Tuesday, August 26, 2008

கதைப் பிரதிகள்

www.மனிதஉடற்சில்லுப்பரிசோதனை.med


விஞ்ஞான வரலாறு எழுத மறந்த இலங்கை தென்கிழக்கிஸ்தானில் நடைபெற்ற உடற்சில்லுப் பரிசோதனை பற்றிய தேடற்குறிப்புகள்.

- பர்ஸான். ஏஆர்

நீண்டு சென்றிருந்த கோடையின் பின்னான முதல் மழை எவ்வளவு அருமையாக இருக்கும்?. மிகத் தூரத்திலிருந்து தகிப்புடன் வருகின்ற மழைத்துளி மண்ணில் பட்டுத் தெறிக்கும் தறுவாயை நான்
அனுபவிப்பதற்கென்றே கோடையின் உஷ்ணத்தை தாங்கிக் கொள்வேன். ஏன் நீங்களும் கூட அப்படித்தான் என்று நினைக்கின்றேன். அன்று கிளறிவிடப்படுகின்ற மண்ணின் மணம் மூக்கை அரிப்பதாக நண்பன் எஸ். சிஹாப் எப்போதும் கூறுவான். ஆனால் அதற்குள் இருக்கும் உணர்வு பிரமாதம் என்று நான் மனதில் நினைத்துக் கொள்வேன். இந்த மழை தொடர்ந்து மண்ணில் விழுந்து விழுந்து கோணாவத்தையின் இருமருங்கும் வயல்வெளிகளிலிருந்து வெள்ள நீர் ஓடிவந்து தேங்குவதன் அழகே அழகு. மழை நீண்டு கொண்டே போகும். வயலெல்லாம் ஒளிந்து வாழ்ந்த மீன்கள் கடலின் அருகே வாழ்ந்த கோணாவத்தை மீன்களுடன் சல்லாபிப்பதற்கென்றே இந்த வெள்ளம் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. வரம்பு மீறிப்போனால் கோணாவத்தையின் நீர் கடலிற்கு வெட்டிவிடப்படும் நாள் மீன் விழாவாக தென்கிழக்கிஸ்தானின் இந்தக் கடலோரக் கிராமத்திற்கு அமைவதுவே வழக்கம். நீண்ட கோடையில் முறுக்கேறி விளைந்து போயிருந்த சகல மீன் வகைகளும் அன்று விழாக்கொண்டாடப்படும் அப்பிரதேச வீடுகளில் ருசிக்கப்படுவதற்காக வெளியூர் உறவினர்களும் நாள் பார்த்து வந்துவிடு வார்கள்.

சேறு மிகுதியான
கறுப்பின் கலவையில் தரையெங்கும் பூத்துக்கிடந்தது. சிலவேளை இதிலிருந்து கனிப்பொருட்களைப் பிரித்தெடுக்க நாம் தவறிவிடுகிறோமோ என்ற நினைப்புடன் ஒரு கையில் கழற்றி எடுக்கப்பட்ட பாதணியுடன் மறுகையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பையோடு நடந்து சென்று கொண்டிருந்தேன். மீன்களின் விலை நினைக்க முடியாத உயரத்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தது. நடந்து நடந்து அராபியர் துறையடிக்குச் சென்றபோது வலது கால் பாதத்தின் கீழே வழுவழுப்பான ஏதோவொன்று அகப்பட்டிருப்பதை உணர்ந்தேன். தன் அழகினைப் பறிகொடுத்து நிற்கும் கோணாவத்தையில் கழிவுப் பொருட்கள் மீதமாக அகப்படுவது இயல்பாகிவிட்டதுதானே என்ற நினைப்புடன் அகப்பட்ட நீண்ட நெடிய போத்தலினை சேற்றிலிருந்து பிரித்தெடுத்து பள்ளியின் மதில் மூலையில் போட தூக்கி எடுத்தபோது போத்தலின் மேலே போர்த்தப்பட்டிருந்த சேற்றின் படலம் விலகுவதில் இருந்த அழகினை தற்செயலாகக் கண்டு ஏதோ ஒரு ரசிப்பில் இருந்தேன். அப்போதுதான் அந்த போத்தல் இறுக்கமாய் அடைக்கப்பட்டிருந்ததினைக் காண முடிந்தது. சேற்றுப்படலம் விலகுவதிலிருந்த அழகினையும் மீறி அடைக்கப்பட்ட போத்தல் எனக்குள்ளே ஒரு கிளர்வினை ஏற்படுத்திவிட்டது. வேகமாய் கடலினை நோக்கி ஓடும் வெள்ளத்தினில் அந்த போத்தலினைப் பிடித்து அதன் மேற்புறத்தில் படர்ந்திருந்த சேற்றினை கழுவுவதற்கு எப்படி நினைத்தேனோ தெரியாது. ஆனால் அதற்குள்ளே பழுப்பேறிய மஞ்சள் நிறத்தில் ஏதோ சுருட்டப் பட்டிருந்ததினை உடனே அவதானித்தேன்.

அடைக்கப்பட்ட போத்தலினை முற்றாக கழுவி விட்டு பள்ளியின் குழாய்க் கிணற்றில் மீளவும் சுத்தம் செய்தேன். உம்மா சொன்ன கடலில் மிதந்து வந்த கேத்தலும் பூதத்தின் நினைவும் வந்தபோது சிரிப்பும் வந்து போனாலும் இது என்ன என்ற கேள்வி அச்சத்துடன் கூடவே இருந்தது. மாயாவிக்
கதைகளில் வரும் அச்சமூட்டும் மறைபொருட்களில் எனக்குள் நான் பல இடங்களில் தைரியமிழந்திருக்கிறேன். ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் மர்ம மனிதர்களின் / உயிரிகளின் அடுத்த வினாடிக்கான செயற்பாடுகள் மீது எனக்குள்ள எதிர்பார்ப்பும் அச்சமும் இந்த போத்தலினுள் உள்ள மஞ்சல் தாளில் வருவது நியாயமாகவே இருக்குமென நான் என் மனதிடம் கூறிக்கொண்டேன். என்றாலும் மிக இறுக்கமாக இருந்த பிளாஸ்டிக், பொலிதீன் கலந்த மூடியினைத் திறப்பதில் விரலும் உள்ளங்கையும் நன்றாகவே கஷ்டப்பட்டு விட்டது.

மிக நீண்ட நாட்களிற்கு முன்னரானதாக இந்த மஞ்சல் தாள் இருக்கவேண்டும். கிட்டத்தட்ட என்று ஒரு குறிப்பிட்ட காலத்தினை கூறுமளவு என்னிடம் இதுபற்றிய அறிவு இல்லை. என்றாலும் பிளாஸ்டிக் உபயோகத்தின் ஆரம்ப கட்டமாக இது இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய 2011
ஹிஜ்ரி ஆண்டிற்கும் இந்த மஞ்சல் தாளின் வயதிற்கும் மிகத்தூரம் என்பது மட்டும் புரியக்கூடியதாகவிருந்தது. தாளின் ஆரம்பத்தில் 786 என தொடங்கியது இது ஒரு சோனகன் எழுதியது என்ற நினைவு வந்தது. இந்த எண்களினை பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கிணையாக முன்னொரு காலத்தில் முஸ்லிம்களில் சிலர் பாவித்துள்ளதனை ceylon muslim nation என்ற google group இல் இருந்து காணக்கிடைத்த நினைவு உடனே வந்தது. இது தொடர்பாக ஏராளமான விவாதங்களும் இயக்கங்களும் முஸ்லிம்களிடம் ஹிஜ்ரி 1300 களில் இருந்து சில நூற்றாண்டு காலம் நடந்ததுவாம். ஆனால் 786 ற்குப் பின் வரிசைக்கிரமமாக எழுதப்பட்ட எண்களும் அராபியத் தமிழ் எழுத்துக்களும், குறியீடுகளும் இது ஒரு கேலி என்ற நிலைப்பாட்டினை சற்று எனக்குள் கொண்டுவந்தது என்றாலும் முன்னர் நான் உளவாளியாகச் செயற்பட்டிருந்ததில் அனுபவித்த திரில்களும் இறுகிய சம்பவங்களை பின்தொடர்வதில் இருந்த ஆர்வமும் என்வயது ஓய்விற்கான காலம் என்பதினையும் தாண்டி எனக்குள் இந்த மஞ்சல் தாளின் பக்கம் ஈர்ப்பினை ஏற்படுத்தியது. மீன் வாங்கலாம் என்று மழையையும் பாராமல் வெளியிறங்கிய நான் அவை அனைத்தையும் மறந்துவிட்டு எனக்குக் கிடைத்த இந்த கிறுக்கல்கள் நிறைந்த தாளுடன் வீடு நோக்கிப் புறப்பட்டேன். இது என்ன? இதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? யார் இதனை எழுதி கோணாவத்தையில் போட்டவர்கள்? அப்படிப் போட என்ன காரணம்? இது ரகசியமா? எல்லையற்ற கேள்விகள் எனக்குள் வந்து விழுந்து கொண்டிருந்தது. ஆனால் நேரம் இருளிற்கு சொந்தமாக மாற்றப்பட்டு விட்டது. தனிமையில் எனது உம்மாவின் வீட்டில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதால் மின் விளக்குகளை ஏற்ற நான்தான் அங்கு வேண்டும். இதற்கிடையில் நீண்ட மழைகாலம் என்பதால் Solarpower போதியளவும் charge ஆகவில்லை என்ற எண்ணம் இப்போதுதான் வந்தது. பார்ப்போம், முடியுமானவரை இதனைப் பற்றிய தேடலின் ஆரம்பங்கள் எனக்குள் ஒரு வரலாற்றின் தொடக்கம் போல் தென்பட்டது. காலம் கடந்து பல்வேறு வியாதிகளின் சரணாலயமாய் வாழும் எனக்கு மிக நீண்ட நாட்களின் பின் ஒரு கடமை வந்திருப்பதாய் உணர்ந்தேன். என் எண்ணங்கள் மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் நான் மிக ரகசியமாய் இயங்கிய காலத்திற்கு என்னை அழைப்பதுவாய் இருந்தது. ஆனால் திக்கொன்றாய் பறந்துவிட்ட நண்பர்கள் உடனில்லாத போதும் தொழில்நுட்பம் அவர்களை என் அருகிலே வைத்திருக்கிறது. இப்போது இந்த எண்கள், எழுத்துக்கள், குறியீடுகள் என்ன என்று நான் கண்டறிவதே பிரதான பணி. மீளவும் ஆய்வுகளின் பக்கம் நகரப் போகிறேன். பழையபடி இணையங்களில் அலையப்போகிறேன். பிரயாணங்களும் கூட என் ஆய்விற்காய் எனக்கு விதிக்கப்படும். ஒருவேளை இது ரகசியமாக இருப்பின்..?

தூக்கம் வர மறுத்துக் கொண்டேயிருந்தது. எதிர்பார்ப்புக்கள் நிறைந்து போயிருக்கும் போதும் வேலைப்பழு மனதில் நிரம்பிய பின் இராக்களில் விழிப்புத்தானே கிடைக்கும் பரிசு. எனது Hostel வாழ்க்கை, என்னை மாற்றிவிட்ட நாட்கள், என் தொழிலின் காரணங்கள் என்பன நீண்ட விழிப்புக்களைத் தந்திருக்கிறது. அவைபோல் இன்றைய இரவும் விழிப்புக்காய் விதிக்கப்பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டேன். நேரம் அதிகாலையை நெருங்கிக் கொண்டிருந்தாலும் மஞ்சள் தாளின் புதிர் என்னை எங்கோ மிதக்க வைத்துக்கொண்டிருந்தது. எதிர்பார்ப்புக்களுடன் / உட்கற்பிதங்களுடன் அணுகுதல் நம்மை வேறு திக்கிற்கு அழைத்துவிடும் என்ற நம்பிக்கை கொண்டு இத்தனை நாளும் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இன்று எதிர்பாராத விதமாய் முற்கற்பிதங்களுக்குள் அகப்பட நேர்ந்ததினை அவமானமாய் கூட உணர்ந்தேன். என்றாலும் முடியவில்லை. இதிலிருந்து விடுபட மஞ்சள் தாளினை பிரதிகள் எடுத்துக் கொள்வது உசிதம் என்ற எண்ணம் தோன்றியது. இணையத்தினில் பிரதிகளை சேமிக்கும் பழக்கம் உள்ள எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவது இயல்பே. Scanning செய்து கணனிக்கு எடுக்கும் போது மற்றொரு நிகழ்வினை சந்தித்து அதிர்ந்தும் அச்சமடைந்தும் போனேன். Scan செய்யப்பட்ட மென் பிரதியில் மஞ்சள் தாளில் உள்ள கிறுக்கு விளையாட்டுக் கோலம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருந்தது. உடனடியாக கிறுக்கு எழுத்துக்காய் பயன்படுத்தப்பட்ட மையினை அறிவது முதன்மையாகியது. இது தொடர்பாய் இணையத்தில் தேடியபோது பல சுவாரஷ்யம் நிறைந்த ஆய்வுகளின் முடிவுகள் என் முன்னே வழமைபோல் விரிந்தன. அந்தப் பக்கங்களிலிருந்து பின்வரும் குறிப்புக்களை copy செய்து கொண்டேன். சதுப்பு நிலங்களை அண்டிய அடர்ந்த புற்தரைகளுக்குள்ளே சிறிய தடித்த ~கண்காணல்| என்ற புல்வகை ஒன்று இருக்கிறது. இந்தப் புல்லின் இலைகள் மிகவும் மென்மையாகவும், வழுவழுப்பு நிறைந்தாகவும் இருக்கும். மெழுகால் போர்த்தப்பட்டது போல. இதன் இதழ்களைப் பிடித்து கசக்குகின்ற போது சிவப்பு நிறம் கொண்ட ஒரு வகைத் திரவியம் வெளிப்படும். இது பெண்கள் உதட்டிற்கு பூசும் Lipstick நிறத்தினை ஒத்ததாக இருக்கும். இதனைத் தொட்டு எழுதுகின்ற ஒரு வினோத முறை மிக நீண்ட வருடங்களின் முன் சதுப்பு நில மக்களிடையே காணப்பட்டிருக்கிறது. இந்த சிவப்பு நிற திரவியத்துடன் ரோஸ் பன்னீரினை கலக்குகின்ற பொழுது Brown நிறத்திற்கு ஒப்பான திரவியமாக அது மாற்றம் அடைவதுடன் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கக் கூடியதாய் அடையாளமிடவும் எழுதவும் இதனை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் உப்பு நீரின் கலவை ஏற்பட்டதால் பெரும்பாலான சதுப்பு நிலங்களிலிருந்து கண்காணல் புல்லினம் அழிந்துவிட்டது. இப்போது இந்த கண்காணல் முற்றாக அழிந்துவிட்ட புல்லினமாக பூகோள உயிர்மை நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்போது எனது முதலாவது வினா விடைதேடி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்து நின்றது.
இதனை யார் எழுதியுள்ளார்கள் என்பதனையும் தாண்டி எந்த நிலப்பிரதேசம் சார்ந்து இது எழுதப்பட்டது என்பது சற்று கண்டு பிடிக்கப்பட்டதாய் இருந்தது. இதன் காலம் கண்காணல் சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருந்த காலம் என்பதுவும் நிறுவனமாகியது. ஆகவே கோணாவத்தை சதுப்புசார் நிலமாக இருந்ததனால் இப்புல் அங்கு கிடைக்கக் கூடியதாக இருந்திருக்கலாம். கி.பி 2004ம் ஆண்டு காலப் பகுதியில் ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தின் போது கடல் நீர் தென்கிழக்கிஸ்தானின் கடலோரக்கிராமங்களைத் தாக்கியுள்ளது. அதன் போது கோணாவத்தை அதன் இயற்கை அழகினை முற்றாக இழந்ததாகவும் அதன் சுற்றுச் சூழல் முற்றாக அழிந்துவிட்டதாகவும் பூகோள உயிர்மை நிறுவனத்தின் ''கடந்த நூற்றாண்டு வளம்'' அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. ஆக, கோணாவத்தை சார்ந்து முன்னொரு காலத்தில் யாரோ கண்காணல் திரவியத்தினால் இதனை எழுதியிருக்க முடியும். அப்படியாயின் கடல் கோள் அனர்த்தத்திற்கு முன் வாழ்ந்தவர்களில் இவ்வகையான எழுத்து முறைகளை பயன்படுத்தியவர்களை தேடிப் போக வேண்டிய தேவை இப்போது எனக்கு ஏற்பட்டது. இந்த எழுத்து முறைமையை இணையத்தில் தேடிப் பார்த்தபோது அதற்கான ஒரு உதவிப் பக்கங்களையும் காண முடியவில்லை. அது மட்டுமன்றி இந்த எழுத்து அமைப்பு முறை ஏனைய எழுத்துக் கோலங்களுடன் ஒத்துப் போகவுமில்லை. வார்த்தை விளையாட்டிலும், எண் கணித விளையாட்டிலும் இந்த மொழி தன்னை இணைத்துக் கொண்டாலும் அரபும், தமிழ் எழுத்துக்களும் இந்து அராபி எண்களுடன் இணைந்திருப்பதினை நான் இப்போதுதான் முதன்முதலாகக் காண்கிறேன்.

மொழி ஆய்வுகளில் ஈடுபட்டு உலகின் ஆதிமொழி பற்றிய ஆய்வினைச் செய்த பேராசிரியர் நல்லதம்பி ஆதம் அவர்களின் நூல்களை படித்திருந்ததன் காரணமாக அவர் இந்த இடத்தில் என்னுள்ளே வந்து நின்றார். அரசின் ஒலிபெருக்கித் தடை கடந்த ஒரு நூற்றாண்டாய் நீடித்தாலும்
தென்கிழக்கிஸ்தானில் அது கொஞ்சமும் நடைமுறையில் இருக்கவில்லை. பேராசிரியர் நல்லதம்பி ஆதம் இன்று ஓய்வுடன் அமைதியாகத் தன் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் எவரையும் சந்திக்கும் தருணங்களை அவரின் குடும்பத்தினர் இப்போது அவருக்கு கொடுப்பதில்லை. வைத்தியரும் அப்படித்தான் கூறியிருக்கிறார். சாதாரண மனிதனின் ஆயுள் கோட்டினையும் தாண்டி இன்னும் இருக்கிறார் பேராசிரியர். இந்த மஞ்சள் கிறுக்கல் மொழியினை அப்படியே பார்த்து இன்னொரு பிரதியினை எழுதியெடுத்துக் கொண்டேன். நான் கூட எதிர்பார்க்காத கோணமொன்றில் பேராசிரியரை சந்திக்க கிடைத்தது. மொழிக் கிறுக்கினைப் பார்த்து எந்தவித சலனமுமின்றி பேராசிரியர் இருந்த போது நான் அது தொடர்பான நிலைப்பாடுகளைக் கூறினேன். அதையும் அவ்வாறே கேட்டவரிடம் ஆர்வம் அதிகரித்திருக்க வேண்டும். வெள்ளி போன்று மினுங்கிக் கொண்டிருந்த அவரின் கைத்தடியின் துணையுடன் எழுந்து சென்று முன்னே இருந்த ஜன்னலின் திரைச் சீலைகளை விலக்கிவிட, காலை வெயில் இதமாகவும் ஒவ்வொன்றாகவும் அந்த நீண்ட வராந்தைக்குள் வந்து கொண்டது. இது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியமைப்பைப் போல் தென்படவில்லை. ரகசியமான விடயங்களைப் பரிமாறிக் கொள்ளும் உளவாளிகள் தங்களின் குறியீடுகளாய் இதனைப் பயன்படுத்தியிருக்க முடியும். இந்த மொழிக்குறிகள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னரான எழுத்து மாதிரிகளைக் கொண்டது. எந்தக் காலத்திலும் அழியாது இருக்க வேண்டுமென்பதற்காய் இயற்கைத் திரவியம் ஒன்றினை பயன்படுத்தி உள்ளார்கள்.

சிலவேளைகளில் இது கண்காணல் புல்லினமாகக் கூட இருக்க முடியும் என்றார் பேராசிரியர். எனக்கு எதுவுமே புலப்படவில்லை. தென்கிழக்கிஸ்தானின் வரலாற்றில் அரசியல் மிக முக்கியமானது.
ஆனால் ரகசியமாக அங்கு என்ன நடந்திருக்க முடியும்? இது ஒரு கேலி விளையாட்டோ..?

இந்த மொழிமாதிரியை தன் நினைவில் நிறுத்திக் கொண்டு Diaryகளை வேகமாகப் புரட்டிக் கொண்டிருந்த பேராசிரியரைப் பார்த்தபோது எனக்குள் ஆர்வம் வேகமாகியது. திடீரென பேராசிரியர் பக்கங்களைப் புரட்டுவதை நிறுத்திவிட்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த மொழி அமைப்பைக் கொண்ட மற்றொரு பிரதி தென்கிழக்கிஸ்தானின் நூதன சாலையில் 63வது வாயிற் கதவிற்கு அருகிலுள்ள முதுரைப் பெட்டகத்தின் மேலே கண்ணாடி சுவர்களுக்கு பின்பகுதியில் இருக்கிறது. இதனை துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார் எழுதியிருக்கிறார். என்று மூச்சு வாங்கும் அளவு வேகத்தில் கூறி முடித்தார் பேராசிரியர். தன்னை மீளவும் தேடல் நிறைந்த உலகத்தினுள் சஞ்சரிக்க ஆயத்தப்படுத்துவது போல் மாறிக்கொண்டிருந்தார். துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார்.
அவரின் நினைவாக அவர் வாழ்ந்த வீடு தென்கிழக்கிஸ்தான் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையமாக இன்று இருக்கிறது. பேராசிரியரின் தேடலில் ஏதோ தென்பட்டிருக்க வேண்டும். சிலசில குறிப்புகளுக்கிடையே தேடல்கள் தங்கிச் செல்வது இயல்புதானே. துக்தூர் இந்தக் குறியீடுகளின் ஊடாக எதையோ சொல்ல வருகிறார். அவரின் புத்தகங்களும் ஆய்வு முடிவுகளும் இணையப் பக்கங்களும் தாண்டி அவர் ஏன் இந்த கண்காணல் திரவியம் மூலம் இப்படி தனக்கான மொழியை பயன்படுத்தியுள்ளார். பேராசிரியர் மீள மௌனித்துப் போனது இன்னும் எனக்குள்ளே கேள்விகளின் வாதப் பிரதிவாதங்களை கிளறி விட்டுக் கொண்டேயிருந்தது. திடீரென எழுந்து தன் மென்பொருள் கோவைகளுக்கிடையே இருந்த ஒரு கோவையைத் திறந்து ஆழமாக உற்றுநோக்கிய பேராசிரியர் ''இன்னும் சில ஆய்வுகளினை மறைத்துவிட வேண்டிய நிலையில் நான் இப்போது உள்ளேன்'' என்று இறுகிய குரலுடன் கூறியபோது அது துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் ''வழிப்போக்கனின் பாதையோரங்கள்'' என்ற நூலின் மென் பிரதியின் 112வது பக்கத்தினில் இருப்பதென தெரியவந்தது.

''வழிப்போக்கனின் பாதையோரங்கள்'' துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் ஆய்வுகளினையும் அவரின் பல்துறைசார்ந்த வாழ்வு பற்றியுமான கதைத்தொகுதியாகும். இலத்திரனியல், தகவல் தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி என்று பல்வேறு துறைகளினூடாக தன் வாழ்நாட்களின் ஒவ்வொரு வினாடிகளையும் நகர்த்தியவர் துக்தூர். அன்று பிரிவினைவாதிகள் சுதந்திர நாடு கோரி அரசியல் தோல்வி அடையும் தறுவாயின் முன்னரே அரங்கேற்றிய வெறியாட்டத்தினுள் துக்தூரும் அகப்பட்டுக்கொண்டார். இரசாயன ஆய்வுகளில் மிக முனைப்புடன் ஈடுபட்டிருந்தவரை
பிரிவினைவாதப் போராளிகள் உயிரியல் ஆயுதங்களை தயாரிக்குமாறு வேண்டினர். ஆனால் மனிதர்களை அழிக்கும் போராட்டத்திற்கும் திட்டமிடாத வன்முறையிலான சமுதாய மாற்றத்திற்கும் தான் உதவ முடியாததென கூறியிருக்கிறார் துக்தூர். அது மட்டுமன்றி தென் கிழக்கிஸ்தான் உட்பட கிழக்கிஸ்தான் வடநாடு பெருநிலப்பரப்பில் வாழ்ந்த சோனக முஸ்லிம்களை இந்தப் பிரிவினை வாதப் போராளிகள் மிக மோசமான அறவே மனிதாபிமானமற்ற முறையில் வழிநடத்தியமையும் அவர்களுக்கு இழைத்த சொல்லொண்ணா கொடூரங்களாலும் துக்தூர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தக் காலங்களில் அவர் அரசியல் பற்றியும் விஞ்ஞான ஆய்வுகளை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வழிப்போக்கனின் பாதையோரங்களினை துக்தூர் பெருமளவில் எழுதி முடித்திருந்தாலும் அவர் போராளிக் குழுவில் இருந்தவர் என ஆட்காட்டி பொம்மை அரச படைகளிடம் தவறாய் வேண்டுமென்று காட்டிக் கொடுத்ததினால் இவர்அரச படைகளினால் டயர் போடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் ஆய்வு மாணவன் காதர் மொஹ்தீனாலே அந்தக் கதைத் தொகுதி முழுமை செய்யப்பட்டது. அதுவும் துக்தூர் காதர் மொஹ்தீனுக்கு எழுதிய மின்னஞ்சல்கள் கதைத்தொகுதியின் பின்னைய பக்கங்களாக சேர்க்கப்பட்டன. ஆனால் கதைத்தொகுதி வெளிவந்து இரண்டு மாதங்களின் பின் இன்றைய எண்ணெய் வள நாடான பங்கோளினிலில் நடைபெற்ற வீதி விபத் தொன்றில் காதர் மொஹ்தீன் மௌத்தாகிவிட்டார். இதனால் துக்தூர் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளிவராமலே போய்விட்டன.

நான் பேராசியரியரின் அனுமதியுடன் தென்கிழக்கு நூதனசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். இந்த நூதனசாலை நபிகளாரின் நினைவு நாளுக்கான பரிசாய் உருவாக்கம் பெற்று தென் கிழக்கிஸ்தான் பல்கலைக் கழகத்தின் பரிபாலனத்தின் கீழ் வந்ததொன்றாகும். ஆனால் அந்தக் காலத்தினில் போதியளவு இது பயன்படுத்தப்படவில்லையென்று கூறப்பட்டது. பின் சில ஆய்வு மாணவர்களின் முயற்சியால் இங்கிருந்த நுண்பொருட்கள் முதன்முதலாக பல்வேறு வகையான ஆய்வுகளிற்கு உட்படுத்தப்பட்டது. அதன் போதுதான் இலங்கையில் வாழ்ந்த நாகர் பரம்பரையும் அவர்கள் முதல்மனிதன் ஆதமின் நேரடிவழித்தோன்றல்கள் என்பதும் உலகின் மூத்த மொழியாக ஆதம் பேசிய ஆனால் எழுத்துரு பெறாத தொக்கு வசனங்களுடனான எழு மொழியும் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் ஆதமின் வழித்தோன்றல்களாக் கொள்ளப்படும் இலங்கைச் சோனகர்கள் அரபுத்தேசங்களில் இஸ்லாத்தின் வருகையின் பின்னர் தாங்கள் எதிர்பார்த்திருந்த இறுதித்தூதரின் வழியை ஏற்றுக்கொண்டதையும் அந்த தூசுக்குள் கிடந்த நூதனசாலையின் பொருட்களே நிறுவிக்காட்டின. அப்படிப்போந்த நூதனசாலைக்குள் இன்று நானும் ஓர் ஆய்வு மாணவனாய்ப் போகிறேன்.

63வது வாயிற்கதவின் அருகிலுள்ள முதிரைப் பெட்டகத்தின் மேலே கண்ணாடிச் சுவர்களிற்குப் பின்பகுதி இப்போது எனக்காய்க் காத்திருப்ப தாய்ப்பட்டது. உண்மையிலே இந்த ஒரு நூற்றாண்டாய் அது எனக்காகத்தான் காத்திருக்க வேண்டுமென்று மனதிற்குள் பெருமையாய் கூறிக்கொண்டேன். என்றாலும் அந்த பிரதியை பார்க்கும் வரை இப்போது வந்திருக்கும் நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டிருக்கவில்லை. அந்தக் குறிப்புக்களையும் நகல் எடுத்துக்கொண்டேன். இறைவனின் விளையாட்டுக்களில் இன்று நான் ஆய்வாளன். ஒரு வரலாற்றின் தொடக்கம் அல்லது ஒரு சமுகத்தின் தலைவனுடைய ஆய்வு ரகசியம் என்னுள்ளே இருக்கிறது. இதுவரை இவ்வுலகின் தலைவிதிகளை ஆய்வுகளும் சிந்தனைத் தளங்களும்தானே ஆண்டிருக்கின்றன. மேடைகளில் முழங்கும் தலைமைகள் வெறும் பொம்மைகள் என்பதினை சாதாரண மக்களும் நன்கறிவர். துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார் மக்கள் அறிந்த ஒரு விஞ்ஞான மனிதர். சமூகவியலை விஞ்ஞானத்துக்குள்ளும் விஞ்ஞானத்தை அல்குர்ஆனிற் குள்ளும் தேடியவர். ஒரு பணக்காரனாக வாழ்ந்து கொண்டே ஏழைகளின் பாயில் தூங்கி எழுந்தவர். இப்போது என்னிடம் ரகசியமாய் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

கண்ணாடிச் சுவர்களின் கீழே சூரிய ஒளியின் கதிர்கள்படும் போது மட்டும் ''காலைக்கதிர் எழும்பும் திசையின் மேற்புரத்தே ஒளி அடையும் வரை அது நேர்தான். பிரமிட்டுகளின் நிர்மாணத்திற்கு இதுதான் வழியாகும். ''என குறிக்கப் பட்டிருந்தது. அதிர்ந்து போனேன். என்னிடமிருந்த காகிதத்துண்டும் இதுவும் ஒன்றாகிவிட்டதா? அதே மொழி. ரகசிய மொழி. துக்தூர் பிரமிட்டுக்களின் நிர்மாணத்தில் கையாளப்பட்ட ஒளியின் நேர் வடிவினை ஆய்வு செய்திருக்கிறார். அது தான் சூரியனின் ஒளி இந்தக் கண்ணாடிச் சுவர்களிற்குள் வராவிட்டாலும் சிறிய ஒளி வரும் போதே இந்த எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. வெளிச்சம் மறையும் போது எழுத்துக்களும் மங்கலாகின்றன. அப்படியாயின் எதனை அவர் இங்கு மறைத்துப்போட்ட மொழிக்குறிகளால் கூறியுள்ளார். இது தொடர்பாக நூதனசாலை அதிகாரியிடம் விசாரிப்பதாய் முடிவெடுத்துக் கொண்டேன்.

துக்தூரின் ஆய்வுகளில் பல புரிந்து கொள்ளப்படாமலே இன்னும் இருக்கின்றன. அவரின் ரகசிய மொழியும் கூட. ஆனால் பெரும்பாலான விடயங்களின் மீது துக்தூர் செயற்பட்டிருக்கிறார். இவரின் மொழியினூடாக சில முக்கிய விடயங்களை தெரிந்து கொள்ளாதளவிற்கு அவர் விட்டுச்சென்று விட்டார். ஆனால் வட நாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளரான சங்கரப்பிள்ளை பெரியதம்பி தன் இளமை நாட்களில் இவரின் மொழிபற்றி சில ஆய்வுகளை இங்கு
வந்து நின்று செய்தார். ஆனால் அதனை முற்றுப்பெற வைக்கவில்லை. அவரின் மொழி ஆய்வுகள் சில என்னிடம் நகல் பிரதியாக இருக்கின்றன. அது உங்களுக்குப் பயன்படலாம் என நினைக்கிறேன் என்று கூறிய தொல்லியல் ஆய்வாளரும் நூதனாசாலை அதிகாரியுமான உடகெதர முஹம்மத் ஸாலி தன் கோப்புகளிற்கிடையே இருந்த ஒரு தொகுதி நகல் பிரதிகளைகளைத் தேடித்தந்தார். அது சங்கரப்பிள்ளை பெரிய தம்பியின் கையெழுத்துடனான ஆய்வுக்குறிப்புகளாய் இருந்தன.

ச.பெரிய தம்பி ஏன் இந்த ஆய்வுகளை முழுமை பெறச்செய்யவில்லை என்ற கேள்வியினையும் தாண்டி அவரின் ஆய்வுக்குறிப்புக்கள் எனக்குப் பெரும் துணையாக இருந்தது. துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் னயசைலகளையும் ச.பெரியதம்பி தன் ஆய்வில் இணைத்திருக்கிறார். அதன் மூலம் தான் என்னிடமிருந்த புதிர்கள் மீதான விடையின் பாதை
திறக்கப்படும் என்ற நினைப்புடன் நான் நூதனசாலை சென்றிருக்கவில்லை. ஆய்வுக் குறிப்புக்களை இரண்டு நகல் பிரதிகள் எடுத்துக்கொண்டு நிறைந்த ஒரு ஆய்வாளனுக்கான மனத்திமிருடன் வெளியேறினேன். உங்களை மீளவும் சந்திக்கும் போது துக்தூர் பற்றிய பல நிஜங்களும் இன்னும் சில பக்கங்களையும் உலகம் தன் வரலாற்றில் இணைக்கும் என உடகெதர முஹம்மத் ஸாலியிடம் கூறிய வேளை அவர் என் கரம்பற்றி தோள்களை அழுத்திய போது நான் பொறுப்புச் சாட்டப்பட்டவன் என்ற எண்ணம் என்முன் எழுந்து நின்றது.

ச.பெரியதம்பியின் எழுத்துக்களைப் படிப்பதற்குள்ளே நாட்கள் நகர்ந்து விடுமே என்ற அச்சத்துடன் தான் நகல் பிரதியில் இருந்த எழுத்துக்களைப் பார்த்தேன். தன் பல்கலைக்கழக விடுமுறைகளின்
போது பெரியதம்பி ஜயா துக்தூர் தொடர்பான ஆய்வுகளைச் இங்கு செய்துள்ளார். என்னிடமிருந்த குறிப்புக்கள் ஒரு உலகம் தாண்டி என்னை அழைக்க முயன்று கொண்டிருந்தது. துக்தூர் ஒரு வழியினூடாக பயணம் செய்தவர் போலத் தெரியவில்லை. எல்லாத் துறைகளையும் ஆராய்ந்து கொண்டே இருந்திருக்கிறார். அரசியலும் அவ்வாறுதான் அவரிடம் இருந்திருக்கிறது. முடிந்த முடிவாய் எதையும் நிர்ணயிக்காத தொடர் பயணம் இவருடையது. ஆரம்ப காலங்களில் போராளிகளுக்கு கூட தன் சொந்த செலவில் சமூக விதிமுறைகளைப் பற்றியும் சமூக உளவியல் பற்றியும் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். உயர் மட்ட போராளிகள் போராட்ட விதி முறைகளையும் இவரிடம் தங்கியிருந்து கற்றிருக்கின்றனர். சில காலம் போராளி களுக்கு மறைவான தங்குமிடமாகக் கூட துக்தூரின் வாசஸ்தலம் இருந்திருக்கிறது என தன் முதல் பக்க ஆய்வுக்குறிப்புடன் ச.பெரியதம்பி துக்தூரை ஆராயத் தொடங்கியிருக்கிறார்.

குறிப்புக்களை தொடர்ந்து புரட்டிக் கொண்டு போனபோது ''மொழி'' என்ற தலைப்பு என்னிடம் இடறி விழுந்து நின்றது.

அறபு மற்றும் தமிழ் எழுத்துக்களுடன் நமது இலக்க அமைப்புக்களையும் இணைத்து சில முக்கிய விடயங்களினை குறித்து வைக்கின்ற ஒரு நீண்ட பழக்கம் இவரிடம் இருந்ததாய் இதுவரை என்னால் அறிய முடிகிறது. புராதன மன்னர்கள் உள்ளிட்ட உலக வரலாறுகளில் இதனை நிறையவே காணக்கிடைத் திருக்கிறது. ஆனால் தொழில் நுட்பத்தின் ஆதிக்கம் மேலோங்கி மரபான சமுக
அமைப்புக்கள் மாற்றமடையத் தொடங்கியதும் அனைத்திற்கும் இலத்திரனியல் அத்தியவசியமான பொருளாக மாறியது இந்த குறியீட்டு ரகசிய முறை வழக்கொழிய பெரும் காரணமாகியது. என்றாலும் தொழில் நுட்ப மாயைக்குள் மூன்றாம் மண்டல நாடுகளை திக்குமுக்காடச் செய்துவிட்டு தன் இலத்திரனியல் மேலாதிக்கத்தின் மூலம் இந்நாடுகளின் மனித மூளைகளை மூடியே வைத்திருக்கின்ற மேற்கைய ஃ தகவல் தொழில் நுட்ப நாடுகள் தம் ரகசியங்களுக்கு இன்னும் இந்த முறைகளினை கையாள்வதை நாம் அறிகிறோம். என்றாலும் மருத்துவ மற்றும் இதர துறைகளில் அதி நவீன பாய்ச்சலைக் கொண்டிருக்கும் இவர் இந்த குறியீட்டு மொழிகளினால் தன் ஆய்வினையும் கண்டுபிடிப்புக்களையும் வணிகத்திடம் பறிகொடுத்து விடாது பாதுகாத்திருப்பது அதியுயர் செயற்பாடன்றி வேறென்ன? இந்த மொழியை இவர் தன் சுய ஆளுமையினால்தான் வளர்த்திருக்கிறார். பொரும்பாலான ஆய்வுக் குறிப்புக்களும் இரசாயனவியல் சேர்க்கைகள் பற்றிய குறிப்புக்களும் இந்த மொழியினூடாகவே அவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் சமூகவியல் செயற்பாடுகளுக்கான தன் ஆய்வுகளை அவர் இக்குறிகள் ஊடாக எழுதியிருந்தா லும் அதனை மிகப் பகிரங்கமாக தன் பல்கலைக்கழக மாணவர்களிடம் பிரயோகித்து பலரினை சமூக விஞ்ஞானிகள் என்ற பட்டதிற்கு தயார்படுத்தியுள்ள மையை வெளிப்படை யாக அறிய முடிகிறது. இவரின் மொழியமைப்பில் நான் பிரமித்தது போல இவரின் ஆய்விலும் பிரமித்துள்ளேன். தொழில் நுட்ப வளர்ச்சி நாடுகளிற்கு இந்தத் தீவில் இருந்து கொண்டே தன் அறிவால் சவாலாக இருந்தவர் துக்தூர் என்பதனை ஏற்கத்தான் வேண்டும். பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிக்குள் தன்னை ஈடுபடுத்தியவர் இவ்வாறு மொழியிலும் சிறப்புற்று இருப்பது அதிசயமாகவே இருக்கிறது. துக்தூரின் மொழிக் குறியீடுகளில் சில விடயங்களை அவதானித்து அதனைப் பொருத்தியும் பார்த்தேன். தமிழ் எழுத்துக்களும் அறபு எழுத்துக்களும் நெடில் மற்றும் இதர குறிகளையும் துக்தூர் பயன்படுத்தியுள்ளார். 1 தொடக்கம் 9 வரையான ஒன்பது இலக்கங்களின் பின்னே அ தொடக்கம் ஒள வரையான எழுத்துக்கள் மறைந்து இருக்கின்றன. அதே போல் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இருக்கின்ற ஏனைய விசிறிகளும் இதில் இணைக்கப்பட்டிருப் பதினைக் காண்கிறேன் என ச.பெரிய தம்பியின் ஆய்வுக் குறிப்புக்கள் கூறிக்கொண்டே தொடர்ந்திற்று.

நான் பாதை தெரிகின்ற வழியில் வந்து நின்றேன். இதனை உடனடியாக பேராசிரியர் நல்லதம்பி ஆதமிடம் தர்க்க ரீதியில் நிரூபிக்க வேண்டிய துணை ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினேன். இதனை விட வேறென்ன தேவை இருக்கிறது என என் மனம் கேட்டுக் கொண்டே வந்தது.
அவதானிப்புக்களையும் ஒழுங்குகளையும் அல்லாஹ் மனிதனின் இயல்புடன் வைத்திருப்பதினை நாம் எத்தனை பேர் நியாயமாக புரிந்து வைத்துள்ளோம்? துக்தூர் சிங்கள மொழியில் இருந்தும் குறிகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் சிங்கள எழுத்துக்கள் எதனையும் அவர் குறிகளாக எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்கொண்டிருந்தால் துக்தூரையும் சிங்கள national colorதாத்தாமார் புனிதனாக ஏற்று புனித நிலப்பிரகடனம் கூட செய்யப்பட்டிருக்கும் என மனம் சிரிப்புடன் கூறிக் கொண்டது. இப்போது துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் குறிகளில் பெரியதம்பி சேகரித்தவற்றி லிருந்து சிலதினை ஒழுங்கமைத்துப் பார்த்துக் கொண்டேன். பொருத்திப் பார்த்த போது இரசாயனக் கலவையின் சூத்திரங்களை அது கூறியது. இரசாயனவியல் அறிவிற்கும் எனக்கும் மிகத்தூரம் என்பதால் அக்குறிகளின் மொழி மாற்றத்தை அப்படியே ஏற்றேனோ தெரியாது.

இப்போது நான் எனது மஞ்சள் தாளின் கிறுக்கு விளையாட்டுக்கு மீளவும் திரும்பி அதன் பிரதியைப் பார்தேன். அதில் காணப்பட்ட வரிகள் ஆயிரம் பொருள் கொண்டதாய் தெரிகின்றன. மனிதனும் கூட அப்படி த்தான் இருக்கிறான். புறவயத்தினை வைத்து இது இவை இவைதான் என்ற எந்த முடிவுகளையும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. நமது கற்றலில் அனுபவம் மிகப் பெரிய இடத்தினை கொண்டுள்ளது. நாம் நினைக்கும் தன்மைகளை விட அகவயம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. சிரித்த அழகிய புறவயத்தின் பின் மிக மோசமான காரிருள் அரசாட்சி
செய்வதினை அனுபவித்து அனுபவித்து முடிந்ததன் பின்னும் மனிதன் நல்லவன் என்றே இன்னமும் நினைக்கிறேன். உலகின் இருள்களில்தான் மனிதன் தன் சுயத்துடன் இருக்கிறான் போல. தனக்கு எது சாதகமோ அதனை மட்டுமே முன்னெடுக்கிறான். மற்றவர்களின் அகத்தினை நிமிர்ந்து பார்ப்பது மனிதனின் பண்பல்ல எனுமளவு மிக மோசமாகிவிட்டது. போராட்டமும் அப்படித்தான் இத்தீவில் சென்று விட்டதாம். நசுக்கப்படுகிறோம் எழுந்திருப்போம் என்ற பன்மை விகுதிகளின் சில நிகழ்ச்சித்திட்டங்கள் மாறி ஒருமை விகுதிகளாக உருமாற்றம் பெற்ற கேவலம் இங்குதான் நடந்தேறி முடிந்திருக்கிறது. எனது மஞ்சள் தாளின் வரிகளுக்குள் புதைந்து போன ஒரு உலகத்தின் புதிர்களுக்கான சாவிகளுடன் இன்று நான் மிதந்து கொண்டிருக்கிறேன். தொழில் நுட்பமும் தகவல் அறிவும் போதியளவு விருத்தியடைந்திடாத சூழலில் இவரால் எப்படி இந்தளவு துணிவுடன் பணியாற்ற முடிந்தது. அதுவும் மனித உடலில் chipகளை நிறுவிய இவரின் ஆளுமை இன்னும் என்னை அதிரவைக்கிறது.

பேராசிரியர் நல்லதம்பி ஆதம் என் ஆய்வில் என்னை விட மிக அவதானமாக இருந்திருக்கிறார். மஞ்சள்தாளின் கிறுக்குகளினை பொருத்திப் பார்த்து சில விடயங்களை அவதானித்த கையோடு பேராசிரியரின் இல்லத்தையே என் ஆய்வுத் தளமாக மாற்றிக் கொண்டேன். இதற்கு மிகப் பெரிய காரணமொன்றும் இருந்தது. என்னிட மிருக்கும் இணையத் தொடர்பின் வேகம் 128GB தான் ஆனால் பேராசிரியரிடம் இருப்பது 1024GB வேகத்தினை கொண்டிருந்தமையாகும். துக்தூரின் மிக முக்கிய பக்கங்களுக்கு நானும் பேராசிரியரும் வாயிற்கதவு போல் இருப்பதாய்ப்பட்டது. தலை
வெடித்துவிடும் கனதியுடன் துக்தூரின் மஞ்சள் தாள் ரகசியம் எங்கள் முன்னே ஒரு மிகப் பெரிய உலகினை விரித்துப் போட்டிருந்தது. விழிப்புக்களே நாட்களின் பெரும்பகுதிக்குச் சொந்தமாய் இருந்தாலும் தேடலும் மறைவானதை முதலில் கண்டு பிடிப்பதில் இருந்த ஆர்வமும் எங்கள் கூடவே இருந்திற்று. இல்லாததொன்றை தேடுவதும், கட்புலனாக உணர்வுகளின் வீச்செல்லையால் தாக்கப்படும் போதெல் லாம் நாம் அபரிமிதமாக வேகமடைகிறோம் என்று அடிக்கடி பேராசிரியர் தத்துவம் கதைத்துக் கொண்டேயிருந்தார்.

மிகுந்த ஆச்சரியத்துடன் கணனித் திரைக்கு முன் இருவரும் இருந்தோம். ஒருவரையொருவர் இப்படிப் பார்ப்போம் என்ற எந்த முகாந்திரமும் இந்த ஆய்வின் ஆரம்பத்தில் எங்களுக்கு
வந்ததில்லை. அதேபோல் இரவு பகல் என்று பாராமல் கணனிக்கும் எங்களுக்குமிடையே உறவுகள் பிணைக்கப்பட்டிருந்தாலும் இப்போது அதன் திரை முன் அதிசயத்துடனே நாங்கள் இருப்பதாய் உணர்ந்தேன். வெள்ளியிரவுகளில் சந்தனக் குச்சிகளை உம்மா கொழுத்தி வீட்டின் நாலாபுறமும் வைக்கும் போது பரவிக்கொண்டிருக்கும் நறுமணத்தினையும் விட அந்தப் புகைக்கூட்டம் எனக்கு பல சேதிகளைச் சொல்லியிருக்கிறது. புகைகளில் இருந்து மனிதர்கள் எழுந்து வருவதாக பல திரைப்படங்களையும் நான் அதன்போது எடுத்திருக்கிறேன். இந்த எண்ணங்களும் கணனிக்கு முன்னால் நாங்கள் அச்சம் கலந்த பிரம்மிப் புடன் இருப்பதாகவேபட்டது. மஞ்சள் தாள் விடயத்தில் எங்களுடன் தொடர்ந்து இருந்து பல உதவிகளைச் செய்த றஸா முஹம்மதின் தொந்தரவு கலந்த கதைகளும், நம்பிக்கைகளும் அடிக்கடி அவனை திரும்பிப் பார்க்கவே செய்யும். மனதினை ஒரு விடையின் பக்கம் நகர்த்திக் கொண்டு துக்தூரின் மஞ்சள் தாளில் மறைத்துக் கூறப்பட்டிருந்த இணையத்தளமொன்றின் முகவரியான www.மனிதஉடற்சில்லுப்பரிசோதனை.med என்பதனை டைப் செய்தேன்.
----------------------------------------------------------------------------------------------

வீட்டுக் குறிப்புகள் - 19
- அப்துல் றஸாக்

01.
(கி ழக்கு மாகாணத்திலுள்ள அக்கரைப்பற்று எனும் ஊரில்)

01 பெட்டி சக்கைக்கல் - 1600.00
1/4 பெட்டி கொங்கிறீட் கல் - 7500.00
01 அம்பாறைச் செங்கல் - 6.00
01 லோடு ஆத்துமண் - 2500.00
01 லோடு கடற்கரை மண் - 1100.00
01 பக்கட் சீமெந்து - 800.00
ஒருநாள் மேசன் கூலி (ஒருசோடிக்கு) - 2000.00

மஹிந்தவின் ஆட்சியில் இதுவொன்றும் ஆச்சரியப்படத்தக்க விலையில்லை என சிலிர்த்துக்கொண்டார் ஆதம்பாபா. புதிதாக வீடு கட்ட ஆரம்பித்த நாளில் இருந்து இக்கணம் வரை வியர்வை வடிந்து கசங்கிய தாளினை நூற்றியோராவது தடவையாகப் பிரித்துப் பார்த்துக்கொண்டார். அவரது கடைசி மகள் சரீனா சென்ற வருடம் பாவிக்காத ரெட்டை ரூல் கொப்பியின் நடுப்பக்கத்தை கிழித்து எழுதிக் கொடுத்திருந்தாள். நெடுநாள் ஆசையினால் அவரின் மூத்த மகனின் விருப்பத்திற்கேற்ப வீட்டுக்கு ஒரு படம் வரையவேண்டுமென்று ஒத்துக் கொண்டதற்கிணங்க படம் கொண்டுவந்த கையோடு அந்த வீட்டுக் கலைஞன் ஆசுவாசமாகக் குந்தியிருந்து சொன்ன கணக்குகள்தான் இவை. இருபத்து நான்கு வருடங்களுக்கு முன் தான் வீட்டிற்கும் தான் கட்டப்போகும் வீட்டிற்கும் கடக்க முடியாத இடைவெளியாக பணம் ஊதிப்பெருத்திருப்பதை நினைத்து பெருமூச்சு விட்டார்.
(சிறுகதையொன்றின் ஆரம்பம்)

02.
"சுனாமிக்கு முதல்லண்டா லேசா ஊட்ட கட்டிரலாம். ஆனா சுனாமிக்குப் பொறகு நெனச்சிம் பாக்கத் தேவல்ல. சாமானுக்கெல்லாம் கங்கெட்ட வெல. அப்பிடி இப்பிடியெண்டு எல்லாத்தயும் வாங்கினாலும் மேசன் சம்பளம் கொடுத்துக் கட்டமாட்டா. நெறய என் ஜீ ஓக்கள் வந்து ஊடுகள் கட்டினதானே. அவிய சம்பளத்த அள்ளிக் கொடுத்து இந்த மேசன்மார பழுதாக்கி ப்போட்டாங்க. நெனச்சநேரம் வந்து நெனச்ச நேரம் போற தொழில். கேக்கிற சம்பளம் கொடுக்கணும், நாள்ச் சம்பளமா? இல்ல ஸ்கெயார் கணக்கா ஆதாயம் எண்டு சொல்ல ஏலாத அளவுக்கு ரெண்டும் வித்தியாசம் தெரியாமப் போச்சி. சம்பளம் தவிர காலச் சாப்பாடு, பகல்ச் சாப்பாடு, தேத்தண்ணி, ரிங்ஸ் செலவெண்டு அதுவேற. ஊடு கட்றத விட சும்மா இருக்கலாம்."
(ஆய்வொன்றிற்கான நேர்காணல்)

03.
நுரைச்சோலை வீட்டுத் திட்டம் சம்பந்தமாக நம்ப முடியாத பல கதைகள் உலவுகின்றன. ஒரு அமைச்சர் கொண்டுவந்த திட்டத்தை இன்னொரு அமைச்சர் சீர்குலைத்ததாக சொல்லப்படுவதில் பல நியாயங்கள் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இதற்கு முன்னரும் சில திட்டங்கள் இப்படியாக அலைக்கழிந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தால் எங்களுக்கும் அதில் ஒரு பங்கு தரவேண்டுமென அப்பிரதேசத்தில் இருந்த சிங்களவர்கள் கேட்டதாகவும் கதை வந்தது. பாதிக்கப்படாதவர்களுக்கு எவ்வகையிலும் வீடு வழங்க வேண்டியதில்லை என்று சொன்னதற்காக அங்குரார்ப்பண வைபவம் தேரோ ஒருவரின் தலைமையில் எதிர்ப்புப் போராட்டத்திற்கு உள்ளானது. இதனால் முஸ்லிம் - சிங்கள கலவரம் ஒன்று தோன்றலாமோ என்ற அச்சம் உருவானது. இப்போது இத்திட்டம் பற்றி பொதுமக்கள் யாரும் எக்கதையும் பேசுவதில்லை.
(பத்திரிகைச் செய்தியொன்று)

04.
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு வகையான வீட்டு மாதிரிகள் உண்டு. உன்னிப்பாக அவதானித்தால் இம்மாற்றம் எளிதில் புலப்படும். உதாரணம் சொல்வதானால், கல்முனை, சாய்ந்தமருதுவில் உள்ள வீடுகள் அதிகம் கொங்கிறீட் கலவைகளைத் தாங்கியவை. பெரும்பாலும் மாடிகளாக மாறிக்கொண்டு வருபவை. அறைகள் வளைவுகளாக காணப்பட்டு கிணறுகள் போல உயரம் பெற்றுக்கொண்டு போகும். வீட்டின் புறப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அணுவணுவாக அலங்காரம் பெற்றிருக்கும். அறைகளுக்கு மேலே முகடுகளில், உட்புறப் பகுதிகளில் அதிக செலவுடன் அலங்காரங்கள் உருப்பெருத்துக் கொண்டு செல்லும்.

மருதமுனை வீடுகள் சிறியவை. எளிமையானவை. பழமையின் வாசம் தங்கியிருப்பவை. அனேக வீடுகளோடு சேர்த்து ஒத்தாப்பு இறக்கப்பட்டிருக்கும். வீட்டின் பின்புறம் இருக்கும் சின்ன இடைவெளிக்குள் பாவனைக்குதவாத பொருட்கள் குவித்து வைக்கப்பட் டிருக்கும்.

பொத்துவில் பிரதேச வீடுகள் களிமண்ணிலிருந்து செங்கற்களுக்கு மாறிக் கொண்டிருப்பவை. உயரம் குறைவானவை. இரட்டைக்கல் வைத்து கட்டப்பட்டிருப் பதை விட ஒற்றைச் செங்கல்லுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். வளவின் மையப்பகுதி சார்ந்தே இவை கட்டப்பட்டிருக்கும்
(பிரதேச வரலாற்று நூலொன்றிலிருந்து)

05.
பின்நவீனத்துவ அமைப்புடைய வீடுகளுக்கு முகடுகள் கூர்மையானதாக இல்லை. முகடுகள் அதிகாரத்தின் உச்சவெளிப்பாடாகும். பெருங் கதையாடலின் ஒற்றைத் தன்மையான கூர் முகடுகளைத் தகர்ப்பதற்காகவே இரட்டைக் குறியீPட்டுத் தன்மையுடன் முகடுகள் அமைக்கப்படுகின்றன. நியூயார்க் நகரத்தில் இருக்கும் யுவுரூவு கட்டிடம் இத்தகைய இரட்டைக் குறியீட்டுடன் தோன்றுகிறது. சாதாரண பார்வையில் சொல்வதானல் முகடுகள் இரக்கம், மனிதாபிமான மற்றவை. சிறு பறவையாகிய காகம் கூட அமர முடியாத கூர்முகடுளால் எவ்வித பயனுமில்லை. தட்டையான முகடுகளில் இருக்கின்ற பயன்களை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(பின்நவீனத்துவ கோட்பாட்டுப் பகுதி)

06.
அண்மைக்காலமாக நிதியியல் நிறுவனங்கள் தனிப்பட்ட வீடமைப்பு நிர்மாணங்களுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்குவதும் அதிகரித்துள்ளது. 2006 ஆண்டில் முக்கிய வர்த்தக வங்கிகள் ரூ. 34.227 மில்லியன் பெறுமதி கொண்ட 97.983 வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளன. வீடமைப்பு வங்கிகளான அரச ஈட்டு முதலீட்டு வங்கி, வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத் தாபன வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பன 2006 இல், 2005 இன் 22.501 கடன்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 12.187 மில்லியன் கொண்ட 35.137 வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளன. தற்போது எந்தவொரு வங்கியிலும் வீடமைப்புக் கடனை 22 வீதத்திற்கும் குறைவான வட்டியில் பெற முடியா துள்ளது. இந்நிலையில் செலான் வங்கி மட்டும் 17 வீதத்திற்கு வீட்டுக் கடன் வழங்குவதாக பெருமையுடன் பறைசாற்றி விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றது.
(மத்திய வங்கியின் ஆண்டறிக்கை)

07.
வீடு பற்றிய விடயத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அக்கறையெடுக்க வேண்டும். ஊருக்குள் வந்த கடல் அலைகளால் நாம் பெற்ற பாடம் வீட்டை திண்மை யுறக் கட்டுவோம் என்பதல்ல. அலைகளின் பெருமூச்சுக்கு வளைந்து கொடுக் கும் ஜப்பான் ரக வீடுகளைக் கட்டுவோம் என்பதுதான். ''உலகெங்கும் தொடரும் நில நடுக்கம் இங்கும் தொடரா தென்பது என்ன நிச்சயம்? ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஏறி நிற்கும் உலகத் தகடுகள் நாளை இறங்குகின்ற போது நிலம் மெல்ல அதிர்ந்து கொள்ளும்'' என மார்க்சிய செய்தி நிறுவ னங்கள் அறிவித்துக் கொண்டிருக் கையில் முதலாளித்துவ பெரும் போடிகள் கட்டிடப் பொருட் களுக் கான விலையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
(இங்கு மார்ச்சியமும், முதலாளித்துவமும் எப்படி வந்தது?)

1. நிலநடுக்கம் ஏற்பட்டால் கோபுரங்கள் குடிசைகளாகும், குடிசைகள் கோபுரங்களாகும்.
அதுவரை இன்னொரு மார்ச்சியப் புரட்சிக்காகக் காத்திருக்க வேண்டும் என சிந்திக்கும் மார்க்சிய
செய்தி நிறுவனங்கள், இன்றே அப்புரட்சியைக் காண பிரச்சாரம் செய்யலாம்.
2. அதீத உற்பத்தியும், ஆடம்பரமும் நிறைந்த கட்டிடப் பொருட்களில் அதிகம் காசு பார்க்கலாம்
என நம்பும் முதலாளித்துவ நிறுவனங்கள் விளம்பரங்களைப் பரப்பி, மக்களின் மோகத்திற்கேற்ப விலைகளை அதிகரிக்கலாம்.
(உள்ளுர் சமூகசேவை அமைப்பொன்றின் ஆய்வறிக்கை)

08.
சனத்தொகை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கத்துடன் வீடுகளுக்கும் நகர உட்கட்டமைப்புக்குமான கேள்வி துரிதமாக விரிவாக்கம் பெற்றிருக்கிறது. சனத்தொகை ஆண்டிற்கு 1.1 சதவீதமாக வளர்ச்சி பெறுவதுடன் நகரக் குடித்தொகை 3 சதவீதமான உயர்ந்த வீதத்தினால் வளர்ச்சியடைந்து வருகிறது. 2016 ஆண்டளவில் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்ட தொகையினர் நகரப்பகுதிகளில் வசிப்பர் என்று மதிப்பீடுகள் காட்டுவதால் நகர உட்கட்டமைப்பில் துரித அபிவிருத்தி தேவைப்படுகின்றது. இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் வீடுகளுக்கான புதிய கேள்வி 100.000 அளவில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலாக 350.000 வீடுகளுக்கான பற்றாக்குறை உள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஏற்கனவேயுள்ள வீடுகளில் 30 சதவீதமானவளவு (1.3 மில்லியன்) வீடுகள் ஓரளவு நிரந்தரமானவையாக அல்லது திடிரென ஏற்பட்டவையாக அல்லது அவசரமாக கட்டப்பட்டவையாகவும் அல்லது வகைப்படுத்தப்படாதவையாக கணிசமானளவு முன்னேற்றம் தேவைப்படுவனவாகவுள்ளன. சுனாமியினால் அழிக்கப்பட்டோ அல்லது சேதமடைந்த 114.000 வீடுகளில் அண்மையக்காலம் வரை 78.000 வீடுகளின் கட்டுமானப்பணி பூர்த்தியாக்கப்பட்டுள்ள.
(வீடமைப்பு அமைச்சு)

09.
வீடு. பெ.
1. குடியிருப் பதற்காக (செங்கல், மண் முதலியவற்றால்) ஏற்படுத்தப்பட்டது house. நகரில் சொந்தமாக வீடு கட்டியிருக்கிறார். / வீட்டுவாடகை சற்று அதிகம்.
2: மோட்சம் heaven.
3: (சேதி.) ஒருவர் பிறந்த நேரத்தில் இருக்கும் கிரகத்தை முதலாவதாக கொண்டு பண்ணிரண்டு கிரகங்களும் வகுப்படும் இடம் (in ons’s horoscope)
(க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி)

10.
''வீடு கட்டுவது பற்றிய இனவாதக் கருத்தொன்று உங்கள் முன் சொல்வதற்காக என்னை மன்னியுங்கள் சகோதரர்களே! நாம் வீடுகளை ஏன் மாற்றினத்தவர் களைக் கொண்டு நாம் கட்ட வேண்டும்? இன்றைய நிலையில் அவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்க முடியாதென்பதற்கப்பால் நமது பொருளாதாரத்தை அவர்கள் சுரண்டிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா? எங்கள் ஊரில் மட்டும் வீடு கட்டும் தொழிலாளர்கள் திரட்டும் ஒரு நாள் சம்பளம் பத்து இலட்சத்தையும் தாண்டுகிறது என்றால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்? பொதுவாக ஆய்வொன்று செய்யப் பட்டது. இத்தொழில் செய்பவரை 'மேசன்' என்று அழைப்பதைத்தான் நாங்கள் விரும்பவில்லை'' என்று பலர் சொல்கிறார்கள். அப்படியாயின் பெயரை மாற்றுவோம். பெயரில் என்ன இருக்கிறது, ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத் தால்தான் என்ன? என்று சேக்ஸ்பியரின் மேற்கோள் ஒன்று கூட இருக்கிறது. 90ம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரச்சி னை உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போது நாம் தானே வீடுகளை கட்டினோம்! நமது கலாசாரத்தையும், தனித்துவத்தையும், கட்டிடக் கலை நுட்பங்களையும் வடிவமைப்பதில் இப்போது நாமேன் பின்னிற்கிறோம்? தொழில் வாய்ப்பில்லாமல் அலையும் ஒரு தொகை இளைஞர்கள் வியர்வை சிந்தி தமது உழைப்பை அர்த்தப்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முஸ்லிம்தேச பொருளாதார முறையும், அழகியல் முறையும் ஒன்றினையும் இடமான வீடு கட்டுகின்ற பணி பற்றி இனியாவது ஆழமாக சிந்திக்க வேண்டும் சகோதரர்களே!''
(மேடையில் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி)

11.
வீடு வரையும் கலைஞர்கள் தாங்கள் வரைவது போல எந்த வீடும் கட்டப்படுவதில்லை என குறைபட்டுக் கொள்கின்றனர். எல்லா இடங்களிலும் கலைஞர்களின் வரைபடத்தை பின்பற்றுகின்ற கட்டிடத் தொழிலாளிகள் ஓரிடத்தில் மட்டும் அதை ரகசியமாக மீறி தங்களுக்குள் திருப்திப்பட்டுக் கொள்கின்றனர். இவர்களுக்கும் கட்டிட தொழிலாளர்களுக்குமான பூனை - எலிப்பகை ஆதியிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும். ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி தனக்கு மயக்கம் வரச் செய்த காரணத்தினால் அவ்விருவரையும் விரட்டி விட்டு தனது வீடு கட்டும் பணியை இடை நிறுத்தியிருக்கிறார் அயல்வீட்டுக்காரரொருவர்.
(அயல்வீட்டுக்காரரின் பேச்சு)

12.
பாலுமகேந்திராவின் வீடு என்கின்ற திரைப்படம் வீடு கட்டுவதிலுள்ள சிரமங்களைப் பற்றிப் பேசுகின்றது. இது ஒரு திரைப்படமே அல்ல என இப்போதும் விவாதிக்கின்ற நண்பர்கள் உண்டு. படத்தில் வீடு கட்டி முடிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு. ஏதோ நான்கைந்து வருடங்களுக்கு முன்தான் அவ்வீடு முடிந்திருப்பதாக ஆனந்த விகடனில் வாசிக்கக் கிடைத்து சிலரிடம் காட்டியபோது ஓரளவு சமாதானம் அடைந்தார்கள்.
(சினிமா விமர்சனப் பகுதியொன்று)

13.
வீடு கட்டுகின்ற மேசன் புலியாக இருக்கலாமா? என்ற சந்தேகம் இங்கு எல்லோருக்குமுண்டு. இதனால் ''இரவில் புலி, பகலில் மேசன்'' என்றளவிற்கு ஒரு பழமொழியையே உருவாக்கி விட்டார்கள். இம்முடிவை அவர்கள் எட்டுவதற்கு பல காரணங்கள் உண்டு.
1. சரியான குழப்பநாள் ஒன்றில் வீடு கட்ட வந்த மேசன் ஒருவன்,சக தொழிலாளியைப் பார்த்து ''நல்லா கட்டு மச்சான். இது நாம இருக்கிற வீடுதானே'' என்று சொல்ல அதைக் கீழே இருந்து
கேட்ட வீட்டுக்காரி கத்திக்கொண்டு அடுத்த வீட்டுக்கு ஓடியிருக்கிறார்.அன்றிலிருந்து அவர்கள்
யாரும் வேலைக்கு வரவில்லை என்பதோடு வேலை செய்ததற்குமான கூலியைக் கூட பெற்றுக்கொள்ள வில்லை.
2. ஊரில் மேசன்மார் மிகக்குறைவாக வேலைக்கு வருகின்றனர் என்றால் அன்றைக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றதென்று அர்த்தம். இதை 'யாராவது விருந்துக்கு வருகிறாங்களா?
தெத்திக்காட்டு காகம்' என்பது போல ஊர்மக்கள் அடையாளம் கண்டு கொள்வது.
3. மேசன்மார் தங்களுடைய தொழிலுக்கான உபகரணங்கள் வைத்திருக்கின்ற பையை 'ஆயுத பேக்கு' என்றுதான் அழைப்பார்கள். இது கேட்டு துணுக்குற்று எறியப்பட்ட நிறைய குழந்தைகளும்,
பெண்களும் இங்கிருப்பது.
4. சில மேசன்மார் தங்கள் வாயாலேயே கெட்டுப்போய், தாங்கள் செய்த வீர தீரச்செயல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது, பெருமைக்காக அவிழ்த்து விடுவது.
5. ஒன்றில் அதிகமாகப் பேசுவது அல்லது ஆழ்ந்த மௌனம் சாதிப்பது
(பயந்த சுபாவமுள்ள ஒரு பொதுமகன்)

14.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ஒரு சமூகம் வீடு கட்டாமலே இருந்திருக்கிறார்கள். காலையில் சூரியன் கிழக்குப்பக்கம் உதிக்கும்போது பெரும் நிழல்தட்டியை கிழக்குத் திசைநோக்கி சாத்துவதும், மாலையில் மேற்குத் திசைநோக்கி சாத்துவதுமாக அவர்கள் தங்கள் வாழ்நாளை போக்கியிருக் கிறார்கள். வீடு கட்டுவதற்குரிய நாட்களை மிச்சம் பிடித்தால் அந்நாட்களில் இறைவனை வணங்கி நல்லமல் செய்யலாம் என்று இதற்கு காரணமும் சொல்லியிருக்கிறார்கள்.
(சமயச் சொற்பொழிவாளர்)

15.
வீடு கட்டுகின்ற தந்தைமார்கள் அதனை ஒரு பொழுதேனும் அனுபவிப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. இரவு பகலாக கண்விழித்து வீட்டை கடைசியாக பூர்த்தி செய்கின்ற அன்றே தம் பெண் மக்களுக்கு கல்யாணம் வைத்திருப்பதால் அவ்வீட்டை கடைசியாகவும் முழுமையாகவும் அவர்களால் பார்க்க முடிவதில்லை. வேலையின் களைப்பில் வீட்டின் முன் விறாந்தையில் வந்தமரும் தந்தையர் தமது தோள்த் துண்டினால் நிலத்தில் புழுதி தட்டி கொஞ்சம் அமர்ந்து கொள்கின்றனர். பூ.... என்று ஆசுவாசத்தோடு பெருமூச்சு விட்டபடி எங்கும் நெடிது நோக்குகின்றனர். ஒரு தேயிலை அருந்தும் நேரம் தரிக்கின்றனர். மீண்டும் வேலை... வேலை... கல்யாணம் முடிந்த கையோடு வீட்டுக்கு அருகில் இருக்கும் கொட்டகையின் சாக்குக் கட்டிலில் சரிகின்றனர் தனது அடுத்த மகளுக்கு வீடு கட்டும் யோசனைகளுடன்.
(ஐந்து பேருக்கு மூத்த ஒரு பெண்பிள்ளை)

16
தமிழர்கள் வீடுகளை எளிமையாகக் கட்டுகிறார்கள். இதனால் வீட்டைத் துறப்பதையும் போராடுவதையும் சாத்தியமாக்குகிறார்கள். வீட்டிலே போட்டு காசைக் கல்லாக்குவதை விட அதை தங்கமாக உருக்கி வைக்கிறார் கள். முஸ்லிம்கள் வீடுகளை ஆடம்பரமாகக் கட்டுகிறார்கள். இதனால் போராடுவது பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள். வங்கிகளில் தமிழர்கள் தங்கத்தையும், முஸ்லிம்கள் வீடுகளையும் அடமானமாக வைக்கிறார்கள்.
(ஒரு முஸ்லிம் தேசப் போராளி)

17.
வீடு மனைவி மக்கள், வீடு வரை உறவு, அட வீட்டுக் வீட்டுக்க வாசப்படி, தெய்வத் தந்த வீடு, எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, ஆயிரம் ஜன்னல் வீடு.
(தெருப்பாடகன்)

18.
பொர, வாடி, மண்டபம், செத்த ஊடு, மண்ணூடு, ஆலஊடு, உள்ளுடு, வராந்தா, குசினி, திண்ணை, சாப்பு, ஒத்தாப்பு, புழக்கடை, மரக்கொட்டு, கெணத்தடி, கக்கூசு, கோப்பிசம், கல்லூடு, மெத்த ஊடு, அப்ஸ்ரயார், வீச்சுமரம், துலாக்கால், தயிர்ச்சட்டி, பந்தம், ஊஞ்சல், கூரை, தேன் குடம், வேதுச் சட்டிகள், பசுநெய்ச்சாடிகள், நெல், குரக்கன், சோளம், இறுங்குச் சாக்குகள், கயிற்று உறிகள், கயிற்றுப் பாயசவுகள், உரல், உலக்கை, கொச்சிக்காய் அம்மி, மருந்தரைக்கும் அம்மி, உடைகளைத் தொங்கவிடும் மான்கொம்புகள், மான் தோல் பாய்கள், தூக்கிய புதிர், கதவு, ஜன்னல், அலுமாரி, மேசை, கதிரை, மின்சாரம், சோபா செட், வைப்பர், கப்போட், டி.வி, ஏ.சி, பேன், கொயில், றைஸ் குக்கர், கிச்சன், கட்டிங் பிளேட், வோமர், பிளண்டர், ஹால், போன், டைனிங் டேபிள், கட்டில், அண்டெனா, டிஸ்க், போர்ச், மொட்டை மாடி, அட்டாச் பாத்ரூம், கொம்பியூட்டர், டேங்க், வோட்டர் சப்ளை.
(சமுதாயத்தில் புழக்கத்திலுள்ள பேச்சு வழக்குகள்)

19.
They gave up thir Avurudu, to ensure we celebrate ours. Contrubute to API VENUVEN API Housing Fund. Type API & send 8877. Rs 10/- + Tax p/m.all Procedds go to fund

sender
Mobitel@
Message centre :
+947100103
Sent:
21-Apr-2008
09:39:40
(SMS)


No comments:

Contact

Web:
www.peruveli.blogspot.com & www.peruveliethal.wordpress.com

Email:
perueliethal@gmail.com, peruveligroup@yahoo.com , peruveli@hotmail.com