்சி இழுக்கீங்களா? இல்ல வேறு என்னத்தயும் புடிச்சி இழுக்கீங்களா? இல்ல வேற எண்ணத்தையும் புடிச்சி இழுக்கிங்களா? (பக்கம் 04) எட்டு மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு போற நெனப்புல படுத்திராம சாமக்கோழி கூவுறத்துக்கு முன்ன வரணும் என்ன? (பக்கம் 05)

விட்ட விடியங்காட்டில விடிஞ்சி எழும்பி பல்லும் தீட்டாம பச்சத் தண்ணியும் குடிக்காம மண்ணக்கொத்தினா பயிரு பச்ச நல்லா வருமா? அடுப்புக்கரியெடுத்து பல்லத் தீட்டி தேயிலையாகுதல் குடிங்க. காலப்பசி மூலக் கொதியாம். (பக்கம் 27)

தம்பி இந்த அடப்புல அகதி முகாமில் இருந்து வந்த 18 பேர் கெடக்கம். (பக்கம் 31) இப்படி எல்லா கதையிலும் பிரதேச பேச்சுவழக்கு சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

03. வர்ணணை

கதை முழுவதிலும் கையாளப்படும் வர்ணனைகள் இரசனைக்குரியன. அற்புதமான கற்பனை, கவிதை நயங்கள் இச்சொற்றொடர்களை சோதிப்படுகின்றன. ~~மாரிகால ஊசித்தூறலில் புழுதிக் கிராமம் வெள்ளம் ஒன்றுக்கு ஒத்திகை பார்த்தது. ஓடைகளும் ஆறுகளும் தங்கள் உதடுகளை உறுதி செய்து கொண்டது. தோப்புக்குள் சிறகு தட்டிக் கொள்ளும் பறவைகள் அதிகாலை வேளையிலும் கூவ மறந்தன. கறையான் புற்றுக்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைந்த ஓலைக்குடிசை ஒன்றிற்குள் உடுத்த சாரணை போர்வையாக்கி உறங்கிக் கொண்டிருந்த உதுமான் தன்மீது அத்துமீறிப் பிரவேசித்த மழைத்துளியை ஆவேசமாய்ப் பார்த்தான். (பக்கம் 1)

~~வானில் உரல்கள் உருளும் சத்தம்|| (பக்கம் 2) ~~வழமைக்கு மாறாக கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ரயில் பெட்டியாய் நீண்ட வலையில் எறும்புகளாய் மொய்த்து இழுத்துக் கொண்டிருந்தனர். (பக்கம் 4) ~~ஆமை வேகத்தில் ஊர்ந்த வலை இழுப்பு ரொக்கட் வேகத்தில் விரைந்தது. சில நிமிடங்களில் முழுவதும் ராட்சத இரைச்சலுடன் கரை வந்ததும் எல்லோர் முகத்திலும் 100 சூரியன்களின் பிரகாசம் (பக்கம் 4) வெத்திலை குதப்பிய வானில் வெள்ளிகள் பற்களாய் முளைத்துக் கொண்டிருந்தன. நீலவானம் முத்தமிடும் பச்சை வயல்களை கருநிற ஆடை கொண்டு இரவு தழுவிக் கொண்டிருந்தது. (பக்கம் 7)

~~அடுப்படிதான் அடிக்கடி உறங்கிக்கெடக்கு|| (பக்கம் 13) ~~காலைச் சூரியன் பனியில் கண்துடைத்து மரக்கிளைகளுக்குள்ளால் வழிந்து கொண்டிருந்தான்||. (பக்கம் 16) ~~கலைந்த தலைமுடிமேல் சமுர்த்தி பேக்கையும் சுமந்துநிற்கும் நடுத்தர வயது பெண்மனியைக் கண்ட போடியாருக்கும் இரத்தம் உறைந்தது||. (பக்கம் 17)

~~வாயில் நிரம்பியிருந்த வெற்றிலை உமிழியை நிலத்தில் துப்பினான் கருனாசேனன்|| சிவப்பு நிறத்தில் ஒரு தீவின் வரைபடம் தெரிந்தது|| (பக்கம் 21)

~~ஒட்டிய டெங்கு ஒழிப்பு பதாகையில் அப்பிய நுளம்புக் கூட்டம் போல|| (பக்கம் 90) ~~பிரதேச வாசிகளை தலை நிமிர்ந்து வாழச் செய்யும் மேற்குப்புற வேளான்மைக் கதிர்கள் தலை குனிந்து மஞ்சள் உடைக்குள் மாறியிருந்தது||. (பக்கம் 155)

~~அவள் பக்கத்தில் தோணில் கொல்லாவாய் நிற்கும் பணக்காரக் கணவனை கவனத்தில் கொண்ட கடைக்காரன்|| (பக்கம் 168)

இப்படிக் கதை முழுவதிலும் தமது கற்பனைத் திறமையை வர்ணம் பூசி கதை வார்த்துள்ளார் நசுறுதீன். மொத்தத்தில் நல்லதொரு கற்பனை வளம் நிறைந்த யதார்த்த சிந்தனை வாத கதாசிரியர் இலக்கிய உலகுக்கு கிடைத்துள்ளார். கிராமியத்தைப் பேசும் அவரது கதை கதை வண்ணம் மேலும் அகலமாகி ஆழம் பெறட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------

பிஷ்ர் - அல்-ஹாபியின்
"மாமிசம் உண்போம் மாநிலம் காப்போம்"
எதிர்க்கதையாடலின் விசாரணை

- சாரா

நீதிமன்ற நடவடிக்கைகள்: அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தில் மட்டும் என்பதை சகலரின் கவனத்திற்கு அறியத் தருகிறோம் என்ற வாசகங்களுடன் ஆரம்பிக்கிறது ஏ.ஆர்.ஏ. பிஷ்ர் அல் ஹாபியின் மாமிசம் உண்போம் மானிலம் காப்போம் என்ற நூற்பிரதி. நீண்ட தேடலும், ஆராய்ச்சிக் கண்கொண்டும் எழுதப்பட்ட 28 தலைப்புகள்; நூலின் பெயரை நியாயப்படுத்திச் செல்லும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. உணவுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் மிருகங்கள் அறுக்கப்படுவது குறித்த பல்வேறு பார்வைகளுடன் தலைப்புக்கள் விரிகின்றன.

இந்துத்துவ, பௌத்த மேலாதிக்கங்கள் மிருகங்களை அறுப்பதை ஒரு கொலையாகப் பார்ப்பதற்கெதிரான பிரகடனம் இந்நூற்பிரதி எனக்கொள்ளலாம். குறிப்பாக இந்தியா போன்ற பல்லின நாடுகளில் பசுவதைச் சட்டம் நடைமுறையிலிருக்கின்ற நிலையில், இச்சட்டம் உலக முஸ்லிம்களுக்கெதிராக நிலைப்பாட்டை எடுப்பதாக இந்நூல் கருதிப் பேச விளைகிறது. அதற்குரிய ஆதாரங்களை இந்துத்துவ, பௌத்த புனிதங்கள் கட்டமைக்கப்பட்டுள்ள பண்டைய நூற்களிலேயே இப்பிரதி தேடுகின்றது.

இப்பிரதியின் அவசியத்தை அண்மையில் இலங்கை அரசினால் அறிவிக்கப்;பட்ட அரசின் மிருகவதைச் சட்டம் ஊக்குவித்திருப்பதாகக் கொள்ளவோமானால் அதற்குரிய பதில்களை இப்பிரதி அடுக்கிக் கொண்டே செல்கிறது. பொதுவாக மிருகங்கள் கொல்லப்படுவது பத்துக்கும் மேற்பட்ட காரணங்களைக் கொண்டிருந்தாலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள அதிகார பீடங்கள் பசுவை மட்டும் உணவுக்காக முஸ்லிம்கள் அறுப்பதை வதைசெய்வதாகக் கூறி, சட்டங்கள் இயற்ற வெளிக்கிடுவது இழிவான உள்நோக்கங்கள் கொண்டதாகும். பசுவை முஸ்லிம்கள் அறுப்பதற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். அது தங்களது உணவின் பெரும்பகுதியை நிறைவேற்றுகின்ற பயன்சார்ந்ததாகும். இது தவிர மிருகங்கள் விடயத்தில் மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டிய பிரமாணங்களை இஸ்லாத்தை விட கவனமாகச் சொன்ன தத்துவங்களையோ, கோட்பாடுகளையோ நாம் கண்டு கொள்ள முடியாது.

இந்துக்கள் பசுவை கோமாதா நிலையில் புனிதமாக நினைப்பதற்கும் அதனை உணவுக்காக முஸ்லிம்கள் அறுப்பதற்குமிடையிலான முடிச்சிடல் மிக அபத்தமானது. யாரும் கோமாதாவை அறுக்கிறோம் என்ற நிலையில் இதனைச் செய்வதில்லை. இந்நிலையில் - இந்துத்துவ புனிதங்கள் பேசப்படும் பிரதிகளும், அப்பிரதிகளில் வருகின்ற புனிதர்களும் மாமிசங்களை விரும்பிப் புசித்ததாக ஆதாரங்;;களுடன் இப்பிரதி சொல்லிச் செல்கிறது.

இதில் வரும், பசுக்களை அறுப்பதை நியாய பூர்வமாக நிறுவும் பகுதி சிறந்த பகுத்தறிவுத் தத்துவமாகும். இயற்கையின் ஏற்பாட்டில் ஒரு வருடத்திற்கு ஒரு குட்டியை ஈனும் பசுக்களை பெருக விடுவதால் உண்டாகின்ற அனர்த்தம் ஒரு வருடத்தில் பதினாறு குட்டியை ஈனுகின்ற பன்றியின் அல்லது நாயின் பெருக்கத்தை விட ஆபத்தானதாகும் என்கின்ற வகையில் நகரும் கருத்துக்கள்;; கவனிக்கத்த தக்கவையாகும்.

பசுக்களை அறுப்பதற்கு எதிரான சட்டத்தை இந்நாட்டில் அமுல்படுத்தியபோது எழுந்த கோசங்கள் இப்போது ஒலித்து ஓய்ந்திருக்கின்றன. ரகசியமாக மேற்கொள்ளப்படும் பிரச்சார உத்திகளும் சிலவும் (உதாரணமாக - வைத்தியர்கள், மாட்டிறைச்சியை சாப்பிடுவதால் பயங்கர நோய்கள் ஏற்படுவதாக நோயாளிகளிடம் கூறுவது போன்றவை) இச்சட்டத்தை மறைமுகமாகவும் தீவிரமாகவும் ஆதரிக்கின்ற நிலைப்பாட்டில் இந்நூலின் வரவு மிக முக்கியமானதாகும். முஸ்லிம்கள் பசுக்களை உணவுக்காக அறுப்பதையிட்டு அதிருப்தி கொள்ளும்;, அருவருக்கும், குற்றம் சுமத்தும் எல்லோரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இதுவாகும்.

நூலிலிருந்து.......

இஸ்லாமியர் மிருகங்களை கொல்லக் கையாளும் முறைகள், முற்றிலும் சிறந்தவை. விஞ்ஞான முறையிலும், சுகாதார முறையிலும் மிகவும் போற்றப்பட்டவை. நோய்களற்றவை. ஏற்றமானவை. உயிருக்கு வதையில்லாதவை. எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதவை. பாவமற் றவை. ஏழை மக்களின் உணவாக இன்று உலக மெங்கும் இறைச்சி மட்டும்தான் இருக்கிறது. துருவ வாசிகளான எஸ்கீமோவர்கள், பன்னெடுங்காலமாக இறைச்சியை மட்டுமே உண்டு வந்துள்ளனர். உலக மக்கள் அனைவரும் இறைச்சி உணவைத் தினசரி உண்டாலும், இறைச்சிக்காக உபயோகமாகும், ஆடு, மாடு, எருமை, கோழி என்பன போன்ற உயிரினங்கள் அழிந்து விடாது. அவற்றின் வாழ்க்கை வட்டம் அப்படி. உயிரியல் சமன்பாட்டு முறையும் இதனை நிரூபிக்கும்.இன்றைய விஞ்ஞான வளர்ச்சி கூட இதனை உண்மைப்படுத்துகிறது என்பதனை முன்னமே விளக்கியுள்ளேன்.

(பக்கம் - 117)
-----





No comments:

Contact

Web:
www.peruveli.blogspot.com & www.peruveliethal.wordpress.com

Email:
perueliethal@gmail.com, peruveligroup@yahoo.com , peruveli@hotmail.com